என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு இன்று நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.

    அதே நேரம் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்டமும் மெதுவாக குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு இன்று நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. நேற்று வினாடிக்கு 263 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 425 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. அணையின் நீர்மட்டம் 108.71 அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    • சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால், மீன் கடை, பஸ் நிலையம், கடைவீதி ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
    • மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சில தினங்களாக நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 300 கன அடியாக நீர்வரத்து சரிந்தது. அதனை தொடர்ந்து ஒகேனக்கல் காவிரி ஆறு முழுவதும் தண்ணீர் இல்லாமல் பாறைகளாக காட்சியளித்தது.

    இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1500 கன அடியாக திடீரென அதிகரித்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததாலும், கர்நாடகா அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைந்ததாலும், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று காலை 8மணி நிலவரப்படி சற்று சரிந்து வினாடிக்கு 1200 கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது.

    நீர்வரத்து சற்று குறைந்த போதிலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள மெயின்அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் கொட்டியது.

    இந்த நிலையில் இன்று விடுமுறை நாள் என்பதால் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    அவர்கள் சினிபால்ஸ், மெயின் அருவி மற்றும் காவிரி ஆற்றங்கரையோரம் பகுதிகளில் எண்ணெய் மசாஜ் செய்து குளித்து மகிழ்ந்தனர். இதேபோன்று சுற்றுலா பயணிகள் படகு சவாரி நிலையத்தில் இருந்து படகில் சென்று மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால், மீன் கடை, பஸ் நிலையம், கடைவீதி ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் திடீரென்று மழை பெய்வதாலும், மழை அளவு குறைவதாலும், ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. எனவே, தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான பிலிக்குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்தார்.
    • ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் முழுக்க முழுக்க சென்னையில் உருவாக்கப்படுகிறது.

    சென்னையில் ஐ.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கி இருக்கும் ஹைப்பர்லூப் தொழில்நுட்ப பணிகளை மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஆய்வு செய்தார். குறைந்த காற்றழுத்த குழாயில் அதிவேகமாக பயணிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட போக்குவரத்து முறை தான் ஹைப்பர்லூப் என அழைக்கப்படுகிறது.

    இது உராய்வு மற்றும் எதிர்ப்பை குறைக்க மெக்னடிக் லீவியேஷன் (காந்த சக்தியில் மிதந்து செல்வது) மற்றும் உந்துவிசையை பயன்படுத்தி தற்போதைய போக்குவரத்து முறைகளை விட பலமடங்கு அதிவேகமாக செல்லும் திறனை ஹைப்பர்லூப் கொண்டிருக்கிறது.

    தற்போதைய சோதனைகளின் படி ஹைப்பர்லூப் மூலம் மணிக்கு அதிகபட்சம் 1000 கிலோமீட்டர்கள் வேகத்தில் பயணிக்க முடியும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி ஹைப்பர்லூப் பயன்படுத்தி சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு கிட்டத்தட்ட 15 முதல் 20 நிமிடங்களில் சென்றடைய முடியும்.

    இதற்காக சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. மெட்ராஸ் ஆய்வு குழு ஹைப்பர்லூப் பாட் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டம் மத்திய ரெயில்வே அமைச்சகத்துடன் இணைந்து உருவாகி வருகிறது. இந்த சோதனையை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், "ஹைப்பர்லூப் ஒரு புதிய பரிசோதனை. இதில், ஒரு வெற்றிடம் உருவாக்கப்படுகிறது. இந்த பாட் வழக்கமாக ரெயில்கள் தண்டவாளத்தில் இயக்கப்படுவதை போல் இல்லாமல், காந்த லீவியேஷன் மூலம் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்தத் திட்டம் சோதனை நிலையில் உள்ளது. இந்த திட்டத்தை உருவாக்க ஐ.ஐ.டி. மெட்ராஸ் எங்களுக்கு ஆதரவளித்து வருகிறது," என்று தெரிவித்தார்.

    தற்போது பரிசோதனை கட்டத்தில் உள்ள ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் முழுக்க முழுக்க சென்னையிலேயே, பெரும்பாலும் உள்நாட்டு தொழில்நுட்பங்களாலேயே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் திட்டம் சென்னையிலேயே துவங்கிய நிலையில், ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் முழுக்க முழுக்க சென்னை ஐ.சி.எஃப்.-இல் உருவாக்கப்பட உள்ளது. 



    • ஓலா, ஊபர் செயலி (ஆப்) நிறுவனங்கள் சட்டவிரோதமாக 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.76 வசூலித்து ஆட்டோ பயணிகளை கொள்ளையடிக்கின்றன.
    • அரசே ஒரு ஆட்டோ செயலி (ஆப்)யை தொடங்க வேண்டும்.

    சென்னை:

    மெட்ராஸ்-செங்கல்பட்டு ஆட்டோ டிரைவர்ஸ் யூனியன் மாவட்ட செயலாளர் எம்.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆட்டோ சங்கங்கள் தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கையை கட்டண நிர்ணயக்குழு ஏற்றுக் கொண்டு கடந்த 2022-ம் ஆண்டு 1.5 கிலோ மீட்டருக்கு ரூ.50-ம், அடுத்தடுத்த கிலோ மீட்டருக்கு ரூ.25-ம் நிர்ணயிக்கப்பட்டு பரிந்துரை வழங்கியது. ஆனால், ஓலா, ஊபர் செயலி (ஆப்) நிறுவனங்கள் சட்டவிரோதமாக 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.76 வசூலித்து ஆட்டோ பயணிகளை கொள்ளையடிக்கின்றன.

    இந்த நிறுவனங்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி உடனடியாக ஆணையிடவும், அரசே ஒரு ஆட்டோ செயலி (ஆப்)யை தொடங்கவும் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 19-ந்தேதி ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தை (ஸ்டிரைக்) அனைத்து பகுதி மக்களும் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருநர்கள் இன்று நம்மை நேரில் சந்தித்து அன்பையும் - நன்றியையும் தெரிவித்தனர்.
    • திருநர் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு துணை நிற்கும் என்று அவர்களை வாழ்த்தி மகிழ்ந்தோம்.

    தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் நிதிநிலை அறிக்கை 2025-26-ல் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம், உயர்கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தோருக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தமைக்காக, திருநர்கள் இன்று நம்மை நேரில் சந்தித்து அன்பையும் - நன்றியையும் தெரிவித்தனர்.

    கழக அரசு என்றும் திருநர் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு துணை நிற்கும் என்று அவர்களை வாழ்த்தி மகிழ்ந்தோம்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • நேற்று பட்ஜெட் தாக்கல் செய்துவிட்டு இன்று நீதிமன்றம் வந்திருக்கிறேன்.
    • அண்மைக் காலமாக கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் மெட்ராஸ் பார் அசோசியேசனின் 150வது ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன், ஆர்.மகாதேவன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஜனநாயகத்தை செதுக்குவதில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கை பாராட்டுகிறேன். தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் இந்திய அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கின்றனர்.

    இந்தியாவிலேயே தலைசிறந்த பாரம்பரியம் கொண்டது சென்னை உயர்நீதிமன்றம். அரசமைப்பை பாதுகாப்பதில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய பங்காற்றி வருகிறது.

    ஒரு நீதிபதி ஆங்கிலத்தில், ஒரு நீதிபதி தமிழில் பேசினார். இதுதான் இருமொழிக் கொள்கை. இரு மொழிக் கொள்கை கொண்ட தமிழ்நாட்டில் இக்கட்டான நிலை என்பது இல்லை.

    சட்டம் ஒரு இருட்டறை, வழக்கறிஞர்கள் வாதம் அதில் விளக்கு என்றார் பேரறிஞர் அண்ணா. அரசமைப்புச் சட்டத்திற்கு மெருகேற்றும் பல தீர்ப்புகளை நமது நீதியரசர்கள் வழங்கியுள்ளனர்.

    சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதில் வழக்கறிஞர்களின் பங்கு மிக முக்கியமானது. வழக்கறிஞர்கள் அநீதிகளை தடுத்து நீதியை பாதுகாப்பவர்கள்.

    சுதந்திரமான நீதித்துறை என்பது அரசமைப்பினர் உயிர்ப்புக்கு மிக முக்கிய அம்சம். அண்மைக் காலமாக கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    திமுக ஆட்சியில் 73 புதிய நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றத்தை கணிகனிமயமாக்க நிதி ஒதுக்கப்பட்டது.

    உச்சநீதிமன்ற கிளையை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும், தென்மாநில மக்களுக்கு அது வசதியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • உலக அளவிலான அரசியல் சாசனங்களில் இந்தியாவின் அரசியல் சாசனமே சிறப்பானது.
    • இந்திய அரசியல் சாசனம் பல்வேறு முறை திருத்தப்பட்டாலும் மிக வலுவானதாக உள்ளது.

    சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் மெட்ராஸ் பார் அசோசியேசனின் 150வது ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

    விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன், ஆர்.மகாதேவன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில் விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் கூறுகையில், " இந்தியாவில் அரசியல் சாசனம் நிலைப்பதற்கு அதை எழுதியவர்கள் காரணமாக உள்ளனர்.

    இந்தியாவில் ஜனநாயகம் எப்படி நிலைக்கும் என கேள்வி எழுப்பியோருக்கு 75 ஆண்டுகால அரசியல் சாசனம் பதில் அளித்துள்ளது.

    உலக அளவிலான அரசியல் சாசனங்களில் இந்தியாவின் அரசியல் சாசனமே சிறப்பானது. இந்திய அரசியல் சாசனம் பல்வேறு முறை திருத்தப்பட்டாலும் மிக வலுவானதாக உள்ளது.

    கல்வியை ஒவ்வொருவருக்குமான அடிப்படை உரிமையாக்கியது நமது அரசியல் சாசனம்" என்றார்.

    • அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இது தொடர்பாக மனு அளித்திருக்கிறேன்.
    • ஈபிஎஸ்-ஐ சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு கொள்கை உயர்ந்தது, பாதை தெளிவானது என செங்கோட்டையன்.

    தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

    தொகுதி சுற்றுச்சூழல் பிரச்சினை தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுப்பதற்காக சபாநாயகரை சந்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து அவர்," அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இது தொடர்பாக மனு அளித்திருக்கிறேன்.

    ஈபிஎஸ்-ஐ சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு கொள்கை உயர்ந்தது, பாதை தெளிவானது என செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

    மேலும் அவர், கொடிவேரி அணையிலிருந்து 3 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்து தொழிற்சாலை அமைக்கும் தனியார் நிறுவனம் முயற்சியை தடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

    • சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டி மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.
    • ஐபிஎல் டிக்கெட் வைத்து போட்டி அன்று இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

    சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டிக்கான டிக்கெட்டை வைத்து மெட்ரோ ரெயிலில் பயணிக்கலாம் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    முதல் போட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டி மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.

    நேற்றைய தினம், ஐபிஎல் டிக்கெட் வைத்து போட்டி அன்று இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் சிஎஸ்கே போட்டிக்களுக்கான டிக்கெட்டை பயன்படுத்தி மெட்ரோ ரெயிலில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஐபிஎல் 2025-க்காக மெட்ரோ சேவைகளை வழங்க சென்னைசூப்பர் கிங்ஸுடன் இணைந்து செயல்படவுள்ளது

    சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐபிஎல்2025 போட்டிகளுக்கு வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்க சென்னைசூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.

    இந்தமுயற்சியானது, ஸ்பான்சர் செய்யப்பட்ட இலவச மெட்ரோ பயணத்தை ரசிகர்களுக்கு வழங்குவதன் மூலம், போட்டி நாள் அனுபவத்தையும் மேம்படுத்துகிறது மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதையும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

    இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சென்னையில் CSKபோட்டி நடைபெறும் அனைத்து நாட்களிலும் மெட்ரோ இரயில் சேவைகளை இரவு நீட்டிப்பதுடன்,பார்வையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்தை வழங்கும்.

    கூடுதலாக, ஸ்பான்சர்செய்யப்பட்ட IPL போட்டிகான பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் எந்த மெட்ரோ இரயில்நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோஇரயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ இரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.

    விளையாட்டுப் போட்டி நடைபெறும் நாட்களில், பயணிகளின் தேவையைப் பொறுத்து, போட்டிமுடிந்த பிறகு மெட்ரோ இரயில் சேவை 90 நிமிடங்கள் வரை அல்லது அதிகபட்சமாக நள்ளிரவு 1:00 மணிவரை நீட்டிக்கப்படும்.

    ஒவ்வொரு போட்டி நாளுக்கு முன்பும் கடைசி மெட்ரோ இரயில் புறப்படும் நேரம்சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மூலம் அறிவிக்கப்படும்.

    பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள இந்த வசதிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஆன்லைனில் ஆர்டர் செய்த மருந்தை விற்பனை செய்வது போல் நாடகமாடி கொள்ளை முயற்சி.
    • சம்பவம் தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, சிறையில் அடைக்கப்பட்டார்.

    சென்னை வளசரவாக்கத்தில் பெண் மருத்துவர் வீட்டில் தனியாக இருந்த நிலையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர் கத்தியால் குத்தி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

    ஆன்லைனில் ஆர்டர் செய்த மருந்தை விற்பனை செய்வது போல் நாடகமாடி பெண் மருத்துவரிடம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட நபரை தேடி வந்தனர்.

    இந்நிலையில், பெண் மருத்துவரை கத்தியால் குத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ராமாபுரம் பகுதியை சேர்ந்த நாகமுகத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

    மேலும், அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, சிறையில் அடைக்கப்பட்டார்.

    • கொலை செய்யப்பட்ட லோகநாதனும், சத்தியவாணியும் கடந்த 4 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
    • எப்படியாவது லோகநாதனை கொலை செய்ய வேண்டும் என்று அவர்கள் சதி திட்டம் தீட்டினர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு சிக்கபனாவரா-நெலமங்கலா ரெயில் நிலையங்களுக்கு இடையே கடந்த மாதம் 19-ந்தேதி வயிற்றில் இரண்டாக வெட்டப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தெரியவந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்த வாலிபரின் தலை, கழுத்து மற்றும் கைகளில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் அந்த பகுதியில் இருந்த ரெயில்வே பாலத்தில் ரத்த கறைகளும் காணப்பட்டது. இதையடுத்து போலீசார் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

    மேலும் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த வாலிபர் குறித்து துப்பு துலக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு கோணங்களில் கொலை செய்யப்பட்ட வாலிபரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பக்கத்து மாவட்டமான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள போலீஸ் நிலையங்களில் யாராவது மாயமானதாக புகார் வந்துள்ளதா என்று விசாரணை நடத்தினர்.

    அப்போது சூளகிரியைச் சேர்ந்த லோகநாதன் (24) என்ற வாலிபர் மாயமானதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் லோகநாதன் போட்டோவை பெற்று தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த வாலிபரின் முகத்துடன் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது இரண்டும் ஒன்றாக இருந்தது. எனவே கொலை செய்யப்பட்டது சூளகிரியை சேர்ந்த லோகநாதன் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்து லோகநாதன் உடலை அடையாளம் காட்டினர். அதன் அடிப்படையில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இதற்கிடையே தனிப்படை போலீசார் கொலை நடந்த இடம் மற்றும் ஓசூர் பஸ் நிலையம் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் கொலை செய்யப்பட்ட லோகநாதன் ஒரு பெண்ணுடன் பஸ்சில் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண் யார் என்று தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது அவர் ஓசூரைச் சேர்ந்த சத்தியவாணி (27) என்பதும், இவர் பூ வியாபாரம் செய்து வந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசாரிடம் சத்தியவாணி சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது பரபரப்பு தகவல்கள் வெளியானது. அந்த விவரம் வருமாறு:-

    கொலை செய்யப்பட்ட லோகநாதனும், சத்தியவாணியும் கடந்த 4 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இதையடுத்து சத்தியவாணி லோகநாதனுக்கு தெரியாமல் ஓசூரைச் சேர்ந்த வரதராஜ் (23) என்பவரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து லோகநாதனுடனும் கள்ளத்தொடர்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் சத்தியவாணியில் நடத்தையில் லோகநாதனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் அவர் சத்தியவாணியை கண்காணித்தபோது அவர் வரதராஜ் என்பவரை திருமணம் செய்து குடும்பம் நடத்துவது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த லோகநாதன் சத்தியவாணியை தன்னுடன் வரும்படி அழைத்துள்ளார். அவருடன் செல்ல விரும்பாத சத்தியவாணி வரதராஜிடம் தெரிவித்து உள்ளார். இதையடுத்து எப்படியாவது லோகநாதனை கொலை செய்ய வேண்டும் என்று அவர்கள் சதி திட்டம் தீட்டினர்.

    அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 19-ந்தேதி சத்தியவாணி-வரதராஜ் ஆகியோர் சூளகிரிக்கு வந்து லோகநாதனை சந்தித்தனர். பின்னர் அவரை ஏமாற்றி பெங்களூருவில் உள்ள ஆளுர் என்ற பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவர்கள் லோகநாதனை அரிவாளால் வெட்டி கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சத்தியவாணி, அவரது கணவர் வரதராஜ், ஓசூர் தசனாபூரை சேர்ந்த சீனிவாஸ் (25) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    • பாலிவுட்டிலிருந்து பணம் விரும்புகிறார்கள், ஆனால் இந்தியை ஏற்க மறுக்கிறார்கள்.
    • பவன் கல்யாணின் கருத்திற்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    ஜனசேனா கட்சியின் 12-வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் ஐதராபாத்தில் நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்டு பேசிய ஜனசேனா கட்சி தலைவரான பவன் கல்யாண், "இந்தியாவிற்கு இரண்டு மொழிகள் மட்டுமல்ல, தமிழ் உள்பட பல மொழிகள் தேவை. நமது தேசத்தின் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்கு மட்டுமல்லாமல், அதன் மக்களிடையே அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கவும் நாம் மொழியியல் பன்முகத் தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    பல மொழிகள் இருப்பது நம் நாட்டிற்கு நல்லது. இதே கொள்கை தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்த வேண்டும். சிலர் சமஸ்கிருதத்தை ஏன் விமர்சிக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை? நிதி ஆதாயத்திற்காக தங்கள் திரைப்படங்களை இந்தியில் டப்பிங் செய்ய அனுமதிக்கும் அதே வேளையில், தமிழக அரசியல்வாதிகள் ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள்?

    அவர்கள் பாலிவுட்டிலிருந்து பணம் விரும்புகிறார்கள், ஆனால் இந்தியை ஏற்க மறுக்கிறார்கள். இது என்ன வகையான தர்க்கம்?" என்று தெரிவித்தார்.

    பவன் கல்யாணின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

    இந்நிலையில், பவன் கல்யாணின் கருத்திற்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், பாஜகவுடனான கூட்டணிக்கு முன்பாக Go Back Hindi என பவன் கல்யாண் பேசியதை குறிப்பிட்டு கனிமொழி எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.

    பாஜக கூட்டணிக்கு முன்பு, "நம் நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மையை வடமாநில அரசியல் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என 2017ல் பவன் கல்யாண் தெரிவித்திருத்திருந்தார்.

    மேலும் அந்த பதிவில், " மொழிபேதங்களை கடந்து திரைப்படங்களை காண தொழில்நுட்பம் வழிவகை செய்துள்ளது" என குறிப்பிட்டிருந்தார்.

    ×