என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பா.ம.க. நிர்வாகிகள் இருவரையும் சந்தித்து பேசி சமாதானம் செய்தனர்.
    • பா.ம.க. தலைவராக இருந்த அன்புமணியை செயல்தலைவராக நியமிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற பா.ம.க. கூட்ட மேடையிலேயே ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் உருவானது. இதனை தொடர்ந்து பா.ம.க. நிர்வாகிகள் இருவரையும் சந்தித்து பேசி சமாதானம் செய்தனர்.

    இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், இனி பா.ம.க. தலைவர் நான் தான் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

    மேலும் பா.ம.க. தலைவர் பதவியை தானே எடுத்துக்கொள்வதாகவும், பா.ம.க. தலைவராக இருந்த அன்புமணியை செயல்தலைவராக நியமிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

    • அரசு பஸ் சாலை ஓரத்தில் பள்ளத்தில் உள்ள வயலில் இறங்கி நின்றது.
    • தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடைபெற்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் அருகே 2 பஸ்கள் மோதி 30 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு அரசு விரைவு பஸ்சும், கடலூரில் இருந்து முத்தாண்டிக் குப்பத்திற்கு தனியார் பஸ்சும் இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு விழுப்புரம்-நாகப்பட்டினம் சாலையில் சென்று கொண்டிருந்தது.


    கடலூர் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது தனியார்பஸ் டிரைவர் நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக முத்தாண்டிக்குப்பத்திற்கு செல்வதற்காக பஸ்சை திருப்பினார்.

    அப்போது நேராக சென்று கொண்டிருந்த அரசு விரைவு பஸ் எதிர்பாராமல் தனியார் பஸ் மீது பலத்த சத்தத்துடன் மோதி விபத்து ஏற்பட்டது.

    இதில் நிலைகுலைந்த அரசு பஸ் சாலை ஓரத்தில் பள்ளத்தில் உள்ள வயலில் இறங்கி நின்றது. விபத்து நடந்த பஸ்களில் இருந்த பயணிகள் அலறி துடித்தனர். அக்கம்பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக பஸ்சில் சிக்கி இருந்த பயணிகளை மீட்க தொடங்கினர்.


    மேலும் காயம் அடைந்து மீட்ட பயணிகளை உடனடியாக சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 2 பஸ்களில் பயணம் செய்த குள்ளஞ்சாவடி பச்சையம்மாள், குறிஞ்சிப்பாடி கதிர்வேல், புவனகிரி ராம் குமார், சாத்தப்பாடி உதய குமார், பூண்டியாங்குப்பம் அமிர்தவள்ளி, தமிழரசி, வீரகுமார் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்குகடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

    விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடைபெற்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.

    இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • ரசிகர்கள் அஜித்தின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
    • திரையரங்கில் அஜித் ரசிகர்கள் ஏற்பாடு செய்து இருந்த பிரமாண்டமான கேக்கை அமைச்சர் கீதா ஜீவன் வெட்டினார்.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

    படம் வெளியாவதையொட்டி நேற்று இரவு முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அஜித்தின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

    இந்த நிலையில் அஜித்தின் 'குட் பேட் அக்லி' படம் பார்க்க தூத்துக்குடி கிளியோபட்ரா திரையரங்கம் சென்ற அமைச்சர் கீதா ஜீவனுக்கு அஜித் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    திரையரங்கில் அஜித் ரசிகர்கள் ஏற்பாடு செய்து இருந்த பிரமாண்டமான கேக்கை அமைச்சர் கீதா ஜீவன் வெட்டினார்.

    இதையடுத்து அஜித் ரசிகர்களுடன் இணைந்து 'குட் பேட் அக்லி' படத்தை அமைச்சர் கீதா ஜீவன் கண்டு ரசித்தார்.

    • 'குட் பேட் அக்லி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.
    • இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள படம் 'குட் பேட் அக்லி'. இப்படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    படத்தின் டிரெய்லர் வெளியானதில் இருந்து திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியது. இந்நிலையில், 'குட் பேட் அக்லி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.

    குட் பேட் அக்லி' திரைப்படத்தை நடிகை ஷாலினி தனது மகளுடன் இணைந்து ரோகிணி திரையரங்கில் கண்டு ரசித்து வருகிறார்.

    • கடுமையான மன உளைச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • அரசு வேலை என்பது இளைஞர்களுக்கு பெரும் கனவு.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றுவதற்காக போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி 4 (குரூப் 4) பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்துத் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 128 இளநிலை உதவியாளர்களுக்கு மட்டும் இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. வேலைக்காக விண்ணப்பித்து ஓராண்டுக்கும் மேலாகி விட்ட நிலையில், இன்று வரை நியமன ஆணைகளை வழங்காமல் தேர்வர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது நியாயமல்ல.

    தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கு சுமார் 9600 பேரை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் அக்டோபர் 28-ஆம் நாள் வெளியிடப்பட்டன.

    எழுத்துத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களில் இளநிலை உதவியாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான கலந்தாய்வு கடந்த ஜனவரி 22-ஆம் தேதி முதல் பிப்ரவரி 17-ஆம் தேதி வரை நடத்தப்பட்டு, அனைத்து சான்றிதழ்களையும் தாக்கல் செய்தவர்களுக்கு துறைகள் வாயிலாகவும், மாவட்ட ஆட்சியர் வாயிலாகவும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், போக்குவரத்துத் துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 128 இளநிலை உதவியாளர்களுக்கு மட்டும் இன்னும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. அதனால், தங்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அல்லது பறிக்கப்படுமா? என்பது தெரியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர். கடுமையான மன உளைச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 95 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு விட்ட நிலையில், போக்குவரத்துறைக்கு தொகுதி 4 பணியாளர்களை நியமிப்பதில் மட்டும் அரசு காலம் தாழ்த்துவது ஏன்? ஒருவேளை அவர்கள் நியமிக்கப்படுவதற்கு இன்னும் சில வாரங்களோ அல்லது மாதங்களோ ஆகும் என்றால், அதை சம்பந்தப்பட்டவர்களுக்கு முறைப்படி தெரிவிப்பதில் அரசுக்கு என்ன தயக்கம்?

    அரசு வேலை என்பது இளைஞர்களுக்கு பெரும் கனவு. அதை நனவாக்குவது தான் அரசின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, சிதைப்பதாக இருக்கக் கூடாது. எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போக்குவரத்துத்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 128 இளநிலை உதவியாளர்களுக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • பள்ளி நிர்வாகம் அலட்சியமாக பதில் கூறியுள்ளது.
    • காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    கோவை கிணத்துக்கடவு அருகே மாதவிலக்கை காரணம் காட்டி மாணவியை வகுப்பறையில் அனுமதிக்காமல் வாசலில் அமர வைரத்து தேர்வு எழுத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    8-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 5-ந்தேதி பூப்படைந்துள்ளார். மாணவி ஆண்டு தேர்வு எழுதுவதற்காக 7-ந்தேதி பள்ளிக்கு வந்தபோது வகுப்பறை கதவை பூட்டி வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்ததாகவும் இதனை தொடர்ந்து நேற்று தேர்வெழுத சென்றபோதும் வெளியில் அமர வைத்து தேர்வெழுத வைக்கப்பட்டுள்ளதால் மாணவியின் தாய் நேரில் சென்று கேட்டுள்ளார். அதற்கு பள்ளி நிர்வாகம் அலட்சியமாக பதில் கூறியுள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதில் யாராவது தவறு செய்திருந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

    • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானம் மூலம் இன்று இரவு சென்னை வருகிறார்.
    • முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லியில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானம் மூலம் இன்று இரவு சென்னை வருகிறார்.

    மத்திய அமைச்சர் அமித்ஷா, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்பட முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் மூத்த நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நாளை அமித்ஷாவை சந்திக்க வாய்ப்புள்ள நிலையில் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

    • வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசுபொருளாகி உள்ளது.
    • தலைமை ஆசிரியை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    கிணத்துக்கடவு:

    கோவை கிணத்துக்கடவு அருகே மாதவிலக்கை காரணம் காட்டி மாணவியை வகுப்பறையில் அனுமதிக்காமல் வாசலில் அமர வைரத்து தேர்வு எழுத சொல்லியதாக தனியார் பள்ளி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மாணவியின் தாய், செல்போனில் பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசுபொருளாகி உள்ளது.

    இதனை தொடர்ந்து வகுப்பறையில் தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைப்பதாக கூறிவிட்டு, வகுப்பறைக்கு வெளியில் அமர வைக்கப்பட்டதாக தலைமை ஆசிரியை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

    • அங்க அடையாளங்களை வைத்து வெள்ளி வேல் திருடிய நபரை தேடி வந்தனர்.
    • அவரிடம் இருந்த வெள்ளி வேலை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    வடவள்ளி:

    கோவை மருதமலை அடிவாரத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே வேல் கோட்டம் என்ற தனியார் தியான மடம் உள்ளது.

    இங்கு வேல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக இங்கு 2½ அடி உயரத்தில் வெள்ளி வேல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.

    தினமும் காலையில் இந்த மடத்தில் வேல் வழிபாடு நடப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி, மடத்தின் உரிமையாளர் வேல் வழிபாடு நடத்துவதற்காக மடத்திற்கு வந்தார்.

    அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த வெள்ளி வேல் திருடு போயிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியான அவர், உடனே மடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


    அதில், மொட்டையடித்த நிலையில் காவி உடையணிந்து சாமியார் ஒருவர் மடத்திற்குள் நுழைவதும், அங்கு இருந்த வெள்ளி வேலை எடுத்து, சட்டைக்குள் மறைத்து கொண்டு, மடத்தை விட்டு வெளியேறும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    உடனடியாக மடத்தின் உரிமையாளர் சம்பவம் குறித்து வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். மருதமலை கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து வந்த வேளையில், அடிவாரத்தில் உள்ள மடத்தில் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இதையடுத்து, வெள்ளி வேல் திருடிய நபரை பிடிக்க போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி அதில் உள்ள அங்க அடையாளங்களை வைத்து வெள்ளி வேல் திருடிய நபரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை மருதமலை அடிவார பகுதியில் போலீசார் தீவிர ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சி.சி.டி.வியில் இருந்த அங்க அடையாளங்கள் படி சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் ஊர், ஊராக சென்று மடத்தில் தங்கும் சாமியாரான திண்டுக்கல் மாவட்டம் திருமலை பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் சர்மா (வயது37) என்பது தெரியவந்தது.

    இவர் தான் மருதமலை அடிவாரத்தில் உள்ள தனியார் மடத்தில் வெள்ளி வேலை திருடி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த வெள்ளி வேலை பறிமுதல் செய்தனர். சாமியார் வெங்கடேஷ் சர்மா, வெள்ளி வேலை திருடியதும், அதனை உருக்கி விற்பனை செய்ய முயன்றதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது மழை மற்றும் வெயில் அடித்து வருகிறது.
    • மீன்வளத்துறையின் அறிவிப்பை தொடர்ந்து நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் விசைப்படகு துறைமுகங்களில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் மீனவ கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடித் தொழிலுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

    இதனை நம்பி சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வசதி பெறுகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது மழை மற்றும் வெயில் அடித்து வருகிறது.

    இதனால் கடலில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மீன்வளத்துறையின் அறிவிப்பை தொடர்ந்து நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • 2026 தேர்தல் நெருங்குவதால், மீண்டும் நீட் போராட்டம் முடிந்துவிடவில்லை என்று நீட்டி முழக்குகின்றனர்.
    • விஜய் ஒரு சிறப்பான நடிகர், அதில் எந்த குறையும் சொல்ல மாட்டோம்.

    சென்னை:

    நீட் விலக்குச் சட்ட மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது தொடர்பாக நேற்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    நீட் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தை விமர்சித்து த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில்,

    ஆட்சிக்கு வருவதற்காக ஒரு பெரும் பொய், ஆட்சிக்கு வந்ததும் அதைவிட இன்னும் மிகப்பெரிய பொய் என்பதே தி.மு.க. தலைமையின் அறமற்ற அரசியல்.

    பொய்களாலும் மோசடிகளாலும் மக்களை ஏமாற்றி நான்கு ஆண்டுகளாகத் தப்பித்தவர்கள். இதோ இப்போது 2026 தேர்தல் நெருங்குவதால், மீண்டும் நீட் போராட்டம் முடிந்துவிடவில்லை என்று நீட்டி முழக்குகின்றனர். அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் என்ற ஓர் நாடகத்தையும் இப்போது அரங்கேற்றி உள்ளனர் என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் நீட் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தை த.வெ.க. தலைவர் விஜய் விமர்சித்தது தொடர்பான அமைச்சர் காந்தி கூறியதாவது:

    * யார் அவர்? என்ன தராதரம் இருக்கிறது? பொதுமக்களுக்கு என்ன செய்துள்ளார்?

    * விஜய் ஒரு சிறப்பான நடிகர், அதில் எந்த குறையும் சொல்லமாட்டோம். சினிமா வேறு, அரசியல் வேறு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேற்று ஒரே நாளில் மட்டும் காலை மற்றும் பிற்பகல் என 2 முறை தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டது.
    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த மாதத்தில் கிடுகிடுவென உயர்ந்து காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இம்மாதத்தின் தொடக்கத்திலும் விலை அதிகரித்து இருந்தது. கடந்த 3-ந்தேதி ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்து 480 என்ற இதுவரை இல்லாத உச்சத்தை தங்கம் பதிவு செய்தது. மேலும் விலை அதிகரிக்கக் கூடும் என பேசப்பட்ட நிலையில், கடந்த 4-ந்தேதியில் இருந்து என்ன வேகத்தில் ஏற்றம் கண்டதோ, அதே வேகத்தில் சரியத் தொடங்கியதை பார்க்க முடிந்தது.

    இந்த விலை குறைவு ஓரளவுக்கு மக்களுக்கு ஆறுதல் கொடுத்தது. ஆனால் அது நீடிக்கவில்லை. நேற்று மீண்டும் விலை எகிறியது. நேற்று ஒரே நாளில் மட்டும் காலை மற்றும் பிற்பகல் என 2 முறை தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டது. அந்தவகையில் காலை கிராமுக்கு ரூ.65-ம், சவரனுக்கு ரூ.520-ம் உயர்ந்திருந்தது. அதேபோல், பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் அதிகரித்து இருந்தது. அதன்படி, ஒரே நாளில் கிராமுக்கு ரூ.185-ம், சவரனுக்கு ரூ.1,480-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.67 ஆயிரத்து 280-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்த பரஸ்பர வரி எதிரொலியால், பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன. இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். இதனால் அதன் விலை உயர்ந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 150 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,560-க்கும் சவரனுக்கு 1200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,480-க்கும் விற்பனையாகிறது. இதன் மூலம் நேற்றும், இன்று மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,680 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும் கிலோவுக்கு மூவாயிரம் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    09-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.67,280

    08-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.65,800

    07-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,280

    06-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,480

    05-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,480

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    09-04-2025- ஒரு கிராம் ரூ.104

    08-04-2025- ஒரு கிராம் ரூ.102

    07-04-2025- ஒரு கிராம் ரூ.103

    06-04-2025- ஒரு கிராம் ரூ.103

    05-04-2025- ஒரு கிராம் ரூ.103

    ×