search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.1000 கோடிக்கு மேல் மதிப்பு - தஞ்சை பெரிய கோவிலில் 30 சிலைகள் மாயம்
    X

    ரூ.1000 கோடிக்கு மேல் மதிப்பு - தஞ்சை பெரிய கோவிலில் 30 சிலைகள் மாயம்

    சிலை தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தஞ்சை பெரியகோவிலில் இன்று சோதனை நடத்திய நிலையில் ரூ.1000 கோடிக்கு மேல் மதிப்புடை 30 சிலைகள் மாயமாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. #IdolSmuggling
    சென்னை:

    உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவிலில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு 2½ அடி உயரம் கொண்ட ராஜராஜ சோழன் ஐம்பொன் சிலையும், அவரது பட்டத்து இளவரசியான லோகமா தேவியின் 2 அடி ஐம்பொன் சிலையும் திருடப்பட்டது. இது தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையிலேயே இருந்தது.

    சிலை தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கடந்த சில ஆண்டுகளாகவே அதிரடி சோதனை நடத்தி பழமையான சிலைகளை மீட்டு வருகிறார். அந்த வகையில் ராஜராஜ சோழன் சிலையும், லோகமா தேவி சிலையும் குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டது.

    அங்குள்ள தனியார் மியூசியத்தில் இருந்து 2 சிலை களும் கடந்த மே மாதம் மீட்கப்பட்டு தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டது. தற்போது அந்த 2 சிலைகளும் பெரிய கோவி லின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் தஞ்சை பெரியகோவிலில் அதிரடி ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சுமார் 4½ மணி நேரம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது கோவிலில் உள்ள ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் தஞ்சை பெரியகோவிலில் இருந்து பல்வேறு சிலைகள் மாயமாகி இருக்கும் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.


    தஞ்சை பெரியகோவிலில் மொத்தம் 66 சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 30-க்கும் மேற்பட்ட சிலைகள் மாயமாகியுள்ளன. இந்த சிலைகள் அனைத்தும் ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது என்றும் ரூ.1000 கோடிக்கும் அதிகமான மதிப்புக் கொண்டவை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த சிலைகள் அனைத்தும் ராஜராஜ சோழன், லோகமா தேவி சிலைகளை போல குஜராத்துக்கு கடத்தி செல்லப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இவைகளை மீட்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தஞ்சை பெரியகோவிலில் இருந்து என்னென்ன சிலைகள் மாயமாகியுள்ளன என்பது பற்றி பரபரப்பான புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-


    தஞ்சை பெரியகோவிலில் சுமார் 350 கிலோ எடை கொண்ட நடராஜர் சிலையும், 150 கிலோ எடை கொண்ட இன்னொரு நடராஜர் சிலையும் உள்ளது. இதில் 350 எடைக்கொண்ட சிலை தொன்மை மாறாமல் உள்ளது. 150 எடைக் கொண்ட நடராஜர் சிலை தொன்மையானது போல் காணப்படவில்லை. அதன் பின்னணி குறித்து விசாரணை நடைபெறுகிறது. இதன் மதிப்பு 100 கோடிக்கு மேலும் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தங்கத்தினால் செய்யப்பட்ட கொள்கை தேவர் சிலையும், 4 வாசுதேவர் வெள்ளி சிலைகளும் காணாமல் போய் உள்ளன. அதுபற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    ராஜராஜ சோழனின் அக்காள் குந்தவை பிராட்டியார் தனது தாய், தந்தைக்கு 2 சிலைகளை செய்து வைத்துள்ளார். அந்த சிலைகளும் காணாமல் போய் உள்ளன.

    தனது தாய் வானவி மாதவியார், தந்தை பொன்மாளிகை துஞ்சினை தேவர் ஆகிய இருவருக்கும் சிலைகளை செய்து தினமும் பூஜைகள் செய்ய வேண்டும். அது எப்படி நடைபெற வேண்டும் என்பது போன்ற குறிப்புகளையும் குந்தவை பிராட்டியார் எழுதி வைத்துள்ளார். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிலைகள் செய்யபட்டுள்ளன. 2 சிலைகளுக்கும் தனித் தனியாக 2 கிரீடங்களும் இருந்துள்ளன. அதில் 3526 வைரங்களும் பதிக்கப்பட்டு இருந்தன. இப்போது இவை அனைத்தும் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை. இவைகளை மீட்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பெரியகோவிலை சுற்றி மதில் சுவரை கட்டிக் கொடுத்த ராஜராஜ சோழனின் தளபதியான மும்முடி சோழ பிரம்மா ராயன், ஐம்பொன் அர்த்தனாரீஸ்வரர் சிலையை செய்து கொடுத்துள்ளார். அந்த சிலையும் இப்போது இல்லை. ஆதித்திய சூரியன் என்கிற மூவேந்தவேளார் 13 சிலைகளை செய்து கொடுத்திருக்கிறார். அவையும் காணாமல் போய் உள்ளது.

    கோவிலில் உள்ள சோமாஸ்கந்தர் சிலையில் சிவன்-பார்வதிக்கு நடுவில் முருகன் அணிகலன்களுடன் அமர்ந்திருப்பார். இப்போது அந்த சிலையில் முருகன் இருக்கிறார். ஆனால் அவர் தொன்மை வாய்ந்த முருகன் இல்லை. இடையில் வடிவமைக்கப்பட்டவர். இந்த முருகன் சிலையை ஏன் மாற்றி வைத்தார்கள். அதற்கு எப்படி அனுமதி பெறப்பட்டது என்பது விசாரணை நடைபெற்று வருகிறது.

    சோமஸ்கந்தர் பீடத்தின் அருகில் நீலோத் பாலாம்பிகை சிலையும் மாயமாகி இருக்கிறது. இந்த சிலைகள் அனைத்தும் எங்கு உள்ளன என்பது பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கோவிலில் உள்ள பழமையான சிலைகளில் பெரும்பாலானவற்றை மாற்றிவிட்டு அதற்கு பதில் புதிய சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதுபற்றியும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    தஞ்சை பெரியகோவிலில் 66 சிலைகள் இருப்பதாக கோவில் விமானத்தில்தான் குறிப்பு உள்ளது. அதனை பின்னணியாக வைத்தே சிலை தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். காணாமல் போன சிலைகள் பற்றி இதற்கு முன்னர் பணியில் இருந்த அதிகாரிகளிடமும், தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களிடமும் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதன் காரணமாக பெரியகோவில் சிலைகள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. #ThanjavurPeriyaKovil #IdolTheft #IdolSmuggling #PonManickavel
    Next Story
    ×