search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூலூர் அருகே இன்று காலை 2 லாரிகள் நேருக்கு நேர் மோதல்:
    X

    சூலூர் அருகே இன்று காலை 2 லாரிகள் நேருக்கு நேர் மோதல்:

    • டிரைவர் பலியானார்.
    • ஆயிரக்கணக்கான முட்டைகள் உடைந்து ரோட்டில் கூழாக ஓடியது .

    சூலூர்,

    ஈரோட்டில் இருந்து முட்டை ஏற்றி கொண்டு மினி லாரி ஒன்று இன்று அதிகாலை கோவை வழியாக கேரளாவுக்கு சென்றது. இந்த லாரியில் டிரைவர் உள்பட 3 பேர் இருந்தனர்.

    மினி லாரி அதிகாலை 4.30 மணியளவில் எல் அண்ட் டி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளலூர் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தது.

    அப்போது எதிரே கேரளாவில் இருந்து கோவை நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது.

    வெள்ளலூர் பிரிவு அருகே எதிர்பாராத விதமாக 2 லாரிகளும் திடீரென நேருக்கு நேர் பயங்கர சத்தத்துடன் மோதி கொண்டன. இதில் முட்டை ஏற்றி வந்த லாரி சாலையை விட்டு விலகி அருகே இருந்த தரிசு நிலத்திற்குள் விழுந்து சுக்கு நூறாக அப்பளம் போல் நொறுங்கியது. இதில் வண்டியில் இருந்த ஆயிரக்கணக்கான முட்டைகள் உடைந்து ரோட்டில் கூழாக ஓடியது.

    விபத்தில் சிக்கிய கண்டெய்னர் லாரியில் இருந்து டீசல் வெளியேறி சாலையில் ஓடியது. இதனால் சாலை முழுவதும் முட்டை ஓடுகளாகவும், டீசலாகவும் காணப்பட்டது.

    இந்த விபத்தை பார்த்ததும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி விட்டு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் விபத்து குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சூலூர் போலீசார் தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விபத்தில் சிக்கிய லாரிகளில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்போது செல்லும் வழியிலேயே முட்டை ஏற்றி வந்த லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது பெயர் கோபால கிருஷ்ணன், ஈரோட்டைச் சேர்ந்தவர்.

    முட்டை லாரி கிளீனர் துரைசாமி, கண்டெய்னர் லாரி டிரைவர் வடமாநிலத்தைச் சேர்ந்த நித்திஸ், கிளீனர் தீபக் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒருவர் மட்டும் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினார்.

    சூலூர் தீயணைப்பு அலுவலர் ரகுநாதன் தலைமையிலான தீயணைப்பு படையினர் சாலையில் கொட்டி கிடந்த டீசல் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தனர்.முதற்கட்ட விசாரணையில், எதிரே வந்த கண்டெய்னர் லாரி முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    விபத்து காரணமாக எல் அண்ட் டி பைபைாஸ் சாலையில், ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதற்கிடையே விபத்து நடந்த பகுதியை பட்டணம் ஊராட்சி தலைவர் கோமதி செல்வகுமார் பார்வையிட்டு சிதறி கிடந்த முட்டைகள் மற்றும் டீசல் கழிவுகளை ஊராட்சி பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்து போக்குவரத்துக்கு தொடங்குவதற்கு ஏற்பாடு செய்தார்.

    Next Story
    ×