search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீஞ்சூரில் மின்தடையை கண்டித்து நள்ளிரவில் மறியல்
    X

    மீஞ்சூரில் மின்தடையை கண்டித்து நள்ளிரவில் மறியல்

    மீஞ்சூரில் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் நள்ளிரவில் மறியலில் ஈடுபட்டதால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    பொன்னேரி:

    மீஞ்சூர் பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மீஞ்சூர் பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பகல் 12மணி அளவில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் இடையில் சில நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டு மீண்டும் துண்டிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி வரையிலும் மின்சாரம் வழங்கப்படவில்லை.

    இதுகுறித்து மின்வாரிய தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாததால் அங்கு சென்று பார்த்தபோது யாரும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பொன்னேரி- திருவொற்றியூர் சாலையில் மீஞ்சூர் பஜாரில் நள்ளிரவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் ஊராட்சி நிர்வாகத்தினர் முறையாக குடிநீர் விநியோகம் செய்வதில்லை என புகார் தெரிவித்தனர்.

    குழந்தைகள், முதியோர், உடல் நலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் என அனைத்து தரப்பினரும் மின்வெட்டு காரணமாக அவதிப்படுவதாக குற்றம் சாட்டினர்.

    வட சென்னை, வல்லூர் அனல் மின் நிலையங்கள் அருகில் இருந்தும் தங்களது பகுதியில் மின் வெட்டு ஏற்படுவது ஏன் எனவும், இங்கு தயாரிக்கப்படும் மின்சாரம் எங்களது பகுதிகளுக்கு விநியோகம் செய்யாமல் எங்கு கொண்டு செல்லப்படுகிறது எனவும் கேள்வி எழுப்பினர்.

    சாலைமறியல் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் போலீசார் மின்வாரிய அதிகாரிகளிடம் பேசி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து மீண்டும் மின்வினியோகம் செய்யப்பட்ட நிலையில் சில நிமிடங்களிலேயே மீண்டும் மின்வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். நாளை காலை மீண்டும் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.

    இதனால் பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் வாகனங்கள் 7 கிலோமீட்டர் தூரத்தில் வரிசையாக நின்றன.

    Next Story
    ×