என் மலர்
உள்ளூர் செய்திகள்
- போராட்டம் தொடர்பாக தமிழக அரசு நேரடியாக தலையிட்டு சம்பளம் மற்றும் ஓய்வூதியப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
- சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என நிர்வாக அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
மதுரை:
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், பணி ஓய்வுபெற்ற ஓய்வூதியர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க கோரி பல்கலைக்கழக நிர்வாக அலுவலர்கள் சங்கம், ஆசிரியர் சங்கம், ஓய்வூதியர் சங்கத்தினர் இணைந்து கடந்த 14-ந்தேதி முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் பதிவாளரோ, துணைவேந்தரோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவோ அல்லது சம்பளம் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கவோ முன்வரவில்லை. இதனால் பேராசிரியர்கள் அலுவலர்கள் ஓய்வூதியர்கள் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் சான்றிதழ் வழங்கும் பணிகள் தினசரி வகுப்புகள் நடைபெறாமல் இருப்பதால் மாணவ-மாணவிகள் சான்றிதழ் பெற காலதாமதமாகிறது. இதனால் தேர்வு முடிவுகள் அறிவிப்பும் தள்ளி போகிறது.
மேலும் விடைத்தாள் திருத்தும் பணிக்காகவும், சான்றிதழ் தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் மாணவ-மாணவிகளும் இப்போராட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போராட்டம் தொடர்பாக தமிழக அரசு நேரடியாக தலையிட்டு சம்பளம் மற்றும் ஓய்வூதியப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என நிர்வாக அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
- பாராளுமன்ற தேர்தலில் நாம் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
- மனக்கசப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு ‘வெற்றிதான் இலக்கு’ என்பதை மனதில் வைத்து நீங்கள் உழைக்க வேண்டும்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ள முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் இதுவரை காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளன.
2-வது கட்ட பேச்சுவார்த்தை அடுத்தகட்டமாக நாளை துவங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கூட்டணி கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்டு தி.மு.க.விடம் கடிதம் கொடுத்துள்ளன.
இதனால் இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிட இருக்கும் தொகுதிகளில் சில மாற்றங்கள் இருக்கும் என தெரிகிறது.
இந்த சூழ்நிலையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நடத்திய இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், 72 மாவட்டச் செயலாளர்கள் 234 தொகுதி பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்ட தேர்தல் கள நிலவரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசித்தார். பாராளுமன்ற தேர்தல் பணிகள் எந்த அளவுக்கு உள்ளது? பி.எல்.ஏ. 2 பாக முகவர்கள், நிர்வாகிகள் சரிவர செயல்படுகிறார்களா? என்பதையும் கேட்டறிந்தார்.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, பாராளுமன்ற தேர்தலில் நாம் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். கூட்டணி கட்சியினருக்கு விரைவில் தொகுதி உடன்பாடு செய்யப்பட உள்ளது.
எனவே அவர்கள் நிற்கும் தொகுதியிலும் அதே உணர்வோடு நாம் பணியாற்றி வெற்றிபெற வைக்க வேண்டும். இதில் எந்தவித புகாருக்கும் இடம் அளிக்க கூடாது. புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பணிகள் திருப்தியாக இருப்பதாக தெரிய வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் மட்டும் சிறு, சிறு பிரச்சனைகள் இருப்பதாக தெரிகிறது. எனவே மனக்கசப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு 'வெற்றிதான் இலக்கு' என்பதை மனதில் வைத்து நீங்கள் உழைக்க வேண்டும்.
கலைஞர் நினைவிடம் திறப்பு விழா வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவை நிகழ்ச்சி போல் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில் நீங்களும் வந்து பங்கு பெற வேண்டும். இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் 26-ந் தேதி முதல் வீடு வீடாக தேர்தல் பிரசாரமாக நடத்த வேண்டும்.
பாரதிய ஜனதாவின் அநீதிகள் கழக அரசின் சாதனைகள், பட்ஜெட் அம்சங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அடிமட்ட தொண்டர் வரையிலான அனைத்து விவரங்களும் தலைமைக்கு தெரியும், தேர்தலுக்கு பிறகு பல மாற்றங்களை கழகத்திலும், அரசியலிலும் எதிர்பார்க்கலாம். பாராளுமன்ற தொகுதி வாரியாக உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் கூட்டங்களை மிக சிறப்பாக நடத்திய மாவட்ட செயலாளர்களை பாராட்டுகிறேன். தேர்தல் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. 4 ஆயிரத்துக்கும் அதிகமான கோரிக்கைகள் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிற்கு வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- 75 கடைகள் அங்கு அமைக்கப்பட்டு உள்ளது.
- நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மார்க்கெட் கடைகளுக்கான பொது ஏலம் நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை டவுனில் போஸ் மார்க்கெட் செயல்பட்டு வந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த மார்க்கெட்டை முழுவதும் இடித்து புதிதாக கட்டும் பணி நடைபெற்று வந்தது.
அந்த பணிகள் முடிந்து தற்போது 75 கடைகள் அங்கு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கடைகளில் ஏற்கனவே கடை வைத்திருந்த வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளித்து கடைகள் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. முன்னதாக இருந்த மார்க்கெட் கடைகளுக்கு ஒரு சதுர அடிக்கு ரூ.26 வாடகை வசூலிக்கப்பட்டது.
ஆனால் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதால் சதுர அடிக்கு ரூ.110 வழங்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதனை ஏற்க ஏற்கனவே இருந்த வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அந்த வழக்கில் கடைகளுக்கு பொது ஏலம் மூலம் வியாபாரிகளுக்கு கடைகளை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மார்க்கெட் கடைகளுக்கான பொது ஏலம் நடைபெற்றது.
இதற்கிடையே பொது ஏலத்தை நிறுத்தி விட்டு பழைய வியாபாரிகளுக்கு முன்னுரிமை கொடுத்து மாநகராட்சி அறிவித்துள்ள படி சதுர அடி ரூ.110-க்கு வழங்க வேண்டும் என கூறி மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று போஸ் மார்க்கெட் பழைய வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறும்போது, நாங்கள் புதிதாக தொடர்ந்த வழக்கில் எங்களுக்கு முன்னுரிமை கொடுத்து கடைகள் ஒதுக்க வேண்டும் என நேற்று மாலை தீர்ப்பு வந்துள்ளது.
எனவே அதன்படி எங்களுக்கு கடைகள் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினர். தகவல் அறிந்ததும் சந்திப்பு இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மாநகராட்சி அலுவலகத்திற்குள் அழைத்து வந்தனர். அங்கு அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
- வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றாமல் தமிழக மீனவர்களுக்கு எதிரான அரசாக ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது.
- மீனவர் போராட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து பிப்ரவரி 3 அன்று கடலுக்குச் சென்று கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு விசைப்படகுகளை சிறைப்பிடித்து படகுகளிலிருந்த 23 மீனவர்களில் 20 மீனவர்களை மட்டும் விடுதலை செய்த இலங்கை நீதிமன்றம், 2 படகுகளின் ஓட்டுநர்களுக்கு தலா 6 மாதங்கள் சிறை தண்டனையும் ஒரு மீனவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.
இதனால், ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு பாம்பனில் பா.ஜ.க.வினர், சுஷ்மா சுவராஜ் தலைமையில் கடல் தாமரை மாநாடு நடத்தி, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கென தனி அமைச்சகம், இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் கைது இருக்காது" என வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தார்கள். அந்த வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றாமல் தமிழக மீனவர்களுக்கு எதிரான அரசாக ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டிக்கிற வகையில், பாரம்பரியமாக பங்கேற்கிற கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவை புறக்கணிப்பது எனவும், நாளை முதல் தொடர் உண்ணாவிரதமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மீனவர் போராட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது.
எனவே, நமது ஒன்றிய அரசு மற்றும் இலங்கை அரசின் தமிழக மீனவர்கள் மீதான விரோதப் போக்கை கண்டித்து எனது தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசியத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ ஆகியோர் முன்னிலையில், பிப்ரவரி 27 செவ்வாய்க்கிழமை அன்று காலை ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டமும், அதைத் தொடர்ந்து பிப்ரவரி 28 புதன்கிழமை அன்று காலை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்ட வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசியத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில் கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இந்தப் போராட்டங்கள் வெற்றி பெற அனைத்து மீனவ பெருமக்களும் பெருந்திரளாக பங்கேற்று மீனவ மக்களின் உரிமைகளை காக்க முன்வர வேண்டுமென அன்போடு அழைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கடந்த 2021-ம் ஆண்டு சி.பி.ஐ விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
- சி.பி.ஐ. தாக்கல் செய்த கூடுதல் ஆவணங்களின் நகல்கள் கேட்டு 9 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
கோவை:
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோக்கள் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹிரன்பால், பாபு, அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட 8 பெண்கள் வாக்குமூலம் கொடுத்துள்ள நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் விசாரணை நடைபெற்று வந்தது.
கடந்த 2021-ம் ஆண்டு சி.பி.ஐ விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்தநிலையில் அதில் கூடுதல் ஆவணங்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் 30-க்கும் மேற்பட்ட பாலியல் துன்புறுத்தல் வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சி.பி.ஐ தாக்கல் செய்த கூடுதல் ஆவணங்களின் நகல்கள் கேட்டு 9 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்தநிலையில் இன்று 9 பேரும் கோவை மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் குற்றவாளிகள் 9 பேர் முன்னிலையிலும் கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டு, அடையாளம் காணப்பட்டது.
கடந்த ஒரு வருடமாக வீடியோ கான்பரன்சிங்கில் விசாரணைக்கு 9 பேரும் ஆஜராகி வந்தனர். தற்போது சேலம் ஜெயிலில் உள்ள இவர்கள் ஒரு வருடத்திற்கு பின்பு இன்று கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
- மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதில் குத்தியாலத்தூர் பஞ்சாயத்து மற்றும் திங்களூர் பஞ்சாயத்தை கொண்டு கடம்பூர் பகுதியை இரண்டாகப் பிரித்து கிராமங்கள் 2 பஞ்சாயத்துகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் திங்களூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெரியூர் எனும் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த ஒன்றறை மாதமாக குடிநீர் வரவில்லை. இதனால் இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் குடிநீருக்காக பல கிலோமீட்டர் தொலைவு சென்று வருகின்றனர்.
இதுகுறித்து இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இதுதொடர்பாக கடந்த மாதம் நடந்த கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முறையான குடிநீர் வழங்க வலியுறுத்தப்பட்டது. ஆனாலும் தற்போது வரை குடிநீர் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று காலை கதுபஸ்வண்ணபுரம் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் திரண்டு வந்து சத்தியமங்கலத்தில் இருந்து தேர்மாளம் செல்லும் அரசு பஸ்சை சிறைபிடித்து திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து கடம்பூர் போலீசார் மற்றும் திங்களூர் பஞ்சாயத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் பஞ்சாயத்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து உங்கள் பகுதியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனை ஏற்று மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- பாராளுமன்ற தேர்தல் வரை தற்போதைய தலைவர்களே நீடிப்பார்கள்.
- பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு பற்றியும் மக்கள் மத்தியில் எடுத்து சொல்வோம்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்றுள்ளார். வழக்கமாக புதிய தலைவர்கள் பொறுப்பேற்றதும் தங்கள் ஆதரவாளர்களுக்கு பொறுப்புகள் வழங்குவார்கள். புதிதாக மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள். அதன்படி புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. இதுபற்றி செல்வப்பெருந்தகையிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
இப்போதைக்கு மாவட்ட தலைவர்கள் மாற்றம் கிடையாது. பாராளுமன்ற தேர்தல் வரை தற்போதைய தலைவர்களே நீடிப்பார்கள். தேர்தலுக்கு பிறகு நிச்சயம் மாற்றம் இருக்கும். சிறப்பாக பணியாற்றுபவர்கள் தொடர்ந்து நீடிப்பார்கள். சரியாக பணியாற்றாதவர்கள் மாற்றப்படுவார்கள். அவர்களுக்கு பதிலாக புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
இது தேர்தல் காலம் ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும் தங்கள் முழு கவனத்தையும் தேர்தல் களத்தில் காட்டி இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். தொடர்ந்து பதவியில் நீடிக்க இதுவும் அளவுகோலாக இருக்கும்.
சமூக வலைதள பிரசார அணியினருடன் நானும், மேலிட பொறுப்பாளர் அஜய்குமாரும் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசித்தோம்.
சமூக வலைத்தளங்களில் பிரசாரத்தை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மோடி கொடுத்த வாக்குறுதிகளையும், அதை நிறைவேற்றாததையும், பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு பற்றியும் மக்கள் மத்தியில் எடுத்து சொல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈ.வி.கே. சம்பத்தின் 47-வது நினைவுதினத்தையொட்டி சத்திய மூர்த்தி பவனில் அவரது படத்துக்கு செல்வப்பெருந்தகை தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர் எம்.பி. கிருஷ்ணசாமி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், டி.செல்வம், பொன்.கிருஷ்ண மூர்த்தி, ஓ.பி.சி.துணை தலைவர் சென்னை ரவி ராஜ், அகரம் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமையில் பலமான கூட்டணி அமையும் என கூறியுள்ளார்.
- பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க கூட்டணி அமைத்துதான் போட்டியிடும் என அக்கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் தெரிவித்து இருந்தார்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசியுள்ளனர்.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் சதாசிவம், சிவக்குமார், வெங்கடேஷ் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.
இந்த சந்திப்பானது சுமார் 25 நிமிடம் நடைபெற்று உள்ளது.

ஏற்கனவே, தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்று அறிவித்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமையில் பலமான கூட்டணி அமையும் என கூறியுள்ளார்.
இதேபோல் பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க கூட்டணி அமைத்துதான் போட்டியிடும் என அக்கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் தங்கம் 38, வெள்ளி 21, வெண்கலம் 39, ஆக மொத்தம் 98 பதக்கங்களும் வென்றன.
- தேசிய அளவிலான நீச்சல், ரோலர் ஸ்கேட்டிங் , பில்லியர்ட்ஸ் போட்டிகளில் தங்கம் 83, வெள்ளி 113, வெண்கலம் 111, ஆக மொத்தம் 307 பதக்கங்களும் வென்றன.
சென்னை:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று உயரிய ஊக்கத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று ஊக்கத் தொகையை வழங்கினார்.
கோவாவில் 37-வது தேசிய விளையாட்டு போட்டி, தமிழ்நாட்டில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி, ஜெர்மனியில் 8-வது உலக அளவிலான குள்ள மனிதர்களுக்கான விளையாட்டு போட்டி, தாய்லாந்தில் உலக திறன் விளையாட்டு போட்டி, டெல்லியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டி, பன்னாட்டு அளவில் பில்லியர்ட்ஸ் போட்டி, ஆசிய சைக்கிளிங் போட்டி, பல்வேறு மாநிலங்களில் தேசிய நீச்சல் மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 601 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.16.31 கோடி மதிப்பில் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீதம் வேலைவாய்ப்பு ஒதுக்க வேண்டும் என்ற திட்டத்தின் கீழ் கால்பந்து வீராங்கனை எஸ். ரங்கநாயகி, வீல்சேர் பென்சிங் வீராங்கனை ஆர்.சங்கீதா, வூசு வீராங்கனைகள் பி.அகல்யா மற்றும் ஆர்.வெர்ஜின் ஆகியோர் வணிக வரி மற்றும் பத்திர பதிவு துறையில் இளநிலை உதவியாளராக அரசுப் பணி ஆணை வழங்கப்பட்டது.
விளையாட்டுப் போட்டியில் வென்ற பதக்கங்கள் விவரம் வருமாறு:-
37-வது தேசிய விளையாட்டு போட்டியில் வென்ற தங்கம் 19, வெள்ளி 26, வெண்கலம் 34 ஆக மொத்தம் 79 பதக்கங்களும், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் தங்கம் 38, வெள்ளி 21, வெண்கலம் 39, ஆக மொத்தம் 98 பதக்கங்களும் வென்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் தங்கம் 20, வெள்ளி 8, வெண்கலம் 14, ஆக மொத்தம் 42, 8-வது உலக அளவிலான குள்ள மனிதர்களுக்கான விளையாட்டு போட்டியில் தங்கம் 6, வெள்ளி 4, வெண்கலம் 6 ஆக மொத்தம் 16 பதக்கங்களும், தாய்லாந்தில் நடைபெற்ற உலக திறன் விளையாட்டு போட்டியில் தங்கம் 17, வெள்ளி 19, வெண்கலம் 12 ஆக மொத்தம் 48 பதக்கங்களும், தேசிய அளவிலான நீச்சல், ரோலர் ஸ்கேட்டிங் , பில்லியர்ட்ஸ் போட்டிகளில் தங்கம் 83, வெள்ளி 113, வெண்கலம் 111, ஆக மொத்தம் 307 பதக்கங்களும், பன்னாட்டு அளவில் நடைபெற்ற பில்லியர்ட்ஸ் போட்டிகளில் தங்கம் 1, வெள்ளி 2 ஆக மொத்தம் 3 பதக்கங்களும், ஆசிய சைக்கிளிங் போட்டியில் ஒரு வெள்ளி பதக்கமும், ஆக மொத்தம் 594 பதக்கங்களும் வென்றிருந்தது.
- மூன்று தலைமுறையாக நாட்டுக்கு தொண்டாற்றி வரும் குடும்பத்துக்கு சொந்தக்காரர் அமைச்சர் பி.டி.ஆர்.
- திமுக ஆட்சியில் முதல் 2 ஆண்டுகள் நிதி அமைச்சராக மிக சிறப்பாக செயல்பட்டு பல மாற்றங்களுக்கு வித்திட்டார் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.
சென்னை:
சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை நிதித்துறையில் இருந்து தகவல் தொழில்நுட்ப துறைக்கு மாற்றியது ஏன் என்பது தொடர்பாக விளக்கம் அளித்தார். அவர் பேசியதாவது:
அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை நான் பாராட்டுகிறேன். மூன்று தலைமுறையாக நாட்டுக்கு தொண்டாற்றி வரும் குடும்பத்துக்கு சொந்தக்காரர் அமைச்சர் பி.டி.ஆர்.
இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான திருச்சி என்ஐடியிலும், உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனமான எம்ஐடியிலும் படித்தவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.

பல ஆண்டுகள் வெளிநாடுகளில் படித்து, வேலை பார்த்திருந்தாலும், அங்கேயே தங்கிவிடாமல் தமிழ்நாட்டுக்கு திரும்ப வந்து, இங்கேயே தொழில் வர்த்தகம் என்று ஒதுங்கி விடாமல் அவரின் தாத்தா, அப்பா மாதிரி அரசியலில் பங்கெடுத்து தன்னுடைய அறிவாற்றலை தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்துக்கொண்டு இருப்பவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.
திமுக ஆட்சியில் முதல் 2 ஆண்டுகள் நிதி அமைச்சராக மிக சிறப்பாக செயல்பட்டு பல மாற்றங்களுக்கு வித்திட்டார் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். அவரை நான் ஐடி துறைக்கு மாற்றினேன். அவரை மாற்றியதற்கு காரணம், நிதித்துறையை போன்று ஐடி துறைக்கும் பல மாற்றங்கள் தேவைப்பட்டது.
அவரின் தலைமையில் தகவல் தொழில்நுட்ப துறை மூலமாக தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகமாகும். நான் கொடுத்த பொறுப்பை அவர் சிறப்பாக செயல்படுத்துகிறார் என்பதற்கு இந்த மாநாடே சிறந்த உதாரணம். அவரின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்" என்று கூறினார்.
கடந்த 2021-ல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த ஆடியோவில் முதலமைச்சரின் மகனும் அமைச்சருமான உதயநிதி குறித்தும் மருமகன் சபரீசன் குறித்தும் அவர் பேசியவை, கட்சிக்குள் பெரும் புயலையே கிளப்பின. இந்தப் பின்னணியில்தான் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர் வகித்துவந்த முக்கியத் துறையிலிருந்து மாற்றப்படுவார் என்று கூறப்பட்டது.
அதன்படி, நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றப்பட்டார். தொழில்துறை அமைச்சரான தங்கம் தென்னரசு நிதியமைச்சராக பதவியேற்றார். டி.ஆர்.பி. ராஜா, தொழில்துறை அமைச்சராக்கப்பட்டார்.
ஏற்கனவே தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ், பால் வளத்துறை அமைச்சராக்கப்பட்டார். செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சரான வெள்ளகோவில் சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை கூடுதலாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 6 மாதங்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
- 3 அரசு பஸ்சும், பால் வண்டி உள்ளிட்ட வாகனங்களும் சாலையின் இரு புறங்களும் நிறுத்த பட்டிருந்தன.
ஏரியூர்:
தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள மஞ்சார அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சித்திரப்பட்டி, செல்லமுடி, முழியான் காடு, நரசிமேடு, அருந்ததியர் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த 6 மாதங்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த பொது மக்கள் இன்று ஏரியூர் -மேச்சேரி பிரதான சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்த பொதுமக்கள், ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கத்திடம் கடும் வாக்கு வாதம் செய்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்ற நிலையில், போராட்டத்தால் பள்ளி கல்லூரிக்கு செல்ல முடியாமல் பாதி வழியில் தவித்து வரும் மாணவ மாணவிகளின் நலன் கருதி போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.
இந்தப் போராட்டத்தின் காரணமாக ஏரியூர் மேச்சேரி பிரதான சாலையில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி பேருந்துகளும், 5 வேன்களும், 3 அரசு பஸ்சும், பால் வண்டி உள்ளிட்ட வாகனங்களும் சாலையின் இரு புறங்களும் நிறுத்த பட்டிருந்தன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- சுகாதாரத்துறையினர் மாடுபிடி வீரர்களுக்கு உடற்கூறு தகுதி சான்றிதழ் வழங்கிய பிறகே போட்டியில் அனுமதிக்கப்பட்டனர்.
- போதுமான மருந்துகளுடன் கால்நடை டாக்டர்களுடன் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள உலிபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவினை மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தொடங்கி வைத்தார். உறுதி மொழி எடுக்கப்பட்டு விழா தொடங்கியது. இந்த விழாவில் சேலம், ஆத்தூர், கடம்பூர், கூடமலை, கெங்கவல்லி, ஏத்தாப்பூர், புதுக்கோட்டை, பெத்தநாயக்கன்பாளையம், கோனேரிப்பட்டி, நடுவலூர், கீரிப்பட்டி, கொண்டையம்பள்ளி, மல்லியகரை, திம்மநாயக்கன்பட்டி, மங்களபுரம், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500 காளைகள் கலந்து கொண்டன. இதில் 300 மாடுபிடி வீரர்கள் 50 பேராக 6 சுற்றாக பிரிக்கப்பட்டு மாடு பிடிக்கு அனுமதிக்கப்பட்டனர்.
முதலில் கோவில் மாடு அவிழ்த்து வாடிவாசல் வழியாக விடப்பட்டது. கோவில் மாடு என்பதால் அதை யாரும் பிடிக்கவில்லை. இதையடுத்து வரிசையாக ஒவ்வொரு மாடுகளாக அவிழ்த்து விடப்பட்டது. இந்த மாடுகள் வாடி வாசல் வழியாக சீறி பாய்ந்தது. தொட்டுப்பார், நாங்கள் தாறுமாறு என காளைகள் மைதானத்தில் துள்ளிக்குதித்து ஓடியது. வாடிவாசல் முன்பு திரண்டிருந்த வீரர்கள் இந்த காளைகளின் திமிலை பிடித்து அடக்க முயன்றனர். வீரர்கள் காளைகளின் திமிலை பிடித்து தொங்கியபடி வாடிவாசல் முகப்பில் இருந்து சில அடி தூரம் வரை சென்று அடக்கி பிடித்தனர். பெரும்பாலான காளைகள் வீரர்களிடம் பிடிப்படாமல் எகிறி குதித்து ஓடியது. காளைகளின் திமிலை பிடித்து அடக்க முயன்றபோது வீரர்களை காளைகள் முட்டி தூக்கி எறிந்தது.
இந்த போட்டியை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். கரகோஷம் எழுப்பி வீரர்களை உற்சாகப்படுத்தினார்கள். அதுபோல் வீரர்களிடம் இருந்து எகிறி குதித்து ஓடிய காளைகளுக்கு கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். மாடுகளின் திமிலை பிடித்து அடக்கிய வீரர்களுக்கும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாமல் சென்ற மாடுகளுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக கால்நடை பராமரிப்புத்துறை டாக்டர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு உடற்கூறு தகுதி சான்றிதழ் வழங்கினர். பிராணிகள் நல வாரியத்தால் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட காளைகள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. இதேபோல் சுகாதாரத்துறையினர் மாடுபிடி வீரர்களுக்கு உடற்கூறு தகுதி சான்றிதழ் வழங்கிய பிறகே போட்டியில் அனுமதிக்கப்பட்டனர். தடுப்பு வேலிகள், பாதுகாப்பு அம்சங்கள், மக்கள் அமரும் பார்வையாளர் மாடம், மேடைகள், ஜல்லிக்கட்டு காளைகளை அழைத்து வருவதற்குரிய பாதைகளுக்கான தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.
போதுமான மருந்துகளுடன் கால்நடை டாக்டர்களுடன் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது. டாக்டர்கள் மற்றும் மருந்துகள், 108 ஆம்புலன்ஸ் வசதி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் இதர சம்பந்தப்பட்ட துறையினர் கண்காணித்தனர். பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.






