search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம் விலை கடந்து வந்த பாதை
    X

    தங்கம் விலை கடந்து வந்த பாதை

    தங்கம் விலை கடந்த ஆண்டை விட பவுனுக்கு ரூ.896 அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டில் தங்கம் விலை எழுச்சியும், வீழ்ச்சியும் கண்டுள்ளது.
    சென்னை:

    கடந்த ஆண்டு தொடக்கத்தில், அதாவது ஜனவரி 1-ந்தேதி தங்கம் கிராம் ரூ.2,698-க்கும், பவுன் ரூ.21,584-க்கும் விற்பனையானது. ஒரு நாள் குறைவதும், மறுநாள் அதிகரிப்பதுமாக தங்கம் விலை நிலையற்ற தன்மையிலேயே பல நாட்கள் நீடித்தது. கடந்த ஜூலை மாதம் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டது. இதில் தங்கத்துக்கு 3 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது.



    முதலில் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் பீதி அடைந்தாலும் நாளடைவில் இந்த வரி விதிப்பை ஏற்றுக்கொண்டனர். முறைப்படுத்தப்படாமல் இருந்த தங்க வர்த்தகம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் சீரமைக்கப்பட்டது.

    அதன்பின்னர் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் தங்கம் வாங்கும் வாடிக்கையாளர் தனது பான் கார்டு எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து தங்கத்தில் முதலீடு செய்ய தயங்கினார்கள்.

    இதனால் வியாபாரம் மந்த நிலையில் சென்றதால் நகைக்கடை உரிமையாளர்கள் விடுத்த தொடர் வேண்டுகோளை ஏற்று, ரூ.50 ஆயிரம் என்ற மதிப்பை ரூ.2 லட்சமாக ஆக்கி மத்திய அரசு ஆணையிட்டது. அதன்பிறகு நகை வர்த்தகமும் சீரானது.

    தங்க நகைகள் மீது நிச்சயம் ஹால்மார்க் முத்திரை இடப்பட்டிருக்க வேண்டும் என்று மத்திய அரசு சட்டம் இயற்றியது. ஆனால் இதில் நடைமுறை சிக்கல்கள் அதிகம் இருப்பதாகவும், சிக்கல்கள் தீர தற்போது சாத்தியம் இல்லை என்றும் வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இந்த சட்டத்தை தற்காலிகமாக மத்திய அரசு நிறுத்தி வைத்தது.

    இப்படி பல பிரச்சினைகளை சந்தித்து தங்கம் விலை தொடர்ந்து பயணித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி கிராம் ரூ.2,698-க்கும், பவுன் ரூ.21,584-க்கும் விற்பனையான தங்கம் புத்தாண்டு தொடக்க நாளான நேற்று கிராம் 2,810-க்கும், பவுன் ரூ.22 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது. ஒரு வருடத்தில் தங்கம் விலையில் ரூ.896 உயர்வு ஏற்பட்டு உள்ளது.

    இந்தாண்டு தங்கம் விலை எப்படி இருக்கும்? என்று சென்னை தங்கம்-வைரம் நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஜலானி கூறுகையில், “உலக சந்தையில் தங்கம் முக்கிய இடத்தை பிடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. தொழில்துறை சார்ந்த பங்குகள் அனைத்தும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன. தனிநபர் வருமானமும் அதிகரித்திருப்பதால், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. அதேநேரம் சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து உள்ளது. எனவே தங்கம் விலை உயரவே அதிகம் வாய்ப்பு இருக்கிறது”, என்றார்.

    கடந்த ஆண்டில் தங்கம் விலையில் ஏற்பட்ட முக்கிய தாக்கங்கள் வருமாறு:-

    * கடந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி ஒரு பவுன் தங்கம் விலை ரூ.21,584.

    * ஜனவரி 9-ந்தேதி தங்கம் விலை ஆண்டில் முதன்முறையாக ரூ.22 ஆயிரத்தை தொட்டது. தங்கத்தின் அன்றைய விலை ரூ.22 ஆயிரத்து 8 ஆகும்.

    * தொடர் சரிவை சந்தித்து மார்ச் 10-ந்தேதி, தங்கம் ரூ.21 ஆயிரத்து 936-க்கு விற்பனையானது.

    * ஜூலை 11-ந்தேதி தங்கம் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. அன்றைய தினம் தங்கம் ரூ.20 ஆயிரத்து 984-க்கு விற்பனையானது.

    * பல நாட்களுக்கு பிறகு தங்கம் விலை (ஆகஸ்டு 10-ந்தேதி) மீண்டும் 22 ஆயிரத்தை எட்டியது.

    * செப்டம்பர் 8-ந்தேதி தங்கம் விலை ரூ.23 ஆயிரத்தை எட்டியது. அன்று ரூ.23 ஆயிரத்து 216-க்கு தங்கம் விற்பனையானது.

    * டிசம்பர் 31-ந்தேதி தங்கம் விலை ரூ.22 ஆயிரத்து 560 ஆகும்.

    * அதிகபட்ச விலை - ரூ.23,216

    Next Story
    ×