என் மலர்
உத்தரப் பிரதேசம்
- உத்தர பிரதேசத்தில் இரட்டை என்ஜின் அரசு அல்ல, என்ஜினே இல்லாத அரசாகும்.
- அதானி விவகாரமானது தனிப்பட்ட பிரச்சனை இல்லை என்றார்.
லக்னோ:
சமீபத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடியிடம், அதானி மீதான குற்றச்சாட்டு குறித்து அதிபர் டிரம்புடன் விவாதிப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது பதிலளித்த பிரதமர் மோடி, தனிப்பட்ட பிரச்சனைகளை இருநாட்டு தலைவர்களும் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார்.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக உத்தரப் பிரதேசம் வந்துள்ளார். லால்கஞ்சில் நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
அமெரிக்காவில் அதானி குறித்த கேள்விக்கு அது தனிப்பட்ட பிரச்சனை என்றும், இரண்டு தலைவர்கள் சந்திக்கும்போது இதுபோன்ற பிரச்சனைகள் விவாதிக்கப்படுவதில்லை என்றும் பிரதமர் மோடி கூறியிருந்தார்.
நரேந்திர மோடிஜி, இது தனிப்பட்ட விஷயம் இல்லை. இது நாட்டின் விஷயமாகும்.
உத்தர பிரதேச அரசானது வேலையின்மை மற்றும் பணவீக்கத்தை நிவர்த்தி செய்வதற்கு தவறிவிட்டது. மத்திய அரசு தனியார் மயமாக்கலை நாடுகின்றது.
உத்தர பிரதேசத்தில் இரட்டை என்ஜின் அரசு அல்ல, என்ஜினே இல்லாத அரசாகும் என தெரிவித்தார்.
- ராம் குதிர் ஆசிரமம் நடத்தி வரும் போலே பாபா என்ற இந்துமத சாமியாரின் ஆன்மீக சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது.
- காவல்துறையும் நிர்வாகமும் விழிப்புடன் இருந்திருந்தால் இந்த துயர விபத்தைத் தவிர்த்திருக்கலாம்.
ராம் குதிர் தொண்டு நிறுவனம் என்ற பெயர் ஆசிரமம் நடத்தி வரும் போலே பாபா என்ற பிரபல இந்துமத சாமியாரின் ஆன்மீக சொற்பொழிவு கூட்டம் ஒன்று கடந்த ஜூலை 2, 2024 இல் உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்தது.
இதில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 121 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிகம்.
கூட்டநெரிசல் ஏற்பட்டபோது போலே பாபா அங்கிருந்து தனது காரில் தப்பினார். தனது காலடி மண்ணை எடுக்குமாறு போலே பாபா கூறியதும் மக்கள் தல்லுமுல்லுப்பட்டதால் தான் கூட்டநெரிசல் ஏற்பட்டதாக உயிர்பிழைத்தவர்கள் பலர் தெரிவித்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை விசாரிக்க சிறப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த ஆணையத்தின் அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அவையில் தாக்கல் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றும் இந்த சம்பவத்தில் போலே பாபாவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் விசாரணை ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உண்மையான காரணம், ஏற்பாட்டாளர்களின் தவறான நிர்வாகமும், அந்த இடத்தில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகப்படியாகச் சேர்ந்த கூட்டமுமே ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் காவல்துறை தனது பொறுப்பை முறையாகச் செய்யவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கூட்டத்தை நிர்வகிப்பதற்கு உறுதியான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
காவல்துறையும் நிர்வாகமும் விழிப்புடன் இருந்து கூட்டத்தைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்திருந்தால், ஒருவேளை இந்த துயர விபத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க கடுமையான விதிகளை அமல்படுத்த ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இதற்கிடையில் இதே உத்தரப் பிரதேசத்தில் பிரயாக்ராஜ் நகரில் நடந்து வரும் மகா கும்பமேளா ஆன்மீக கூடுகையில் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி ஏற்பட்ட கூட்டநெரிசலில் 30 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
- ஒரு பக்கம், தாங்கள் விரும்பியதைப் பெறும் பணக்காரர்கள் உள்ளனர்
- ஏழை மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களுக்காண குரல் இன்னும் இருக்கிறதென்றால் அதற்கு அரசியலமைப்பே காரணம்.
மக்களவை எதிரிகட்சித் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக நேற்று (வியாழக்கிழமை) உத்தரப் பிரதேசத்துக்கு வருகை தந்தார்.
ரேபரேலியில் பேரணியின்போது பேசிய அவர், இரண்டு இந்தியாக்கள் உருவாக்கப்படுகின்றன. ஒரு பக்கம், தாங்கள் விரும்பியதைப் பெறும் பணக்காரர்கள் உள்ளனர். அவர்களுக்காக கொரோனாவின் போது, லட்சக்கணக்கான பெருநிறுவன கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
மறுபுறம், விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் கடின உழைப்பாளிகளுக்கான இந்தியா உள்ளது. நமக்கு இரண்டு இந்தியாக்கள் இருக்க முடியாது. நமக்கு ஒரே இந்தியா வேண்டும்.
நாம் எப்படி இந்த நிலையை அடைந்தோம்?. மோடி அரசாங்கம் பணமதிப்பிழப்பு போன்ற கொள்கைகளை செயல்படுத்தியதன் மூலம் சிறு வணிகங்களை முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்த நாட்டில் ஏழை மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களுக்காண குரல் இன்னும் இருக்கிறதென்றால் அதற்கு அரசியலமைப்பே காரணம்.
காந்தி, அம்பேத்கர், நேரு ஆகியோர் இந்த அரசியலமைப்பை நமக்குக் கொடுத்தார்கள். அவர்கள் சிறைக்குச் சென்று ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடினார்கள்.
இன்று, ஆட்சியில் இருப்பவர்கள் இந்த அரசியலமைப்பைத் தாக்குகிறார்கள். யாராவது இந்தியாவைப் பிரிக்க முயற்சித்தால், அதை நீங்கள் நிறுத்த வேண்டும். இந்த நாட்டை வெறுப்பு நிறைந்ததாக மாற்றும் அவர்களின் முயற்சியை ஏற்றுக்கொள்ளாதீர்கள். இந்த நாடு அன்பின் நாடு, எப்போதும் அன்பின் ஒன்றாகவே இருக்கும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து தலித் மாணவர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி, ஆங்கிலம் கற்க வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைத்தார். ஆர்எஸ்எஸ் தலைவர் ஆங்கிலம் பேச மாட்டேன் என்று கூறுகிறார். தலித் மாணவர்கள் ஆங்கிலம் கற்று உயர் இடங்களுக்கு சென்றுவிடக்கூடாது என்பதே ஆர்எஸ்எஸ் எண்ணம். அதிகாரத்துக்கு வர ஆங்கிலம் ஒரு கருவி என்று தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் எத்தனை தலித் தலைவர்கள் இருக்கிறார்கள் என கேள்வி எழுப்பிய ராகுல், இந்த அமைப்பு உங்களை ஒவ்வொரு நாளும் தாக்குகிறது, பாதிக்கும் மேற்பட்ட நேரங்களில் அது உங்களை எப்படித் தாக்குகிறது என்பது கூட உங்களுக்குத் தெரியாது.
அரசியலமைப்பின் சித்தாந்தம்தான் உங்கள் சித்தாந்தம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டில் தலித்துகள் இல்லையென்றால், இந்த நாட்டிற்கு அரசியலமைப்புச் சட்டம் கிடைத்திருக்காது என்பதை நான் உறுதியாகச் சொல்ல முடியும் என்று தெரிவித்தார்.
- உ.பியில் மாணவர்கள் உடன் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
- ஆங்கிலம் கற்றுக் கொண்டால் உலகம் முழுக்க சென்று எந்தவொரு நிறுவனத்திலும் பணிபுரியலாம்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் மாணவர்கள் உடன் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
அப்போது, " ஆங்கிலத்தில் பேசமாட்டேன் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறுகிறார்" என்றார்.
இதுகுறித்து ராகுலம் காந்தி மேலும் கூறுகையில், " அதிகாரத்தை அடைய ஆங்கிலம் ஒரு கருவி. ஆங்கிலம் மக்களின் மிகப்பெரிய ஆயுதம்.
பட்டியலின, பழங்குடியின மற்றும் ஏழை மக்கள் உயர்ந்த நிலைக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஆங்கிலம் கற்கக் கூடாது என ஆர்எஸ்எஸ் கூறுகிறது.
ஆங்கிலம் கற்றுக் கொண்டால் உலகம் முழுக்க சென்று எந்தவொரு நிறுவனத்திலும் பணிபுரியலாம்" என்றார்.
- நாயை லிஃப்ட்டிற்குள்ளே கொண்டு வரவேண்டாம் என்று அப்பெண்ணிடம் சிறுவன் கெஞ்சுகிறான்.
- இது தொடர்பாக சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நாய்க்கு பயந்து ஓடியதால், 8 வயது குழந்தையை லிஃப்டில் இருந்து வெளியே இழுத்து பெண் ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளார்.
இது தொடர்பாக சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சிறுவன் லிஃப்ட் உள்ளே நின்று கொண்டிருக்கிறான். அப்போது ஒரு பெண் தனது செல்ல நாயுடன் உள்ளே வருகிறார். அப்போது நாயைப் பார்த்து பயமடைந்த சிறுவன் நாயை லிஃப்ட்டிற்குள்ளே கொண்டு வரவேண்டாம் என்று அப்பெண்ணிடம் கெஞ்சுகிறான்.
இதனால் கோபமடைந்த அப்பெண், சிறுவனை லிப்டிலிருந்து வெளியே இழுத்து அடித்தார். இதனையடுத்து, அந்த சிறுவன் மீண்டும் லிப்டிற்குள் நுழைந்து அழுகிறான்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக நிலையில், அப்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் இந்த மாபெரும் விழாவில் பங்கேற்று வருகின்றனர்.
- அகிலேஷ் யாதவ் ஆளும் பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சித்து இருந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி தொடங்கியது. 45 நாட்கள் நடைபெறும் இந்த விழாவானது வரும் 26-ந்தேதி மகா சிவராத்திரியை ஒட்டி நிறைவு பெறுகிறது. உ.பி. அரசாங்க புள்ளிவிவரங்களின்படி இதுவரை 50 கோடிக்கும் அதிகமான மக்கள் மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் நீராடியுள்ளனர். ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் இந்த மாபெரும் விழாவில் பங்கேற்று வருகின்றனர்.
இதனிடையே மகா கும்பமேளாவில் பெண்கள் குளித்து உடை மாற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆன்லைனில் விற்கப்படும் அதிரச்சி உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டெலிகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இயங்கும் கும்பல்கள், இந்த வீடியோக்களை விற்பனை செய்து வருகிறது.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மகா கும்பமேளாவில் பெண்களின் கௌரவத்தைப் பாதுகாக்க பாஜக அரசு தவறிவிட்டது. இது மிகவும் அநாகரீகமான மற்றும் உணர்ச்சிகரமான சர்ச்சைக்குரிய விஷயம் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆளும் பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சித்து இருந்தார்.
வீடியோக்கள் விவகாரம் தொடர்பாக பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மகா கும்பமேளாவில் பெண்கள் குளித்து உடை மாற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு விற்பனை செய்தததாக இரண்டு சமூக ஊடகங்கள் மீது உ.பி. காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
மேலும், வீடியோக்களை வெளியிட்டதாக கூறப்படும் இன்ஸ்டாகிராம் கணக்கு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்டாகிராமை கையாளும் நபர் குறித்து மெட்டாவிடம் தகவல் கோரியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள தினமும் அதிக அளவில் பக்தர்கள் வருவதால், நகருக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மாணவர்கள், தங்களது இருசக்கர வாகனத்தில் பக்தர்களை திரிவேணி சங்கமம் பகுதிக்கு அழைத்து சென்று, மீண்டும் கொண்டுவந்து விடுகிறார்கள்.
பிரயாக்ராஜ்:
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள தினமும் அதிக அளவில் பக்தர்கள் வருவதால், நகருக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரெயில், விமானம் மற்றும் பஸ்களில் வரும் பக்தர்கள் திரிவேணி சங்கமத்துக்கு மிகுந்த சிரமத்துடன் செல்ல வேண்டியுள்ளது. பலர் வெகு தூரம் நடந்து செல்லும் நிலை உள்ளது.
இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட உள்ளூரை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், தங்களது இருசக்கர வாகனத்தில் பக்தர்களை திரிவேணி சங்கமம் பகுதிக்கு அழைத்து சென்று, மீண்டும் கொண்டுவந்து விடுகிறார்கள். இதற்காக ரூ.100 முதல் ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கிறார்கள் என்றும். இதன் மூலம் அவர்கள் தினமும் ரூ.5 ஆயிரம் வரை சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.
பக்தர்களும் இந்த சேவை தங்களுக்கு மிகவும் வசதியாக இருப்பதாக தெரிவிக்கிறார்கள்.
- "கங்கை நதி திறந்தவெளி குளியல் குழு", "மறைக்கப்பட்ட குளியல் வீடியோக்கள் குழு" ஆகியவை இயங்கி வருகின்றன.
- இதுபோன்ற படங்கள் மற்றும் வீடியோக்களை விற்பனை செய்வதற்காக அவற்றின் டீசர்கள் (முன்னோட்டம்) பகிரப்படுகின்றன.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்து ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கியது. வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி, மகா சிவராத்திரியை ஒட்டி இந்த விழா முடிவுக்கு வரும். உ.பி. அரசாங்க புள்ளிவிவரங்களின்படி இதுவரை 50 கோடிக்கும் அதிகமான மக்கள் மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் நீராடியுள்ளனர். ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் இந்த மாபெரும் விழாவில் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் மகா கும்பமேளாவில் பெண்கள் குளித்து உடை மாற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆன்லைனில் விற்கப்படும் அதிரச்சி உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டெலிகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இயங்கும் கும்பல்கள், இந்த வீடியோக்களை விற்பனை செய்து வருகிறது.

கொடுமை என்னவென்றால் இதுபோன்ற படங்கள் மற்றும் வீடியோக்களை விற்பனை செய்வதற்காக அவற்றின் டீசர்கள் (முன்னோட்டம்) பகிரப்படுகின்றன. பேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பெண்கள் குளித்து உடை மாற்றும் வீடியோக்களின் டீசர்கள் ஏராளமாக வளம் வருகின்றன.

இந்த வீடியோக்களில் பல, பெண்கள் குளிக்கும் முழு வீடியோக்களையும் பார்க்க, பயனர்களை டெலிகிராம் லிங்க்-குக்கு இட்டுச் செல்கின்றன.
"மகா கும்ப கங்கை நீராடல்" போன்ற தலைப்புகளுடன் பெண்கள் குளிக்கும் வீடியோக்களை பகிர்ந்து பயனர்களை இந்த கும்பல்கள் கவர்ந்து வருகின்றன. இதில் #mahakumbh2025, #gangasnan, மற்றும் #prayagrajkumbh உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை பயன்படுத்துகின்றனர்.
ஒரு பெண் தனது கீழ் முதுகு, பின்பகுதி வெளியே தெரியும் நிலையில் ஆற்றில் குளிக்கும் வீடியோ ஒன்று அதற்கு உதாரணம். தான் வீடியோ பதிவு செய்யப்படுவதை அறியாமல், அந்த பெண் தொடர்ந்து குளிக்கிறார். இந்த வீடியோ பகிரப்பட்ட சமூக வலைதள கணக்கை போல ஏராளமான கணக்குகளில் இதுபோன்ற ஏராளமான வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன.

இவற்றில் தற்போது மகா கும்பமேளாவில் எடுக்கப்பட்ட வீடியோக்களும், பழைய வீடியோக்களும் சேர்ந்தே உள்ளன. டெலிகிராமில் "கங்கை நதி திறந்தவெளி குளியல் குழு", "மறைக்கப்பட்ட குளியல் வீடியோக்கள் குழு" மற்றும் "திறந்தவெளி குளியல் வீடியோக்கள் குழு" போன்ற சேனல்கள் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 18 வரை டெலிகிராம் அனலிடிக்ஸ் படி, 'திறந்தவெளி குளியல்' என்பதை அதிக பெயர்கள் தேடியுள்ளனர்.

இதில் காணப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பலவற்றில், பெண்கள் உடை மாற்றுவது, துண்டுகளுடன் நிற்பது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த சேனல்களில் இணைய ரூ.1,999 முதல் ரூ.3,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கும்பமேளாவுக்கு வரும் எல்லோருடைய கைகளிலும் மொபைல் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், யார் யாருடைய புகைப்படம் எடுக்கிறார்கள், யாரை வீடியோ எடுக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இதை சாதகமாக பயன்படுத்தி இத்தகைய கும்பல்கள் இயங்கி வருகின்றன.

இதுபோன்ற டெலிகிராம் சேனல்களில், பெண்கள் குளிக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைத் தவிர, மருத்துவர்கள், செவிலியர்களால் பெண்கள் பரிசோதிக்கப்படும் சிசிடிவி காட்சிகள், அவர்களின் அந்தரங்க உறுப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவது உள்ளிட்ட வீடியோக்களும் வளம் வருகின்றன.
மகா கும்பமேளாவில் குளிக்கும் பெண்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது கடும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
மகா கும்பமேளாவில் பெண்களின் கௌரவத்தைப் பாதுகாக்க பாஜக அரசு தவறிவிட்டது. இது மிகவும் அநாகரீகமான மற்றும் உணர்ச்சிகரமான சர்ச்சைக்குரிய விஷயம். மகா கும்பமேளாவில் மோட்சம் பெற வந்த பெண் சக்திகயின் படங்கள் வெளிப்படையாக விற்பனை செய்யப்பட்ட செய்தியால் பக்தர்கள் மத்தியில் பெரும் கோபம் ஏற்பட்டுள்ளது.
பெண்களின் கௌரவத்தைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை. இந்த ஆன்லைன் விற்பனையிலிருந்து ஜிஎஸ்டி சம்பாதிப்பதன் மூலம் அரசாங்கம் இந்த சட்டவிரோத வியாபாரத்தில் பங்குதாரராக மாறவில்லையா?
உ.பி. மற்றும் தேசிய மகளிர் ஆணையம் இதை உடனடியாகக் கவனத்தில் கொண்டு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதில் தொடர்புடைய அனைத்து நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
- மகா கும்பமேளா நதிகள் குளிப்பதற்கு தகுதியற்றவை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
- இதுவரை 56.25 கோடி மக்கள் மகா கும்பமேளாவில் புனித நீராடியுள்ளனர்.
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' என்ற இடத்தில் ஜனவரி 13-ந்தேதி கோலாகலமாகத் தொடங்கியது. மகா சிவராத்திரி நாளான வருகிற 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்பதால் 45ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும், தேசிய, மாநில மீட்பு படையினரும் களத்தில் உள்ளனர். இதுவரை 50 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
இந்த நிலையில், மகா கும்பமேளா நதிகள் குளிப்பதற்கு தகுதியற்றவை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
மகா கும்பமேளா நடக்கும் உ.பி. பிரயாக்ராஜில் கங்கை மற்றும் யமுனை ஆறுகள் சங்கமிக்கும் பகுதி உள்பட பல்வேறு இடங்களில் ஆற்றின் நீரில் 'Faecal Coliform' என்ற பாக்டீரியா அதிகளவில் இருப்பதால், குளிப்பதற்கு தகுதியற்றவை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.Faecal Coliform என்பது மனிதர்கள், விலங்குகளின் மலக் குடல் பாதையில் உருவாகும் பாக்டீரியாக்கள் ஆகும்.
இந்நிலையில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இந்த அறிக்கையை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக உத்தரபிரதேச சட்டசபையில் பேசிய யோகி ஆதித்யநாத், "இதுவரை 56.25 கோடி மக்கள் மகா கும்பமேளாவில் புனித நீராடியுள்ளனர். கங்கை, யமுனை மற்றும் புராண கால நதியான சரஸ்வதி ஒன்றாக கலக்கும் திரிவேணி சங்கமத்தில் உள்ள தண்ணீர் குடிப்பதற்கு உகந்தது. சனாதன தர்மம், கங்கை நதி, இந்தியாவுக்கு எதிரானவர்கள் தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். இது 56 கோடி மக்களின் நம்பிக்கையுடன் விளையாடுவது போன்றது" என்று தெரிவித்தார்.
- உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
- கும்பமேளாவிற்கு 55 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடியுள்ளனர்.
லக்னோ:
உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ம் தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.
இதற்காக 10,000 ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15,000 துப்புரவு பணியாளர்கள், 25,000 தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில், கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ள பக்தர்களின் எண்ணிக்கை 55 கோடியைத் தாண்டியுள்ளது என உத்தர பிரதேச அரசு தெரிவித்தது.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 38 சதவீதம் பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். கும்பமேளா நிறைவடைய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 60 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கும்பமேளாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்பட பல்வேறு பிரபலங்களும் புனித நீராடினர்.
- பி.எம். ஸ்ரீ கூட்டுப் பள்ளி" என்று கல்வித் துறையினர் மாற்றியுள்ளனர்.
- நாட்டின் பெயரை 'இந்தியா' என்பதிலிருந்து 'பாஜக' என்று மாற்றுவது ஒன்றுதான் இன்னும் நடக்காமல் இருக்கிறது
1965இல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வீரமரணமடைந்தவர் இந்திய ராணுவ வீரர் அப்துல் ஹமீத். போரில் 8 பாகிஸ்தான் பீரங்கிகளை அழித்த அப்துல் ஹமீத் 9வது பீரங்கியை தாக்கும்போது வீரமரணமடைந்தார். பரம் வீர் சகாரா பெற்றவர் இவர்.
உத்தரப் பிரதேசம் காஜிபூர் அருகே ஜகானியன் தாலுகாவின் கீழ் உள்ள தாமுபூர் கிராமத்தை சேர்ந்தவர் இவர். அங்கு இயங்கி வரும் அரசு பள்ளிக்கு இவரது பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஆனால் ஐந்து நாட்களுக்கு முன்பு, பள்ளியில் பெயிண்ட் அடித்தபோது, பள்ளியின் பெயரை "பி.எம். ஸ்ரீ கூட்டுப் பள்ளி" என்று கல்வித் துறையினர் மாற்றியுள்ளனர்.
இது அப்பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் கல்வித் துறை அதிகரிகள், சுவரின் ஹமீத்தின் பெயரை எழுதி அவர்களை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர்.
இருப்பினும், ஹமீத்தின் பேரன் ஜமீல் அகமது, இந்த விஷயத்தை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். "தேசத்திற்காக தனது உயிரைத் தியாகம் செய்த ஒரு போர் வீரரின் பெயரை அழித்தது மன்னிக்க முடியாத தவறு" என்று அகமது கூறினார்.
மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து இன்று (பிப்ரவரி 18) பள்ளியின் பெயர் பிரதான நுழைவாயிலில் 'ஷாஹீத் வீர் அப்துல் ஹமீத் பி.எம். ஸ்ரீ கூட்டுப் பள்ளி' என்று மாற்றப்பட்டுள்ளது.
சமாஜ்வாடி கட்சித் தலைவரும் முன்னாள் உ.பி. முதல்வருமான அகிலேஷ் யாதவ் இந்த விவகாரத்தில் பாஜக தலைமையிலான மாநில அரசை கடுமையாக சாடினார். "நாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்கள் மற்றவரை விட குறைவான முக்கியத்துவத்தைப் பெறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் அநாகரீகமானது.
இப்போது நாட்டின் பெயரை 'இந்தியா' என்பதிலிருந்து 'பாஜக' என்று மாற்றுவது ஒன்றுதான் இன்னும் நடக்காமல் இருக்கிறது என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சுதந்திரம் பெறுவதிலும் சுதந்திரத்தைக் காப்பாற்றுவதிலும் எந்தப் பங்கையும் வகிக்காதவர்கள், தியாகிகளின் முக்கியத்துவத்தை எப்படி அறிந்திருப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
- மகா சிவராத்திரி நாளான வருகிற 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
- இதுவரை 50 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' என்ற இடத்தில் ஜனவரி 13-ந்தேதி கோலாகலமாகத் தொடங்கியது. மகா சிவராத்திரி நாளான வருகிற 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்பதால் 45ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும், தேசிய, மாநில மீட்பு படையினரும் களத்தில் உள்ளனர். இதுவரை 50 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
இந்த நிலையில், பிரயாக்ராஜ் நதிகள் குளிப்பதற்கு தகுதியற்றவை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
மகா கும்பமேளா நடக்கும் உ.பி. பிரயாக்ராஜில் கங்கை மற்றும் யமுனை ஆறுகள் சங்கமிக்கும் பகுதி உள்பட பல்வேறு இடங்களில் ஆற்றின் நீரில் 'Faecal Coliform' என்ற பாக்டீரியா அதிகளவில் இருப்பதால், குளிப்பதற்கு தகுதியற்றவை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Faecal Coliform என்பது மனிதர்கள், விலங்குகளின் மலக் குடல் பாதையில் உருவாகும் பாக்டீரியாக்கள் ஆகும். இவை அதிகளவில் இருக்கும் ஆற்றில் நாட்டின் குடியரசுத் தலைவர், பிரதமர், தொழிலதிபர்கள், பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் புனித நீராடி வருகின்றனர்.






