என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பவாரியா கொள்ளையர்களால் முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொல்லப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு.
- தண்டனை விவரம் வரும் 24ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவாரியா கொள்ளையர்களால் அதிமுக எம்எல்ஏ சுதர்சமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, பவாரியா கொள்ளையர்களால் முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் குற்றவாளிகள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மேலும், குற்றவாளிகள் மூவருக்கான தண்டனை விவரம் வரும் 24ம் தேதி அறிவிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2005ம் ஆண்டில் கும்மிடப்பூண்டி அதிமுக எம்எல்ஏ சுதர்சனம் வீட்டில் நுழைந்து அவரைக் கொன்று கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு ஜனவரி மாதம் .... தேதி அன்று தானாகுளத்தில் வீட்டின் கதவை உடைத்து எம்எல்ஏ சுதர்சனத்தை பவாரியா கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
சுதர்சனத்தை கொன்று அவரது மனைவி, மகன்களை தாக்கி 62 சவரவன் தங்க நகைகளை பவாரியா கொள்ளையர்கள் திருடி சென்றனர். சுதர்சனத்தை கொன்ற பவாரியா கொலையாளிகளை சுட்டுப்பிடிக்க அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
பிடிபட்ட 9 பேரில் 3 பெண்கள் ஜாமினில் தலைமறைவான நிலையில் 2 பேர் சிறையில் உயிரிழந்தனர். இதில், மீதமுள்ள 4 பேரில் மூன்று பேரான ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதர்சனத்தை கொன்று கொள்ளையடிக்கப்பட்ட வழக்கின் பின்னணியை வைத்து உருவானதே தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
- மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தில் மாநில அரசிடம்தான் குளறுபடி உள்ளது.
சேலம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டினால் காவிரி படுகை மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மெத்தனமாக உள்ளது.
மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள முதல்வர் ஸ்டாலின் இதுபற்றி பேச வேண்டும்.
அதிமுக ஆட்சியில் தான் கோவை மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் 2024ஆம் ஆண்டில் தான் விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசு அனுப்பி வைத்தது.
கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திமுக அரசு கவனக்குறைவாக அனுப்பியுள்ளது. திட்ட அறிக்கையை சமர்ப்பித்தபோது 2011 மக்கள்தொகையை திமுக அரசு குறிப்பிட்டது ஏன்? 2025ஆம் ஆண்டு மக்கள்தொகையை கணக்கிட்டு அனுப்பியிருந்தால் ஒப்புதல் கிடைத்திருக்குமே?
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தில் மாநில அரசிடம்தான் குளறுபடி உள்ளது. அதிமுக ஆட்சி அமைந்த உடன், கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னையில் மக்கள் சந்திப்பை நடத்த இடம் தேர்வு செய்துள்ளார்.
- விஜய் புதிய பாணியில் மீண்டும் அதிரடி பிரசாரம் செய்து மக்களின் ஆதரவை திரட்ட உள்ளார்.
வருகிற டிசம்பர் 4-ந்தேதி சேலத்தில் த.வெ.க. விஜயின் பிரசாரத்துக்கு போலீசார் அனுமதி மறுத்து உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளனர். அதில்,
விஜய் பிரசாரத்துக்கு முந்தைய நாள் 3-ந் தேதி கார்த்திகை தீபம் விழாவுக்காக திருவண்ணாமலைக்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் செல்வார்கள். அதே போல் டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனால் அன்றைய தினம் போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.
எனவே நீங்கள் கேட்கும் நாளில் அதாவது டிசம்பர் 4-ந்தேதி விஜய் பிரசார கூட்டத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என்றும் விஜயின் கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்றும் நீங்கள் உங்கள் தலைமையை தொடர்பு கொண்டு வேறு தேதியை முடிவு செய்து மீண்டும் அனுமதி கேட்டு மனு கொடுங்கள் என்றும் தெரிவித்து இருந்தனர். மேலும் இனி வரும் காலங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும் போது 4 வாரங்களுக்கு முன்பு அனுமதி கேட்டு மனு கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.
இதற்கிடையே சேலத்தில் விஜயின் தேர்தல் பிரசார கூட்டம் தள்ளிப் போவதால் அதற்கு முன்பு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த விஜய் முடிவு செய்தார்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் விஜயை சந்திக்க விரும்புவதாக தெரிவித்ததால் நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) மக்கள் சந்திப்பை நடத்த விஜய் திட்டமிட்டு உள்ளார். சென்னையில் இந்த மக்கள் சந்திப்பை நடத்த இடம் தேர்வு செய்துள்ளார்.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்வு நடக்கிறது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்களை விஜய் சந்திக்கிறார். இதன் மூலம் விஜய் புதிய பாணியில் மீண்டும் அதிரடி பிரசாரம் செய்து மக்களின் ஆதரவை திரட்ட உள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் பொதுக்கூட்டம் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் இன்னும் வெளியிடப்படாமல் கோர்ட்டு பரிசீலனையில் உள்ளது. இதனால் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி உள் அரங்கில் நடக்கிறது.
- த.வெ.க. நிர்வாகிகள் சீலநாயக்கன்பட்டி மைதானத்தை தேர்வு செய்து கொடுத்தனர்.
- போலீசார் திருகார்த்திகை பாதுகாப்பு பணியை காரணம்காட்டி அனுமதி கொடுக்க மறுத்து உள்ளனர்.
சேலம்:
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் தனது முதல் தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் தொடங்கினார். அதை தொடர்ந்து அரியலூர், மற்றும் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
தொடர்ந்து செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நாமக்கல், கரூரில் பிரசாரம் செய்தார். அப்போது கரூரில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த அசம்பாவிதம் காரணமாக விஜயின் பிரசார சுற்றுப்பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த சம்பவத்துக்கு பிறகு நடந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு விஜய் பேசினார். அப்போது நிர்வாகிகள், தொண்டர்கள் விஜய் மீண்டும் சேலத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதை விஜய் ஏற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் சேலத்தில் இருந்து விஜய் மீண்டும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கப்போவதாக தகவல் வெளியானது. இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இதற்காக தமிழக வெற்றிக்கழகத்தின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் தலைமையில் அனுமதி கேட்டு சேலம் போலீஸ் கமிஷனர் அனில்குமார்கிரியிடம் நேற்று கட்சி நிர்வாகிகள் மனு கொடுத்தனர். அந்த மனுவில், "அவர்கள் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் வருகிற டிசம்பர் 4-ந்தேதி சேலத்தில் பிரசாரம் செய்ய இருக்கிறார். அதற்காக சேலம் கோட்டை மைதானம், போஸ் மைதானம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள மைதானம் ஆகிய 3 இடங்கள் தேர்வு செய்து உள்ளோம். மதியம் 12 மணியில் இருந்து மாலை 4 மணிக்குள் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்று குறிப்பிட்டு இருந்தனர்.
இதையடுத்து போலீசார் 3 இடங்களுக்கு பதிலாக ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து கொடுங்கள் என்றனர். அதன்படி த.வெ.க. நிர்வாகிகள் சீலநாயக்கன்பட்டி மைதானத்தை தேர்வு செய்து கொடுத்தனர்.
இந்த நிலையில் வருகிற டிசம்பர் 4-ந்தேதி சேலத்தில் விஜயின் பிரசாரத்துக்கு போலீசார் அனுமதி மறுத்து உள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளனர்.
அதில், விஜய் பிரசாரத்துக்கு முந்தைய நாள் 3-ந் தேதி கார்த்திகை தீபம் விழாவுக்காக திருவண்ணாமலைக்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் செல்வார்கள். அதே போல் டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனால் அன்றைய தினம் போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.
எனவே நீங்கள் கேட்கும் நாளில் அதாவது டிசம்பர் 4-ந்தேதி விஜய் பிரசார கூட்டத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என்றும் விஜயின் கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்றும் நீங்கள் உங்கள் தலைமையை தொடர்பு கொண்டு வேறு தேதியை முடிவு செய்து மீண்டும் அனுமதி கேட்டு மனு கொடுங்கள் என்றும் தெரிவித்து இருந்தனர். மேலும் இனி வரும் காலங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும் போது 4 வாரங்களுக்கு முன்பு அனுமதி கேட்டு மனு கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.
இது குறித்து சேலம் மத்திய மாவட்ட தமிழக வெற்றிக்கழக செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
வருகிற டிசம்பர் 4-ந் தேதி சேலத்தில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தோம். ஆனால் போலீசார் திருகார்த்திகை பாதுகாப்பு பணியை காரணம்காட்டி அனுமதி கொடுக்க மறுத்து உள்ளனர்.
மேலும் வேறு ஒரு தேதியை தேர்வு செய்து மீண்டும் அனுமதி கேட்டு மனு கொடுக்க கூறியுள்ளனர். போலீசார் வழங்கிய பதில் கடிதத்தை தலைமைக்கு அனுப்பி வைத்து விட்டோம்.
அவர்கள் முடிவு செய்து வேறு ஒரு தேதியை அறிவிப்பார்கள். எனவே மீண்டும் நாளை அனுமதி கேட்டு போலீசில் மனு கொடுக்க உள்ளோம் என்றார்.
எனவே டிசம்பர் 2-வது வாரத்தில் விஜயின் பிரசாரம் சேலத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- புரட்சி வெடிக்கும் என பதிவிட்டு பின்னர் டெலிட் செய்திருந்தார் ஆதவ் அர்ஜூனா.
- ஆதவ் அர்ஜூனா மீது கலவரத்தை தூண்டுதல் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் பிரிவுகளில் வழக்கு.
தமிழக வெற்றிக் கழக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போராட்டம் வெடிக்கும் என எக்ஸ் தளத்தில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது.
கரூர் சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டிலும் இளைஞர்களின் புரட்சி வெடிக்கும் என பதிவிட்டு பின்னர் டெலிட் செய்திருந்தார் ஆதவ் அர்ஜூனா.
இதனால், ஆதவ் அர்ஜூனா மீது கலவரத்தை தூண்டுதல் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் பிரிவுகளில் பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது.
- வழிபாட்டு தலங்களில் நடைபெறும் மத ரீதியான கூட்டங்களுக்கு இது பொருந்தாது.
- நிகழ்ச்சி தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு அந்த இடத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் காரணமாக, தமிழக அரசு அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில், தமிழக அரசு பல்வேறு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது.
இந்நிலையில் அரசியல் பொதுக்கூட்டம், மக்கள் அதிகம் கூடும் பொதுக்கூட்டம், ஊர்வலம், ரோடு ஷோ, ஆர்ப்பாட்டம், போராட்டம், கலாச்சார மத நிகழ்விற்கு வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. அதில்,
* கூட்டத்தில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் கட்சிகளே பொறுப்பு.
* 5000 பேருக்கு மேல் கூடும் கூட்டங்களுக்கு இந்த விதிகள் பொருந்தும்.
* வழிபாட்டு தலங்களில் நடைபெறும் மத ரீதியான கூட்டங்களுக்கு இது பொருந்தாது.
* நிகழ்ச்சி தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு அந்த இடத்தில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
* நிகழ்ச்சியில் பொது, தனியார் சொத்துக்கள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே ஏற்க வேண்டும்.
* கூட்டத்தினரின் பாதுகாப்புக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பொறுப்பு.
* அனுமதித்த நேரத்தை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
* நிகழ்ச்சி அனுமதிக்கான விண்ணப்பத்தில் முதலுதவி, ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட மருத்துவ ஏற்பாடு விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
* திடீரென ஏற்பாடு செய்யக்கூடிய ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு ஆட்சியர், சென்னை மாநகர காவல் ஆணையர் முடிவெடுக்க அதிகாரம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருப்பூர் மாநகராட்சி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.
- சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை முறையாக மேற்கொள்ளாத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாநகராட்சி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை முறையாக மேற்கொள்ளாத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வரும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில், திருப்பூர் குமரன் சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறப்பட்டுள்ளது.
- AIIMS-உம் வராது, MetroRail-ஐயும் வரவிட மாட்டோம் என மதுரையை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு.
- பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கூடல்நகரில் கூடிய நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்.
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை புறக்கணித்தது என தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வரும் பா.ஜ.க. அரசை கண்டித்து நேற்று கோவையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இன்று மதுரையில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், மதுரையில் நடந்த மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் போராட்ட புகைப்படங்களை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
#AIIMS-உம் வராது, #MetroRail-ஐயும் வரவிட மாட்டோம் என மதுரையை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கூடல்நகரில் கூடிய நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்...
அனைத்து வழிகளிலும் போராட்டத்தை முன்னெடுத்து, தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராகத் திகழும் மாமதுரையின் வருங்கால வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மத்திய அரசு வேண்டும் என்றே தமிழகத்தை வஞ்சிப்பதாகவும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
- மத்திய அரசை கண்டித்தும், மதுரைக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
மதுரை:
சென்னைக்கு அடுத்தபடியாக கோவில் நகரம் என அழைக்கப்படும் மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.
அதன்படி மதுரை திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை 32 கி.மீட்டருக்கு மெட்ரோ வழித்தடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் திருமங்கலம் முதல் வசந்த நகர் வரை உயர்நிலை பாலமும், வசந்த நகர் முதல் தல்லாகுளம் பெருமாள் வரை 10 மீட்டர் ஆழத்தில் பூமிக்கடியிலும், அதன்பின் ஒத்தக்கடை வரை உயர்நிலை பாலம் கொண்ட வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதையடுத்து மெட்ரோ திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த முதற்கட்டமாக சென்னை மெட்ரோ நிர்வாகம் நிதி ஒதுக்கி, பணிகள் நடைபெற்று வந்தன. மேலும் இந்த திட்டத்திற்கு நிதியுதவி செய்ய விருப்பம் தெரிவித்து ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் அதிகாரிகள் மதுரை மற்றும் கோவையில் ஆய்வும் மேற்கொண்டனர்.
இந்த நிலையில் மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரெயில் திட்டங்களை மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் நிராகரித்து விட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதற்கிடையே கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை நிராகரித்ததற்கான காரணம் குறித்து மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், மதுரை, கோவை நகரங்களில் மக்கள் தொகை முதன்மையான காரணமாக கூறப்பட்டுள்ளது. மதுரையில் தற்போதைய பயண தேவையை ஆய்வு செய்ததில் அதிவிரைவு பேருந்து போக்குவரத்து போன்ற குறைந்த அளவிலான திட்டங்கள் மட்டுமே பொருத்தமானது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கோவையை பொறுத்தவரை போக்குவரத்து பயண நேரம், மெட்ரோ ரெயிலில் பயண நேரத்தை விட குறைவாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு விளக்கம் அளித்தாலும், இதை விட மக்கள் தொகை குறைந்த நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்பாட்டில் இருப்பதாகவும், மத்திய அரசு வேண்டும் என்றே தமிழகத்தை வஞ்சிப்பதாகவும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கான ஜி.எஸ்.டி. நிதி பகிர்வில் பாரபட்சம், மாணவர்களின் கல்வி நிதியை ஒதுக்க மறுப்பது, கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை புறக்கணித்தது என தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வரும் பா.ஜ.க. அரசை கண்டித்து நேற்று கோவையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரையில் இன்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தளபதி எம்.எல்.ஏ. (மதுரை மாநகர்), மணிமாறன் (மதுரை தெற்கு) மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசை கண்டித்தும், மதுரைக்கு மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- மீனவர்களுக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, இன்று காலை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 22-ஆம் தேதி வாக்கில் (நாளை) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24-ஆம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும்.
இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
23-ந்தேதி தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
24-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
25-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
22-மற்றும் 23-ந்திகளில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், ஏனைய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
24 மற்றும் 25-ந்தேதிகளில் தெற்கு, மத்திய அந்தமான் கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மகேஷ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- தமிழ்நாடு முதலமைச்சருக்கு என்றும் நன்றியுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய உறுப்பினர்களை தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். அதன்படி தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தின் தலைவராக கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியை சேர்ந்த ஏ.ஜே. ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மீனவர் நல வாரிய தலைவராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஏ. ஜே. ஸ்டாலின் இன்று நாகர்கோவில் வந்தார். அவருக்கு கன்னியாகுமரி மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வடசேரியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட திமுக கட்சி அலுவலகம் உள்ள கலைஞரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருக்கு குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மகேஷ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் பேசும்போது போது, தமிழகம் முழுவதும் உள்ள மீனவ கிராமங்களில் சென்று மீனவ நலவாரிய உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், மீனவ நல வாரிய திட்டத்தின் மூலம் மக்களுக்கு என்னென்ன நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் என்பதை மக்களிடம் எடுத்துரைத்து உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நடவடிக்கையில் மேற்கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்தார்.
2007ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் மீனவர் நல வாரியம் கொண்டு வந்ததால் தான் இந்த பதவி தனக்கு கிடைத்ததாகவும், தனக்கு இந்தப் பதவியை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு என்றும் நன்றியுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநகரச் செயலாளர் ஆனந்த், அயழக அணி மாநிலத் துணைச் செயலாளர் பாபு விதி பிரைட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
- கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
- வருகிற 23-ந்தேதி தஞ்சாவூரிலும், 24-ந்தேதி திருவாரூரிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சென்னை:
மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான தமிழ்நாட்டின் கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை.
கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகளை வஞ்சித்து வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், தமிழ் நாட்டின் கோரிக்கைகளை உடனடியாக மறுபரிசீலனை செய்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்திட வேண்டும் என வலியுறுத்தியும் வருகிற 23-ந்தேதி தஞ்சாவூரிலும், 24-ந்தேதி திருவாரூரிலும் காலை 10 மணியளவில் 'மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி' சார்பில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும்.
இவ்வாறு மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன.






