search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உலிபுரம் ஜல்லிக்கட்டு விழாவில் காளைகள் சீறி பாய்ந்தது- அடக்க முயன்ற வீரர்களை முட்டி தூக்கியது
    X

    உலிபுரம் ஜல்லிக்கட்டு விழாவில் காளைகள் சீறி பாய்ந்தது- அடக்க முயன்ற வீரர்களை முட்டி தூக்கியது

    • சுகாதாரத்துறையினர் மாடுபிடி வீரர்களுக்கு உடற்கூறு தகுதி சான்றிதழ் வழங்கிய பிறகே போட்டியில் அனுமதிக்கப்பட்டனர்.
    • போதுமான மருந்துகளுடன் கால்நடை டாக்டர்களுடன் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள உலிபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு விழா இன்று நடைபெற்றது.

    இவ்விழாவினை மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தொடங்கி வைத்தார். உறுதி மொழி எடுக்கப்பட்டு விழா தொடங்கியது. இந்த விழாவில் சேலம், ஆத்தூர், கடம்பூர், கூடமலை, கெங்கவல்லி, ஏத்தாப்பூர், புதுக்கோட்டை, பெத்தநாயக்கன்பாளையம், கோனேரிப்பட்டி, நடுவலூர், கீரிப்பட்டி, கொண்டையம்பள்ளி, மல்லியகரை, திம்மநாயக்கன்பட்டி, மங்களபுரம், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500 காளைகள் கலந்து கொண்டன. இதில் 300 மாடுபிடி வீரர்கள் 50 பேராக 6 சுற்றாக பிரிக்கப்பட்டு மாடு பிடிக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    முதலில் கோவில் மாடு அவிழ்த்து வாடிவாசல் வழியாக விடப்பட்டது. கோவில் மாடு என்பதால் அதை யாரும் பிடிக்கவில்லை. இதையடுத்து வரிசையாக ஒவ்வொரு மாடுகளாக அவிழ்த்து விடப்பட்டது. இந்த மாடுகள் வாடி வாசல் வழியாக சீறி பாய்ந்தது. தொட்டுப்பார், நாங்கள் தாறுமாறு என காளைகள் மைதானத்தில் துள்ளிக்குதித்து ஓடியது. வாடிவாசல் முன்பு திரண்டிருந்த வீரர்கள் இந்த காளைகளின் திமிலை பிடித்து அடக்க முயன்றனர். வீரர்கள் காளைகளின் திமிலை பிடித்து தொங்கியபடி வாடிவாசல் முகப்பில் இருந்து சில அடி தூரம் வரை சென்று அடக்கி பிடித்தனர். பெரும்பாலான காளைகள் வீரர்களிடம் பிடிப்படாமல் எகிறி குதித்து ஓடியது. காளைகளின் திமிலை பிடித்து அடக்க முயன்றபோது வீரர்களை காளைகள் முட்டி தூக்கி எறிந்தது.

    இந்த போட்டியை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். கரகோஷம் எழுப்பி வீரர்களை உற்சாகப்படுத்தினார்கள். அதுபோல் வீரர்களிடம் இருந்து எகிறி குதித்து ஓடிய காளைகளுக்கு கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். மாடுகளின் திமிலை பிடித்து அடக்கிய வீரர்களுக்கும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாமல் சென்ற மாடுகளுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

    போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக கால்நடை பராமரிப்புத்துறை டாக்டர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு உடற்கூறு தகுதி சான்றிதழ் வழங்கினர். பிராணிகள் நல வாரியத்தால் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட காளைகள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. இதேபோல் சுகாதாரத்துறையினர் மாடுபிடி வீரர்களுக்கு உடற்கூறு தகுதி சான்றிதழ் வழங்கிய பிறகே போட்டியில் அனுமதிக்கப்பட்டனர். தடுப்பு வேலிகள், பாதுகாப்பு அம்சங்கள், மக்கள் அமரும் பார்வையாளர் மாடம், மேடைகள், ஜல்லிக்கட்டு காளைகளை அழைத்து வருவதற்குரிய பாதைகளுக்கான தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    போதுமான மருந்துகளுடன் கால்நடை டாக்டர்களுடன் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது. டாக்டர்கள் மற்றும் மருந்துகள், 108 ஆம்புலன்ஸ் வசதி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் இதர சம்பந்தப்பட்ட துறையினர் கண்காணித்தனர். பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    Next Story
    ×