என் மலர்
உள்ளூர் செய்திகள்
- போலி ரசீது மூலம் கடந்த 2016 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் ரூ.1 கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது.
- மதுரை மத்திய சிறையில் முறைகேடு நடந்த சமயத்தில் சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டாக ஊர்மிளா பணியாற்றினார்.
சென்னை:
மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த முககவசம், கையுறை போன்ற மருத்துவப் பொருட்கள், அலுவலக கவர்கள், எழுதுபொருட்கள் தயாரிக்கப்பட்டு அரசு அலுவலகங்கள், நீதின்றங்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதில் போலி ரசீது மூலம் கடந்த 2016 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் ரூ.1 கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, அப்போது மதுரை மத்திய சிறையில் பணியாற்றிய 9 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த புகார் தொடர்பாக தணிக்கைத்துறை அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்து ஊழல் தடுப்பு இயக்குனரகம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 2016 முதல் 2021-ம் ஆண்டு வரை ரூ.1 கோடியே 63 லட்சத்து 64 ஆயிரம் மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.
மதுரை மத்திய சிறையில் முறைகேடு நடந்த சமயத்தில் சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டாக ஊர்மிளா பணியாற்றினார். தற்போது அவர், புதுக்கோட்டை மத்திய சிறையில் சூப்பிரண்டாக உள்ளார். அதேபோல், மதுரை சிறையின் ஜெயிலராக பணியாற்றிய வசந்த கண்ணன், தற்போது பாளையங்கோட்டை சிறையில் கூடுதல் சூப்பிரண்டாகவும், மதுரை மத்திய சிறையில் நிர்வாக அதிகாரியாக இருந்த தியாகராஜன், தற்போது வேலூர் சிறையில் நிர்வாக அதிகாரியாகவும் உள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்வர் தயாள் தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினார்.
இந்த நிலையில் அவர்கள் 3 பேரையும் பணி இடைநீக்கம் செய்து தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
- பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது.
- அரசு மவுனம் காத்தால், வருகிற 30-ந்தேதி அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து கூடி முடிவு செய்யப்படும்.
சென்னை:
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து போராடி வருகிறது. சமீபத்திலும் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக மறியல் போராட்டம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில், கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சட்டசபை கூட்டத்தொடரில் பட்ஜெட் அறிவிப்பில், கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பு இடம்பெறும் என்ற நம்பிக்கையில் மறியல் போராட்டத்தை ரத்துசெய்தனர்.
இந்தநிலையில் நேற்று மாலை ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், சேகர், பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் நடந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி, பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது. எனவே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். அதன்பிறகும் அரசு மவுனம் காத்தால், வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து கூடி முடிவு செய்யப்படும் என்பது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டது.
இதேபோல், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் 2004-2006 தொகுப்பூதிய பணிக்காலம், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு, ஊக்க ஊதியத்தை பழைய முறைப்படி வழங்குதல், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 100 சதவீத கட்டணமில்லா சிகிச்சை உறுதிப்படுத்துதல் போன்ற எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம். இது மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது' என்று கூறியுள்ளார்.
- 21-ந்தேதி சட்ட மசோதாக்கள் தாக்கல், நிறைவேற்றம் நடக்க உள்ளது.
- 22, 23 ஆகிய தேதிகள் சட்டசபைக்கு விடுமுறை.
சென்னை:
தமிழக சட்டசபை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொது பட்ஜெட்டை தொடர்ந்து 15-ந்தேதி (இன்று) வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதனைத்தொடர்ந்து, 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. 21-ந்தேதி சட்ட மசோதாக்கள் தாக்கல், நிறைவேற்றம் நடக்க உள்ளது.
தொடர்ந்து பட்ஜெட் மீதான உறுப்பினர்களின் கருத்துக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில் அளித்து பேசுவார்கள்.
22, 23 ஆகிய தேதிகள் சட்டசபைக்கு விடுமுறை. 24-ந்தேதி முதல் மானியக்கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடக்கிறது. அதன்படி 24-ந்தேதி நீர்வளத்துறை, இயற்கை, வளங்கள், 25-ந்தேதி நகராட்சி நிர்வாகம், 26-ந்தேதி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை.
27-ந்தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறை. 28-ந்தேதி கதர், கிராம தொழில்கள் மற்றும் கைவினை பொருட்கள். வனம், கைத்தறி மற்றும் துணி நூல்.
ஏப்ரல் 1-ந்தேதி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டிடங்கள் (பொதுப்பணித்துறை), 2-ந்தேதி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை. கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, 3-ந்தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, 4-ந்தேதி நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள், சட்டத்துறை.
7-ந்தேதி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, 8-ந்தேதி கூட்டுறவு, உணவு, 9-ந்தேதி குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, 15-ந்தேதி செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ் வளர்ச்சி, மனிதவள மேலாண்மைத்துறை.
16-ந்தேதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, 17-ந்தேதி சுற்றுலா-கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத்துறை. 21-ந்தேதி எரிசக்தித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயுத்தீர்வை, 22-ந்தேதி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, 23-ந்தேதி வணிக வரிகள், பத்திரப்பதிவு, இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள், போக்குவரத்து.
24-ந்தேதி உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, 25-ந்தேதி தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, 26-ந்தேதி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை.
28-ந்தேதி பொதுத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், 29-ந்தேதி காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள், 30-ந்தேதி காவல், தீயணைப்பு துறை மீதான விவாதம் தொடர்ச்சி, முதல்-அமைச்சரின் பதிலுரை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டசபை கூட்டம் 30 நாட்கள் நடக்க உள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை நாட்களாகும். 31-ந்தேதி (ரம்ஜான்) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ந்தேதி தமிழ் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்தநாள் என்று குறிப்பிடப்பட்டு, சட்டசபைக்கு விடுமுறைக்கு விடப்பட்டுள்ளது.
- லட்சக்கணக்கானோர் தங்கள் அன்றாட பணிகளுக்காக ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.
- திருநெல்வேலில் இரண்டாம் ரெயில் வழித்தடத்தில் முழுமையான பாதை புதுப்பித்தல் பணிகள் நடைபெறுகிறது.
நெல்லை:
தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான போக்குவரத்தாக ரெயில் போக்குவரத்து உள்ளது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் தங்களின் அன்றாட பணிகளுக்காக இந்த ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.
உத்தியோகம், மருத்துவ சிகிச்சை, குடும்ப நிகழ்ச்சி உள்பட பல்வேறு காரணங்களுக்காக மக்கள் ரெயில்களில் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருநெல்வேலில் இரண்டாம் ரெயில் வழித்தடத்தில் முழுமையான பாதை புதுப்பித்தல் பணிகள் காரணமாக பின்வரும் ரெயில்கள் மார்ச் 20 முதல் ஏப்ரல் 13 வரை என மொத்தம் 25 நாட்கள் ரத்து செய்யப்படுகின்றன.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் இடையே மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில் மற்றும் திருச்செந்தூர்– திருநெல்வேலி இடையே காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலும் மார்ச் 20 முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை ரத்துசெய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது.
- ஐபிஎல் 2025 சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராகி வருகிறது.
- சிஎஸ்கே முதல் போட்டியில் மார்ச் 23-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் 2025 சீசன் முதல் போட்டியில் மார்ச் 23-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ஐபிஎல் 2025 சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராகி வருகிறது.
மேலும், மார்ச் 23: சி.எஸ்.கே. Vs மும்பை இந்தியன்ஸ், மார்ச் 28: சி.எஸ்.கே. Vs பெங்களூரு, ஏப்ரல் 05: சி.எஸ்.கே. Vs டெல்லி, ஏப்ரல் 11: சி.எஸ்.கே. Vs கொல்கத்தா, ஏப்ரல் 25: சி.எஸ்.கே. Vs ஹைதராபாத், ஏப்ரல் 30: சி.எஸ்.கே. Vs பஞ்சாப், மே 12 : சி.எஸ்.கே. Vs ராஜஸ்தான் என 7 போட்டிகள் நடைபெறுகிறது.
இந்நிலையில், 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளை காண வரும் ரசிகர்கள், போட்டியின் டிக்கெட்டை காண்பித்து மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த இலவச பயணம் போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்க்குள் மட்டுமே செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
- 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.
அதன்படி, சட்டசபையில் இன்று கூடிய முதல் நாள் கூட்டத்தில் 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
அப்போது, அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்தது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி" என அமைச்சர் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " தாயுமானவராக நின்று தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வரலாற்று சிறப்புமிக்க 2025 நிதிநிலை அறிக்கையை உருவாக்க உறுதுணையாக இருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
- சென்னை சென்ட்ரல்- கூடூர் வழித்தடத்தில் ரெயில்வே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
- இதனால் 17ஆம் தேதி காலை 9.25 மணி முதல் பிற்பகல் 2.25 மணி வரை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படும் என அறிவிப்பு.
வருகிற 17ஆம் தேதி சென்னை மூர் மார்க்கெட்டிலிருந்து கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் 21 ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல்- கூடூர் வழித்தடத்தில் ரெயில்வே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 17ஆம் தேதி காலை 9.25 மணி முதல் பிற்பகல் 2.25 மணி வரை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில், கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது.
- கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுக்குழுவில் கலந்துகொள்வதற்கான அழைப்புக் கடிதம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கட்டம் வரும் 28ம் தேதி நடைபெறும் என தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.
அதன்படி, சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழு கூட்டமானது மார்ச் மாதம் 28ஆம் தேதி (28.03.2025) வெள்ளிக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு, சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில், கழக விதிகளின்படி, கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுக்குழுவில் கலந்துகொள்வதற்கான அழைப்புக் கடிதம் மின்னஞ்சல், வாட்ஸ் ஆப் மற்றும் தபால் வாயிலாக அனுப்பப்பட்டிருக்கிறது.
பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்புக் கடிதம் மற்றும் தலைமைக் கழகத்தின் அடையாள அட்டை ஆகியவற்றுடன் வருகை தந்து இப்பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- டாஸ்மாக்கில் 40 சதவீத மதுபானங்கள் கணக்கில் வராமலே விற்பனை செய்யப்பட்டுள்ன.
- செந்தில் பாலாஜி ஜாமினை ரத்து செய்வதற்கு அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கையானது வெற்றுக் காகிதம் போல் உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
பட்ஜெட் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை பேசியதாவது:-
தமிழகத்திற்கு பட்ஜெட்டுக்கு பதிலாக வெற்றுக் காகிதத்தை தாக்கல் செய்துவிட்டு போயிருக்கலாம். தமிழக அரசின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியை நெருங்குகிறது.
தமிழ்நாட்டை விட குஜராத் உள் கட்டமைப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாநில உள்கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசு கடன் வாங்கவில்லை.
அரசு ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியதாரர்களுக்கான பென்சன் கொடுக்க கூடி தமிழக அரசிடம் நிதி இல்லை.
1.62 லட்சம் கோடி கடன் வாங்குவது தான் முன்மாதிரி மாநிலமா ? மதுபான போக்குவரத்து தொடர்பாக ரூ.100 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளது.
சத்தீஸ்கரில் நடைபெற்றது போல தமிழ்நாட்டிலும் டாஸ்மாக்கில் முறைகேடு நடைபெற்றுள்ளது. சத்தீஸ்கர் மாடலில் முறைகேடு நடந்திருந்தாலும் அங்கு நடைபெற்றதைவிட முறைகேடு அதிகம்.
டாஸ்மாக்கில் 40 சதவீத மதுபானங்கள் கணக்கில் வராமலே விற்பனை செய்யப்பட்டுள்ன. செந்தில் பாலாஜி ஜாமினை ரத்து செய்வதற்கு அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில அரசு பதில் சொல்லும் வரை பாஜக தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும். அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கும் வரை பாஜக போராட்டத்தை தொடரும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழகத்திற்கு 2152 கோடி ரூபாயை விடுவிக்கவில்லை.
- இந்த நிதியை மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து விடுவித்துள்ளது.
சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழக அரசு மத்திய அரசு வழங்கக்கூடிய 2,152 கோடி ரூபாயை சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து தமிழக அரசு விடுவித்துள்ளது என பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு அறிவித்தது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு ப.சிதம்பரம் "மத்திய அரசுக்கு இப்பொழுதாவது வெட்கம் வந்து, அவர்கள் நிதியை தருவார்கள் என நம்புகிறேன்" என்றார்.
முன்னதாக,
2025-2026ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தங்கம் தென்னரசு சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது "ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (Samagra Shiksha) கீழ், பல்வேறு மாணவர் நலன் சார்ந்த திட்டங்களை கடந்த 7 ஆண்டுகளாக மாநில அரசு சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக, மாணவர்களின் அடிப்படைக் கல்வியறிவை உறுதிசெய்யும் எண்ணும் எழுத்தும் திட்டம். மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி, தொலைதூரக் குடியிருப்புகளிலிருந்து மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து சென்றிட போக்குவரத்துப்படி, ஆசிரியர்களின் ஊதியம், மாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கிடும் உயர்கல்வி வழிகாட்டி, மாணவர்களின் தனித் திறன்கள் மிளிர்ந்திட கலைத் திருவிழா, கல்விச் சுற்றுலா, இணைய வசதி உள்ளிட்ட பள்ளிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் என பல்வேறு திட்டங்கள் மாணவரின் கல்வி நலன் சார்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
எனினும், இந்த ஆண்டு மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கிய ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையினை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாததால், ஏற்கனவே ஒப்புதல் வழங்கிய நிலையிலும் 2,152 கோடி ரூபாயை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு விடுவிக்காமல் வஞ்சித்துள்ளது என்பதை இம்மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.
ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை விடுவிக்காவிட்டாலும், மாணவர் நலன் கருதி அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி ஒரு துளியேனும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஆசிரியர்களின் ஊதியம் உள்ளிட்ட அத்திட்டங்களுக்குரிய நிதியை மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து விடுவித்துள்ளது" எனக் கூறினார்.
- விளம்பர மாடல் அரசின் மறைமுக முதலாளியாக இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு பட்ஜெட்டில், டெல்லியில் இருந்துகொண்டு தமிழ்நாட்டையே மறந்து ஒதுக்கியது.
- சாதாரண நிலையில் இருக்கும் பொதுமக்கள் நேரடியாகப் பலன் அடையும் அறிவிப்புகள் ஏதும் அற்றதாகவே இருக்கிறது.
தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசின் 2025-26 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் புதிதாக 9 இடங்களில் தொழிற்பேட்டை அமைக்கப்படும்.
பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை, ஈட்டிய விடுப்பு சரண் 15 நாட்கள் வரை பணப்பலன்.
பத்து லட்சம் வரை மதிப்புள்ள சொத்தைப் பெண்கள் பெயரில் பதிவு செய்தால் பதிவுத் தொகையில் சலுகை என்பது போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறோம்.
அறிவிப்புகள் எல்லாம் நடைமுறைக்கு வருமா என்ற பலமான கேள்வி எழாமல் இல்லை. காரணம், இந்த விளம்பர மாடல் அரசின் கடந்த கால வெற்று விளம்பர அறிவிப்புகளே.
புதிய அரசு கலை & அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கல்லூரிக் கல்வியின் தரத்தை நிலைநிறுத்த என்ன முன்னெடுப்புகளை எடுக்கப் போகின்றீர்கள்?
அடிப்படையான சாலை வசதிகளைக் கவனிக்காமல் அன்புச் சோலை போன்ற போலி அக்கறை காட்டும் வெற்று அறிவிப்பு ஏன்?
கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் மடிக்கணினி வழங்கப்படுவது போல. பள்ளி மாணவர்களுக்கு எப்போது வழங்கப்படும் என்ற அறிவிப்பு இல்லையே ஏன்?
ஆசிரியப் பணி இடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு, வெற்றிடங்களை நிஜமாகவே நிரப்பும் அறிவிப்பா? இல்லை. வழக்கம் போலான விளம்பர மாடல் அரசின் வெற்று அறிவிப்பா? என்பது போகப் போகத்தான் தெரியும்.
அண்ணா பல்கலையைத் தரவரிசையில் மேம்படுத்தும் அறிவிப்பெல்லாம் இருக்கட்டும். முதலில், அண்ணா பல்கலையில் பயிலும் மாணவிகளுக்கு முறையான பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.
3 பாதிக்கப்படாத வண்ணம் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்ற தமிழ்நாட்டு அரசின் அறிவிப்பு குறித்து இந்த நிதி நிலை அறிக்கையில் விளக்கப்படவே இல்லை.
மாறாக, மக்கள் நலன் சார்ந்த எந்த விளக்கமும் இல்லாமல் பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பு, பரந்தூர் பகுதி விவசாயப் பெருங்குடி மக்களுக்குச் செய்யப்படும் துரோகமாகவே இருக்கும்.
விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்தல் வாக்குறுதியான கேஸ் மானியம் ரூ.100 வழங்கப்படும் என்பது என்ன ஆனது என்று தெரியவில்லை. அதே போல, பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு, வாக்குறுதியில் சொன்னது போல முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
மேலும், ரேஷனில் சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளும் என்ன ஆயின என்றே தெரியவில்லை.
பொதுமக்களை வெகுவாகப் பாதிக்கும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வசூலிக்கப்படும் மின்சாரக் கட்டணம், மாதம்தோறும் செலுத்தக்கூடியதாக மாற்றப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி என்ன ஆனதோ? வெற்று விளம்பர அரசுக்கே வெளிச்சம்.
அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் குடியிருப்புகள் கட்டுவது இருக்கட்டும். அரசு ஊழியர்களின் லட்சக்கணக்கான குடும்பங்கள் நலன் சார்ந்த ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் முக்கியக் கோரிக்கையான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்துவது. பணி நிரந்தரம் குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை.
இந்த நிதிநிலை அறிக்கையில் பெரும்பான்மையாக ஏதேதோ அறிவிப்புகள் என்று போலித்தனமே அதிகம் உள்ளது. ஆனால், சாதாரண நிலையில் இருக்கும் பொதுமக்கள் நேரடியாகப் பலன் அடையும் அறிவிப்புகள் ஏதும் அற்றதாகவே இருக்கிறது.
விளம்பர மாடல் அரசின் மறைமுக முதலாளியாக இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு பட்ஜெட்டில், டெல்லியில் இருந்துகொண்டு தமிழ்நாட்டையே மறந்து ஒதுக்கியது.
இந்த விளம்பர மாடல் அரசோ தமிழ்நாட்டிலேயே இருந்துகொண்டு, தமிழ்நாட்டு மக்களின் நலன்களையே மறந்துவிட்டு ஒரு பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது. இதுதான் இவர்கள் இருவரும் ஒரே மனநிலை கொண்ட உறவுக்காரர்கள் என்பதற்கான உறுதிப்பாடு ஆகும்.
மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, வெற்றுக் காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே இந்த பட்ஜெட் அறிவிப்பு, இந்த ஏமாற்று வேலைகளுக்கு எல்லாம் மக்கள் கொடுக்கும் மிகப் பெரிய பதிலடியாக 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இருக்கும். இதை இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு விரைவில் உணரும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 2025-26-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
- கல்வி, மருத்துவம், வேளாண்மை போன்ற முதன்மைத் துறைகளுக்கு போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று 2025-26-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
எல்லோருக்கும் எல்லாம் என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக் குறித்த பரப்புரை, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு யாருக்கும் எதுவும் இல்லை என்ற எதார்த்தத்துடன் நிறைவடைந்திருக்கிறது.
கல்வி, மருத்துவம், வேளாண்மை போன்ற முதன்மைத் துறைகளுக்கு போதிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
மாணவர்களுக்கு இலவச கணினி போன்ற சில கவர்ச்சியான அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும் கூட, அவை மக்களை ஏமாற்றும் அறிவிப்புகளாக உள்ளன.
2025-26ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார்.
திமுக அரசின் கடைசி முழு நிதிநிலை அறிக்கை என்பதால் மக்களுக்கு பயனளிக்கும் வகையிலான புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் ஏமாற்றமே பரிசாகக் கிடைத்திருக்கிறது.
கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு நிதியமைச்சர் நீண்ட நேரம், அதாவது 2.40 மணி நேரம் உரையாற்றினார்; நிதிநிலை அறிக்கை ஆவணம் மொத்தம் 182 பக்கங்களைக் கொண்டிருந்தது என்றாலும் அதில் திட்டங்களைத் தான் காணவில்லை.
1. ஐ.நா. அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 193 நாடுகளின் அலுவல் மொழிகளிலும் திருக்குறளை மொழி பெயர்க்க இன்னும் 45 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டியுள்ளதாகவும், அதற்கான ரூ.1.33 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், தமிழை கட்டாயப் பயிற்றுமொழியாகவும், கட்டாயப் பாடமாகவும் செயல்படுத்த எந்த அறிவிப்பையும் திமுக அரசு வெளியிடாதது ஏன்?
2. தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநாட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்; அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கம் போலவே மத்திய அரசை கைகாட்டி விட்டு தமிழக அரசு ஒதுங்கிக் கொண்டது. இது சமூகநீதிக்கு திமுக அரசு இழைத்திருக்கும் பெரும் துரோகம் ஆகும்.
3. பள்ளிக்கல்வித்துறை தான் மிகவும் முக்கியமானது ஆகும். அத்துறைக்கு மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 6%, அதாவது ரூ. 2.14 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால், அதில் ஐந்தில் ஒரு பங்கு, அதாவது ரூ.46,767 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்தகாலங்களில் பள்ளிக்கல்வித்துறைக்கான ஒதுக்கீடு சராசரியாக ரூ.4000 & ரூ.5000 கோடி என்ற அளவில் உயர்த்தப்பட்டு வந்த நிலையில் நடப்பாண்டில் ரூ.2725 கோடி தான் உயர்த்தப்பட்டுள்ளது.
4. பள்ளிக்கல்வித்துறையில் 20 ஆயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், 2562 ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போதிய நிதியும், ஆசிரியர்களும் இல்லாமல் அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமானக் கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?
5. உயர்கல்வித்துறைக்கான நிதி ரூ.1543 கோடி மட்டும் தான் உயர்த்தப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் அரசு கல்லூரிகளில் 15 ஆயிரம் மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அரசு கல்லூரிகளில் 8 ஆயிரத்திற்கும் கூடுதலான உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்து எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை.
6. மருத்துவத் துறைக்கான நிதி ஒதுக்கீடு வெறும் ரூ.1708 கோடி மட்டும் தான் உயர்த்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், இன்று வரை ஒரே ஓர் அரசு மருத்துவக்கல்லூரி கூட தொடங்கப்படவில்லை. வரும் ஆண்டிலும் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்கப்படுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.
7. மாதம் ரூ.1000 மகளிர் உதவி வழங்கும் திட்டத்தில் பல லட்சம் புதிய பயனாளிகள் சேர்க்கப்படுவர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல மாதங்களாகக் கூறி வருகிறார். ஆனால், இந்த நிதிநிலை அறிக்கையில் அத்திட்டத்திற்கான நிதி ரூ.87 கோடி மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இதில் பெரும் பகுதி நிர்வாகச் செலவினங்களுக்கே சென்று விடும் நிலையில், புதிய பயனாளிகள் எங்கிருந்து சேர்க்கப்படுவார்கள்? என்பதற்கு தமிழக அரசு தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
8. ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரிக்கப்படும் என்று தமிழக அரசு கூறியிருந்தது. ஆனால், நடப்பாண்டில் அத்திட்டத்திற்கு எவ்வளவு கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதே நிதிநிலை அறிக்கையில் கூறப்படவில்லை.
9. நீர்வளத்துறையின் சார்பில் சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்கான 1.6 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட 6&ஆம் நீர்த்தேக்கம் திருப்போரூர் அருகில் 4375 ஏக்கரில் அமைக்கப்படவிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், புதிய நீர்ப்பாசனத் திட்டங்கள் ஒன்று கூட அறிவிக்கப்படாதது ஏன்?
10. பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும் என அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை ஒப்படைக்கும் திட்டம் மட்டும் தான் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல. இதன் மூலம் தொடர்ந்து ஐந்தாவது முறையாக அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றியுள்ளது.
12. 2025-26ஆம் ஆண்டின் இறுதிக்குள் 40 ஆயிரம் பேருக்கு புதிய அரசு வேலைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் ஆண்டுத் திட்டம் இன்னும் வெளியிடப்படவில்லை; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதன் ஆண்டுத் திட்டத்தை அறிவித்து விட்டாலும் கூட, எந்தப் பணிக்கு எவ்வளவு பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது அறிவிக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் 40 ஆயிரம் பேருக்கு அரசு வேலை என்பது ஏமாற்று வேலை தான்.
12. 20 லட்சம் மாணவர்களுக்கு மடி கணினி அல்லது கையடக்கக் கணினி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது அடுத்த இரு ஆண்டுகளில் தான் வழங்கப்படுமாம். திமுக அரசின் பதவிக்காலம் இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் 20 லட்சம் பேருக்கு மடிகணினி வழங்குவது சாத்தியமில்லை; அந்த வகையில் இதுவும் சாத்தியமற்றதாகும்.
13. சென்னை, கோவை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை விரைவுபடுத்த அறிவிப்புகள் இல்லை. அவற்றுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டது என்பதையே தமிழக அரசு மீண்டும், மீண்டும் கூறி வருகிறது. இதுவும் மக்களை ஏமாற்றும் செயல் தான்.
இன்னொருபுறம் தமிழக அரசின் நிதிநிலை மிகவும் மோசமடைந்து கொண்டிருக்கிறது. நடப்பாண்டில் வருவாய்ப் பற்றாக்குறை இருக்காது என்றும், ரூ.1000 கோடிக்கும் மேல் வருவாய் உபரி கிடைக்கும் என்றும் தமிழக அரசு கூறி வந்த நிலையில், ரூ.41,634.93 கோடி வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
நிதிப்பற்றாக்குறை ஒரு லட்சம் கோடியைத் தாண்டி விட்ட நிலையில் நிலைமையை சமாளிக்க நடப்பாண்டில் ரூ.1.62 லட்சம் கோடியை தமிழக அரசு கடனாக வாங்க இருக்கிறது. இதனால் 2025-26ஆம் ஆண்டின் முடிவில் தமிழக அரசின் கடன் ரூ. 9 லட்சத்து 29,959 கோடியாக அதிகரிக்கும். அதற்கான வட்டியாக மட்டும் ரூ.70,753 கோடி செலுத்த வேண்டியிருக்கும்.
நடப்பாண்டின் முடிவில் தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1.25 லட்சம் கடன் வாங்கப்பட்டிருக்கும். மொத்தத்தில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மக்களுக்கு பயனளிக்காத, கடன்சுமையை மட்டுமே அதிகரிக்கக்கூடிய நிநிநிலை அறிக்கை ஆகும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






