என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • 23-ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டல மாக வலுப்பெற கூடும்.
    • நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

    சென்னை:

    அந்தமான் கடல் பகுதியில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி 23-ந் தேதி (புதன்கிழமை) புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    மத்திய அந்தமான் கடல் பகுதியில் 5.8 கி.மீ. உயரத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் மத்திய வங்க கடலில் கிழக்கு பகுதி, அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை (திங்கட்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

    இது வடமேற்கு திசையில் நகர்ந்து 23-ந்தேதி அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல் சின்னம்) வலுப்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்பு உருவாகும் என தெரிகிறது. இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன காரணமாக இன்றும், நாளையும் பெரும் பாலான பகுதிகளிலும், 22-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உருவாகி உள்ளது.

    தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்றும், கோவை, திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    மொத்தம் 21 மாவட்டங்களில் மழை அதிகம் இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை அதிகமாக இருக்கும் என்பதால் ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

    • கனமழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • நீர்வரத்து சீரான பின்னர் அனுமதி வழங்கப்படும்

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். மேலும் சபரிமலை சீசனின் போது ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சுருளி அருவியில் நீராடி செல்கின்றனர்.

    அமாவாசை உள்ளிட்ட தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் இங்கு குவிவார்கள்.

    மேகமலை, தூவானம் உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருவி பகுதிக்கு செல்லவும், குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். நீர்வரத்து சீரான பின்னர் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தனர்.

    இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் ஐப்பசி மாத பிறப்பையொட்டி ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் வழியில் சுருளி அருவிக்கு வந்தனர். குளிக்க தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    • வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று.
    • இதை நீங்களும் அறிவீர்கள் என்று எனக்குத் தெரியும்.

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு இம்மாதம் 27 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. விக்கிரவாண்டியில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், மாநாடு தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் தனது கட்சியினர் மற்றும் பொது மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களும் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நம் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவின் ஏற்பாடுகளில் நீங்கள் தீவிரமாக இருப்பதும் எனக்குத் தெரியும்."

    "அரசியலை, வெற்றி-தோல்விகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அளவிடாமல், ஆழமான அக உணர்வாகவும், கொள்கைக் கொண்டாட்டமாகவும் அணுகப் போகும் நம்முடைய அந்தத் தருணங்கள். மாநாட்டில் மேலும் அழகுற அமையட்டும். அரசியல் களத்தில், வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று. நம்மைப் பொறுத்தவரை, செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி."

    "மாநாட்டுக் களப்பணிகளில் மட்டுமல்லாமல், நம் ஒட்டுமொத்த அரசியல் களப்பணிகளிலும் நாம் அரசியல்மயப்படுத்தப்பட்டவர்கள் என்ற ஆழமான எண்ணத்தை மக்கள் மத்தியில் நீங்கள் உண்டாக்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உற்சாகமும் உண்மையான உணர்வும் தவழும் உங்கள் முகங்களை மாநாட்டில் காணப் போகும் அந்தத் தருணங்களுக்காகவே. என் மனம் தவம் செய்து காத்துக் கிடக்கிறது. இதை நீங்களும் அறிவீர்கள் என்று எனக்குத் தெரியும்."

    "இந்த நெகிழ்வான நேரத்தில், முக்கியமான ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். கழகத் தோழர்கள் எல்லோரையும் போலவே கர்ப்பிணிப் பெண்கள். பள்ளிச் சிறுவர் சிறுமியர். நீண்ட காலமாக உடல்நலமின்றி இருப்பவர்கள். முதியவர்கள் பலரும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து நம் மாநாட்டுக்கு வரத் திட்டமிட்டு இருப்பர். அவர்களின் அந்த ஆவலை நான் மிகவும் மதிக்கிறேன்."

    "உங்கள் எல்லோருடனும் அவர்களையும் மாநாட்டில் காண வேண்டும் என்ற ஆவல்தான் எனக்கும் இருக்கிறது. ஆனால், எல்லாவற்றையும்விட அவர்களின் நலனே எனக்கு மிக மிக முக்கியம். மாநாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் நீண்ட தூரப் பயணம். அவர்களுக்கு உடல்ரீதியாகச் சிரமத்தை ஏற்படுத்தக் கூடும். அதனால், அவர்கள் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வர வேண்டாம் என்றே அவர்களின் குடும்ப உறவாகவும் இருக்கும் உரிமையில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஊடக மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக, தங்கள் வீடுகளில் இருந்தே நமது வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கலந்து கொள்ளலாம் என்றும் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்."

    "மாநாட்டுக்கு வருகின்ற மற்ற அனைவரும், மாநாட்டுக்கு வந்து செல்லும்போது, பாதுகாப்புடன் பயணிப்பது மிக மிக முக்கியம். அதேபோல, பயண வழிகளில் அரசியல் ஒழுங்கையும் நெறிமுறைகளையும் போக்குவரத்து விதிமுறைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். நாம் எதைச் செய்தாலும், அதில் பொறுப்புணர்வுடன் கடமை. கண்ணியம், கட்டுப்பாட்டையும் காப்போம் என்பதை உணர்த்துமாறு செயல்பட்டால் தான் நம் செயல்கள் மிக நேர்த்தியாக அமையும். அரசியலுக்கும் அது பொருந்தும். நாம் எப்போதும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவே இருக்க வேண்டும். எந்நாளும் இதை ஒரு கட்டுப்பாட்டு விதியாகவே கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வி.சாலை என்னும் விவேக சாலையில் சந்திப்போம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆனதும் ஒரு வாரத்தில் பொறுப்பாளர்கள் நியமனம் அறிவிப்பு வெளியாகி இருந்தது.
    • கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகளின் தேர்தல் பணிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்குவதுடன் பல்வேறு தேர்தல் வியூகங்களையும் உதயநிதி ஸ்டாலின் வெளியிட இருக்கிறார்.

    சென்னை:

    2026-ம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை பொதுத்தேர்தலுக்கு இன்னும் 17 மாதங்கள்தான் உள்ளன.

    இந்த தேர்தலுக்கு வியூகம் வகுக்க தி.மு.க.வில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

    இந்த குழுவில் துணை முதலமைச்சரான இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இவர்கள் தி.மு.க.வில் உள்ள ஒவ்வொரு அணி வாரியாக மாநில நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து ஆலோசனை நடத்தி வந்தனர். இதில் எடுக்கப்படும் விவரங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் சட்டமன்ற தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை பொறுப்பாளர்களாக நியமித்தது போல் இப்போது சட்டசபை பொதுத்தேர்தலுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆனதும் ஒரு வாரத்தில் பொறுப்பாளர்கள் நியமனம் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

    அதில் பாராளுமன்ற தேர்தலில் பணியாற்றிய பொறுப்பாளர்களில் பலரை மாற்றி விட்டு அந்த தொகுதிகளுக்கு வேறு புதிய நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதில் இளைஞரணி மாநில துணைச்செயலாளர்கள் 7 பேருக்கு தொகுதி பொறுப்பாளர்கள் பதவியும், இளைஞரணி அமைப்பாளர்கள் 22 பேருக்கு தொகுதி பொறுப்பாளர்கள் பதவியும் கொடுக்கப்பட்டு உள்ளது.

    இது தவிர பெண்களுக்கும் தொகுதி பொறுப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. பல்லாவரம் சட்டமன்ற தொகுதியை மேற்பார்வையிட விருகம்பாக்கம் மாமன்ற உறுப்பினர் ரத்னா லோகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதே போல் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் தொகுதியில் என்ன நடக்கிறது என்பதை கட்சித் தலைமைக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும்.

    வாக்குச்சாவடி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள பி.எல்.ஏ.2 நிர்வாகிகளும், அவர்களுடன் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளும் சரிவர பணியாற்றுகிறார்களா? என்பதையும் ஆய்வு செய்து வருகின்றனர். இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையையும் கவனிக்கின்றனர்.

    இவை அனைத்தும் உதயநிதியின் ஆலோசனையின் பேரில் நடைபெற்று வருகிறது.

    இப்போது நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களில் பலர் வயதில் குறைந்தவர்களாக துடிப்பானவர் ளாக நியமனம் செய்யப்பட்டு உள்ளதால் கட்சி பணிகள் வேகப்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதன் தொடர்ச்சியாக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இப்போது ஒவ்வொரு மாவட்டமாக சென்று இளைஞரணி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை வழங்கி உள்ளார்.

    அந்த வகையில் சேலத்தில் இன்று மாலை கருப்பூரில் உள்ள தீர்த்தமலை கவுண்டர் திருமண மண்டபத்தில் மாநில அளவிலான தி.மு.க. இளைஞர் அணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்.

    இந்த கூட்டத்தில் மாநில துணை செயலாளர்கள் ஜோயல், சீனிவாசன், இன்பாரகு, இளையராஜா, அப்துல்மாலிக், கோல்டு பிரகாஷ், பிரபு, ராஜா, ஆனந்தகுமார் மற்றும் மாவட்ட, மாநகர இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்பட 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    துணை முதலமைச்சரான பின்னர் முதன்முதலாக இன்று நடைபெறும் இந்த இளைஞரணி கூட்டம் "களத்தில் இளைஞர் அணி" என்ற நோக்கில் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் இளைஞரணியின் செயல்பாடுகளை தற்போதே தீவிரப்படுத்தும் வகையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் இருந்து இளைஞரணியினர் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.

    மேலும் தமிழகம் முழுவதும் இளைஞர்களை கவரும் வகையில், திறக்கப்படாமல் உள்ள கலைஞர் நூலகங்களை திறப்பது, எனது உயிரினும் மேலான இறுதிப்போட்டியில் வெல்பவர்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பரிசளிப்பு விழா நடத்துவது, இளைஞர் அணியின் மூலம் சமூக வலை தள பயிற்சிகளை சிறப்பாக நடத்தி வாக்காளர்களை கவருவது, நகர, பகுதி, பேரூர்களுக்கு திறமையான புதிய நிர்வாகிகளை அறிவித்தல் உள்பட பல்வேறு பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

    மேலும் இந்த கூட்டத்தில் சிறப்பு நிகழ்வாக கூட்டத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு இளைஞரணி நிர்வாகிகளையும் உற்சாகப்படுத்தும் வகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனிதனியாக போட்டோ எடுத்து கொள்கிறார்.

    இந்த கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகளின் தேர்தல் பணிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்குவதுடன் பல்வேறு தேர்தல் வியூகங்களையும் உதயநிதி ஸ்டாலின் வெளியிட இருக்கிறார்.

    இளைஞரணி நிர்வாகிகள் ஐ.டி.விங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதுடன் சமூக வலைதள பதிவில் அவ்வப்போது எவ்வாறு பதிவுகள் போட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்ட உள்ளார்.

    வருகிற சட்டசபை தேர்தலில் இளைஞரணி நிர்வாகிகளுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்பதால் மூத்த அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பேசும் போது தேர்தலில் தனக்கு சீட் கிடைக்குமா? கிடைக்காதோ? என்று பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாலத்தின் தாங்கும் திறன், அதிர்வுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
    • மின்வயர்கள் சரி பார்க்கும் பணியில் பொறியாளர்கள் குழு ஈடுபட்டுள்ளது.

    மண்டபம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரெயில் தூக்குப் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு மற்றும் புதிய பாம்பன் ரெயில் பாலப் பணிகளுக்காக 23.12.2023 அன்று முதல் ராமேசுவரத்திற்கு முற்றிலுமாக ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து ராமேசுவரத்திற்கு வரும் ரெயில் மண்டபம் மற்றும் ராமநாதபுரம் ரெயில் நிலையங்கள் வரையிலும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 22 மாதங்களாக ராமேசுவரத்திற்கு ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் ரூ.535 கோடி மதிப்பில் பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு சமீபத்தில் பணிகள் முடிவடைந்து, பாலத்தின் நடுவே செங்குத்து தூக்கு பாலத்தை வெற்றிகரமாக தூக்கி, இறக்கி சோதனை நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக பாம்பன் புதிய ரெயில் பாலம் வழி யாக மண்டபம்-ராமேசு வரம் இடையே சரக்கு ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.

    மண்டபத்திலிருந்து ஒரு என்ஜினுடன், காலியான 17 சரக்கு பெட்டிகளுடன் புறப்பட்ட ரெயில் ராமேசுவரத்திற்கு சென்றது. முதலில் 30 கி.மீ. வேகத்தில் சரக்கு ரெயில் இயக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக 45 கி.மீ. வேகம், 60 கி.மீ. வேகம் அதிகரித்து சோதனை ஓட்டம் நடைபெற்றது.

    பின்னர் பாம்பன் புதிய ரெயில் பாலம் வழியாக மண்டபம்-ராமேசுவரம் இடையே மின்சார ரெயிலை இயக்கி நேற்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. மின்சார ரெயில் இயக்க அமைக்கப்பட்ட மின்கம்பங் களில் மின்வயர்கள் சரி பார்க்கும் பணியில் தற்போது பொறியாளர்கள் குழு ஈடுபட்டுள்ளது.

    இந்த சோதனை ஓட்டத்தின்போது புதிய பாலத்திலிருந்து பாம்பன் வரையிலுமான புதிய தண்ட வாளங்களில் சென்சார் கருவிகள் பொறுத்தப்பட்டு பாலத்தின் தாங்கும் திறன், அதிர்வுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

    விரைவில் முதன்மை ரெயில்வே பாதுகாப்பு துறை அதிகாரி தலைமையில் புதிய ரெயில் பாலம் ஆய்வு நிறைவு அடைந்ததும், புதிய பாம்பன் பாலம் திறக்கப்படுவது குறித்த தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சுபமுகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடக்கிறது.
    • விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் பலமணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர்:

    முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குரு தலமாகவும், சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது.

    மேலும் கடற்கரையில் அமைந்துள்ளதால் சுற்றுலா தலமாகவும் விளங்கி வருவதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அதிலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் ஏராளமானவர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இங்கு வழங்கப்படும் நோய் தீர்க்கும் இலை விபூதி பிரசித்தி பெற்றதாகும். இலை விபூதி பெறுவதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    இங்கு சுபமுகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடக்கிறது. தற்போது ஐப்பசி மாதம் கந்த சஷ்டி திருவிழா நடைபெற உள்ள நிலையில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    பொதுவாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் விடுமுறையை கொண்டாட ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    வழக்கம் போல் இன்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் பலமணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

    • முதலமைச்சர் சொன்னதைப்போல நாம் யாரை நம்பியும் இல்லை.
    • நம்மை நம்பி இருப்பவர்களுக்கு உற்ற துணையாக, உறுதுணையாக இருப்பது தான் தி.மு.க. என்பதை அனைவரும் உணர வேண்டும்.

    மதுரை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மதுரை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி மற்றும் கோ.தளபதி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டங்களில் இந்த முறை மதுரை பாராளுமன்ற தொகுதியை தி.மு.க.விற்கு ஒதுக்க வேண்டும் என தொடர்ச்சியாக பேசி வந்தனர்.

    ஆனால் கட்சி தலைமை மதுரை தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கியது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சு.வெங்கடேசன் 2-வது முறையாக போட்டியிட்டு 2,09,409 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 9-ந்தேதி அப்போதைய அமைச்சரும், தற்போதைய துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஒத்தக்கடை பகுதியில் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில் வெங்கடேசன் எம்.பி.யும் கலந்து கொண்டார்.

    பின்னர் கடந்த 7-ந்தேதி மதுரை மாநகராட்சி பகுதிகளுக்குள் பல ஆண்டுகளாக வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கூறி மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரமாண்ட பேரணி வெங்கடேசன் எம்.பி. தலைமையில் நடந்தது.

    அப்போது அவர் பேசுகையில், 10 ஆயிரம் பேருக்கு பட்டா கொடுத்தார்கள். ஆனால் மாநகராட்சி பகுதியில் உள்ள ஏழைகளுக்கு பட்டா கொடுக்காமலும், அதுதொடர்பாக அரசாணை வெளியிடாமலும் இருக்கிறார்கள் என தி.மு.க. அரசை விமர்சித்தார்.

    பட்டா கேட்டு நடத்திய இந்த பேரணி பட்டா வழங்கும் நிகழ்ச்சியை நடத்திய அமைச்சருக்கு எதிராக உள்ளதோ என கருதி, மதுரை தி.மு.க.வி.னரும், அமைச்சரின் ஆதரவாளர்களும் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் போராட்டத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சியினருக்கு எதிரான கருத்துகளை சமூகவலை தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

    இதற்கிடையே அமைச்சர் மூர்த்தியின் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வண்டியூர் பகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனி்ஸ்ட் கட்சி சார்பில் கிளை மாநாடு நடந்தது. அதில் வண்டியூர் பகுதிகளில் சாலைகள் மோசமாக இருப்பதால் அதனை சீரமைக்க வேண்டும், ரேசன் கடைகளில் பொருட்கள் தரமற்றதாகவும், எடை குறைவாக இருப்பதாகவும் கூறி கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றி அதனை வண்டியூர் பகுதியில் பேனராகவும் வைத்தனர்.

    இதனையடுத்து ஓரிரு நாட்களில் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வண்டியூர் பகுதி முழுவதும் கண்டா வரச்சொல்லுங்க...! என்ற வாசகத்துடன் மதுரை வெங்கடேசன் எம்.பி.க்கு எதிராக பொதுமக்கள் என்ற பெயரில் நோட்டீசுகள் ஒட்டப்பட்டன. இது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினரிடையை கோபத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த ஒன்றிய மாநாட்டில் வெங்கடேசன் எம்.பி. பேசுகையில், வண்டியூர் சாலையை உடனடியாக செப்பனிட வேண்டும், ரேஷன் கடையில் தரமான பொருள் வை என்றால் ஒருத்தனுக்கு கோபம் வருகிறது என்றால் தரம் இல்லாத பொருளை எடை குறைவான பொருளை போடுபவனுக்கு பின்னால் இருக்கும் நபருக்கு தான் வரும்.

    மக்களுக்கான போராட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒருபோதும் பின்வாங்கமாட்டார்கள், எங்களை விட சிறந்த போராட்டக்காரர்களாக இருந்தால் எங்களோடு வாருங்கள் போட்டி போடலாம் என சவால் விடுத்தார்.

    இந்தநிலையில் மதுரை மாவட்டம் ஆலத்தூர் பகுதியில் நடைபெற்ற தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடத்தப்பட்ட பேரணியை கடுமையாக சாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மதுரையில் மீண்டும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் விரைவில் பட்டா வழங்க இருக்கிறார்கள். இதில் யாரும் உரிமை கொண்டாட முடியாது. தகுதி இல்லாதவர்களை அழைத்து பட்டா கொடுக்கிறேன் என சொல்லி திசை திருப்புகிற வேலையை விட்டுவிடுங்கள்.

    தன்னுடைய புகழுக்காக எதையாவது பெற்றுத் தருகிறேன் என தவறான பிரசாரம் செய்வதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். மக்களுக்கு என்ன கொடுக்க வேண்டும் என தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை முதலமைச்சர் செய்து வருகிறார். நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் இருப்பவர்களுக்கு பட்டா வழங்க முடியாது.

    கிடைக்காததை கிடைக்கும் என்றும், வாங்கி தருவோம் என்று சொல்லியும் வருபவர்களை தயவு செய்து நீங்கள் நம்பி ஏமாந்து விடவேண்டாம். தகுதி உள்ளவர்களுக்கு நிச்சயமாக பட்டாவை பெற்று தரக்கூடிய பணியை அரசுத்துறையும், அதிகாரிகளும் முழுவீச்சில் செய்து வருகின்றனர்.

    முதலமைச்சர் சொன்னதைப்போல நாம் யாரை நம்பியும் இல்லை, நம்மை நம்பி இருப்பவர்களுக்கு உற்ற துணையாக, உறுதுணையாக இருப்பது தான் தி.மு.க. என்பதை அனைவரும் உணர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மதுரையில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் கூட்டங்களில் அவன், இவன் என மேடையிலேயே ஒருமையில் சவால் விடுத்து பேசும் வகையில் ஒருவரை ஒருவர் சாடி வருவதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடர்ந்து, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியிடமும் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

    • சட்டசபை பொதுத் தேர்தலுக்கு இன்னும் 17 மாதங்கள் தான் உள்ளன.
    • 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    சென்னை:

    2026-ம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை பொதுத் தேர்தலுக்கு இன்னும் 17 மாதங்கள் தான் உள்ளன.

    இந்த தேர்தலுக்கு வியூகம் வகுக்க தி.மு.க.வில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

    இந்த குழுவில் துணை முதலமைச்சரான இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகி யோர் இடம் பெற்றுள்ளனர்.

    இவர்கள் தி.மு.க.வில் உள்ள ஒவ்வொரு அணி வாரியாக மாநில நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து ஆலோசனை நடத்தி வந்தனர். இதில் எடுக்கப்படும் விவரங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் சட்டமன்ற தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை பொறுப்பாளர்களாக நியமித்தது போல் இப்போது சட்டசபை பொதுத் தேர்தலுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆனதும் ஒரு வாரத்தில் பொறுப்பாளர்கள் நியமனம் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

    அதில் நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றிய பொறுப்பாளர்களில் பலரை மாற்றி விட்டு அந்த தொகுதிகளுக்கு வேறு புதிய நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதில் இளைஞரணி மாநில துணைச் செயலாளர்கள் 7 பேருக்கு தொகுதி பொறுப்பாளர்கள் பதவி யும், இளைஞரணி அமைப் பாளர்கள் 22 பேருக்கு தொகுதி பொறுப்பாளர்கள் பதவியும் கொடுக்கப்பட்டு உள்ளது.

    இது தவிர பெண்களுக்கும் தொகுதி பொறுப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. பல்லாவரம் சட்டமன்ற தொகுதியை மேற்பார்வையிட விருகம் பாக்கம் மாமன்ற உறுப்பினர் ரத்னா லோகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதே போல் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் தொகுதியில் என்ன நடக்கிறது என்பதை கட்சித் தலைமைக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும்.

    வாக்குச் சாவடி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள பி. எல்.ஏ.2 நிர்வாகிகளும், அவர்களுடன் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளும் சரிவர பணியாற்றுகிறார்களா? என்பதையும் ஆய்வு செய்து வருகின்றனர். இளைஞரணி உறுப்பினர் சேர்க்கையையும் கவனிக்கின்றனர்.

    இவை அனைத்தும் உதய நிதியின் ஆலோசனையின் பேரில் நடைபெற்று வருகிறது.

    இப்போது நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களில் பலர் வயதில் குறைந்தவர்களாக துடிப்பானவர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளதால் கட்சிப் பணிகள் வேகப்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதன் தொடர்ச்சியாக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இப்போது ஒவ்வொரு மாவட்டமாக சென்று இளைஞரணி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை வழங்கி உள்ளார்.

    அந்த வகையில் சேலத்தில் இன்று மாலை கருப்பூரில் உள்ள தீர்த்தமலை கவுண்டர் திருமண மண்டபத்தில் மாநில அளவிலான தி.மு.க. இளைஞர் அணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் பேசுகிறார்.

    இந்த கூட்டத்தில் மாநில துணை செயலாளர்கள் ஜோயல், சீனிவாசன், இன்பாரகு, இளையராஜா, அப்துல்மாலிக், கோல்டு பிரகாஷ், பிரபு, ராஜா, ஆனந்தகுமார் மற்றும் மாவட்ட, மாநகர இளை ஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்பட 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    துணை முதல்-அமைச்ச ரான பின்னர் முதன்முத லாக இன்று நடைபெறும் இந்த இளைஞரணி கூட்டம் "களத்தில் இளைஞர் அணி" என்ற நோக்கில் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் இளைஞரணியின் செயல் பாடுகளை தற்போதே தீவிரப்படுத்தும் வகையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் இருந்து இளைஞ ரணியினர் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.

    மேலும் தமிழகம் முழு வதும் இளைஞர்களை கவரும் வகையில், திறக்கப் படாமல் உள்ள கலைஞர் நூலகங்களை திறப்பது, எனது உயிரினும் மேலான இறுதிப்போட்டியில் வெல்பவர்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பரிசளிப்பு விழா நடத்துவது, இளைஞர் அணியின் மூலம் சமூக வலை தள பயிற்சிகளை சிறப்பாக நடத்தி வாக்கா ளர்களை கவருவது, நகர, பகுதி, பேரூர்களுக்கு திறமையான புதிய நிர்வாகி களை அறிவித்தல் உள்பட பல்வேறு பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவா திக்கப்படுகிறது.

    மேலும் இந்த கூட்டத்தில் சிறப்பு நிகழ்வாக கூட்டத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு இளைஞரணி நிர்வாகிகளையும் உற்சாகப்படுத்தும் வகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனிதனியாக போட்டோ எடுத்து கொள்கிறார்.

    இந்த கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகளின் தேர்தல் பணிகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்குவதுடன் பல்வேறு தேர்தல் வியூகங்களையும் உதயநிதி ஸ்டாலின் வெளியிட இருக்கிறார்.

    இளைஞரணி நிர்வாகி கள் ஐ.டி.விங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதுடன் சமூக வலைதள பதிவில் அவ்வப்போது எவ்வாறு பதிவுகள் போட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்ட உள்ளார்.

    வருகிற சட்டசபை தேர்தலில் இளைஞரணி நிர்வாகிகளுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்பதால் மூத்த அமைச்சர் பொன்முடி சமீபத்தில் பேசும் போது தேர்தலில் தனக்கு சீட் கிடைக்குமா? கிடைக்காதோ? என்று பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றுகிறார்.
    • எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கட்சி கொடிகள் கட்டி உள்ளனர்.

    நெல்லை:

    அ.தி.மு.க. 53-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சி கொடியேற்றுதல், பொதுக்கூட்டங்கள் நடத்துதல் என பல்வேறு நிகழ்ச்சிகளை நிர்வாகிகளும், தொண்டர் களும் மேற்கொண்டு வருகின்றனர்.

    நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமையில் இன்று மாலை பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதனையொட்டி அம்பை-ஆலங்குளம் சாலையில் வடக்கு ரதவீதியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றுகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தடைகிறார். அங்கு அவருக்கு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    அதனைத்தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் நெல்லை மேலப்பாளையம் வழியாக அம்பைக்கு செல்கிறார். அங்கு அவருக்கு புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். தொடர்ந்து அம்பையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    அதன்பின்னர் அங்கிருந்து மீண்டும் மேலப்பாளையம் வழியாக நெல்லை மாநகருக்கு இரவில் புறப்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு, மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் வண்ணார் பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகே மேளதாளத்துடன் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் திரளான தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.

    அதனை தொடர்ந்து நெல்லை மாநகராட்சி எதிரே அமைந்துள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் மாநில எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் நயினார் வீரபெருமாள் இல்ல திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சந்திப்பு ரெயில் நிலையத்தை அடைகிறார். அங்கிருந்து இரவில் ரெயில் மூலம் அவர் சேலத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.

    முன்னதாக எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் இருந்து வரும்போது பாளை கே.டி.சி.நகரில் தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில நிர்வாகி பொட்டல் துரை இல்ல திருமண விழாவில் கலந்து கொள்கிறார். எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கட்சி கொடிகள் கட்டி உள்ளனர்.

    மாநகரில் திருமண விழாவிற்கு வரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க மேலப்பாளையம் கருங்குளத்தில் தொடங்கி சிக்னல் வழியாக வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலை முழுவதும் அ.தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டு உள்ளது.

    தொடர்ந்து கொக்கிரகுளம், ஸ்ரீபுரம் வரையிலும் கொடி தோரணங்களும், பிரமாண்ட வரவேற்பு பதாகைகளும் மாநகர் மாவட்டம் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் புறநகரில் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் தருவையில் தொடங்கி அம்பை வரையிலும் பிரமாண்ட கட் அவுட்டுகள், வரவேற்பு பேனர்கள், கொடிகள் கட்டப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
    • சென்னை புறநகர் பகுதிகளில் அதிகாலையில் மழை பெய்தது.

    வடதமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்து இருந்தது.

    இன்று அதிகாலை தமிழகத்தின் பல்வேறு இடங்கள் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இந்த நிலையில், சென்னை உள்பட பத்து மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய பத்து மாட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    • நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் காவிரி ஆற்றுப்பகுதிகளில் குளிக்கவும் பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது.

    ஒகேனக்கல்:

    காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சில தினங்களாக நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து சில தினங்களாக நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து 3 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வந்தது.

    இதனால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,000 கன அடியாக நீடித்து வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று மழை குறைந்ததால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று சற்று சரிந்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    மேலும் நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடிக்கும் மேல் அதிகரித்து வருவதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் காவிரி ஆற்றுப்பகுதிகளில் குளிக்கவும் பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையானது தொடர்ந்து இன்று 8-வது நாளாக நீடித்து வருகிறது.

    தமிழகம் மற்றும் கர்நாடகா எல்லை பகுதிகளிலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை அளவு குறைவதும், அதிகரிப்பதுமாக இருப்பதால், பிலிக்குண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • சாரல் மழை மற்றும் பனி மூட்டத்தின் காரணமாக கொடைக்கானலில் காற்றின் ஈரப்பதம் அதிகரித்து காணப்படுகிறது.
    • கேரளாவில் இருந்து அதிக அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது கொடைக்கானலில் சாரல்மழை பெய்தது. மேலும் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அடிக்கடி சாரல் மழை பெய்தது. நகர்பகுதியில் தரை இறங்கும் மேகக்கூட்டம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. மாறுபட்ட வானிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஏரியில் நனைந்தபடி படகு சவாரி செய்தும், குடை பிடித்தபடியே ஏரிச்சாலையில் நடந்து சென்றும் பொழுதை கழித்து வருகின்றனர். இது மட்டுமின்றி பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார்பூங்கா, கோக்கர்ஸ் வாக், மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் ஆகிய இடங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.

    மேலும் ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள், படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். சாரல் மழை மற்றும் பனி மூட்டத்தின் காரணமாக கொடைக்கானலில் காற்றின் ஈரப்பதம் அதிகரித்து காணப்படுகிறது. கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள் இதை ஆனந்தமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் மன்னவனூர், பூண்டி கிளாவரை உள்ளிட்ட மேல்மலை கிராமங்களுக்கும் படையெடுத்த சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

    குறிப்பாக கேரளாவில் இருந்து அதிக அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். அவர்கள் மலைப்பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ள சுற்றுலா இடங்களை கண்டு ரசித்தனர். மேலும் ஆங்காங்கே உருவாகி உள்ள புதிய அருவிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×