search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வட மாநில பெண் மரணம்- தற்கொலைக்கு தூண்டிய கணவர் கைது
    X

    வட மாநில பெண் மரணம்- தற்கொலைக்கு தூண்டிய கணவர் கைது

    குமரி மாவட்டம் தெங்கம்புதூர் அருகே வடமாநில கர்ப்பிணியான இளம்பெண் மரணமடைந்தது தொடர்பாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.
    என்.ஜி.ஓ. காலனி:

    ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் அலோக் மாலிக். இவர், குமரி மாவட்டம் தெங்கம்புதூர் பகுதியில் தனியார் வலை கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    அலோக் மாலிக்கின் மனைவி மமாலி (வயது 18). இவர்கள், தெங்கம்புதூர் கலைஞர் காலனியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று மமாலியை ஒரு ஆட்டோவில் அவரது கணவர் அலோக் மாலிக் சிங்களேயர் புரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார்.

    உடல்நலம் சரியில்லை என்று டாக்டரிடம் கூறி சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். மமாலியை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுபற்றி தெங்கம்புதூர் கிராம நிர்வாக அதிகாரி கோபிகா, சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணையில், மமாலி சாவில் மர்மம் இருப்பது தெரிய வந்தது. எனவே அவர்கள் மமாலியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் மமாலியின் கணவர் அலோக் மாலிக்கை பிடித்து விசாரித்தனர். இதில், அலோக் மாலிக், மனைவி மமாலியை ஒடிசாவில் இருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக ஒடிசாவில் மமாலியின் பெற்றோர் புகார் செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    நாகர்கோவில் வந்த பின்பு மமாலியை கணவர் அலோக் மாலிக் அக்கம் பக்கத்தாருடன் பேசக்கூடாது என கூறி இருந்தார். கணவரின் பேச்சை மீறி மமாலி பக்கத்து வீட்டாருடன் பேசியதால் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    இதில், அலோக் மாலிக், மனைவி மமாலியை தகாத வார்த்தைகளால் பேசினார். இதில் மனம் உடைந்து மமாலி தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. இதற்கிடையே மமாலியின் பிரேத பரிசோதனையில் அவர், தற்கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் அவரது வயிற்றில் 4 மாத சிசு இருந்துள்ளது.

    பிரேத பரிசோதனை அறிக்கையின் பேரிலும், போலீசார் நடத்திய விசாரணை அடிப்படையிலும் அலோக் மாலிக் மீது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் அலோக் மாலிக் கைது செய்யப்பட்டார்.

    மமாலி இறந்த தகவல் ஒடிசாவில் உள்ள அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இங்கு வந்து உடலை வாங்கிச் செல்வார்களா? என்பது உறுதியாக தெரியவில்லை. எனவே மமாலியின் உடல் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. #tamilnews
    Next Story
    ×