என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தி.மு.க. அரசு மீது தமிழ்நாட்டு மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
- உணவு, குடிநீருக்காக போராடும் மக்களிடம் காருக்குள்ளேயே அமர்ந்துகொண்டு பேசுவதை தி.மு.க. அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும்.
கோவை:
பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம் இருவேலம்பட்டு பகுதியில் மழை நிவாரணம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அமைச்சர் பொன்முடி காருக்குள் அமர்ந்தபடி பேசி உள்ளார்.
கோபம் அடைந்த மக்கள் காரை விட்டு இறங்கி வர மாட்டீர்களா என கூறி அவர் மீது சேற்றை வீசி உள்ளனர்.
நிர்வாக திறனற்ற, மக்கள் நலனில் அக்கறை இல்லாத தி.மு.க. அரசால் பெருமழை பாதிப்பில் இருந்து மீள முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள்.
முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவரும் சில இடங்களுக்குச் சென்று புகைப்படம், வீடியோ எடுத்து விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றுகின்றனரே தவிர, உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.
இதனால் தி.மு.க. அரசு மீது தமிழ்நாட்டு மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
கடந்த மூன்றரை ஆண்டுகால தி.மு.க. அரசுக்கு மக்கள் வழங்கிய சான்றிதழ் தான் இந்த சம்பவம்.
இனியாவது அமைச்சர்கள் உள்ளிட்ட தி.மு.க.வினர் மக்களை மதிக்க வேண்டும். உணவு, குடிநீருக்காக போராடும் மக்களிடம் காருக்குள்ளேயே அமர்ந்துகொண்டு பேசுவதை தி.மு.க. அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களின் இந்த கோபம், 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். தி.மு.க. ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- மேட்டூர் அணைக்கு கடந்த சில தினங்களாக நீர்வரத்து அதிகரித்தப்படி உள்ளது.
- நீர் இருப்பு 83.05 டி.எம்.சி.யாக உள்ளது.
மேட்டூர்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த சில தினங்களாக நீர்வரத்து அதிகரித்தப்படி உள்ளது.
நேற்று முன்தினம் வினாடிக்கு 7,414 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலையில் 9,246 கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து நேற்று இரவு 29,021 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது.
மேலும் இன்று காலையில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 32,240 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1000 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. நேற்று 111.39 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு நீர்மட்டம் 113.39 அடி உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 83.05 டி.எம்.சி.யாக உள்ளது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும் , ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏறுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. நேற்றுமுன்தினம் தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைந்தும் நேற்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,040-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் தங்கம் ரூ. 7,130-க்கும் ரூ. 57,040-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் ஐந்தாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும் , ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
03-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,040
02-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,720
01-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,200
30-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,200
29-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,280
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
03-12-2024- ஒரு கிராம் ரூ. 100
02-12-2024- ஒரு கிராம் ரூ. 100
01-12-2024- ஒரு கிராம் ரூ. 100
30-11-2024- ஒரு கிராம் ரூ. 100
29-11-2024- ஒரு கிராம் ரூ. 100
28-11-2024- ஒரு கிராம் ரூ. 98
- திமுக பொறுப்பேற்று 1505 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது.
- எதிர்க்கட்சித்தலைவர் தன் இருப்பிடத்தை காட்டிக்கொள்ள ஈரை பேன் ஆக்க முயற்சிக்கிறார்.
திமுக ஆட்சியில் கட்டிய பாலங்கள் எவ்வளவு தரமற்றவை என்பதற்கு அடித்துச்செல்லப்பட்ட பாலங்கள் சாட்சி என அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* திமுக பொறுப்பேற்று 1505 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. 328 பாலப்பணிகள் நடைபெறுகிறது.
* அதிமுக ஆட்சியில் முடிக்காது நீண்ட நாள் நிலுவையிலிருந்த 38 ரெயில்வே மேம்பாலங்கள் திமுக ஆட்சியில் கட்டப்பட்டது.
* எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மட்டும் 7 பாலங்கள் கட்டி உடனே இடிந்து விழுந்த வரலாறும் உண்டு.
* அதிமுக ஆட்சியில் கடலூர் சிங்காரத்தோப்பு பாலம் கட்டும்போதே இடிந்து விழுந்தது.
* எதிர்க்கட்சித்தலைவர் தன் இருப்பிடத்தை காட்டிக்கொள்ள ஈரை பேன் ஆக்க முயற்சிக்கிறார் என்று கூறினார்.
- கிராம மக்கள் அரசூர் கூட்டு சாலைக்கு திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர்.
- 2 தினங்களுக்கு பிறகு நிலைமை சீரடைந்ததால், இன்று காலை முதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்தது. மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணையாறு, அதன் கிளை ஆறுகளான மலட்டாறு, பம்பை ஆறு, நரி ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கடந்த 1-ந்தேதி இரவு மலட்டாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் அதன் கரையோரம் உள்ள திருவெண்ணெய்நல்லூர், சித்தலிங்கமடம், அரசூர், காரப்பட்டு, இருவேல்பட்டு, ஆனத்தூர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது. நேற்று முன்தினம் இரவுக்கு மேல்தான் வெள்ளம் வடிய தொடங்கியது.
நேற்று காலை வரை குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளநீரை வெளியேற்றவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கவும் அதிகாாிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி ஆத்திரம் அடைந்த அரசூர், இருவேல்பட்டு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் அரசூர் கூட்டு சாலைக்கு திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர்.
கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய கலெக்டர், அரசூர் கூட்டுசாலையில் துண்டிக்கப்பட்ட இடம், இருவேல்பட்டு குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றை நோில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள், நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும், குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் வெள்ளத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார். அதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்நிலையில், கடலூர் - புதுச்சேரி - சென்னை சாலையில் பல இடங்களில் தென்பெண்ணை ஆற்று நீர் சாலைக்கு மேல் சென்றதால் நேற்று முன்தினம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது
2 தினங்களுக்கு பிறகு நிலைமை சீரடைந்ததால், இன்று காலை முதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னை செல்லும் சாலையில் தற்போது இயல்பு நிலை திரும்பி, வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அப்பகுதியில் இன்று இயல்பு நிலை திரும்பியது.
- அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.
- 10 நாட்கள் காலை, இரவு என இருவேளையில் சாமி மாடவீதி உலா நடைபெறுகின்றன.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் வருகிற 13-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா மகா தீபம் ஏற்றப்படுகிறது.
இதனையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 1-ந் தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவம், தொடர்ந்து பிடாரி அம்மன், விநாயகர் உற்சவம் நடந்தது.
இன்று காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம் நடந்தது. அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் காலை 6.25 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. கொடிமரத்தின் அருகே அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இதனை தொடர்ந்து 10 நாட்கள் காலை இரவு என இருவேளையில் சாமி மாடவீதி உலா நடைபெறுகின்றன.
வருகிற 10-ந்தேதி மகா தேரோட்டம் நடைபெறும். கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்வான மகா தீபம் 13-ந்தேதி ஏற்றப்படுகிறது.
13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் தங்க கொடிமரம் முன்பு எழுந்தருள்வார். அப்போது 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
13-ந்தேதி முதல் 11 நாட்களுக்கு மலை உச்சியில் அண்ணாமலையார் ஜோதிப்பிழம்பாக காட்சி தருவார். கார்த்திகை தீபத் திருவிழாவில் சுமார் 40 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் பக்தர்களின் வசதிக்காக செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை நடைபெற்ற கொடியேற்று விழாவில் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- சென்னை மாநகராட்சி `சிங்கார சென்னை 2.0’ திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- வருகிற 17-ந் தேதிக்குள் டெண்டருக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக திகழும் மெரினா கடற்கரை, மக்களை கவரும் வகையில் உள்ளது. காலை, மாலை நேரங்களில் கடற்கரைக்கு தினமும் ஏராளமான மக்கள் பொழுதுபோக்க வருகின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்களில் பல ஆயிரம் பேர் இங்கு குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.
ஆண்டுக்கு பல லட்சம் பேர் வந்து செல்லக்கூடிய இந்த கடற்கரைக்கு இன்னமும் கூடுதலாக வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பதும், உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய கடற்கரையான மெரினாவை மேலும் அழகுப்படுத்த வேண்டும் என்பதும் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.
சென்னை மாநகராட்சி `சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் சென்னை மெரினாவில் ரோப் கார் சேவைக்கான கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரி, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
வருகிற 17-ந் தேதிக்குள் டெண்டருக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
வடிவமைப்பு, தொழில்நுட்ப அம்சங்கள் உட்பட விரிவான அறிக்கை, மதிப்பாய்வு உள்ளிட்டவற்றை அளிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- படுகாயத்துடன் ஒருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் கருகம்பத்தூர் பகுதியில் இன்று அதிகாலையில் லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொணவட்டம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், சர்வீஸ் சாலையில் நின்ற லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜீப்பில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயத்துடன் ஒருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் சென்னை மணலி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மொரப்பூர் அருகே உள்ளது எம்.வேட்ரப்பட்டி கிராமம்.
- கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு வேட்டையன் ஏரி நிறைந்தது. அதன் பிறகு ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் காய்ந்து போனது.
மொரப்பூர்:
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ளது எம்.வேட்ரப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் வேட்டையன் ஏரி உள்ளது. இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பினால் அதன் மூலம் சுமார் 200-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் குடிநீருக்கும், பாசனத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு வேட்டையன் ஏரி நிறைந்தது. அதன் பிறகு ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் காய்ந்து போனது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் தண்ணீருக்கு மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மொரப்பூர் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் வேட்டையன் ஏரி 22 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் நிரம்பியதால் கிராம மக்கள் ஆடுவெட்டி கொண்டாடினார்கள். இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 5-க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளக்கண்ணுவை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
- பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே கூட்டாம்புளி பொன்நகரை சேர்ந்தவர் வெள்ளக்கண்ணு (வயது 23). இவரது தந்தை முருகேசன் கூட்டாம்புளி பிரதான சாலையில் இரும்பு கடை நடத்தி வருகிறார்.
வெள்ளக்கண்ணுவுக்கும் அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை வீட்டின் முன்பாக வெள்ளக்கண்ணு நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு கும்பலாக வந்த 5-க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளக்கண்ணுவை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
அப்போது வெள்ளக்கண்ணுவின் அலறல் சத்தம் கேட்டு வீட்டினுள் இருந்து வெளியே ஓடி வந்த அவரது தம்பி, வெள்ளக்கண்ணுவை கும்பல் தாக்குவதை தடுக்க முயன்றார்.
அப்போது அவரையும் கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் அவரும் படுகாயம் அடைந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், ரூரல் டி.எஸ்.பி. சுதிர், இன்ஸ்பெக்டர் வனசுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் ஞானராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
வெள்ளக்கண்ணுவை கொலை செய்த கும்பல் யார்? முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளையும் ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நம்மைக் காக்க, நாம் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த அரசு இருக்கிறது.
- சுயநல ஆட்சியாளர்களை என்னவென்று சொல்ல?
ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. புயல் பாதிப்பில் சிக்கியவர்களுக்கு அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நிவாரணத் தொகை வழங்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், புயல் பாதிப்பு காலத்தில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து த.வெ.க. தலைவர் விஜய் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புயல், எப்போதும் பேரிடரையும் பெரும் பாதிப்பையும் மக்களுக்கு உண்டாக்கும் ஓர் இயற்கைச் சீற்றமே. அதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை. இருப்பினும் எவ்வளவு பெரிய புயல், இயற்கைப் பேரிடர் வந்தாலும் நம்மைக் காக்க, நாம் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த அரசு இருக்கிறது, ஆட்சியாளர்கள் உள்ளனர் என்ற நம்பிக்கையுடன் தான் மக்கள் இருப்பர்."
"ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோ, ஆட்சி பீடமோ, ஆபத்தான ஒவ்வொரு சூழலிலும் மக்களைக் கைவிடும் என்பதை அனுபவித்து உணர்கிறபோது, அம்மக்களின் தாங்கொணாத் துயரை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. நமக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள் எனப் பரிபூரணமாக நம்பி வாக்களித்து, அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்த்த மக்களைப் பாதுகாக்க, முறையான திட்டங்களைத் தீட்டவில்லை. குறைந்தபட்ச பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கூடச் செய்யாமல் அவர்களைக் கையறு நிலையில் பரிதவிக்க விடும் சுயநல ஆட்சியாளர்களை என்னவென்று சொல்ல?"
"மக்கள் துன்புறும் வேளையில் ஆட்சியாளர்களைக் குறிவைத்துக் குறைகூறி மட்டுமே அரசியல் செய்யும் கலாச்சாரத்தை நாம் பின்பற்றப் போவதில்லை என்கிற தீர்க்கமான முடிவை எடுத்திருக்கிறோம். ஆயினும் மக்கள் பக்கம் எப்போதும் நின்று அவர்களுக்காகக் குரல் கொடுத்து நிற்பதே நமது மக்களரசியல் நிலைப்பாடு என்பதால் இதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்."
"ஒவ்வொரு வருடமும் வரும் புயல் மற்றும் பேரிடரின் போது வருடாந்திர சம்பிரதாய நிகழ்வாக ஓரிரு நாட்கள் பாதிக்கப்பட்ட மக்கள் சிலரை ஆட்சியாளர்கள் சந்தித்துப் புகைப்படம் எடுத்துவிட்டு, தற்காலிக நிவாரணம் கொடுத்துவிட்டுப் போவதுதான் தான் தீர்வா? அந்த நேரத்துக்கான தீர்வைத் தந்துவிட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதும் மக்கள் துன்பத்தை ஒருநாள் சம்பிரதாயம் போல நினைத்து அன்றோடு மறந்துவிடுவதும் எந்த வகையில் நியாயம்?"
"மழை வெள்ளம் போன்ற பேரிடர்க் காலங்களில் மக்களுக்கான அடிப்படைப் பாதுகாப்புத் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய தார்மீகமான தலையாய கடமை, முதலில் ஆட்சியாளர்களுக்கே இருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்கள் இதை முழுவதுமாகவே மறந்துவிடுகின்றனர்."
"மக்களைப் பாதுகாப்பாக இருக்க வைப்பதற்கான நிரந்தரத் தீர்வை நோக்கி நகர்வது குறித்து அவர்கள் எள்ளளவும் சிந்திப்பதில்லை. காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்ப் பாதுகாப்புச் சார்ந்து எந்த ஒரு முன்னெடுப்பையும் எடுப்பதில்லை. வெறும் தற்காலிகக் கண்துடைப்பு அறிவிப்புகளைச் செய்வதில் மட்டுமே முனைப்புடன் இருக்கின்றனர். இவ்வாறு செய்வதையே ஆட்சியாளர்கள் வாடிக்கையாகக் கொண்டிருப்பது உண்மையிலேயே வேதனையைத் தருகிறது."
"எவ்வகையிலாவது மக்களை ஏமாற்றி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்றும் எல்லாவற்றையும் மக்கள் மறந்துவிடுவர் என்றும் மமதையில் இருந்த எவரும் மக்கள் மன்றத்தில் நீடித்து நிலைத்ததே இல்லை என்பதுதான் வரலாறு. எது நடந்தாலும் எப்போதும் போல எதிர்க் கட்சிகள் மீது ஏளனமாக விமர்சனம் வைத்து, காவி வர்ணம் பூசி, கபட நாடகமாடித் தப்பித்துக்கொள்ளலாம் என்று தற்போதைய ஆட்சியாளர்கள் எம் மக்களை நிரந்தர நிர்க்கதிக்கு ஆளாக்கி வருகின்றனர். இந்த அடாத முயற்சிகள் அனைத்தும் மக்கள் சக்திக்கு முன்பு தோற்றுப் போகும் என்பதை இனிவரும் காலங்கள் கண்டிப்பாக உணர்த்தவே செய்யும்."
"இந்த இயற்கைப் பேரிடர்க் காலத்தில், தமிழகத்திலும் புதுவையிலும் உள்ள நம் தமிழக வெற்றிக் கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்."
"கடந்த பல வருடங்களாக நாம் நற்பணி மன்றமாக, மக்கள் இயக்கமாக இருந்தபோது, இயன்ற அளவில் நம் மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்தோம். மக்களுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருந்தோம். நம் சேவை உணர்வால் அவர்களோடு உறவாகப் பழகியவர்கள் நாம்."
"என் நெஞ்சில் குடியிருக்கும் கழகத் தோழர்களாகிய நீங்கள், உண்மையான மக்கள் பணி செய்யும் நேரம் இதுவே என்பதை ஆட்சியாளர்களுக்கும் உணர்த்தி வருகிறீர்கள். அவ்வகையில் இந்தப் பேரிடர் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை, பாதிப்பிற்கு உள்ளான அனைத்து மாவட்டங்களிலும் நீங்கள் களத்தில் நின்று இரவு பகல் பாராமல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறீர்கள் என்பதை நான் நன்கறிவேன். மேலும் வீடு வீடாகச் சென்று குடிநீர், பால், பிஸ்கட், உணவு, ரொட்டி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளை வழங்கி வரும் உங்களின் அளப்பரிய பங்களிப்பைக் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்தேன்."
"பல மாவட்டங்களில் வெள்ள நீர் வடியவில்லை. மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்னமும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. இந்தச் சூழ்நிலையில், மேலும் சில மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தினந்தோறும் எச்சரிக்கை விடுத்து வருகிறது."
"எனவே நம் கழகத் தோழர்கள், தங்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்துகொண்ட பிறகே, பேரிடர்ப் பணிகள் மற்றும் உதவிகளைச் செய்ய வேண்டும். பாதிப்பிற்கு உள்ளான அனைத்து மாவட்டங்களிலும், அனைத்துப் பகுதிகளிலும் வெள்ள நீர் முழுவதுமாக வடியும் வரை, பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க வேண்டும். நம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நாம் அனைவரும் மக்களோடு மக்களாகக் கரம் கோத்து நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் உங்களைப் பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- ஆறுதல் கூறியும் நிவாரண பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.
- த.வெ.க. அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து நிவாரண பொருட்களை வழங்கினார்.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியும் நிவாரண பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் நிவாரண உதவிகளை வழங்கினார். ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட டி.பி. சத்திரம் பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சென்னை பனையூரில் அமைந்துள்ள த.வெ.க. அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து நிவாரண பொருட்களை விஜய் வழங்கினார்.
நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பில் வேஷ்டி, சட்டை, பெட்ஷீட், மளிகை சாமான்கள் என ஒரு குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் இடம்பெற்று இருந்தது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் வந்து நிவாரணம் வழங்காதது ஏன்? என்று நிவாரண உதவிகளை பெற்றுக் கொண்டவர்களிடம் விஜய் விளக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அப்போது, உங்கள் வீடுகளுக்கு வந்து நலத்திட்ட உதவிகளை நான் வழங்கி இருக்கலாம். ஆனால், உங்களுடன் இப்படி அமர்ந்து பேச முடியாது, அங்கு வந்தால் நெரிசல் ஏற்படும். உங்கள் அனைவரிடமும் சிரமம் இல்லாமல் பேச முடியாது. நேரம் செலவிட முடியாது. நேரில் வந்து நிவாரணம் வழங்கவில்லை என தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், என்று விஜய் தெரிவித்ததாக கூறப்படுகிறது.






