என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையை காட்டிலும் அந்த பெண்ணுக்கு கூடுதல் உயர் சிகிச்சை தேவைப்பட்டுள்ளது.
- ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நடந்த இந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்:
திருப்பூரில் இருந்து சித்தூருக்கு கடந்த 6-ந் தேதி ரெயிலில் பயணித்த 36 வயதுடைய 4 மாத கர்ப்பிணி பெண் பயணம் செய்தார்.
அப்போது ஹேமராஜ் என்ற கொடூரனால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ஓடும் ரெயிலில் இருந்து தள்ளி விடப்பட்டார்.
இதில் கர்ப்பிணி கை, கால் முறிவு ஏற்பட்டது. பலத்த படுகாயத்துடன் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்து 4 மாத சிசு நேற்று உயிரிழந்தது.
இதனை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவருக்கு உயர் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதால் ராணிப்பேட்டையில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு வயிற்றில் உயிரிழந்த சிசுவை அகற்றுவதற்கான தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் கூறியதாவது:-
தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையை காட்டிலும் அந்த பெண்ணுக்கு கூடுதல் உயர் சிகிச்சை தேவைப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுக்கு ஒவ்வொரு பிரச்சனையாக தொடர்ந்து உடலில் ஏற்படுவதால் சிறப்பு மருத்துவ வல்லுனர் குழுவினர் அப்பெண்ணை பரிசோதித்தனர்.
அவர்களின் ஆலோசனைக்கு பிறகு அவருக்கு உயர் சிகிச்சை தேவைப்படுகிறது என்பதாலும், பெண்ணின் நலன் கருதியும் தற்போது அரசு மருத்துவமனையில் இருந்து, ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவியையும் அரசு செய்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஓடும் ரெயிலில் பெண்ணிடம் நடந்த இந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரெயில் பயணம் பாதுகாப்பானது தானா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்த அச்சத்தை போக்கும் வகையில் ரெயில்வே போலீசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
- உலகில் 6 நாடுகள் மட்டுமே விண்வெளியில் சாதனை படைத்துள்ளது.
- குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர்:
விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ விண்வெளித்துறை துணை இயக்குனர் கிரகதுரை கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இஸ்ரோ அனுப்பும் அனைத்து ராக்கெட்களையும் ஆன்லைனில் பார்க்கும்படி ஒளிபரப்பு செய்து வருகிறோம். உலகில் 6 நாடுகள் மட்டுமே விண்வெளியில் சாதனை படைத்துள்ளது. அதில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. மருத்துவம், தொழில், கல்வி உள்பட எல்லா துறைகளிலும் ஆராய்ச்சி செய்து தரவுகளை திரட்ட வேண்டும். அதை ஆய்வு செய்து தீர்வு கொடுத்தால்தான் இந்தியா 2047-ல் வளர்ந்த நாடாக மாறும். இதை சாத்தியமாக்குவது மாணவர்கள் கையில் உள்ளது. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் நிறைய ஆராய்ச்சிகள் செய்ய வேண்டியுள்ளது.
முதற்கட்டமாக ஆளில்லா விண்கலத்தை அனுப்பி சோதனை செய்யப்பட உள்ளது. அதன்பின் மனிதனை அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொறியியல் பிரிவுகளில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த மாணவர்களுக்கு இஸ்ரோவில் வேலைவாய்ப்புகள் உள்ளன. பி.எஸ்சி., இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களுக்கு ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்கள் உள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளனர்.
- தமிழகத்தை சேர்ந்த 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
மண்டபம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நள்ளிரவில் சுமார் 20 விசைப்படகுகளை சேர்ந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு அருகே பாரம்பரிய இடத்தில் வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. இதனால் பதட்டம் அடைந்த ராமேசுவரம் மீனவர்கள் வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். இருந்த போதிலும் அதில் 2 படகுகளை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் சுற்றி வளைத்தனர். அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற படகுகளையும் விரட்டியடித்தனர்.
இது எங்கள் நாட்டு எல்லை, இந்த பகுதியில் மீன்பிடிக்க உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று கூறிய அவர்கள் எல்லை தாண்டியதாக ஜான் போஸ் மற்றும் சுதன் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர். அந்த படகுகளில் இருந்த ஜான் போஸ் (வயது 39), அந்தோணி இஸ்ரோஸ் (20), நிலாகரன் (44), நிகிதன் (16), ஜேசு பூங்காவனம் (42), அந்தோணி சந்தியா (19), கார்லோஸ் (21), நிஷாந்த் (38), டூவிஸ்டன் (21), அய்யாவு அந்தோணி டிமக் (34),
மற்றும் சுதன் என்பவரது படகில் இருந்த அருளானந்தம் (43), கெலஸ்டின் (55), அந்தோணி ஆரோன் (38) என மொத்தம் 14 மீனவர்களையும் சிறைபிடித்து அழைத்து சென்றனர். பின்னர் அவர்களை இரணத்தீவு கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தியதாகவும், எல்லைதாண்டி மீன் பிடித்ததாகவும் இலங்கை நீரியல் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ராமேசுவரத்தில் இருந்து கடந்த இரண்டு மாதங்களில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 70-க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர். அதிலும் கடந்த மாதம் 25-ந்தேதி ஒரே நாளில் 34 பேரை கைது செய்தனர். இதனை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த 34 பேரில் 32 பேரை இலங்கை அரசு விடுதலை செய்தது. ஆனால் அவர்களுக்கு பல லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த கைது நடவடிக்கை சக மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக மத்திய, மாநில அரசு ராமேசுவரம் மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி சிறைபிடித்து செல்லும் இலங்கை கடற்படையினர் மீனவர்களுக்கு சொந்தமான பல லட்சம் மதிப்பிலான படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை துறைமுகத்தில் நிறுத்தியுள்ளனர்.
இதில் ஏராளமான படகுகள் இயக்கப்படாமல் பழுதான நிலையில் உள்ளது. மேலும் அந்த படகுகளை தங்களது வாழ்வாதாரம் கருதி விடுவிக்க வேண்டும் என்றும் மீனவர்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு இலங்கை அரசு செவி சாய்க்கவில்லை. அதற்கு மாறாக தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 2022 டிசம்பர் மாதம் 29-ந்தேதி எல்லைதாண்டியதாக கைதான 4 மீனவர்கள் சென்ற விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த படகு, அதில் இருந்த வலைகள், ஜி.பி.எஸ். கருவி, எந்திரங்கள், நங்கூரம் உள்ளிட்ட உபகரணங்களை ரூ.20 லட்சத்து 42 ஆயிரத்திற்கு இலங்கை அரசு நேற்று ஏலம் விட்டுள்ளது. இந்த தகவல் தமிழக மீனவர்கள் தலையில் இடியாய் இறங்கியுள்ளது.
- வகுப்புவாத, பிரிவினைவாத சிருலைவு சக்திகளுக்கு பாடம் கற்பிக்கின்ற வகையில் இந்த வெற்றி அமைந்திருக்கிறது.
- தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினருக்கும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி பெற உள்ள வெற்றிக்கு அச்சாரம் இது என்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிட்ட, தி.மு. கழசு வேட்பாளர் திரு. வி.சி. சந்திரகுமார், தன்னை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளரை விட தொன்னூறாயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றிருக்கிறார்.
இது தமிழகத்தில் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெறுகிற ஆட்சியின் சாதனைகளுக்கு கிடைத்த பரிசாகும். வகுப்புவாத, பிரிவினைவாத சிருலைவு சக்திகளுக்கு பாடம் கற்பிக்கின்ற வகையில் இந்த வெற்றி அமைந்திருக்கிறது.
தமிழகத்தில் சமீபகாலமாக மதநல்லிணக்கத்தையும், சமூகநீதியையும் சீர்குலைக்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிற பிற்போக்கு சக்திகளுக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவு உரிய பாடத்தை வழங்கியிருக்கிறது. வெற்றி பெற்றுள்ள தி.மு. கழக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் அவர்களுக்கும், வெற்றிக்காக பாடுபட்ட தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினருக்கும் நனர்நியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பெற்ற வெற்றி 2026 சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி பெறப் போகின்ற வெற்றிக்கு அச்சாரமாக அமைய இருக்கிறது. இத்தகைய வெற்றியை பெறுவதற்கு காரணமாக இருந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திமுக அபார வெற்றி பெற்றதற்கு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி வாழ்த்து.
- திராவிட மாடல் அரசுக்கு கிடைத்துள்ள மற்றொரு 'பெரியார் விருது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றதற்கு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், பெரியாரை சிறுமைப்படுத்துபவர்களை மக்கள் தண்டித்துள்ளனர் என்றும் நாதகவை அவர் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தமிமுன் அன்சாரி கூறுகையில், " பெரியாருடைய மண்ணில் அவரை சிறுமைப்படுத்துபவர்களை ஒரு எல்லைக்கோட்டில் வைத்து மக்கள் தண்டனை கொடுத்திருக்கிறார்கள்.
பெரியார் பிறந்து வளர்ந்த மண்ணில் திராவிட மாடல் அரசுக்கு கிடைத்துள்ள மற்றொரு 'பெரியார் விருதாக' இதை கருதுகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- மத்திய பாஜகவின் ஆஸ்தான அடிமை இபிஎஸ்-ஆல் கூட ஆதரிக்க முடியாத அளவுக்கு குப்பை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் நிர்மலா சீதாராமன்.
- தந்தை பெரியாரின் மண்ணில் பெற்றிருக்கும் மாபெரும் இந்த வெற்றியை, 2026-ல் தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கச் செய்வோம்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி உரையாற்றிானர்.
அப்போது அவர் கூறியதாவது:-
மிக மிக முக்கியமான நாளில் இந்த கண்டன பொதுக்கூட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது.
கிட்டத்தட்ட 1 லட்சத்து 15 ஆயிரம் வாக்குகள் பெற்று, 90 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சுந்தர குமார் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார்.
அந்த சூழலில் வெற்றியோடு இந்த கூட்டத்தை நாம் நடத்திக் கொண்டிருக்கின்றோம். மத்திய அரசின் பட்ஜெட் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் எந்த அளவுக்கு ஒரு பயனற்ற பழிவாங்குகின்ற ஒரு யூஸ்லெஸ் பட்ஜெட்.
அப்படி ஒரு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் கிட்டத்தட்ட 1 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு பட்ஜெட்டை வாசித்திருக்கிறார்கள்.
அதில், தமிழ்நாட்டிற்கென ஒரு திட்டத்தை கூட அவர் அறிவிக்கவில்லை. திட்டம் மட்டும் இல்லை தமிழ்நாடு என்கிற வார்த்தையை ஒரு முறை கூட அவர் பயன்படுத்தவில்லை.
அந்த அளவிற்கு மத்திய அரசுக்கு தமிழ்நாடு மீது பாசம். ஆனால், இன்னும் 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கின்ற பீகார் மாநிலத்திற்கு பட்ஜெட்டில் அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறார்கள்.
பிற மாநிலங்களுக்கு எந்த நிதியும் ஒதுக்கக்கூடாது என்று கூறவில்லை. ஆனால், அங்கு தேர்தல் வர இருக்கின்ற ஒரே காரணத்திற்காக அதை மனதில் வைத்துக் கொண்டு அம்மாநிலத்திற்கு நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். பீகார் மாநிலத்திற்கு மட்டும் பல்லாயிர கோடி கணக்கில் நிதியை ஒதுக்கி இருக்கிறார்கள்.
இது பீகார் மாநிலத்தின் மக்கள் நலனுக்காக போட்ட பட்ஜெட் மாதிரி தெரியவில்லை. பீகார் மாநிலத்தில் தன் கூட இருக்கிற நிதிஷ் குமாரின் கூட்டணியை உடைத்துவிட்டு அவரின் காலை வாரிவிட்டு அங்கு பாஜக ஆட்சி அமைக்கும் என்கிற ஒரே திட்டத்தோடு போட்டிற்கிற பட்ஜெட் இது.
ஏன் என்றால் பாஜகவின் வரலாறு அப்படி.
மத்திய பாஜகவின் ஆஸ்தான அடிமை இபிஎஸ்-ஆல் கூட ஆதரிக்க முடியாத அளவுக்கு குப்பை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் நிர்மலா சீதாராமன்.
ஈரோடு கிழக்கில் பெற்றிருக்கும் மகத்தான வெற்றி, தமிழ்நாட்டு மக்கள் திராவிட மாடல் அரசின் மீதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதும் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை உணர்த்துகிறது.
தந்தை பெரியாரின் மண்ணில் பெற்றிருக்கும் மாபெரும் இந்த வெற்றியை, 2026-ல் தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கச் செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்பதால் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை.
- தமிழகத்திற்கு நீங்கள் நிதி அளிக்காமல் இருக்கலாம், நாங்கள் நீதியை அடையாமல் விடமாட்டோம்.
சென்னை ஆவடியில் மத்திய அரசின் பட்ஜெட் அறிக்கையை கண்டித்து திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திமுக சார்பில் நடத்தப்படும் கண்டன பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-
தமிழக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்பதால் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. தமிழகத்திற்கு நீங்கள் நிதி அளிக்காமல் இருக்கலாம், நாங்கள் நீதியை அடையாமல் விடமாட்டோம்.
தமிழகத்திற்கு பல நிறுவனங்கள் மற்ற மாநிலம் செல்வதாக ஆளுநர் எவ்வாறு கூறுகிறார் ? நம்மிடம் உளள நிறுவனங்கள் மற்ற மாநிலங்களு்கு செல்ல வேண்டும் என்பது தான் ஆளுநரின் ஆசை.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் பாராட்டு தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை. நகர்ப்புற வளர்ச்சியில் இந்தியாவிற்கே சென்னை தான் முன்னுதாரணம் என பாஜக மூத்த தலைவரே கூறியுள்ளார்.
ஆளுநர் ரவியும், பாஜக தலைவர் அண்ணாமலையும் தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும். ஆர்.என்.ரவியும், அண்ணாமலையும் பதவியில் இருந்தால் தான் நமக்கு அவர்களே பிரச்சாரம் செய்வார்கள்.
ஆன்மிகம் வேறு அரசியல் வேறு என்று பகுத்தறிந்து பார்ப்பதே தமிழ்நாடு. மாநிலத்தின் அமைதியை கெடுக்க விரும்பினால் ஏமாந்து போவீர்கள், திருந்துங்கள், அல்லது திருத்தப்படுவீர்கள்.
மத்திய அரசின் உரையை ஜனாதிபதி வாசிப்பதை போல் மாநில அரசின் உரையை ஆளுநர் வாசிப்பதே மரபு. குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது மாநில அரசின் உரையை பேரவையில் வாசித்தார் காங்கிரஸ் அரசு நியமித்த ஆளுநர்.
உ.பி கும்பமேளாவில் 40 ரேப் பலியான நிலையில் 30 பேர் பலி என கணக்கு காட்டுகிறது பாஜக அரசு. கும்பமேளாவில் நடந்ததை நியாயப்படுத்தி பேசுகிறார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்பதால் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை.
- தமிழகத்திற்கு நீங்கள் நிதி அளிக்காமல் இருக்கலாம், நாங்கள் நீதியை அடையாமல் விடமாட்டோம்.
சென்னை ஆவடியில் மத்திய அரசின் பட்ஜெட் அறிக்கையை கண்டித்து திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திமுக சார்பில் நடத்தப்படும் கண்டன பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நம்மை எதிர்த்து போட்டியிட்டவர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தக்கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்காக அனைவரும் ஒன்று கூடியுள்ளோம். தமிழ்நாட்டு மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன்.
தமிழ்நாட்டை நாட்டின் முதல் மாநிலமாக வளர்த்தெடுத்து வருகிறோம். ரூ.10 லட்சம் கோடிக்கு அதிகமாக தனியார் முதலீடுகள் வருவதை உறுதி செய்துள்ளோம்.
பொருளாதார குறியீடுகளில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
வறுமை இல்லாத பட்டினி சாவு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மகளிர் உரிமைத் தொகை, தோழி விடுதி, நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
தமிழ்நாடு அமைதியான பாதுகாப்பான மாநிலமாக உள்ளதால் தமிழகத்தில் பெண்கள் வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
மதவாத அரசியல் நடத்தி மக்களை ஒரே மயக்கத்தில் வைத்து அரசியல் ரீதியாக லாபம் அடையலாம் என பாஜக நினைக்கிறது.
வளர்ச்சிக்கான நலத்திட்டங்களை செய்ய வேண்டும் என்ற நினைப்பே மத்திய அரசுக்கு வராது.
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு மட்டும் அல்ல ஒட்டுமொத்த மாநிலங்களுக்கும் ஒன்றுமே இல்லை. பேரு தான் இந்தியாவுக்கான பட்ஜெட், ஆனால் உள்ளே எந்த திட்டங்களும் இல்லை.
பட்ஜெட்டில் திருக்குறளை கூறினால் போதும் தமிழகத்தை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கிறார் மத்திய நிதி அமைச்சர்.
140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 2 விழுக்காட்டினருக்கும் மட்டுமே வரிச்சலுகை.
பீகாருக்கோ, ஆந்திராவுக்கோ நிதி ஒதுக்குவதில் பிரச்சினை இல்லை. தமிழகத்தை புறக்கணிப்பது ஏன் என்பது தான் கேள்வி.
கடந்த பட்ஜெட்டில் ஆந்திரா ஆந்திரா என கூறிய நிதியமைச்சர் இந்த பட்ஜெட்டில் பீகார் பீகார் என கூறினார்.
பட்ஜெட்டில் நாடு என்றால் வெறும் மண் அல்ல, மக்கள் என்ற தெலுங்கு மொழி கவிதையை நிர்மலா சீதாராமன் மேற்கோள்காட்டினார்.
சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால் மத்திய பட்ஜெட்டில் பீகார் பெயர் 6 முறை வந்தது. மதுரை எய்ம்ஸ், புதிய ரெயில் திட்டம், குடிநீர், வீடு என மத்திய அரசு எந்த திட்டத்திற்கும் நிதி ஒதுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்பதால் சவுக்கடி கொடுத்துள்ளனர்.
- ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்பியதால் டெல்லியில் பாஜக வென்றுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கிருஷ்ணகிரியில் 3 ஆசிரியர்கள் இணைந்து மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்தியால் அதிர்ச்சி அடைந்தேன்.
தமிழகத்தில் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை என்பது தொடர் கதையாகி வருகிறது.
வேலூரில் ஓடும் ரெயிலில் பாலியல் வன்கொடுமை செய்து பெண் தள்ளிவிடப்பட்டதில் 4 மாத கரு சிதைவு செய்தியால் வேதனை அடைந்தேன்.
காவல்துறையில் உயர்பதவியில் உள்ள ஏடிஜிபி உயிருக்கு ஆபத்து என கூறுவது மிகுந்த அச்சத்தை தருகிறது.
சிவகங்கையில் காவல் நிலையத்திலேயே பெண் எஸ்.ஐ தாக்கப்படுகிறார்.
தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பற்ற நிலை என்றால் சாதாரண மக்களுக்கு எந்த நிலை இருக்கும்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 8 கொலைகள் நடந்துள்ளது என்பதே திமுகவின் மோசமான ஆட்சிக்கு சான்று.
ஆட்சி மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்பியதால் டெல்லியில் பாஜக வென்றுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களத்தில் யாரும் இல்லாததால் போலி வெற்றியடைந்துள்ளது. நெல்லையில் சென்று அல்வா சாப்பிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு அல்வா கொடுத்துவிட்டார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது அல்வா கொடுத்துவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தில் எந்த திட்டத்தையும் நிறைவேற்றாமல், திமுக அரசு கடன் வாங்குவதற்கான அவசியம் என்ன ?
2020- 21ல் அதிமுக ஆட்சியில் வந்த வருவாயைவிட தற்போது ரூ.1.10 லட்சம் கோடி வருவாய் வருகிறது.
இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்பதால் சவுக்கடி கொடுத்துள்ளனர். டெல்லி தேர்தல் மூலம் இந்தியா கூட்டணி இருக்கிறதா இல்லையா என்கிற சந்தேகம் எழும்புகிறது.
இந்தியா கூட்டணி எப்படி ஒற்றுமையாக இருந்து செயலாற்ற முடியும்.
டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவை பார்க்கும்போது காங்கிரஸ் கட்சி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பலமாக கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கும். அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு என செயல்படுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தவெக தலைவர் விஜயை பற்றி தற்போது கருத்து சொல்ல எதுவும் இல்லை.
- தவெகவுடன் கூட்டணி குறித்து, தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும்.
அதிமுக - தவெக கூட்டணி குறித்த கேள்விக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தவெக தலைவர் விஜய் தேர்தலில் போட்டியிட்டு இன்னும் தனது பலத்தை நிரூபிக்கவில்லை. தவெக தலைவர் விஜயை பற்றி தற்போது கருத்து சொல்ல எதுவும் இல்லை.
வாய்ப்பு கிடைத்தால் அவர் எப்படி இருப்பார் என்பது சொல்ல முடியாது.
தவெகவுடன் கூட்டணி குறித்து, தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும்.
இ்வவாறு அவர் கூறினார்.
- தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
- வள்ளலார் நினைவு தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.
சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்தி கூறியிருப்பதாவது:-
வருகிற 11-ந் தேதி (செவ்வாய் கிழமை) அன்று வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 2511(a) ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் உள்பட அனைத்து பார்களும் கண்டிப்பாக மூடப்பட்டு 11-ந் தேதி (செவ்வாய் கிழமை) அன்று வள்ளலார் நினைவு தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது.

தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- டெபாசிட் பெற பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்குகள் பெற வேண்டும்.
- சீதாலட்சுமி டெபாசிட் இழக்காமல் இருக்க 25776 வாக்குகள் பெற வேண்டும். ஆனால் 23,872 வாக்குகளே பெற்றுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற்றது. இதில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மொத்தம் உள்ள 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்களில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 657 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.
இந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தம் 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் திமுக வேட்பாளர் சந்திரகுமார் அதிக வாக்குகள் பெற்றார். இதனால் தொடர்ந்து அதிக வாக்குகள் முன்னிலை பெற்று வந்தார்.
மாலை 4.45 மணியளவில் கடைசி சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சந்திரகுமார் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 158 வாக்குள் பெற்று வெற்றி பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை விட 93,286 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 23,872 வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளார்.
தேர்தல் விதிப்படி ஒரு வேட்பாளர் பதிவான மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகள் பெற்றால் வேட்பு மனுதாக்கல் செய்தபோது அளித்த டெபாசிட் பணம் திருப்பி வழங்கப்படும். இல்லை என்றால் டெபாசிட்டை இழப்பார்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில 1,54,657 வாக்குகள் பதிவாகியிருந்தது. இதனால் டெபாசிட் பெற வேண்டுமென்றால் 25776 வாக்குகள் பெற வேண்டும். ஆனால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 23872 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதனால் சுமார் 1904 வாக்குகளில் டெபாசிட்டை இழந்துள்ளார்.






