என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • அண்ணன் எடப்பாடி பழனிசாமி நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    தமிழக முன்னாள் முதலமைச்சரும் அஇஅதிமுக பொதுச்செயலாளருமான, அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • கள்ளழகரை வரவேற்ற பக்தர்கள், 'கோவிந்தா கோவிந்தா' என பக்தி முழக்கத்துடன் வழிபாடு செய்தனர்.
    • காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் 108 வைணவ தலங்களில் ஒன்றான அழகர்கோவில் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா உலக புகழ் பெற்றதாகும். மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 8-ந்தேதியும், தேரோட்டம் 9-ந்தேதியும் நடைபெற்றது.

    திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்று போற்றி அழைக்கப்படுவதும், 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானதுமான மதுரை மாவட்டம் அழகர் கோவில் மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்திற்காக சுந்தரராஜ பெருமாள் தங்கப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் 18-ம் படி கருப்பண சுவாமி உத்தரவு பெற்று அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு புறப்பட்டார்.

    இந்நிலையில் இன்று காலை 5.45 மணி முதல் 6.05 மணிக்குள் தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வந்த கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். தண்ணீரை பீய்ச்சி அடித்து கள்ளழகரை வரவேற்ற பக்தர்கள், 'கோவிந்தா கோவிந்தா' என பக்தி முழக்கத்துடன் வழிபாடு செய்தனர். இதனைத்தொடர்ந்து காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

    வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவத்தை தொடர்ந்து ராமராயர் மண்டகபடியில் கள்ளழகரை குளிர்விக்கும் தீர்த்தவாரி நடக்கிறது. 13-ந்தேதி காலையில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் அழகர் காட்சி தருகிறார். தொடர்ந்து அன்று மாலையில் கருட வாகனத் தில் பிரசன்னமாகி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    அதனைத் தொடர்ந்து இரவு முதல் மறுநாள் காலை வரை விடிய, விடிய தசாவதார காட்சி நடைபெறும். 14-ந்தேதி மதியம் ராஜாங்க திருக்கோலத்தில் அழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்று இரவு பூப்பல்லக்கு விழா நடைபெறும். 15-ந் தேதி மதுரையில் இருந்து கள்ளழகர் மலைக்கு திரும்புகிறார். 17-ந்தேதி உற்சவ சாற்று முறையுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

    அழகர்கோவில் புறப்பாடு முதல் மீண்டும் கோவிலுக்கு திரும்பும் வரை சுமார் 494 மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், சி.சி.டி.வி. கேமராக்கள் அமைத்தும் பாதுகாப்பு பணிகளை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • எம்எல்ஏ என்றும் பார்க்கமாட்டேன், தூக்கி வங்கக்கடலில் வீசி விடுவேன்.
    • நிறைய பேர் இங்கு உழைக்காமல் ஏமாற்றிக்கொண்டிருப்பது எனக்கு தெரியும்.

    பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் இன்று மாலை தொடங்கியுள்ளது.

    இதில் பங்கேற்ற பாமக நிறுவனர் ராம்தாஸ் பேசியதாவது, "(வன்னியர்களுக்கு) 10.5% இடஒதுக்கீடு வழங்காததால், போராட்டத்தை அறிவிக்கிறோம். இதுவரை நடந்திராத வகையில் அந்தப் போராட்டம் இருக்கும். போராட்டத்திற்காக எவ்வளவு தியாகத்தை செய்யவும் தயாராக இருக்கிறோம். 45 வருடமாக உங்களுக்காகவும், அனைத்து சமூதாய மக்களுக்காகவும் போராடியும், போராடி சில வெற்றியும் பெற்றவன் இந்த ராமதாஸ்.

    ஒரு தொகுதியில் 2000 இளைஞர்கள், இளம்பெண்கள் ஒவ்வொருவரும் ஒரு தொகுதியில் 100 வாக்குகளை கொண்டுவந்தால், அந்தத் தொகுதியில் நம்மால் வெல்ல முடியும். 50 தொகுதிகளில் நாம்மால் எளிதாக வெல்ல முடியும். ஆனால், நிறைய பேர் இங்கு உழைக்காமல் ஏமாற்றிக்கொண்டிருப்பது எனக்கு தெரியும்.

    இனி அப்படி இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் உங்கள் பொறுப்புகள் உங்களிடம் இருக்காது. எம்எல்ஏ என்றும் பார்க்கமாட்டேன், தூக்கி வங்கக்கடலில் வீசி விடுவேன்.

    சிலர் எங்கே கூட்டணி, யாருடன் கூட்டணி என்று கேட்கிறார்கள். கூட்டணி பற்றி முடிவு செய்வதற்கு நான் இருக்கிறேன், அதை நான் முடிவு செய்வேன். அதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். உனக்கு சீட்டு கிடைக்க வேண்டும், எம்எல்ஏ ஆக வேண்டும் என்றால் உழைக்க வேண்டும்.

    வெளிப்பேச்சு, வெளிக்கூட்டணி, கட்சிக்குள்ளே கூட்டணி என இது எதுவும் நடக்காது. எனவே உன்னை நீ திருத்திக்கொள். இல்லை என்றால் உன்னால் இந்தக் கட்சியில் பொறுப்பிலேயே இருக்க முடியாது.

    உன் பதவிக்கு இளம் சிங்கங்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நீயோ காலை வாறிக்கொண்டிருக்கிறாய். இனி அது நடக்காது. இந்தக் கட்சி தனிப்பட்டவரின் சொத்து அல்ல" என்று தெரிவித்தார்.  

    • காடுவெட்டி குரு இருந்திருந்தால் நானும் மற்றவர்களைப் போல் மேடைக்கு கீயே தம்பிகளோடு அமர்ந்திருப்பேன்.
    • தமிழ்நாடு மட்டுமல்ல வெளிநாடு, வெளிமாநிலங்களைச் சேர்ந்த சொந்தங்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் சித்திரை முழுநிலவு மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    12 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த மாநாட்டில் என் சகோதரன் காடுவெட்டியார் இல்லையே என்பது வருத்தம்.

    காடுவெட்டி குரு இருந்திருந்தால் நானும் மற்றவர்களைப் போல் மேடைக்கு கீயே தம்பிகளோடு அமர்ந்திருப்பேன்.

    தமிழ்நாடு மட்டுமல்ல வெளிநாடு, வெளிமாநிலங்களைச் சேர்ந்த சொந்தங்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

    இனி நாம் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்துதான் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. நமது வன்னிய சமூகத்தினர் 140 நாடுகளிலே வாழ்கின்றனர்.

    வன்னியர்களின் வரலாறு இன்றைய இளைஞர்களுக்கு தெரியவில்லை. நாகசாமி படையாட்சி, அஞ்சலை அம்மாள், ஐயா ஆனைமுத்து பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    இடஒதுக்கீடு என்றாலே பாமக மற்றும் ராமதாஸ் பங்களிப்பபை மறக்க முடியாது.

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இருந்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு மனமில்லை. தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க காதிவாரி கணக்கெடுப்பு அவசியம்.

    பலமுறை ஆட்சிக்கு வருவதற்கு உதவிய வன்னியர் சமுதாயத்திற்கு திமுக திரோகம் செய்கிறது. கருணாநிதி இருந்திருந்தால் நிச்சயம் சமூக நீதி அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி இருப்பார்.

    நல்ல கல்வியை கொடுத்தால் இளைஞர்கள் நல்ல வேலைக்கு போவார்கள். மதுவுக்கு ஏன் அடிமையாக போகிறார்கள்?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிக பிரமாண்டமாக தயார் செய்யப்பட்டது.
    • மாநாட்டுக் கொடியை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஏற்றி வைத்தார்.

    பா.ம.க. சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் இன்று மாலை தொடங்கியது.

    இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிக பிரமாண்டமாக தயார் செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேடைக்கு வந்த நிலையில் பாராகிளைடரில் வன்னியர் சங்கக் கொடி பறக்கவிடப்பட்டது. கொடி பறந்ததை கண்டு, ஏராளமான தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.

    மேலும், மாநாட்டுக் கொடியை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஏற்றி வைத்தார்.

    பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாடிட்டில் ட்ரோன் ஷோ நிகழ்த்தப்பட்டது. பிறகு, பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:-

    1. தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க மாநில அரசின் சார்பில் தனியாக சாதிவாரி சர்வே நடத்தப்பட வேண்டும்!

    இந்தியாவில் 1931ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் போதிலும், தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்கும், மிகமிக பின்தங்கிய நிலையில் உள்ள சமூகங்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்குவதற்கும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் பெறப்படும் தரவுகள் போதுமானவையாக இருக்காது என்பதே உண்மை.

    தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 13.07.2010ஆம் நாள் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சாதிவாரி மக்கள்தொகை, சமூகங்களின் பின்தங்கிய நிலை உள்ளிட்ட தரவுகளை ஓராண்டுக்குள் திரட்டி, அவற்றின் அடிப்படையில் இடஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும் என்று ஆணையிட்டிருந்தது. அதேபோல், வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர்களின் சமூக, கல்வி பின்தங்கிய நிலை குறித்த பொருத்தமான, நிகழ்கால தரவுகளைத் திரட்டி அதன் அடிப்படையில் உள்இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டது. தேசிய அளவில் நடத்தப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் இவ்விவரங்களைத் திரட்ட முடியாது.

    இந்தியாவில் வரலாற்று ரீதியாகப் பார்த்தால் மக்களின் சமூகப் பின்தங்கிய நிலை குறித்த தரவுகள் காகா கலேல்கர் ஆணையம், மண்டல் ஆணையம், தமிழ்நாட்டில் சட்டநாதன் ஆணையம், அம்பாசங்கர் ஆணையம் போன்ற பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களின் வாயிலாகவே திரட்டிப்பட்டிருக்கின்றன. மக்களின் சமூகப் பின்தங்கிய நிலையை அறிய பல்வேறு வினாக்களை எழுப்பி அவற்றுக்கு விடைபெற வேண்டும். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் மக்களின் சாதி குறித்த தகவல் மட்டுமே கூடுதலாகக் கிடைக்கும். மீதமுள்ள தரவுகளை தனியாக கணக்கெடுப்பதன் வாயிலாக மட்டுமே திரட்ட முடியும் என்பதே எதார்த்தம்.

    அதனால்தான், பீகார், தெலுங்கானா, கர்நாடகம், ஒதிசா போன்ற மாநிலங்கள் 2008ஆம் ஆண்டின் புள்ளியியல் சட்டத்தைப் பயன்படுத்தி சாதிவாரியாக சமூக, பொருளாதார பின்தங்கிய நிலை குறித்த தரவுகளைத் திரட்டியுள்ளன. தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக புதிதாக தொடரப்பட்டுள்ள வழக்கு எந்தநேரமும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரக்கூடும் என்பதால், அதைப் பாதுகாக்கவும் தனியான கணக்கெடுப்பு மிகவும் தேவையாகும்.

    எனவே, தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையான சமூகநீதியை வென்றெடுக்கவும், 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், 2008ஆம் ஆண்டு புள்ளியியல் சட்டத்தின்படி, தமிழ்நாட்டில் சமூக, பொருளாதார சாதிவாரி சர்வேயை தமிழக அரசு நடத்த வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

    2. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: போராடி சாதித்த மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றியும், பாராட்டுகளும்!

    இந்தியாவில் அடுத்து நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா விடுதலையடைந்த பின் முதன் முறையாக, கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையிட்டிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு நன்றி தெரிவிக்கிறது.

    இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதற்காக மருத்துவர் அய்யா அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும், போராட்டங்களும் எண்ணில் அடங்காதவை. 20.07.1980ஆம் நாள் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட போது, அதில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானமே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் அனைத்துச் சமூகங்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான். அதன்பின் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான 3 வாய்ப்புகளை மருத்துவர் அய்யா அவர்கள் ஏற்படுத்தினார். ஆனால், தமிழக ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் அந்த வாய்ப்புகள் வீணடிக்கப்பட்டன.

    அதேபோல், தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதற்காக ராஜீவ் காந்தி, வி.பி.சிங், வாஜ்பாய், மன்மோகன் சிங், நரேந்திர மோடி ஆகிய 5 பிரதமர்களிடம் மருத்துவர் அய்யா அவர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தார். வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், 2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த அரசாணை பிறப்பிக்கப்படுவதாக இருந்தது. ஆனால், குஜராத் நிலநடுக்கம் காரணமாக அந்த வாய்ப்பு சாத்தியமாகவில்லை. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஒப்புக் கொண்டது. ஆனால், பின்னாளில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பதிலாக, சமூகப் பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதால் மக்களுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது.

    அதன்பின், 2021ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இன்றைய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மருத்துவர் அய்யா அவர்கள் ஒருமுறை நேரில் சந்தித்தும், 3 முறை கடிதங்களை எழுதியும் வலியுறுத்தினார். அதன் காரணமாகவே இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கண்கெடுப்பு என்ற மருத்துவர் அய்யாவின் 45 ஆண்டுகால கனவு நனவாகியிருக்கிறது.

    சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் மூலம் இந்தியாவில் இடஒதுக்கீட்டின் அளவு அதிகரிக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் ஏற்படும். சில பத்தாண்டுகளுக்கு முன் இவையெல்லாம் சாத்தியமே இல்லை என்று கருதப்பட்ட நிலையில், தொடர் போராட்டங்கள், அரசியல் அழுத்தங்கள் ஆகியற்றின் மூலம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை சாத்தியம் ஆக்கிய மருத்துவர் அய்யா அவர்களுக்கு இந்த சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு அதன் உளமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

    3. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உடனடியாக உள்இடஒதுக்கீடு வழங்கவேண்டும்!

    வன்னியர்களின் சமூக பின்தங்கிய நிலை குறித்த தரவுகளைத் திரட்டி, அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இன்றுடன் 1,136 நாட்கள் ஆகும் நிலையில், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மறுக்கும் தமிழக அரசுக்கு வன்னிய இளைஞர் பெருவிழா கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

    உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை மருத்துவர் அய்யா அவர்கள் ஒருமுறை நேரில் சந்தித்து வலியுறுத்தியதுடன், 10க்கும் மேற்பட்ட முறை கடிதங்களை எழுதினார். சிலமுறை தொலைபேசி வாயிலாகவும் கோரிக்கை விடுத்தார். அதேபோல், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையிலான குழுவினர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை 3 முறை சந்தித்து வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினர். இவர்கள் தவிர, பா.ம.க. நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் 50க்கும் மேற்பட்ட முறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து, இதே கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர்.

    ஆனால், தொடக்கத்தில் வன்னியர்களுக்கு கண்டிப்பாக உள்இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று உறுதியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பின்னாளில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் மட்டுமே வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். தமிழக அரசு நேரடியாகவோ அல்லது தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் வாயிலாகவோ சாதிவாரி சர்வே நடத்த முடியும் என்றாலும் கூட, அதைச் செய்து அதைச் செய்ய தமிழக அரசு மறுப்பது, வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்குவதில் இன்றைய அரசுக்கு விருப்பமோ, அக்கறையோ இல்லை என்பதையே காட்டுகிறது.

    வன்னியர்களின் சமூகப் பிந்தங்கிய நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் பணி மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு 12.01.2023ஆம் நாள் வழங்கப்பட்டது. ஆணையம் நினைத்திருந்தால் 3 மாதங்களில் இந்தப் பணியை நிறைவு செய்திருக்க முடியும். ஆனால், இரண்டரை ஆண்டுகள் ஆகியும் தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இது குறித்த எந்தப் பணியையும் செய்யாமல் உறங்கிக் கொண்டிருக்கிறது. இது பெரும் துரோகம்.

    வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லாத நிலையில், சமூகநீதி சார்ந்த தனது கடமையை தமிழக அரசு இனியும் தட்டிக் கழிக்கக் கூடாது. உரிய தரவுகளை உடனடியாகத் திரட்டி, வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா வலியுறுத்துகிறது.

    4. அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழக்க தமிழக அரசு முன்வர வேண்டும்!

    முழுமையான சமூகநீதி என்பது அனைத்து சமூகங்களுக்கும் அவரவர் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீட்டை வழங்குவது தான். 1980&ஆம் ஆண்டில் வன்னியர் சங்கத்தைத் தொடங்கிய காலத்திலிருந்து இதைத் தான் மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தி வருகிறார். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளாக இழைக்கப்பட்டு வந்த சமூக அநீதிக்கு பரிகாரம் தேட இது தான் சிறந்த வழியாகும். கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால், அடுத்த சில தலைமுறைகளில் ஏற்றத்தாழ்வுகள் மறைந்து அனைவரும் சமம் என்ற நிலை உருவாகும். அத்தகையதொரு சூழல் உருவாக வேண்டும் என்பது தான் சமூகநீதியாளர்களின் கனவாகும்.

    தமிழ்நாட்டில் அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு வழங்க பெரும் தடையாக இருந்தது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாதது தான். தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட இருப்பதன் மூலம் இதற்கான முதல் தடை விலகியுள்ளது. மாநில அளவிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் பிற முட்டுக்கட்டைகளும் அகற்றப்பட்டு விடும். எனவே, தமிழகத்தில் உடனே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை விரைவாக மேற்கொண்டு அனைத்து சமூகங்களுக்கும், அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு வழக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சித்திரை முழுநிலவு மாநாடு வலியுறுத்துகிறது.

    5. பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை, அவர்களின் மக்கள்தொகைக்கு மேலும் 2% உயர்த்த வேண்டும்!

    வன்னியர் சங்கம் 1980&ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட போது, அதற்கான நிகழ்வில் அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட மூன்றாவது தீர்மானம் பட்டிலின, பழங்குடியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக அதிகரிக்க வேண்டும் என்பது தான். ஆனாலும், இட ஒதுக்கீட்டிற்கான உச்சவரம்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அது சாத்தியம் ஆகவில்லை. சமூகநிலை மற்றும் கல்வியில் அடிமட்டத்தில் இருப்பவர்கள் பட்டியலினச் சகோதரர்கள். அவர்களின் மக்கள்தொகை மட்டும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், இட ஒதுக்கீட்டை மட்டும் அதிகரிக்காமல் அதே நிலையில் வைத்திருப்பது நியாயம் அல்ல. அது பட்டியலின மக்களின் சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது.

    பட்டியலின மக்கள் முன்னேறாமல் ஒட்டுமொத்த தமிழ்நாடும் முன்னேற முடியாது. அதைக் கருத்தில் கொண்டு பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டின் அளவை இப்போதிருக்கும் 18% என்ற அளவிலிருந்து, 2011&ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 20 விழுக்காடாக தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று இந்த மாநாடு கோருகிறது.

    6. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்!

    தேசிய அளவிலும், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களைத் தவிர, மற்ற மாநிலங்களிலும் கல்வி & வேலைவாய்ப்பில் சாதி அடிப்படையில் 49.5% மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்குக் காரணம் 1962ஆம் ஆண்டு பாலாஜி வழக்கிலும், 1992ஆம் ஆண்டு இந்திரா சகானி வழக்கிலும் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இடஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டைத் தாண்டக்கூடாது என்று ஆணையிட்டதுதான். இடஒதுக்கீட்டிற்கு உச்ச வரம்பு நிர்ணயிப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. ஆனாலும், உச்சநீதிமன்றம் இடஒதுக்கீட்டிற்கு வரம்பு நிர்ணயித்ததற்குக் காரணம் இடஒதுக்கீடு பெறும் சமூகங்களின் உண்மையான மக்கள்தொகை கணக்கெடுக்கப்படாததுதான். இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் மக்கள்தொகை 52 விழுக்காட்டுக்கும் அதிகம் என்றாலும்கூட, உரிய தரவுகள் இல்லாததாலும், உச்சநீதிமன்றத்தால் வரம்பு நிர்ணயிக்கப்பட்டதாலும் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 27% மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இது பெரும் சமூக அநீதி.

    இந்தியா விடுதலை அடைவதற்கு முன் தமிழ்நாட்டில் மாநில அளவிலான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமின்றி, மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்புகளிலும் 100% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்ட வரலாறு இருக்கிறது. இந்தியாவில் 1931ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன் முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ள நிலையில், அதில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் இடஒதுக்கீட்டுப் பிரிவினரின் மக்கள்தொகையைக் கணக்கிட்டு அதற்கு இணையாக இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் என்று மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா கோருகிறது.

    7. மத்திய அரசின் ஓபிசி இடஒதுக்கீட்டில் கிரிமிலேயர் முறையை நீக்க வேண்டும்!

    மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்படும் போதிலும், அதை அந்தச் சமூகங்களால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. இதற்குக் காரணம் கிரிமிலேயர் முறைதான். ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கும் கூடுதலாக உள்ள பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கிரிமிலேயர் எனப்படும் பொருளாதார அடிப்படையில் முன்னேறியவர்களாக கருதப்பட்டு, அவர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. கிரிமிலேயர்களுக்கு மறுக்கப்படும் இடங்கள் கிரிமிலேயர் அல்லாத பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டு நிரப்பப்படவில்லை என்பதும், சில ஆண்டுகளுக்குப் பின் அந்தப் பணியிடங்கள் பொதுப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, உயர் சாதியினரைக் கொண்டு நிரப்பப்படுகிறது என்பதும் தான் சமூக அநீதியாகும். இதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தில் கிரிமிலேயர் என்ற கோட்பாடே இல்லை. 1992ஆம் ஆண்டு இந்திரா சகானி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தால் தான் கிரிமிலேயர் முறை புகுத்தப்பட்டது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சமூகநீதியை பறிப்பதற்கான கருவியாக கிரிமிலேயர் முறை பயன்படுத்தப்படுவதால், அதை மத்திய அரசு இரத்து செய்ய வேண்டும் என்று மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு வலியுறுத்துகிறது.

    8. தனியார்துறையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்!

    அரசுத் துறை வேலைவாய்ப்புகள் ஆண்டுக்கு ஆண்டு குறைந்துவரும் நிலையில், பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள மக்களின் சமூக முன்னேற்றத்தை உறுதி செய்ய தனியார் துறையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது தவிர்க்க முடியாததாகிறது. மத்திய அரசுத் துறைகளில் ஆள்குறைப்பு, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் போன்ற காரணங்களால் அரசுத் துறை வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. 2001ஆம் ஆண்டில் மத்திய அரசுத் துறைகளில் உள்ள 36.06 லட்சம் பணியிடங்களில் 1.84 பணியிடங்கள் மட்டுமே காலியாக இருந்த நிலையில், 2023ஆம் ஆண்டில் காலியிடங்களில் எண்ணிக்கை 9.5 லட்சமாக உயர்ந்துவிட்டது. ஒருபுறம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில், தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கையும், அவறின் வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக பாமகவால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    தனியார்துறை நிறுவனங்களில் இடஒதுக்கீடு என்ற கோரிக்கையை ஆட்சியாளர்களும், தனியார் நிறுவனங்களும் கொள்கை அடிப்படையில் ஏற்றுக் கொண்டிருக்கும் போதிலும், அதைச் சட்டமாக்க இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இனியும் அதேநிலை தொடர்வது பெரும் சமூக அநீதி என்பதால், அதைத் தவிர்க்கும் வகையில் தனியார்துறையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்படி இம்மாநாடு கோருகிறது.

    9. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் இடஒதுக்கீட்டை கட்டாயமாக்க வேண்டும்!

    இந்தியாவில் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் இடஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் நிலையில், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் மட்டும் இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாத சமூக அநீதியாகும்.

    உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவதற்கான காரணம் கொலீஜியம் முறைதான். உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் போட்டித் தேர்வுகள் மூலம் நியமிக்கப்பட்டால், அதில் இடஒதுக்கீடு கண்டிப்பாக கடைபிடிக்கப்படும். அதே முறையை கொலீஜியம் முறையில் பின்பற்றுவதில் எந்தச் சிக்கலும் இருக்க வாய்ப்பில்லை. உயர்நீதித் துறையில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாததால், மிகமிக பின்தங்கிய நிலையில் உள்ளவர்களால் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக உயர முடிவதில்லை. இந்தநிலை மாற்றப்பட வேண்டும்.

    மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு உயர்நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட 604 நீதிபதிகளில் 454 நீதிபதிகள், அதாவது 75 விழுக்காட்டினர் உயர்சாதியினர் ஆகும். 12 விழுக்காட்டினர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆவர். பட்டியலினத்தவருக்கு 3 விழுக்காடும், பழங்குடியினருக்கு ஒன்றரை விழுக்காடு மட்டுமே பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது. இதேபோல், எந்த காலக்கட்டத்தை எடுத்துக் கொண்டாலும், உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 90 விழுக்காட்டினர் உயர் சாதியினராகவே உள்ளனர். இந்த நிலையை மாற்றி அனைத்துச் சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் வகையில், உயர்நீதித்துறையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த இம்மாநாடு கோருகிறது.

    10. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்!

    தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தவரை, கிராம ஊராட்சிகளில் 12.16%, ஊராட்சி ஒன்றியங்களில் 15.42%, மாவட்ட ஊராட்சிகளில் 17.25% பிரதிநிதித்துவம் மட்டுமே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குக் கிடைத்திருக்கிறது. கிராமப் பகுதிகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வந்தாலும், அங்குள்ள பொதுப் பிரிவு சமூகங்களைச் சேர்ந்த பெரும் பணக்காரர்கள் தான் செல்வாக்கு பெற்றவர்களாக உள்ளனர். அதனால், அவர்கள் மிகவும் எளிதாக தேர்வு செய்யப்படுகின்றனர். இது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் இடஒதுக்கீட்டை மறைமுகமாக பறிக்கும் செயலாகும். இந்த சமூக அநீதி அகற்றப்படவேண்டும்.

    பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் எத்தனை விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறதோ, குறைந்தபட்சம் அதே அளவு விழுக்காடு இடஒதுக்கீட்டை உள்ளாட்சி அமைப்புகளிலும் வழங்க வேண்டும்; அதன் மூலம் தான் உள்ளாட்சி அமைப்புகளை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க முடியும். இதற்காக, கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை உடனடியாக தமிழக அரசு இயற்ற வேண்டும் என்று சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு கேட்டுக்கொள்கிறது.

    11. தமிழ்நாட்டில் அனைத்துச் சமூக மக்களின் வளர்ச்சிக்காக நிதி அதிகாரத்துடன் கூடிய தனித்தனி கார்ப்பரேஷன்கள் அமைக்கப்பட வேண்டும்!

    ஆந்திர மாநிலத்தைப் பின்பற்றி தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சமுதாயங்களில், 30 ஆயிரத்திற்கும் கூடுதலாக மக்கள் தொகை கொண்ட அனைத்துச் சாதிகளுக்கும், தனித்தனியாக கார்ப்பரேஷன்கள் அமைக்கப்பட வேண்டும் என்று மருத்துவர் அய்யா அவர்கள் கடந்த 6 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார். அவ்வாறு கார்ப்பரேஷன்கள் அமைக்கப்பட்டால், ஒவ்வொரு கார்ப்பரேஷனுக்கும் தலைவர்களாக அந்தந்தச் சாதிகளைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்படுவார்கள்; ஒவ்வொரு சாதிக்குமான நலத்திட்ட உதவிகள், முதியோர் ஓய்வூதியம், கல்விக்கட்டணம், தொழில் தொடங்கக் கடனுதவி, மருத்துவ உதவிகள் ஆகியவை இந்த கார்ப்பரேஷன்கள் மூலமாக மட்டுமே வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பயன்கள் கிடைக்கும்.

    சமூகங்களின் வளர்ச்சிக்கு இது மிகவும் சிறந்த யோசனை என்பதால், அதை ஏற்றுக் கொண்டு, தமிழ்நாட்டில் 30 ஆயிரத்திற்கும் அதிக மக்கள்தொகை கொண்ட அனைத்துச் சமூகங்களுக்கும் தனித்தனி கார்ப்பரேஷன்களை அமைக்க வேண்டும்; 30 ஆயிரத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சாதிகளை ஒருங்கிணைத்து கார்ப்பரேஷன்கள் உருவாக்கப்படவேண்டும் என்று சித்திரை முழுநிலவு மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

    12. தமிழ்நாட்டில் கல்வி, தனிநபர் வருமானம், மனிதவள குறியீட்டில் பின்தங்கிய நிலையில் உள்ள வடமாவட்டங்களின் முன்னேற்றத்திற்கு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்!

    தமிழ்நாடு முன்னேறிய மாநிலம் என்று ஆட்சியாளர்கள் பெருமைப்பட்டுக் கொண்டாலும்கூட, தமிழகத்தின் பல மாவட்டங்கள் உத்தரப்பிரதேசத்தையும், பீகாரையும்விட பின்தங்கிய நிலையில் தான் உள்ளன. 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் பார்த்தால், கடைசி 15 இடங்களைப் பிடிக்கும் மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் வட தமிழ்நாட்டில் தான் உள்ளன. தனிநபர் வருமானம், மனிதவளக் குறியீடு ஆகியவற்றிலும் வடமாவட்டங்கள் தான் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. இந்த நிலையை மாற்றுவதற்காக தமிழகத்தின் வடமாவட்டங்களுக்கு மட்டும் சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 371&கே என்ற புதிய பிரிவை சேர்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இம்மாநாடு கோருகிறது.

    13. முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும், போதைப் பொருட்களை ஒழிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்!

    தமிழ்நாட்டில் நடைபெறும் கொலை, கொள்ளை போன்ற கொடுங்குற்றங்களுக்கும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களுக்கும் முதன்மைக் காரணமாக இருப்பது மது, கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் தான். தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டமும், பயன்பாடும் அதிகரித்து வருவது குறித்தும், அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டியதன் கட்டாயம் குறித்தும் பாமக தொடர்ந்து வலியுறுத்தி வரும்போதிலும் அதன்மீது எந்த நடவடிக்கையும் தமிழக அரசால் எடுக்கப்படவில்லை.

    தமிழகத்தின் பல பகுதிகளில் சமூகப் பதற்றங்கள் ஏற்படுவதற்கும், மதுப்பழக்கமும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாடும் தான் காரணமாக உள்ளன. இதேநிலை தொடர்ந்தால், தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாத நிலை உருவாகிவிடும். இதை உணர்ந்து, தமிழக அரசு உடனடியாக விழித்துக் கொண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும். அதேபோல், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும் முற்றிலுமாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன்னியர் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா வலியுறுத்துகிறது.

    14. ஜம்மு &காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட சகோதர, சகோதரிகளுக்கு வீர வணக்கம்: பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக எதிர்காலத்திலும் இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு!

    ஜம்மு &காஷ்மீர் மாநிலத்தில் பகல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22&ஆம் நாள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியத் தாக்குதலில் 22 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்த சகோதர, சகோதரிகளின் குடும்பங்களுக்கு சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது. பகல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு பாகிஸ்தான் தரப்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அமைதியையும், இயல்புநிலையையும் ஏற்படுத்துவதற்கு உகந்தவையாக இல்லை; மாறாக, எல்லைப் பகுதியில் பதட்டத்தையும், பயங்கரவாதத்தையும் தூண்டுவதாகவே இருந்தன.

    பகல்காம் தாக்குதல்களுக்குப் பிறகு பாகிஸ்தான் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் பொதுமக்கள் 12 பேரும், இந்தியப் படை வீரர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது. பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்கள் எல்லை மீறிக் கொண்டிருந்த நிலையில், இந்தியாவைப் பாதுகாப்பதற்காக மே 6&ஆம் தேதி பாகிஸ்தானில் 9 இடங்களில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியாவின் முப்படைகளும் இணைந்து கொடுத்த பதிலடி மற்றும் அதன்பின் நாட்டைக் காப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர்நிறுத்த உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. இது நிம்மதியளிக்கிறது.

    அதேநேரத்தில், சிந்து நதி ஒப்பந்தம் ரத்து தொடரும், இனிவரும் காலங்களிலும் பாகிஸ்தானின் பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாடு தொடரும் என்று மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் நிலைப்பாட்டை இந்த மாநாடு வரவேற்கிறது. நாட்டைக் காப்பதற்காக கடந்த 3 வாரங்களில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும், இனிவரும் காலங்களில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளுக்கும் சித்திரை முழுநிலவு மாநாடு முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

    இவ்வாறு நிறைவேற்றப்பட்டது.

    • பாமக சார்பில் இன்று சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்று வருகிறது.
    • மாநாட்டில், 1.80 லட்சம் இருக்கைகளுடன் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பா.ம.க. சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் இன்று மாலை தொடங்கியுள்ளது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிக பிரமாண்டமாக தயார் செய்யப்பட்டது.

    தமிழ்நாடு முழுவதும் இருந்து பா.ம.க. தொண்டர்கள் மாநாட்டில் திரளாக பங்கேற்றுள்ளனர். இதற்காக 1 லட்சத்து 80 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    தலைவர்கள் அமரும் மேடைக்கு எதிரே அனைத்து பகுதிகளிலும் நிகழ்ச்சியை காண 3 இடங்களில் ராட்சத எல்.இ.டி. திரை வைக்கப்பட்டுள்ளது.

    அதேபோல, 40-க்கு 20 உயரத்தில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

    மாநாட்டு திடலில் வன்னியர் சங்கம் உருவானது முதல் தற்போது வரையிலான வரலாற்று தொகுப்பு புகைப்பட காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

    இன்று மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கிய நிலையில், புஷ்பவனம் குப்புசாமியின் இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற கலைநிகழ்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகிறது.

    அதைத்தொடர்ந்து, வன்னிய வள்ளல்கள் தியாகிகள் என்ற குறும்படமும் ஒளிபரப்பப்பட்டது.

    இதற்கிடையே, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேடைக்கு வந்த நிலையில், பாராகிளைடரில் வன்னியர் சங்கக் கொடி பறக்கவிடப்பட்டது. கொடி பறந்ததை கண்டு, ஏராளமான தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். மேலும், மாநாட்டுக் கொடியை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஏற்றி வைத்தார். 

    • FIITJEE பயிற்சி மையம் மோசடியில் ஈடுபடுவதாக மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்தனர்.
    • ரொக்கம், பல்வேறு ஆவணங்கள், அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை கீழ்பாக்கத்தில் அமைந்துள்ள FIITJEE பயிற்சி மைதானத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

    FIITJEE பயிற்சி மையம் மோசடியில் ஈடுபடுவதாக மாணவர்களின் பெற்றோர் புகார் அளித்தனர்.

    இதன் அடிப்படையில், போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    IIT மற்றும் JEE தேர்வுகளுக்கு வகுப்புகள் நடத்தும் FIITJEE பயிற்சி மையத்தில் சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது, ரொக்கம், பல்வேறு ஆவணங்கள், அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    அதாவது, சுமார் ரூ.7.5 லட்சம் மதிப்பிலான 22 வங்கி காசோலைகள், கடிதங்கள் உள்பட 100 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    • காங்கிரஸ் கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் மத்திய அரசுக்கு இந்த சம்பவத்திற்காக உறுதுணையாக செயல்பட்டது.
    • பயங்கரவாத தாக்குதல்கள் உள்ளிட்டவைகளை காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் ஐ.நா வுடன் பேசி முறியடித்துள்ளோம்.

    புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று நெல்லை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் மிகப்பெரிய துயர சம்பவம்.

    இந்திய பிரதமர் உத்தரவின்படி பாகிஸ்தானில் போர் தொடுத்து பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. கட்சி பாகுபாடு இல்லாமல் காங்கிரஸ் கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் மத்திய அரசுக்கு இந்த சம்பவத்திற்காக உறுதுணையாக செயல்பட்டது.

    காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இந்திய நாட்டிற்கு உறுதுணையாக இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    எல்லைப் பகுதிகளில் முகாமிட்டு பாகிஸ்தான் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. பல ஆண்டுகாலமாக நடத்தப்படும் தொடர் தாக்குதல் கண்டனத்திற்குரியது.

    காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவுப்படி காங்கிரஸ் தொண்டர்கள் மக்களுடன் ஒன்றிணைந்து ராணுவத்திற்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் பேரணி உள்ளிட்டவைகளை நடத்த அறிவுறுத்தி உள்ளனர்.

    இந்தியாவில் நடத்திய பயங்கரவாத சம்பவத்தில் பங்கு பெற்றவர்கள், பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் என்பதை அந்த நாட்டை சேர்ந்த அமைச்சரே உறுதி செய்துள்ளார். திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது என்பதையும் அவர் தெளிவாக சொல்லி உள்ளார்.

    இந்தியாவில் குழப்பங்கள் ஏற்படுத்தி அமைதி இருக்கக் கூடாது என பாகிஸ்தான் திட்டமிட்டு வருகிறது. பயங்கரவாதம் எங்கும் இருக்கக் கூடாது. அதனை வேரறுக்க வேண்டும். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    பாகிஸ்தான் செயல்பாடுகள், பயங்கரவாத தாக்குதல்கள் உள்ளிட்டவைகளை காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் ஐ.நா வுடன் பேசி முறியடித்துள்ளோம்.

    மும்பை தாக்குதல் நடந்த போது குஜராத் முதல்வராக இருந்த தற்போது உள்ள பிரதமர் மோடி சம்பவ இடத்தை பார்வையிட்டு பிரதமர் என்பவர் 56 இன்ச் மார்பு கொண்டவராக இருக்க வேண்டும் என அப்போதைய பிரதமரை விமர்சனம் செய்ததை மறக்கமுடியாது.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது சம்பவ இடத்தில் காவல் துறை, ராணுவம் உள்ளிட்டவைகள் இல்லாமல் இருந்தது. உளவுத்துறை ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்துள்ளதை இது காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தீ விபத்தில் தம்பதி நடராஜன்- தங்கம் மற்றும் அவர்களது மகன் ஸ்ரீராம் ஆகியோர் சிக்கினர்.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை வளசரவாக்கத்தில் பங்களாவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கணவன்- மனைவி உயிரிழந்துள்ளனர்.

    தீ விபத்தில் தம்பதி நடராஜன்- தங்கம் மற்றும் அவர்களது மகன் ஸ்ரீராம் ஆகியோர் சிக்கினர்.

    தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீ்ட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதில், தம்பதி நடராஜன்- தங்கம் ஆகியோர் இறந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது. மேலும், பலத்த காயங்களுடன் ஸ்ரீராம் மீட்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • தமிழகம், புதுவையில் மிதமான மழையுடன் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை பூவிருந்தவல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதேபோல், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக காற்றுடன் கூடிய மிதமான மழைப்பொழிவு இருந்தது.

    காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இந்த திடீர் மழை வெப்பத்தை தணித்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதற்கிடையே, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகம், புதுவையில் மிதமான மழையுடன் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூரில் 13ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இதேபோல், நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் வரும் 14, 15ம் தேதிகளில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும், அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அண்ணாமலை பேச்சு கற்பனை வாதம்.
    • அமைதி தேவை என்பது தான் பொதுமக்களின் விருப்பம்.

    கே.கே. நகர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு வந்துள்ளது. இந்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிராம்ப் செய்தார் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

    இந்திய அரசு அல்லது பாகிஸ்தான் அரசு இந்த அறிவிப்பை செய்திருக்க வேண்டும். போர் நிறுத்தத்தை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.

    ஆனால் நிரந்தர தீர்வு தேவை. சுமூகமான பேச்சுவார்த்தை தேவை. ஒட்டுமொத்தமாக பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும்.

    பயங்கரவாதம் தலை தூக்கினால் இந்தியர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே பெரும் தீங்கு விளைவிக்கும். பயங்கரவாதத்திற்கு எதிரான ஜனநாயக கட்சிகள் அனைவரும் ஆதரிக்கிறோம். இந்தியா-பாகிஸ்தான் ஆகிய 2 நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். 2 நாடுகளுக்கு இடையே சுமூகமான உறவை பேண வேண்டும்.

    போர் வேண்டும் என்று விரும்புகிற சக்திகள், ஜனநாயகத்தின் அடிப்படையில் போர் வேண்டாம் என்கிற சொல்லி வருபவர்கள் மீது அவதூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

    அண்ணாமலை பேச்சு கற்பனை வாதம். அப்படியெல்லாம் ஒரு நாட்டை எளிதாக அழித்து ஒழித்து விட முடியாது. நாடு இல்லாமலேயே பயங்கரவாதம் என்பது இருக்கிறது. அகண்ட பாரதம் என்கிற செயல்திட்ட முறையில் பா.ஜ.க. செயல்படுகிறது.

    பாகிஸ்தானை, இந்தியாவோடு சேர்ப்பது, ஆப்கானிஸ்தான் வரை இந்தியாவில் சேர்ப்பது என்ற இந்த அஜெண்டாவில் வைத்துள்ளனர். அமைதி தேவை என்பது தான் பொதுமக்களின் விருப்பம். காஷ்மீரில் வாழ்கின்ற எல்லா மக்கள் கூட அமைதியை விரும்புகின்றனர்.

    எப்போதும் பா.ம.க.வுடன் கூட்டணி இல்லை என்ற உச்ச நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்.
    • நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான் கடல், நிகோபார் தீவு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 13-ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    13-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    14 மற்றும் 15-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    16 மற்றும் 17-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இன்று மற்றும் நாளை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை முதல் 15-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    ×