என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • எடப்பாடி பழனிசாமி ஓ.பி.எஸ்.சை சேர்த்து கொள்ள தயாராக இல்லை.
    • மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் மாற்றுக்கட்சிகளில் சேர்ந்து விட்டனர்.

    சென்னை:

    தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க., விஜயின் த.வெ.க என இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது. தற்போது அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வது, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் வேகம் காட்டி வருகின்றன.

    இப்படி அரசியல் களம் ஒருபக்கம் பம்பரமாக சுழன்று கொண்டிருக்க முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் எந்த கூட்டணியில் சேர போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

    அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம், கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார்.

    கடந்த முறை தனியாக போட்டியிட்ட பா.ஜ.க இந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் ஓ.பி.எஸ்.சையும் சேர்த்து கொள்ள முயற்சிகள் நடந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி ஓ.பி.எஸ்.சை சேர்த்து கொள்ள தயாராக இல்லை.

    இதனை தொடர்ந்து ஓ.பி.எஸ். தேர்தல் தொடர்பாக எந்தவொரு நிலையான முடிவையும் எடுக்காததால் அவருடன் பயணித்த மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் அவரை விட்டு விலகி மாற்றுக்கட்சிகளில் சேர்ந்து விட்டனர்.

    இதனிடையே, தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் தை மாதத்திற்குள் தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிப்பதாக கூறிவந்த ஓ.பன்னீர்செல்வம், என்னை முழுவதுமாக கட்சியில் இருந்து நீக்கியதற்கு என்ன காரணம் என்பதை தற்போது பொறுப்பில் உள்ளவர்கள் தெரிவிக்க வேண்டும். நான் தவறு செய்தேன் என்று தெரிந்தால் அரசியலை விட்டே விலகத் தயார் என்று நேற்று முன்தினம் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்தார். அண்ணா அறிவாலயம் வந்த ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்துக்கொண்டார். ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது ஆதரவாளர்களும் தி.மு.க.வில் இணைந்தனர். 

     

    முன்னதாக தி.நகரில் இருந்து ஓ.பன்னீர்செல்வமும் அமைச்சர் சேகர்பாபுவும் ஒரே காரில் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு பயணம் மேற்கொண்டனர். 

    • நேற்று தங்கம் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.ரூ.1,19,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் தங்கம் வாங்க நினைப்போருக்கு பெரும் அதிர்ச்சி அளித்து வருகிறது. அந்த வகையில் வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 1,440 ரூபாய், செவ்வாய்கிழமை 240 ரூபாய், புதன்கிழமை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,440-க்கு விற்பனையானது. அதனை தொடர்ந்து நேற்று தங்கம் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.ரூ.1,19,360-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் குறைந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,900-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,200-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 295 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    26-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,360

    25-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,440

    24-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,120

    23-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,880

    22-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,440

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    26-02-2026- ஒரு கிராம் ரூ.295

    25-02-2026- ஒரு கிராம் ரூ.295

    24-02-2026- ஒரு கிராம் ரூ.290

    23-02-2026- ஒரு கிராம் ரூ.300

    22-02-2026- ஒரு கிராம் ரூ.290

    • ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.4 லட்சத்து 66 ஆயிரம் கடன் உள்ளது.
    • அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்கள் கரைவேட்டியை கூட கட்ட முடியாமல் போய்விட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடந்தது. இதற்கு ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் பாரதிமுருகன் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க. அரசு அனைத்து வரிகளையும் உயர்த்தியது. அதேபோல் விலைவாசியும் கடுமையாக உயர்ந்துவிட்டன. இதன்மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை கூடுதல் செலவு ஏற்படுகிறது. அதை மறைக்க தி.மு.க. அரசு ரூ.1,000 வழங்குகிறது. அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மக்களின் சுமையை குறைக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    இதனால் தமிழக மக்களிடம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு பெருகிறது. அதை சகித்து கொள்ள முடியாமல் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி குறித்து தி.மு.க. அவதூறு பரப்புகிறது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மூழ்கும் கப்பல் என்று கூறுகின்றனர். அ.தி.மு.க. நீர்மூழ்கி கப்பலாக இருந்து தமிழக மக்களை பாதுகாப்பாற்றும். தி.மு.க. ஆட்சியால் தமிழகத்தின் கடன்சுமை ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.4 லட்சத்து 66 ஆயிரம் கடன் உள்ளது.

    கரூரில் 41 பேர் உயிரிழப்புக்கு காரணமானவர் யார்? என்று சி.பி.ஐ. அறிக்கை வெளியாக இருக்கிறது. ஆனால் விஜய் செய்த தவறால் உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் கரூர் சம்பவத்தில் தன் ரசிகர்கள் இறந்ததற்கு பொறுப்பேற்காமல் நான் தான் காரணமா? என விஜய் கேட்கிறார்.

    அரசியல் கட்சிகள் நடத்தும் ரோட்ஷோக்களை முறைப்படுத்தும் அரசின் நெறிமுறைகளால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. நான் கூறிய பிறகு தான் வேலூரில் நடைபெற்ற த.வெ.க. கூட்டத்தில் கூடாரம் அமைத்து விஜய் பேசியுள்ளார்.

    அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்கள் கரைவேட்டியை கூட கட்ட முடியாமல் போய்விட்டனர். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி அமையும் என்று பேசினார். 

    • அனுமதிக்கப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்றி நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும்.
    • உற்சாகமும் உத்வேகமும் எல்லை மீறிப் போக அனுமதித்திடக் கூடாது.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

    தலைவர் கலைஞர் - அன்னை தயாளு அம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்து; பொதுவுடைமைப் பூமியாம் சோவியத் நாட்டின் சுடரொளி ஸ்டாலின் அவர்களின் பெயர் சூட்டப்பட்டு, கொள்கைக் கோட்டமாம் கோபாலபுரத்தில் வளர்ந்து, இளமையிலேயே இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டு, திராவிட இயக்கத்தை நோக்கி இளைஞர்களைத் திரட்டிடும் இனிய பணியைச் சுமந்து, கடந்து வந்த மேடு - பள்ளங்களைச் சமமாகப் பாவித்து ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொண்டு; தலைவர் கலைஞர் அவர்களிடம் பயின்ற பண்புகளோடும், கடமை உணர்வோடும் கழகத்தைக் கண்களாகவும் தலைவர் கலைஞர் அவர்களை கதிரொளியாகவும் கொண்டு, என்னால் இயன்றவரை எல்லோருக்கும் பயனுள்ள வகையில், கனிவு - துணிவு ஆகியவற்றைத் துணையாகக் கொண்டு, தொண்டூழியம் ஆற்றி வரும் எனக்கு மார்ச்-1 அன்று 73-ஆவது பிறந்தநாள்!

    1-3-2026 அன்று எனது பிறந்தநாளையொட்டி ஆர்வம் மிகுதியால், கண்ணுறுத்தும் படாடோப விளம்பரங்களைக் கட்டாயம் தவிர்த்து, அனுமதிக்கப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்றி நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும். உற்சாகமும் உத்வேகமும் எல்லை மீறிப் போக அனுமதித்திடக் கூடாது.

    பிறந்தநாளையொட்டி, சமுதாயத்தில் மெலிந்து நலிந்த பிரிவினரான ஏழை எளிய மகளிர், முதியோர், ஆதரவற்றோர், திருநர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் நலன் பேணும் வகையில் இயன்ற உதவிகளைச் செய்வது; கழகக் கொடிகளைப் புதுப்பிப்பது - புதிய கொடிகளை ஏற்றி வைப்பது - கிளைக் கழகங்களின் பெயர்ப் பலகைகளைப் புதுப்பிப்பது – பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் பெயர்களில் அமைந்துள்ள படிப்பகங்களுக்குப் பயனுள்ள புதிய நூல்களை வழங்குவது - கழகத்தின் மூத்த உறுப்பினர்களைச் சிறப்பிப்பது, பெருவாரியாக இரத்தத் தானம் செய்வது போன்றவற்றை ஆற்றுவதுமே அவசியமானவை. இயக்கத்திற்கு ஆக்கமளித்திடும் இத்தகைய செயல்பாடுகளை மட்டுமே நான் பெரிதும் வரவேற்கிறேன்; சமூக உணர்வும், இயக்கப் பற்றும் மிளிரும் இத்தகைய நற்செயல்கள் எல்லா இடங்களிலும் நிகழுமானால், அவற்றையே என்னரும் தோழர்களின் இதய வாழ்த்துகளாகக் கொண்டு பெருமகிழ்ச்சி கொள்வேன்!

    இன்று முதல் நமது நிலையும் நினைப்பும் எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலையே மையம் கொண்டதாக இருந்திட வேண்டும். நாட்கள் இருக்கிறதே - என்ன அவசரம் என்று எண்ணிடாமல், இப்போதிருந்தே தேர்தல் பணிகளைத் திட்டமிட்டுத் தொய்வின்றித் தொடர்ந்திட வேண்டும். நமது திராவிட மாடல் அரசின் திட்டங்களால் "ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற குரல் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. எனவே, ஏழாவது முறையும் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிட உங்களது உழைப்பு அமைந்திட வேண்டும்! அதுவே எனக்கு நீங்கள் வழங்கிடும் சிறந்த பிறந்தநாள் வாழ்த்து!

    ஆடம்பரத்தைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமான பணிகளை அமைதியாக மேற்கொள்வீர்! இந்த எனது அன்பு வேண்டுகோளை எல்லோரும் நினைவில் கொள்வீர்! என்று கூறியுள்ளார். 

    • முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் எந்த கூட்டணியில் சேர போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
    • ஆளும் தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க., விஜயின் த.வெ.க என இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது. தற்போது அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வது, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் வேகம் காட்டி வருகின்றன.

    இப்படி அரசியல் களம் ஒருபக்கம் பம்பரமாக சுழன்று கொண்டிருக்க முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் எந்த கூட்டணியில் சேர போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

    சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளில், ஆளும் தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது MLA பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், அவருடன் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. உசிலம்பட்டி அய்யப்பனும் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    MLA பதவியை ராஜினாமா செய்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து தி.மு.க.வில் அவர் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    ஓ.பன்னீர்செல்வத்துடன் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பன், ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோரும் தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓ.பி.எஸ். தி.மு.க.வில் இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில் அவரது ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்துள்ளனர்.

    • கடந்த 20-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரையில் 45 நாட்கள் மின்சார ரெயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது.
    • கடந்த சில நாட்களாக பயணிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 10, 11-ல் பராமரிப்பு பணி காரணமாக கடந்த 20-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரையில் 45 நாட்கள் மின்சார ரெயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக பயணிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

    இந்நிலையில் புறநகர் ரெயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமத்தை குறைக்க தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இன்று முதல் கூடுதலாக 20 விரைவு மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இந்த விரைவு மின்சார ரெயில்கள் எழும்பூர், மாம்பலம், கிண்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 257 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே 184 ரன் மட்டுமே எடுத்தது.
    • இதன்மூலம் 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    சென்னை:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 48-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. இதில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 256 ரன்கள் குவித்தது. அதிரடியில் மிரட்டிய அபிஷேக் சர்மா 30 பந்தில் 55 ரன்கள் குவித்தார். ஹர்திக் பாண்ட்யா 23 பந்தில் 50 ரன்னும், திலக் வர்மா 16 பந்தில் 44 ரன்னும் குவித்தனர்.

    தொடர்ந்து, 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பிரியன் பென்னட் அதிரடியாக ஆடி 97 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது.

    இந்நிலையில், சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு தோல்விகளைப் பெற்ற ஜிம்பாப்வே அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

    குரூப் 2 பிரிவில் இருந்து இங்கிலாந்தும், குரூப் 1 பிரிவில் தென் ஆப்பிரிக்காவும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    • முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 256 ரன்கள் குவித்தது.
    • ஹர்திக் பாண்ட்யா 23 பந்தில் 50 ரன்கள் குவித்தார்.

    சென்னை:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 48-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. இதில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 256 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 24 ரன்னும், இஷான் கிஷன் 38 ரன்னும் எடுத்தனர். அதிரடியில் மிரட்டிய அபிஷேக் சர்மா 30 பந்தில் 55 ரன்கள் குவித்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 33 ரன்கள் எடுத்தார்.

    5வது விக்கெட்டுக்கு இணைந்த ஹர்திக் பாண்ட்யா ஜோடி சிக்சர், பவுண்டரிகளை விளாசியது. பாண்ட்யா 23 பந்தில் 50 ரன்னும், திலக் வர்மா 16 பந்தில் 44 ரன்னும் குவித்தனர்.

    இதையடுத்து, 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பிரியன் பென்னட் அதிரடியாக ஆடி 97 ரன்கள் குவித்தார்.

    இதன்மூலம் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது.

    இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    • தூத்துக்குடி- மைசூரு இடையிலான விரைவு ரெயில் கடம்பூர் ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும்.
    • சிறப்பு ரெயில்கள், விரைவு ரெயில் சேவையாக மாற்றப்பட்டிருப்பது பல்வேறு வகைகளிலும் தமிழக மக்களுக்கு பயனுள்ளதாக அமைகின்றது.

    சென்னை:

    மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழகத்தின் பெண்ணாடம் மற்றும் கடம்பூர் போன்ற ரெயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படுகின்ற இரண்டு விரைவு ரெயில்கள், குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டுமென்கிற அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை, சமீபத்தில் மாண்புமிகு மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களிடத்தில் முன்வைத்திருந்தேன்.

    தமிழக மக்கள் சார்பாக முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்ற நமது மத்திய ரெயில்வே அமைச்சகம், சென்னை எழும்பூர்- திருச்சிராப்பள்ளி இடையிலான விரைவு ரெயில் பெண்ணாடம் ரெயில் நிலையத்திலும், தூத்துக்குடி- மைசூரு இடையிலான விரைவு ரெயில் கடம்பூர் ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும் என்கிற அறிவிப்பை வழங்கியுள்ளது.

    இந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கின்ற பொதுமக்களின், பொது போக்குவரத்து மற்றும் தொழில் சார்ந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இந்த அறிவிப்பு நிவர்த்தி செய்யும். இதற்காக தமிழக மக்கள் சார்பில், மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    மற்றொரு பதிவில்,

    தமிழகத்தின் முக்கிய ரெயில் நிலையங்கள் மூலம் பல்வேறு மாவட்டங்களை இணைக்கின்ற வகையில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரெயில்களை, வழக்கமாக இயங்கும் வகையிலான விரைவு ரெயிலாக மாற்றுவது தொடர்பான கோரிக்கையை, மாண்புமிகு மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களிடத்தில் முன்வைத்திருந்தேன்.

    அவ்வகையில், கொல்கத்தாவின் ஷாலிமார்-எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல், ஹைதராபாத்தின் கச்சிகுடா-தூத்துக்குடி, ஐதராபாத்-கன்னியாகுமரி, எர்ணாகுளம்-வேளாங்கண்ணி போன்ற ரெயில் நிலையங்கள் இடையே இயங்கி வந்த சிறப்பு ரெயில்கள், விரைவு ரெயில் சேவையாக மாற்றப்பட்டிருப்பது பல்வேறு வகைகளிலும் தமிழக மக்களுக்கு பயனுள்ளதாக அமைகின்றது.

    தமிழக மக்கள் சார்பாக முன்வைக்கப்படும் கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை மேற்கொண்டு வரும், மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசிற்கும், மாண்புமிகு மத்திய ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

    அவர்களுக்கும், தமிழக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார். 

    • பல்வேறு முக்கிய பிரமுகர்களும் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
    • இந்திய கம்யூனிஸ்டு அலுவலகத்தில் இருந்து அண்ணா சாலை வழியாக இறுதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு தனது 101-வது வயதில் நேற்று மரணம் அடைந்தார். சுதந்திர போராட்ட வீரராக திகழ்ந்த நல்லகண்ணு எளிமையின் சிகரமாக விளங்கியவர் ஆவார்.

    பணம், பொருள் என எதற்கும் ஆசைப்படாமல் மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களை முன்னெடுத்து மிகவும் சாதாரணமாக எளிய வாழ்க்கையை வாழ்ந்துள்ள நல்லகண்ணு அனைவருக்கும் முன்னுதாரணமாகவே போற்றப்பட்டு வருகிறார்.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நல்லகண்ணு முதுமை காரணமாக உயிர் இழந்ததை தொடர்ந்து தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேற்று நேரில் சென்று நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். மத்திய மந்திரி எல்.முருகன், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் நல்லகண்ணு உடலுக்கு நேற்று அஞ்சலி செலுத்தினார்கள். தமிழக வெற்றிக் கழக தலைவரான விஜய்யும் நேரில் சென்று நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது த.வெ.க. நிர்வாகிகள் என்.ஆனந்த், ஆதவ்அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகத்திற்கு நேரில் சென்று நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் நல்லகண்ணுவை பற்றி உருக்கமான கருத்துக்களையும் தெரிவித்தார்.

    கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் சத்யராஜ், நாசர், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், திரைப்பட இயக்குநர்கள் ரவிக்குமார், வெற்றிமாறன், பா.ரஞ்சித் மற்றும் திரை உலகை சேர்ந்த பல்வேறு முக்கிய பிரமுகர்களும் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, அவரது மகன் துரை வைகோ எம்.பி., தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோரும் இன்று நல்ல கண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது வைகோ நல்ல கண்ணுவின் புகழை போற்றும் வகையில் கைகளை உயர்த்தி கோஷங்களையும் எழுப்பி கண்ணீர் வடித்தார். இதனை தொடர்ந்து பலரும் அஞ்சலி செலுத்தினர்.

    நல்லகண்ணு தனது உடலை ஆஸ்பத்திரிக்கு தானமாக கொடுத்துள்ளார். இதன் காரணமாக அவர் உயிர் இழந்தவுடன் நேற்று உடனடியாக பதப்படுத்தப்பட்டது. இதன் பிறகே அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று பிற்பகல் 3 மணி வரையில் நல்லகண்ணு உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

     

    இதைத் தொடர்ந்து நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இதற்கு முன்னதாக, 'வீர வணக்கம் வீர வணக்கம் ! வாழ்நாள் போராளிக்கு வீர வணக்கம்! தகைசால் தமிழருக்குச் செவ்வணக்கம்!' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கமிட மற்றவர்கள் அதனை கூறினர். இதன் பிறகு நல்லகண்ணுவின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு அலுவலகத்தில் இருந்து அண்ணா சாலை வழியாக இறுதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஊர்வலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியை சென்றடைகிறது.

    பின்னர் முறைப்படி நல்லகண்ணுவின் உடல் ஆஸ்பத்திரி தலைமை நிர்வாகிகளிடம் தானமாக ஒப்படைக்கப்பட உள்ளது. 

    • கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5 மணி முதல் இரவு 7.13 மணி வரை கூடுதல் பஸ் சேவை வழங்கப்படுகிறது.
    • இரு மார்க்கத்திலும் தலா 20 பஸ் சேவைகள் தொடங்கி உள்ளன.

    சென்னை:

    எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவை குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் புறநகர் மின்சார ரெயில் பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு உள்ளன.

    இதை அடுத்து மின்சார ரெயில் பயணிகளுக்கு கூடுதலாக ரெயில் சேவைகளை தெற்கு ரெயில்வே அதிகரித்து வருகிறது. மேலும் பஸ் சேவைகளையும் தற்போது கூட்டி உள்ளது.

    அதன்படி தாம்பரம்- கடற்கரை இடையே இன்று முதல் கூடுதலாக 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தலைமைச் செயலகம், எழிலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு செல்லக்கூடிய வகையில் இந்த சேவை அளிக்கப்படுகிறது.

    தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6.30 மணி முதல் 8.43 மணி வரை 7 நிமிட இடைவெளியில் கிண்டி, அண்ணாசாலை, சேப்பாக்கம், தலைமை செயலகம், தி.நகர், எழும்பூர், சென்ட்ரல், பாரிமுனை வழியாக இந்த பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதேபோல கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5 மணி முதல் இரவு 7.13 மணி வரை கூடுதல் பஸ் சேவை வழங்கப்படுகிறது. மாலையில் வேலை முடிந்து வீடுகளுக்கு திரும்புவதற்கு வசதியாக மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இரு மார்க்கத்திலும் தலா 20 பஸ் சேவைகள் தொடங்கி உள்ளன.

     

    இதனிடையே, கூடுதலாக இயக்கப்பட்டுள்ள சிறப்பு பஸ்களில் ரெயில்வே மாதாந்திர பாஸ் வைத்திருப்போர், ரெயில் டிக்கெட் வைத்திருந்தாலும் இந்த பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பேருந்துகளின் கண்ணாடிகளில் SOUTHERN RAILWAY CHARTERED BUS என்ற அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளில் டிக்கெட் பரிசோதகர் சோதனை செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. 

    • நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    தென் தமிழகம், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    நாளை தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    நாளை மறுநாள் முதல் 1-ந்தேதி வரை மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    2-ந்தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    3-ந்தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகள்) ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    4-ந்தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    இதனிடையே இன்று முதல் 2-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று தெற்கு அந்தமான் கடலின் சில பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    ×