என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • அயோத்தியில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 8 ஆண்டுகளாக தீபோற்சவ திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
    • சரயு நதியின் 56 படித்துறைகளில் அகல்விளக்குகளை பல்வேறு வடிவங்களில் வரிசைப்படுத்தும் பணி தொடங்கியது.

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 8 ஆண்டுகளாக தீபோற்சவ திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 9-ம் ஆண்டு தீபோற்சவத்துக்காக சரயு நதியின் 56 படித்துறைகளில் அகல்விளக்குகளை பல்வேறு வடிவங்களில் வரிசைப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது.

    அயோத்தி மாவட்டத்தில் உள்ள ராம்மனோகர் லோஹியா அவாத் பல்கலைக்கழக மாணவர்கள், இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இம்முறை உலக சாதனை முயற்சியாக சுமார் 28 லட்சம் அகல்விளக்குகள் ஏற்றப்பட உள்ளதாகவும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஏற்பாடுகளை கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அயோத்தியில் சாலையோர வியாபாரிகளுக்கு அதிகாரிகள் தண்டனை கொடுத்தனர்.
    • தோப்புக்கரணம் போட வைத்ததோடு, சுவரில் தலைகீழாக நிற்க வைத்தது சர்ச்சையை கிளப்பியது.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலுக்கு அருகே சாலையோர வியாபாரிகள் சிலர் பூஜை பொருட்கள் விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வந்தனர்.

    அவர்கள் அங்கிருந்த வியாபாரிகளை கோவில் பாதையை ஆக்கிரமித்ததாகக் கூறி தோப்புக்கரணம் போட வைத்தனர். மேலும் சுவரில் தலைகீழாக நிற்க வைத்தனர்.

    இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    • ரெயில் மிக வேகமாக நெருங்கி வருவதைக் கண்ட அவர், பைக்கை விட்டுவிட்டு ஓடித் தப்பிக்க முயன்றார்.
    • நாட்டில் நடந்த 2,483 ரெயில்வே கிராசிங் விபத்துகளில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 1,025 விபத்துகளும், அதில் 1,007 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

    உத்தரப் பிரதேசத்தில் மூடியிருந்த ரெயில்வே கேட்டைக் கடக்க முயன்ற நபர் ரெயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நேற்று (அக். 13) கிரேட்டர் நொய்டாவில் தாத்ரி பகுதியைச் சேர்ந்த துஷார் என்ற இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் ரெயில்வே கிராசிங்கிற்கு வந்துள்ளார்.

    ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்தும், அவர் சற்றும் யோசிக்காமல் அதன் அடியில் புகுந்து தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார்.

    அப்போது, எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் சறுக்கி விழுந்தது. இதனால் அவரும் கீழே விழுந்தார்.

    அப்போது வேகமாக ரெயில் வந்துகொண்டிருந்த நிலையில் அருகில் வருவதற்குள் தனது பைக்கை தூக்க முயற்சித்துள்ளார்.

    ரெயில் மிக வேகமாக நெருங்கி வருவதைக் கண்ட அவர், பைக்கை விட்டுவிட்டு ஓடித் தப்பிக்க முயன்றார். ஆனால், அதற்குள் நேரம் கடந்துவிட்டது.

    வேகமாக வந்த ரயில் அவரை பலமாக மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) அறிக்கையின்படி, 2023-ல் நாட்டில் நடந்த 2,483 ரெயில்வே கிராசிங் விபத்துகளில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 1,025 விபத்துகளும், அதில் 1,007 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இது நாட்டிலேயே அதிகபட்ச எண்ணிக்கையாகும்.  

    • இஸ்லாமியர்கள் அதிகரிப்புக்கு ஊடுருவல்களே காரணம் என்றார் உள்துறை மந்திரி அமித்ஷா.
    • யோகியை மீண்டும் உத்தரகாண்ட்டிற்கு அனுப்பவேண்டும் என விரும்புவதாக அகிலேஷ் கூறினார்.

    லக்னோ:

    சமாஜ்வாடி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ் லக்னோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    பொய்யான புள்ளிவிவரங்களைக் கூறுவதில் கைதேர்ந்தவர்கள் பாஜகவினர்.

    அண்டை நாட்டவர் குறித்து பாஜகவினர் கூறுவது அவர்களின் புனைவுக் கதைகள் தான்.

    உத்தர பிரதேசத்திலும் ஊடுருவல்காரர்கள் உள்ளனர். முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தும் ஊடுருவல்காரர் தான்.

    உண்மையில் அவர் உத்தரகாண்ட்டில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு ஊடுருவியவர். அவரை மீண்டும் உத்தரகாண்ட்டிற்கு அனுப்ப வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என தெரிவித்தார்.

    சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா, இஸ்லாமியர்கள் அதிகரிப்புக்கு ஊடுருவல்களே காரணம் என தெரிவித்தார்.

    அமித்ஷாவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அகிலேஷ் இவ்வாறு கூறியுள்ளார்.

    • மகாத்மா காந்தியின் உருவப்படத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர்
    • பூஜா ஷகுன் பாண்டே வீட்டில்முகமது பைசல் மற்றும் ஆசிப் வேலை பார்த்து வந்தனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸில் இரு சக்கர வாகன ஷோரூம் உரிமையாளர் அபிஷேக் குப்தா கடந்த வெள்ளிக்கிழமை பேருந்தில் பயணித்தபோது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இந்து மகாசபா என்ற அமைப்பின் தலைவி பூஜா ஷகுன் பாண்டே, அவரது கணவர் மற்றும் அசோக் பாண்டா என்ற நபர் ஆகியோர் ஆள் வைத்து அபிஷேக் குப்தாவை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.

    பூஜா ஷகுன் பாண்டே வீட்டில் வெகு காலமாக வேலை பார்த்த முகமது பைசல் மற்றும் ஆசிப் என்ற இரண்டு கூலிப்படையினர் மூலம் இந்த கொலை அரங்கேறி உள்ளது.

    இந்த வழக்கில் ஏற்கனவே முகமது பைசல் மற்றும் ஆசிப், பூஜாவின் கணவர் ஆகியிரை போலீசார் கைது செய்தனர். சம்பவத்திற்குப் பிறகு பூஜா சகுன் பாண்டே தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் ராஜஸ்தானில் ஆக்ரா - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் பூஜாவை மடக்கிப்பிடித்து கைது செய்த போலீசார் அவரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.

    இந்து சபா தலைவி பூஜா ஷகுன் பாண்டே முன்னதாக மகாத்மா காந்தி கொலையை நடித்துக்காட்டும் விதமாக அவரது  உருவப்படத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி நடித்துக்காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.   

    • தொடர்ந்து தனது கருத்துக்களை பேஸ்புக் தளத்தில் அவர் முன்வைத்து வந்தார்.
    • எதிர்க்கட்சிகளின் குரலை தடுக்கும் பாஜகவின் சதி என சமாஜ்வாதி குற்றம்சாட்டியது.

    உத்தரப் பிரதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியாக சமாஜ்வாதி கட்சி உள்ளது. இதன் தலைவரும் மக்களவை எம்.பியுமான அகிலேஷ் யாதவ் உடைய பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டது. நேற்று மாலை முதல் அவரது பேஸ்புக் செயல்பாடு துண்டிக்கபட்டது. இதில் அவருக்கு 85 லட்சம் பின்தொடர்பவர்கள் இருந்தனர்.

    தொடர்ந்து தனது கருத்துக்களை பேஸ்புக் தளத்தில் அவர் முன்வைத்து வந்த நிலையில் இந்த முடக்கம் எதிர்க்கட்சிகளின் குரலை தடுக்கும் பாஜகவின் சதி என சமாஜ்வாதி குற்றம்சாட்டியது.

    இந்நிலையில் இதில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்றும் அகிலேஷ் வெளியிட்ட பதிவு காரணமாக பேஸ்புக் நிறுவனம் இந்த நடவைடிக்கையை எடுத்ததாகவும் மத்திய ரெயில்வே மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்தார்.

    இதற்கிடையே தற்போது அகிலேஷின் பேஸ்புக் கணக்கு மீட்கப்பட்டுள்ளதாக சமாஜ்வாதி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

    • இப்போதெல்லாம் லிவ்-இன் உறவுகள் ஒரு ட்ரெண்டாக மாறிவிட்டன.
    • கல்வி என்பது வெறும் பட்டப்படிப்புக்காக அல்ல, வாழ்க்கையில் மாற்றத்திற்கானது.

    உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் வாரணாசியில் உள்ள மகாத்மா காந்தி காசி வித்யாபீத், ஜனநாயக் சந்திரசேகர் விஸ்வவித்யாலயா மற்றும் சம்பூர்ணானந்த் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    இளம் பெண்கள் லிவ் இன் உறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். லிவ்-இன் உறவுகளின் விளைவை பார்க்க விரும்பினால், அனாதை இல்லங்களை பாருங்கள். அங்கு 15-20 வயது சிறுமிகள் ஒரு வயது குழந்தைகளுடன் வரிசையில் நிற்கிறார்கள்.

    இப்போதெல்லாம் லிவ்-இன் உறவுகள் ஒரு ட்ரெண்டாக மாறிவிட்டன. ஆனால், அதிலிருந்து விலகி இருங்கள். பெண்கள் 50 துண்டுகளாக வெட்டப்படுவதை நான் பார்த்திருக்கிறேன்.

    பெண்கள் தங்கள் கல்வி மற்றும் சிறந்த குறிக்கோள்களுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். தாய்வழி குடும்பங்களோ அல்லது மாமியாரோ பின்னர் அவர்களைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

    இளைஞர்களிடையே போதைப்பொருள் அதிகரித்து வருகிறது. மாணவர்கள் கல்விப்பட்டங்களுடன் கடமை உணர்வையும் தேசியப் பொறுப்பையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    கல்வி என்பது வெறும் பட்டப்படிப்புக்காக அல்ல, வாழ்க்கையில் மாற்றத்திற்கானது. சரியான நேரத்தில் தேர்வுகள் மற்றும் வகுப்புகளில் 75% வருகையின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

    சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து பேசிய ஆனந்திபென் படேல், இயற்கை விவசாயத்தை பின்பற்றவும், தூய்மையை மேம்படுத்தவும், இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் இழப்புகளைக் குறைக்க ஆராய்ச்சி நடத்தவும் மாணவர்களை வலியுறுத்தினார்.

    • தகவலறிந்து போலீசார் மற்றும் மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர்.
    • வெடிவிபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாக்லா பாரி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

    மர்மப் பொருள் வெடித்துச் சிதறியதில் அந்த வீடு தரைமட்டமானது. இதில் அங்கிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்தனர். இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்டனர். அப்போது 5 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.

    சிலர் காயத்துடன் மீட்கப்பட்டனர். மேலும் பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணி தீவிரமாக நடந்தது.

    வீட்டில் என்ன பொருள் வெடித்தது என்பது உடனடியாக தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உலக சாதனை புத்தகத்திலும் இந்திய உலக சாதனை புத்தகத்திலு இடம் பெற்றுள்ளது.
    • 20 நாட்கள் கடுமையாக உழைத்து 18 அடி உயரமுள்ள இந்த சிலையை உருவாக்கினர்.

    உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் கைவினை கலைஞர்கள் புதுமையான ராமர் சிலை ஒன்றை உருவாக்கினர்.

    ஒரு லட்சம் மதிப்பிலான 1,5,10 நாணயங்களை கொண்டு 25 கைவினை கலைஞர்கள் 20 நாட்கள் கடுமையாக உழைத்து 18 அடி உயரமுள்ள இந்த சிலையை உருவாக்கினர்.

    இந்த ராமர் சிலை ஆசிய உலக சாதனை புத்தகத்திலும் இந்திய உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.

    லக்னோவில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் உத்தரப்பிரதேச துணை முதல் மந்திரி பிரஜெஸ் பதக் நேற்று திறந்து வைத்தார்.

    • விபத்தின்போது விமானத்தில், ஃபரூகாபாத்தில் கட்டுமானத்தில் உள்ள ஒரு பீர் தொழிற்சாலையின் நிர்வாக இயக்குநர் இருந்துள்ளார்.
    • அவர் தனது திட்டப் பணியை ஆய்வு செய்வதற்காக விமானத்தில் வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    உத்தரப் பிரதேசத்தின் ஃபரூகாபாத்தில் தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளது.

    தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த ஜெட் விமானம், காலை 10:30 மணியளவில், முகமதாபாத் பகுதியில் உள்ள ஒரு சிறிய விமான நிலையத்தில் டேக்-ஆஃப் செய்யும் போது கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் இருந்து விலகி அருகில் இருந்த புதர்களுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் விமானிகள் மற்றும் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினர்.

    விபத்தின்போது விமானத்தில், ஃபரூகாபாத்தில் கட்டுமானத்தில் உள்ள ஒரு பீர் தொழிற்சாலையின் நிர்வாக இயக்குநர் இருந்துள்ளார். அவர் தனது திட்டப் பணியை ஆய்வு செய்வதற்காக விமானத்தில் வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விபத்து நடந்த இடத்தில் காவல்துறை மற்றும் மாவட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

      

    • என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்த அவரது தந்தை, இறுதியாகச் சிறுமி நடந்தவற்றை சொன்னபோது அதிர்ச்சியில் உரைந்தார்.
    • வெளியே சொன்னால் தேர்வில் தோல்வியடையச் செய்வேன், உன் குடும்பத்திற்கு தீங்கு விளைவிப்பேன்

    உத்தரப் பிரதேசத்தில் 8 ஆம் வகுப்பு மாணவியை பள்ளி மேலாளர் தொடர் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    தியோரியா மாவட்டத்தில் சதார் கோட்வாலி பகுதியை சேர்ந்த அந்த சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியொன்றில் பயின்று வந்தார்.

    அண்மை காலமாக சிறுமி பள்ளியிலும் வீட்டிலும் விநோதமாக நடந்துகொண்டிருக்கிறார். என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்த அவரது தந்தை, இறுதியாகச் சிறுமி நடந்தவற்றை சொன்னபோது அதிர்ச்சியில் உரைந்தார்.

    பள்ளி மேலாளர் தேவேந்திர குஷ்வாஹா தன்னை அவருடைய அலுவலகத்திற்கு அழைத்து, கதவைப் பூட்டி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், வெளியே சொன்னால் தேர்வில் தோல்வியடையச் செய்வேன், உன் குடும்பத்திற்கு தீங்கு விளைவிப்பேன் என்று மிரட்டியதாகவும் சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். மேலும் பல மாதங்களாக இந்த துன்புறுத்தல் தொடர்ந்தது என்று சிறுமி நடுக்கத்துடன் கூறியுள்ளார். 

    சிறுமியின் தந்தை அளித்த புகாரைத் தொடர்ந்து, காவல்துறை பள்ளி மேலாளர் தேவேந்திர குஷ்வாஹாவை கைது செய்து விசாரித்து வருகிறது. அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    • ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையானதால் கடன்மேல் கடன் வாங்கியுள்ளார்.
    • கடன் கழுத்தை நெரித்ததால், அம்மாவின் நகைகளை திருடும்போதும் மாட்டியதால் கொலை.

    உத்தர பிரதேச மாநலத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான 20 வயது வாலிபர், லோன் ஆப் மூலம் கடன்மேன் கடன் வாங்கியதால் நெருக்கடிக்கு உள்ளாகி தாயின் நகையை திருடியபோது மாட்டிக்கொண்டதால், தாயையே அடித்துக் கொலை செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    உ.பி.யில் உள்ள பதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்த காலி என்ற பகுதியில் வசித்து வரும் வாலிபர் நிகில் யாதவ் என்ற கொலு. இவர் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளார். Aviator என்ற ஆன்லைனில் பணம் கட்டி விளையாடியுள்ளார். பணத்தை இழக்க இழக்க கடன் வழங்கம் ஆன்லைன் செயலிகளில் (M Pokket, Flash Wallet, RAM Fincorp) கடன் பெற்றுள்ளார். அந்த செயலில் வட்டி மற்றும் மறைமுக கட்டணம் என அதிகமாக தொகை கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

    பணம் செலுத்த வழியில்லாததால் தாயின் நகையை திருடி, அதை விற்று பணத்தை செலுத்த முயற்சி செய்துள்ளார். நகையை திருடும்போது, தாய் கையும் களவுமாக பிடித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. பெற்ற தாய் என்று கூட பார்க்காமல் கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளார்.

    பின்னர், இந்த கொலை கொள்ளை சம்பவத்தால் நடைபெற்றது என நாடகம் ஆடுவதற்காக, வீட்டில் உள்ள பொருட்களை அங்கும் இங்குமா தூக்கி வீசியுள்ளார். பின்னர் தனது தந்தைக்கு போன் செய்து, மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளை அடித்தனர். அப்போது என்னை தாக்கிவிட்டு, அம்மாவை கொலை செய்து விட்டு ஓடிவிட்டனர் எனக் கூறியுள்ளார்.

    தந்தை இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் நிகில் யாதவிடம் தொடர் விசாரணை நடத்தும்போது, உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் மீது கொலை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×