search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடசேரியில் ஜெயலலிதா மணல் சிற்பத்தை அகற்றக்கோரி சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. திடீர் போராட்டம்
    X

    வடசேரியில் ஜெயலலிதா மணல் சிற்பத்தை அகற்றக்கோரி சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. திடீர் போராட்டம்

    ஜெயலலிதா மணல் சிற்பத்தை அகற்றக்கோரி சுரேஷ் ராஜன் எம்.எல்.ஏ. திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி  பகுதியில் எம்.ஜி.ஆர்.சிலை உள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அப்பகுதி அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர்.சிலை அருகே ஜெயலலிதாவின் மணல் சிற்பம் ஒன்றை அமைத்தனர். அதை இன்று வரை அவர்கள் பராமரித்து வருகிறார்கள். இதற்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சாலையில் மணல் சிற்பம் அமைக்கப்பட்டு இருப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.

    எனவே வடசேரியில் அமைக்கப்பட்டு உள்ள ஜெயலலிதா மணல் சிற்பத்தை உடனே அகற்றாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தி.மு.க.வினர் கூறியிருந்தனர். அதன்படி இன்று பகல் 1 மணி அளவில் சுரேஷ் ராஜன் எம்.எல்.எ. தலைமையில் ஏராளமான தி.மு.க.வினர் அந்த பகுதியில் திரண்டனர். அவர்கள் ஜெயலலிதா மணல் சிற்பத்தை அகற்ற முயன்றனர்.

    தகவல் அறிந்து நாகர்கோவில் டி.எஸ்.பி. கோபி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பர்ணபாஸ், அன்பு பிரகாஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். ஆயுதப்படை போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
    அவர்கள் மணல் சிற்பத்தை  அகற்ற சென்ற சுரேஷ் ராஜன் எம்.எல்.ஏ,வை தடுத்து நிறுத்தி சமரச பேச்சு நடத்தினர்.

    இதனை தி.மு.க.வினர் ஏற்க மறுத்தனர். போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மணல் சிற்பத்தை உடனே அகற்றாவிட்டால் அதனை நாங்களே அகற்றுவோம் என கோஷமிட்டனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் ஏராளமான பொதுமக்களும் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.
    Next Story
    ×