என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கடந்த 2024 பாராளுமன்ற தேர்தலின்போது, நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்.
    • கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி வேட்பாளராக களமிறங்கினார்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி மாற்றுக்கட்சியில் இணைந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனிடையே கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் சீமான் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார்.

    மறைந்த சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் மகள் வித்யாராணி. இவர் தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2024 பாராளுமன்ற தேர்தலின்போது, நாம் தமிழர் கட்சியில் அவர் இணைந்தார். உடனடியாக அவருக்கு நா.த.க தலைமை கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி வேட்பாளராக களமிறக்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இரவு நேரங்களில் கரடியின் நடமாட்டம் உள்ளது என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
    • அப்பகுதியினர் மிகுந்த அச்சம் அடைந்துள்ள நிலையில், அந்த கரடியை வனப்பகுதிக்குள் விரட்டவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே நெசவாளர் காலனியில், வயல் வெளியில் அமைந்துள்ள அக்னி சாஸ்தா கோவில் பகுதியில் நேற்றிரவு கரடி ஓன்று புகுந்தது. தொடர்ந்து அங்கும் இங்குமாக உலா வந்து பூஜை பொருட்களை சேதப்படுத்தியது. இந்த சம்பவம் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைராலாகி வருகிறது.

    மேலும் கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள தெற்கு பாப்பான்குளம், கோல்டன் நகர், நெசவாளர் காலனி, கோல்டன் நகர் போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் கரடியின் நடமாட்டம் உள்ளது என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    தொடர்ச்சியாக மலை அடிவார கிராம பகுதிகளில் கரடியின் நடமாட்டம் இருப்பதால் அதை கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்குமாறு வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடையம் மேற்குத் தொடர்ச்சி மலையில் சிறுத்தை, யானை, கரடி, உள்பட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ள நிலையில், இவற்றில் யானை மற்றும் கரடி இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன.

    இந்நிலையில் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள பூவன்குறிச்சி என்ற கிராமத்தில் நேற்று இரவு ஒற்றைக் கரடியானது சுற்றி திரிந்தது. இதனை அப்பகுதியினர் செல்போனில் வீடியோ எடுத்த நிலையில் அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

    இதனால் அப்பகுதியினர் மிகுந்த அச்சம் அடைந்துள்ள நிலையில், அந்த கரடியை வனப்பகுதிக்குள் விரட்டவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சேலத்தில் இருந்து பதிவு எண் இல்லாமல் வந்த காரை நிறுத்தி அதில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர்.
    • திருட்டு வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே புறவடை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் ஷேர்லின்பெல்மா (வயது 44). இவர் கோவிலூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஆசிரியை தனது தாயார் மேரியுடன் வசித்து வருகிறார். கடந்த 8-ந்தேதி ஷேர்லின்பெல்மா வழக்கம் போல் பள்ளிக்கு சென்று விட்டார்.

    இதனால் மேரி வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 100 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சேலத்தில் இருந்து பதிவு எண் இல்லாமல் வந்த காரை நிறுத்தி அதில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் சோதனை நடத்தினர். அதில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன.

    இதையடுத்து காரில் வந்த 3 பேரையும், போலீசார் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று துருவி, துருவி விசாரணை நடத்தினர். அவர்கள் 3 பேரும் நெல்லை டவுன் கீழத்தெருவை சேர்ந்த சுரேஷ் (34), கார்த்திக் (25), அம்பாசமுத்திரத்தை சேர்ந்த துர்காநம்பி (25) ஆகியோர் என தெரியவந்தது.

    இவர்கள் 3 பேரும் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆசிரியை ஷேர்லின்பெல்மா வீட்டில் 100 பவுன் நகை, பணத்தை திருடியதும், பிரபல கொள்ளையர்கள் என்பதும், 3 பேர் மீதும் பல்வேறு இடங்களில் திருட்டு, கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 பவுன் நகை, கார், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
    • ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநகரில் 250 இளஞ்சிவப்பு பிங்க் ஆட்டோக்கள் இயக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு முதல்கட்டமாக தகுதியான பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச மகளிர் தினத்தன்று இளஞ்சிவப்பு ஆட்டோக்களை மகளிருக்கு வழங்கி துவக்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து பிங்க் ஆட்டோக்கள் 2-ம் கட்டமாக வழங்கப்படவுள்ளதால் தகுதியான பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ் பயன் பெற அடுத்த மாதம் 6-ந் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 20 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். சென்னையில் குடியிருக்க வேண்டும்.

    எனவே, சென்னையில் உள்ள ஆட்டோ ஓட்ட விருப்பமுடைய பெண் ஓட்டுநர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (வடக்கு) அல்லது சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (தெற்கு) என்ற முகவரியிட்டு 6.4.2025-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • கைது செய்யப்பட்ட 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மாரண்டஅள்ளி:

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே தேக்லான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் தாமோதரன் (வயது 29). இவருக்கும், பென்னாகரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 10-ந்தேதி பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    இதனால் மனமுடைந்த சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து பாலக்கோடு அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படடது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கட்டாய திருமணம் செய்து வைத்ததால் மனமுடைந்த சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த சிறுமியின் தாயார் மற்றும் புதுமாப்பிள்ளை தாமோதரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் வெள்ளி 114 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 14-ந்தேதி வரை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து, கடந்த 14-ந்தேதி இதுவரை இல்லாத உச்சமாக ரூ.66 ஆயிரத்து 400 என்ற நிலையை அடைந்தது. அன்றைய தினம் ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.1,440 அதிகரித்திருந்தது.

    அதனைத் தொடர்ந்து விலை குறைந்து வந்த நிலையில் நேற்று மீண்டும் உயர்ந்திருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 210-க்கும், ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்து 680-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 290-க்கும், ஒரு சவரன் ரூ.66,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,310-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,480-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 114 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    19-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,480

    18-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 66,000

    17-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,680

    16-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,760

    15-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 65,760

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    19-03-2025- ஒரு கிராம் ரூ.113

    18-03-2025- ஒரு கிராம் ரூ.113

    17-03-2025- ஒரு கிராம் ரூ.113

    16-03-2025- ஒரு கிராம் ரூ.112

    15-03-2025- ஒரு கிராம் ரூ.112

    • அதிகபட்சமாக தென்காசியில் 42 மில்லி மீட்டர், செங்கோட்டையில் 38 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
    • தென்காசியில் அதிகாலை 4 மணிக்கு தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கி பெரும்பாலான இடங்களில் இன்று அதிகாலை வரையிலும் கனமழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. சில இடங்களில் அதிகாலை முதல் கனமழை பெய்தது. நள்ளிரவில் சில இடங்களில் பயங்கர இடி-மின்னலுடன் மழை பெய்தது.

    அதிகபட்சமாக தென்காசியில் 42 மில்லி மீட்டர், செங்கோட்டையில் 38 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. ஆய்குடியில் 23 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது . மழை காரணமாக குற்றாலத்தில் மிதமான அளவில் அனைத்து அருவியிலும் தண்ணீர் கொட்டி வருகிறது.

    தென்காசியில் அதிகாலை 4 மணிக்கு தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. பாவூர்சத்திரம், ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு 2 மணி அளவில் சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுரண்டை சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    அணைகளை பொறுத்தவரை குண்டாறு மற்றும் அடவிநயினார் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக குண்டாறு அணையில் 26.20 மில்லி மீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 11 மில்லி மீட்டரும் மழை பெய்தது. ராமநதி மற்றும் கடனாநதி அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் தலா 8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்தது. நெல்லை மாநகரப பகுதியிலும் இரவில் மழை பெய்த நிலையில் இன்றும் அதிகாலையில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    மாநகரில் பாளையங்கோட்டையில் 7.20 மில்லி மீட்டரும், நெல்லையில் 6.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. மாவட்டத்தில் அம்பை, கண்ணடியன் கால்வாய் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது. இன்றும் அதிகாலையில் சாரல் மழை பெய்தது. அணைகளை பொறுத்தவரை பாபநாசம் அணையில் லேசான சாரல் மழை பெய்த நிலையில் சேர்வலாறு அணை பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 23 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அணையின் நீர்வரத்து 214 கன அடியாக இருந்து வருகிறது. அணை நீர்மட்டம் உயர்வில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இல்லை.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தாறு, கடம்பூர், விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி பகுதிகளில் சிறிது நேரம் மழை பெய்தது.

    • அரைமணி நேரம் ரெயில் தாமதமாக புறப்பட்டது.
    • ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்து ரெயிலை கவிழ்க்க தீட்டப்பட்ட சதி முறியடிக்கப்பட்டுள்ளது.

    மங்களூர் செல்லும் பரசுராமன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை குமரியில் இருந்து புறப்பட்டது. இரணியல் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்த்த லோகோ பைலட் ரெயிலை நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இதன்பின் தண்டவாளத்தில் இருந்த கற்களை அகற்றிய பின்னர் அரைமணி நேரம் ரெயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    இதையடுத்து தண்டவாளத்தில் கற்களை வைத்தது யார்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கடந்த 17-ந் தேதி தொண்டாமுத்தூர் நால்ரோடு குடியிருப்பு பகுதிக்குள் நாகப்பாம்பு ஒன்று புகுந்தது.
    • பதுங்கி இருந்த நாகப்பாம்பை லாவகமாக பிடிக்க முயன்றார்.

    கோவை:

    கோவை வடவள்ளியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 40). இவர் வீடுகளுக்குள் நுழையும் பாம்புகளை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விடும் பணியை 20 ஆண்டுகளாக செய்து வந்தார். கடந்த 17-ந் தேதி தொண்டாமுத்தூர் நால்ரோடு குடியிருப்பு பகுதிக்குள் நாகப்பாம்பு ஒன்று புகுந்தது.

    இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த தகவலின் பேரில் சந்தோஷ் அங்கு சென்றார். அவர், அங்கு பதுங்கி இருந்த நாகப்பாம்பை லாவகமாக பிடிக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று அந்த நாகப்பாம்பு அவரை கடித்தது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    பாம்பு கடித்து, பாம்பு பிடி வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. சந்தோசுக்கு திருமணம் ஆகி மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    • 4 மணி நேரம் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    சென்னை:

    பொன்னேரி - கவரைப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிற்பகல் 1.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை 4 மணி நேரம் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் பயணிகள் வசதிக்காக இன்று சென்னை சென்ட்ரல் - பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    • சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கு நேரடி உள்நாட்டு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
    • மறு மார்க்கமாக மாலை 5.40 மணிக்கு விஜயவாடாவிலிருந்து புறப்பட்டு இரவு 7.25 மணிக்கு பெங்களூரு வந்தடையும்.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கு நேரடி உள்நாட்டு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மதுரையிலிருந்து விஜயவாடாவிற்கு பெங்களூரு, ஐதராபாத், சென்னை வழியாக விமானங்களை இயக்கி வரும் தனியார் விமான நிறுவனம், மேற்கண்ட இடங்களில் இறங்கி பின்னர் வேறு விமானத்திற்கு மாறி விஜயவாடா செல்ல வேண்டும். தற்பொழுது வரும் 30-ந் தேதி முதல் மதுரையிலிருந்து பெங்களூரு வழியாக அதே விமானத்தில் இறங்காமல் பெங்களூருவில் 30 நிமிடம் காத்திருந்த பின்னர் விஜயவாடாவிற்கு குறைந்த நேரத்தில் பயணம் செய்ய அந்த தனியார் விமான சேவை வழங்க இருக்கிறது.

    அதன்படி மதுரையிலிருந்து காலை 8.15 மணிக்கு புறப்படும் விமானம் காலை 9.45 மணிக்கு பெங்களூரு செல்லும். அங்கு அரை மணி நேரத்திற்கு பின்னர் 10.15 மணிக்கு புறப்பட்டு காலை 11.55 மணிக்கு விஜயவாடா சென்றடையும்.

    மறு மார்க்கமாக மாலை 5.40 மணிக்கு விஜயவாடாவிலிருந்து புறப்பட்டு இரவு 7.25 மணிக்கு பெங்களூரு வந்தடையும். அங்கு அரை மணி நேரம் (30 நிமிடம்) கழித்து இரவு 7.55 மணிக்கு புறப்பட்டு இரவு 9.20 மணிக்கு மதுரை வந்தடையும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அன்றாட படுகொலைகளுக்குக் காரணம் தமிழ்நாட்டில் சட்ட விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதுதான்.
    • வன்முறையில் முதன்மை மாநிலம் தமிழகம் தான் என்ற பெருமையை தமிழகத்திற்கு தி.மு.க. அரசு தேடித் தரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு உட்பட எதுவுமே முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் நேற்று நண்பகல் 12 மணியளவில் ஈரோடு மாவட்டம் நசியனூர் கோவை-சேலம் நெடுஞ்சாலையில் படுகொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த படுகொலைச் சம்பவம் தமிழ்நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது

    சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாகவும், இவர் நேற்று காலை சேலத்திலிருந்து அவரது மனைவியுடன் காரில் திருப்பூர் சென்று கொண்டிருந்ததாகவும், ஈரோடு மாவட்டம் நசியனூர் கோவை-சேலம் நெடுஞ்சாலையில் நண்பகல் 12 மணியாலில் சாமி கவுண்டம்பாளையம் பிரிவு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, அவர்களைத் தொடர்ந்து வந்த மர்மக் கும்பல் அந்தக் காரை வழிமறித்து கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் இருந்த ஜான் என்கிற ரவடியை சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரது மனைவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. இந்தப் படுகொலை கடும் கண்டனத்திற்குரியது. இதுபோன்ற அன்றாட படுகொலைகளுக்குக் காரணம் தமிழ்நாட்டில் சட்ட விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதுதான்.

    மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், பட்டப்பகலில் நடைபெற்ற இந்தக் கொலையையும், நாள்தோறும் பல கொலைகள் இதுபோன்று நடப்பதையும் பார்க்கும்போது வன்முறையாளர்களின் புகலிடம் தமிழ்நாடு என்ற கருத்திற்கு மாற்றுக்கருந்து இல்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. காவல் துறை என்ற ஒன்று இருக்கிறதா என்று சந்தேகப்படக்கூடிய அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுப் போய்விட்டது. இந்த நிலைமை நீடித்தால் வன்முறையில் முதன்மை மாநிலம் தமிழகம் தான் என்ற பெருமையை தமிழகத்திற்கு தி.மு.க. அரசு தேடித் தரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

    தமிழ்நாட்டை அமளிக்காடாக மாற்றியிருக்கும் தி.மு.க. அரசின் செயல்பாடுகளை கண்டிப்பதோடு, தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் வன்முறையிலிருந்து காப்பாற்றவும், தமிழ்நாட்டில் கொடிகட்டிப் பறக்கும் சமூக விரோதச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    ×