என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே அரசு-தனியார் பஸ்கள் மோதல்: 30 பயணிகள் காயம்
    X

    கடலூர் அருகே அரசு-தனியார் பஸ்கள் மோதல்: 30 பயணிகள் காயம்

    • அரசு பஸ் சாலை ஓரத்தில் பள்ளத்தில் உள்ள வயலில் இறங்கி நின்றது.
    • தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடைபெற்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் அருகே 2 பஸ்கள் மோதி 30 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு அரசு விரைவு பஸ்சும், கடலூரில் இருந்து முத்தாண்டிக் குப்பத்திற்கு தனியார் பஸ்சும் இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு விழுப்புரம்-நாகப்பட்டினம் சாலையில் சென்று கொண்டிருந்தது.


    கடலூர் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது தனியார்பஸ் டிரைவர் நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக முத்தாண்டிக்குப்பத்திற்கு செல்வதற்காக பஸ்சை திருப்பினார்.

    அப்போது நேராக சென்று கொண்டிருந்த அரசு விரைவு பஸ் எதிர்பாராமல் தனியார் பஸ் மீது பலத்த சத்தத்துடன் மோதி விபத்து ஏற்பட்டது.

    இதில் நிலைகுலைந்த அரசு பஸ் சாலை ஓரத்தில் பள்ளத்தில் உள்ள வயலில் இறங்கி நின்றது. விபத்து நடந்த பஸ்களில் இருந்த பயணிகள் அலறி துடித்தனர். அக்கம்பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக பஸ்சில் சிக்கி இருந்த பயணிகளை மீட்க தொடங்கினர்.


    மேலும் காயம் அடைந்து மீட்ட பயணிகளை உடனடியாக சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 2 பஸ்களில் பயணம் செய்த குள்ளஞ்சாவடி பச்சையம்மாள், குறிஞ்சிப்பாடி கதிர்வேல், புவனகிரி ராம் குமார், சாத்தப்பாடி உதய குமார், பூண்டியாங்குப்பம் அமிர்தவள்ளி, தமிழரசி, வீரகுமார் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்குகடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

    விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடைபெற்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.

    இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×