என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ரெயில் டிக்கெட் இருந்தால் போதும்... சிறப்பு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்!
- கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5 மணி முதல் இரவு 7.13 மணி வரை கூடுதல் பஸ் சேவை வழங்கப்படுகிறது.
- இரு மார்க்கத்திலும் தலா 20 பஸ் சேவைகள் தொடங்கி உள்ளன.
சென்னை:
எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவை குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் புறநகர் மின்சார ரெயில் பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு உள்ளன.
இதை அடுத்து மின்சார ரெயில் பயணிகளுக்கு கூடுதலாக ரெயில் சேவைகளை தெற்கு ரெயில்வே அதிகரித்து வருகிறது. மேலும் பஸ் சேவைகளையும் தற்போது கூட்டி உள்ளது.
அதன்படி தாம்பரம்- கடற்கரை இடையே இன்று முதல் கூடுதலாக 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தலைமைச் செயலகம், எழிலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு செல்லக்கூடிய வகையில் இந்த சேவை அளிக்கப்படுகிறது.
தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6.30 மணி முதல் 8.43 மணி வரை 7 நிமிட இடைவெளியில் கிண்டி, அண்ணாசாலை, சேப்பாக்கம், தலைமை செயலகம், தி.நகர், எழும்பூர், சென்ட்ரல், பாரிமுனை வழியாக இந்த பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதேபோல கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5 மணி முதல் இரவு 7.13 மணி வரை கூடுதல் பஸ் சேவை வழங்கப்படுகிறது. மாலையில் வேலை முடிந்து வீடுகளுக்கு திரும்புவதற்கு வசதியாக மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இரு மார்க்கத்திலும் தலா 20 பஸ் சேவைகள் தொடங்கி உள்ளன.
இதனிடையே, கூடுதலாக இயக்கப்பட்டுள்ள சிறப்பு பஸ்களில் ரெயில்வே மாதாந்திர பாஸ் வைத்திருப்போர், ரெயில் டிக்கெட் வைத்திருந்தாலும் இந்த பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பேருந்துகளின் கண்ணாடிகளில் SOUTHERN RAILWAY CHARTERED BUS என்ற அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளில் டிக்கெட் பரிசோதகர் சோதனை செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.






