என் மலர்
நீங்கள் தேடியது "திருக்குறள்"
- திருக்குறளை குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் உள்வாங்கிடும் வகையில் குறளிசைக்காவியம்.
- குறளிசைக்காவியம் எல்லோர் உள்ளங்களில் நிலைபெற்றிட வேண்டும்.
திருக்குறளை இசை வடிவில் மாற்றம் செய்து குறளிசைக் காவியம் என்ற பெயரில் உருவாக்கியுள்ள இசைக்கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினி ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பபதாவது:-
குறளிசைக்காவியம் படைத்துள்ள லிடியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினிக்கு வாழ்த்துகள்;
திருக்குறளை குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் உள்வாங்கிடும் வகையில் குறளிசைக்காவியம்"
இசையில் தோய்ந்து, பல திறமைமிக்க குரல்களில் ஒலித்திடும் குறளமுதத்தை அனைவரும் கேட்க வேண்டும்; குறளிசைக்காவியம் எல்லோர் உள்ளங்களில் நிலைபெற்றிட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழ்நாட்டிலிருந்து ஓர் இந்தியனாக எழுதுகிறேன்...
- தாங்கள் காலமெல்லாம் போற்றிவரும் திருக்குறள் இனம் மொழி மதம் நாடுகடந்த உலகத்தின் அசைக்கமுடியாத அறநூல்...
சென்னை:
கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மாண்புமிகு
இந்தியப் பிரதமர் அவர்களே!
தங்களின்
விடுதலைத் திருநாள் பேருரைக்கு
மக்கள் கருத்துக்கு அழைப்புவிடுத்த
தங்கள் மாண்புக்கு
என் ஜனநாயக வணக்கம்
தமிழ்நாட்டிலிருந்து
ஓர் இந்தியனாக எழுதுகிறேன்
தாங்கள்
காலமெல்லாம் போற்றிவரும்
திருக்குறள்
இனம் மொழி மதம் நாடுகடந்த
உலகத்தின் அசைக்கமுடியாத
அறநூல்
மனிதம் என்ற
ஒற்றைக் குறிக்கோளை
உயர்த்திப் பிடிப்பது
அதனை
இந்தியாவின் தேசிய நூலாக
அறிவிக்க வேண்டும் என்பது
தமிழர்களின் நீண்ட கனவு
மற்றும்
நிறைவேறாத கோரிக்கை
இந்தியாவின்
79ஆம் விடுதலைத் திருநாள் பேருரையில்
திருக்குறள்
இந்தியாவின் தேசிய நூலாக
அறிவிக்கப்படும் என்ற நல்லறிவிப்பை
வெளியிட வேண்டுகிறோம்
தாங்கள்
கேட்டுக்கொண்ட வண்ணம்
நமோ செயலியிலும்
இதனைப் பதிவிடவிருக்கிறோம்
இது
உலகப் பண்பாட்டுக்கு
இந்தியா கொடுக்கும் கொடை
என்று கருதப்படும்;
ஆவனசெய்ய வேண்டுகிறோம்
ஆகஸ்ட் 15 அன்று
தொலைக்காட்சி முன்னால்
ஆவலோடு காத்திருப்போம் என்று கூறியுள்ளார்.
- யாரோ ஒரு கற்பனைத் திருவள்ளுவர் விற்பனைக் குறளை எழுதியிருக்கிறார்
- அந்தப் போலித் திருவள்ளுவருக்கு வேண்டுமானால் காவியடித்துக்கொள்ளுங்கள்
சிறந்த மருத்துவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கிய விருதில் போலியான திருக்குறள் பொறிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஜூலை 13இல்
'வள்ளுவர் மறை
வைரமுத்து உரை' நூலை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வெளியிட்ட அதே நாளில்
ஆளுநர் மாளிகையில்
ஒரு விழா
நடந்ததாய்க் கேள்விப்பட்டேன்
மருத்துவர்களுக்கு
வழங்கப்பட்ட
நினைவுப் பரிசில்
944ஆம் திருக்குறள் என்று
அச்சடிக்கப்பட்ட வாசகத்தில்
இல்லாத குறளை
யாரோ எழுதியிருக்கிறார்கள்
அப்படி ஒரு குறளே இல்லை;
எண்ணும் தவறு
யாரோ ஒரு
கற்பனைத் திருவள்ளுவர்
விற்பனைக் குறளை
எழுதியிருக்கிறார்
இது எங்ஙனம் நிகழ்ந்தது?
ராஜ்பவனில்
ஒரு திருவள்ளுவர்
தங்கியுள்ளார் போலும்
அந்தப்
போலித் திருவள்ளுவருக்கு
வேண்டுமானால்
காவியடித்துக்கொள்ளுங்கள்
எங்கள்
திருவள்ளுவரை விட்டுவிடுங்கள்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆளுநர், திருக்குறளை சரி பார்க்காமல் நினைவு பரிசு வழங்கியது மிகுந்த வேதனையளிக்கிறது.
- தமிழ்நாட்டு மக்களிடம் விளக்கம் அளித்து, தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும்.
சிறந்த மருத்துவர்களுக்கு ஆளுநர் வழங்கிய விருதில் போலியான திருக்குறள் பொறிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடந்த13ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் மருத்துவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி திருவள்ளுவர் எழுதாத ஒரு குறளை உருவாக்கி, அதை நினைவு பரிசில் அச்சிட்டு வழங்கிய விவகாரம் தமிழ்நாட்டின் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
திருவள்ளுவருக்கு காவி அணிவதில் ஆர்வமுள்ள ஆளுநர், திருக்குறளை சரி பார்க்காமல் நினைவு பரிசு வழங்கியது மிகுந்த வேதனையளிக்கிறது. ஒரு குறளில் தவறு வந்தால் எழுத்துப் பிழை, வார்த்தை பிழை வரலாம். ஆனால், ஒரு முழு திருக்குறளையும் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் எழுதியிருப்பது திருக்குறளில் கலப்படம் செய்யும் நோக்கமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
ஆளுநரின் மாண்புகளை மீறி, இதுபோன்று திருக்குறளில் கலப்படம் செய்வது ஏற்றுக்கொள்ளமுடியாத செயல். ஆளுநர் அவர்கள் இவ்விஷயம் குறித்து தமிழ்நாட்டு மக்களிடம் விளக்கம் அளித்து, தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- நல்வழியை சொல்லக்கூடிய உலக இலக்கியமாக உயர்ந்து நிற்கிறது.
- திருக்குறளில் வெளிப்படாத மறைபொருள் இன்னும் நிறைய இருக்கிறது.
சென்னை:
சென்னை காமராஜர் அரங்கத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய ''வள்ளுவர் மறை வைரமுத்து உரை'' நூல் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நூலினை வெளியிட்டார். இந்த விழாவில் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
திருக்குறள் இரண்டு அடிதான்; ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, அதற்கு புதுப்புது பொருள்கள் சொல்லி, உலக மக்கள் எல்லோருக்கும் புதுவழியை நல்வழியை சொல்லக்கூடிய உலக இலக்கியமாக உயர்ந்து நிற்கிறது.
இந்தப் புத்தகத்தின் முன்னுரையில், "திராவிடப் பண்பாட்டை ஆரியப் பண்பாடு நகர்த்தவோ, தகர்க்கவோ முனைந்த காலகட்டத்தின் விளிம்பில் தமிழ் மரபு காக்கும் தனிப்பெரும் அரணாக வள்ளுவம் எழுந்தது"என்று சொல்லி, இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றை தன்னுடைய சொற்களில் எடுத்துச் சொல்லிவிட்டார். திருக்குறள் தமிழில் எழுதப்பட்டு இருந்தாலும், இது தமிழர்களான நமக்கு மட்டும் சொந்தமான நூல் கிடையாது.
திருக்குறளில் வெளிப்படாத மறைபொருள் இன்னும் நிறைய இருக்கிறது என ஏராளமான அறிஞர்கள் தங்களின் அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்தி உரை எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஈராயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வரிகளுக்கான தேவை இன்றைக்கும் இருக்கிறது.
காலங்கள் கடந்து வாழும் வள்ளுவர் மறையை – இந்திய நாட்டின் தேசிய நூலாக அறிவிக்கும் முயற்சியில் நாம் இன்னும் அதிகமாக கவனம் செலுத்தியாக வேண்டும்.
உலக மக்கள் எல்லோருக்கும் புது வழியை, நல் வழியை செல்லக் கூடிய உலக இலக்கியமாக திருக்குறள் உயர்ந்து நிற்கிறது. திருக்குறள் தமிழில் எழுதப்பட்டிருந்தாலும் நமக்கு மட்டுமல்ல, அனைவருக்குமான நூல்.
மனிதத்திற்கு வள்ளுவத்தை பரப்புவதோடு, எதிரான கருத்தியல் வண்ணங்களை அவர் மேல் பூச முயற்சிக்கும் அடாவடித்தனத்தை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் எதிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.
- கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதி இருக்கிறார்.
- வள்ளுவர் மறை வைரமுத்து உரை என்ற நூலை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடவுள்ளார்
கவிஞர் வைரமுத்து 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் திருக்குறளுக்கு உரை எழுதி இருக்கிறார். இந்த நூலை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடவுள்ளார்
இந்நிலையில், தன் பிறந்தநாளை ஒட்டி, தான் எழுதிய நூலை கலைஞர் நினைவிடத்தில் வைத்து கவிஞர் வைரமுத்து மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பான வீடியோவை வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில்,
முத்தமிழறிஞரே!
முதல் தமிழாசானே!
'வள்ளுவர் மறை
வைரமுத்து உரை' நூலை
உங்கள்
நினைவிடம் சேர்க்கிறேன்;
நெஞ்சு நிறைகிறேன்
அப்பாவின் சட்டையை
அணிந்துகொள்ள ஆசைப்படும்
குழந்தையைப்போல
நீங்கள் உரைஎழுதிய குறளுக்கு
நானும் எழுதியிருக்கிறேன்
உரையாசிரியர் பட்டியலில்
சேர்வதைவிட
உங்கள் வரிசையில் சேர்வதில்
உள்ளம் கசிகிறேன்
வணங்குகிறேன்;
என் பிறந்தநாளில்
வாழ்த்துங்கள் என்னை
என்று பதிவிட்டுள்ளார்.
- உலகத் தமிழர் கண்களுக்கு முதன்முதலாய் முகப்போவியத்தை அறிமுகம் செய்கிறேன்.
- ஓவியம் வரைந்தவர் பெருங்கலைஞர் ஏ.பி.ஸ்ரீதர்.
கவிஞர் வைரமுத்து 'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் திருக்குறளுக்கு உரை எழுதி இருக்கிறார். வரும் ஜூலை 13-ந் தேதி இந்த நூலை வெளியிட இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று அந்தப் புத்தகத்தின் முகப்போவியத்தை கவிஞர் வைரமுத்து வெளியிட்டு இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,
உலகத் தமிழ் உறவுகளே!
வணக்கம்.
வள்ளுவர் மறை வைரமுத்து உரை
ஜூலை 13-ல் வெளியாகிறது.
பன்னிரெண்டு வயதில் நான் கண்ட கனவு 72 வயதில் நனவாகிறது.
உலகத் தமிழர் கண்களுக்கு முதன்முதலாய் முகப்போவியத்தை அறிமுகம் செய்கிறேன்.
ஓவியத்தில் ஐயன் வள்ளுவரையே மையப்படுத்தி இருக்கிறேன். தமிழர்கள் காலங்காலமாக பெற்ற வெற்றி உட்காரும் நெற்றி, சூரியனை வெட்டி ஒட்டி வைத்த கண்.
இந்தியாவின் தெற்கை போல் கூரிய நாசி,
ஒரு வனாந்தரத்தின் ரகசியம் பேசும் மீசை,
முன்தோன்றிய மூத்த குடியின் தொன்மை சொல்லும் கல் உருவம் இவற்றின் தொகுப்போவியமாக வந்திருக்கிறது முகப்போவியம்.
ஓவியம் வரைந்தவர் பெருங்கலைஞர் ஏ.பி.ஸ்ரீதர். முதலில் ஓவியம் படைக்கிறேன். ஜூலை 13-ல் வள்ளுவர் காவியம் படைக்கிறேன். இதோ நீங்கள் முத்தமிட்டு மகிழ முகப்போவியம் என்று தெரிவித்துள்ளார்.
- திருக்குறள் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.
பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை 'காமராஜ்' என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை " Welcome Back Gandhi " என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த 'ரமணா கம்யூனிகேஷன்ஸ்' நிறுவனம், தற்போது திருக்குறளை வைத்து மிகப் பிரம்மாண்டமாகத் 'திருக்குறள்' என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தை இயக்குநர் A.J.பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
இம்மாதம் 27 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
எனக்கு முன்னர் பேசிய அனைவரும் திருக்குறளை பற்றியும், திருவள்ளுவரை பற்றியும் மிக ஆழமாக நுட்பமாக பல்வேறு கருத்துக்களை நம் முன்னால் எடுத்து வைத்திருக்கிறார்கள்.
இயக்குநர் அவர்கள் ஏற்கனவே இரண்டு படங்களை தயாரித்து, இயக்கி வெளியிட்டிருக்கிறார். ஒரு படத்தின் பெயர் காமராஜ், இன்னொரு படத்தின் பெயர் வெல்கம் பேக் காந்தி, என்று இரண்டு மாமனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக தயாரித்த பெருமைக்குரியவர்.
இந்த திரைப்படத்திற்கு ஒரு மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து பெயர் சூட்டி இருக்கிறார். காமராஜ், காந்தி என்று பெயர் வைத்தவர், இந்த திரைப்படத்திற்கு திருவள்ளுவர் என்று பெயர் வைத்திருக்கலாம். ஏன் அப்படி வைக்கவில்லை என்று நான் யோசித்துப் பார்த்தேன். இதற்கு திருக்குறள் என்று அவர் பெயர் சூட்டி இருக்கிறார்.
கருத்தியலுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்கிற பார்வை அவரிடத்தில் மேலோங்கி இருப்பதாக நான் பார்க்கிறேன்.
திருவள்ளுவரை விடவும் அவர் முன்வைத்த வாழ்வியல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவே, திருக்குறள் என்றே இதற்கு பெயர் வைப்போம் என அவர் முடிவெடுத்திருக்கலாம் என்று நான் நம்புகிறேன்.
இந்த பார்வை பாராட்டுதலுக்குரியது. இந்த சிந்தனை போற்றுதலுக்குரியது. தனி நபரை முன்னிறுத்துவதை விட, அவர் சொன்ன கருத்தியலை, முன்னிறுத்த வேண்டும், உயர்த்தி பிடிக்க வேண்டும், வெகு மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும், என்கிற பார்வை முக்கியம்.
நம் சமகாலத்தில் வாழ்ந்து, மக்களுக்கு தொண்டாற்றி பெரும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஆளுமைகள், பெருந்தலைவர் காமராஜர் மகாத்மா காந்தியடிகள். ஆகவே அவர்களை முன்னிறுத்துவது, இன்றைக்கும் தேவையானதாக இருக்கிறது.
இன்றைக்கு கமல்ஹாசன் அவர்கள் பேசிய ஒரு பேச்சுக்கு பெரிய எதிர்ப்பு கர்நாடகாவிலே அவருடைய திரைப்படத்தையே திரையரங்குகளில் ஓட்ட விட மாட்டோம் என்றெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
தமிழிலிருந்து தான் கன்னடம் தோன்றியது என்ற கருத்தை அவர்களால் ஏற்க முடியவில்லை. ஆனால் 1800 12ல் எல்லிஸ் அவர்களும் 1852லே ஹென்ரி ஹயசிங்டன் என்பவரும், அவர்கள் எல்லாம் பிரிட்டிஷ் குடிமக்கள் ஆங்கிலேயர்கள் அவர்கள் தமிழை கற்று, தமிழை ஆய்ந்து, தமிழ் அறிஞர்களோடு உரையாடி அவர்கள் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துலு போன்ற மொழிகளை எல்லாம் ஒப்பீடு செய்து அதன் அடிப்படையில் அவர்கள் முன்வைத்த கருத்து இந்த மொழிகளுக்கெல்லாம் மூலமொழி தமிழ் என்ற கருத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
கணினிக்கு ஏற்ப தமிழ் தன்னை தகவமைத்துக் கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கான செறிவை பெற்றிருப்பதால் செம்மை அடைந்திருப்பதால் அது செம்மொழி.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், தர்மம் என்பது ஒன்று தான்.
- பாரத தேசம் ஒரு ஆன்மிக தேசம். சனாதன தர்மத்தின் மிகப்பெரிய துறவி திருவள்ளுவர்.
சமயபுரம்:
திருச்சி மாவட்டம் முசிறி அருகே குணசீலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராஜகோபுரம் மற்றும் பிரகார மண்டபத்துக்கு கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா மற்றும் கே.ஆர்.பிச்சுமணி அய்யங்கார் எழுதிய குணசீல மஹாத்மியம், சென்னகரை சுப்பிரமணியன் எழுதிய வள்ளுவத்தில் மெய்ஞானம் ஆகிய இரு நூல்கள் வெளியீட்டு விழா நேற்று கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு புதிதாக கட்டப்படவுள்ள கோவிலின் 7 பிரகாரங்களை கொண்ட மாதிரி வடிவமைப்பினை திறந்து வைத்தார். பின்னர் அவர், ராஜகோபுரம் மற்றும் பிரகார மண்டபம் கட்டுமான பணிக்கான அடிக்கல்லை நாட்டினார்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் யதுகிரி யதிராஜமடம் 41-ம் பட்டம் பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ யதிராஜா நாராயண ராமானுஜ ஜீயர் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நூல்களை வெளியிட, அதனை தினமலர் ஆசிரியர் ஆர்.ராமசுப்பு பெற்றுக் கொண்டார்.
பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், தர்மம் என்பது ஒன்று தான். அது சனாதன தர்மம் மட்டும் தான். பாரதம், ராஷ்ரியம், தர்மம் ஆகியவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. அவை ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளன. சமூகமும், தர்மமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.
திருக்குறள் ஒரு ஆன்மிக புத்தகம். முக்தி பற்றி பேசவில்லை என்று கூறி, சில அரசியல் சிந்தனையாளர்கள் ஆன்மிகத்தில் இருந்து திருக்குறளை பிரிக்கப் பார்க்கிறார்கள். நாம் யார் என்பதை இன்றைக்கு வெளியிட்ட புத்தகங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அத்தகைய சிந்தனையை நமக்கு கல்வி பாடத்திட்டங்கள் கொடுக்கவில்லை. பாரத தேசம் ஒரு ஆன்மிக தேசம். சனாதன தர்மத்தின் மிகப்பெரிய துறவி திருவள்ளுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களுக்கும் அறிஞர்கள் பலர் உரை எழுதி உள்ளனர்.
- கவிஞர் வைரமுத்து கடந்த பல மாதங்களாகத் திருக்குறளுக்கு உரை எழுதிக்கொண்டிருந்தார்.
திருக்குறள் 'உலகப் பொதுமறை' என்று அழைக்கப்படுகிறது. இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் இருக்கின்றன. இவை அனைத்தும் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளுக்குள் உள்ளன. திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களுக்கும் அறிஞர்கள் பலர் உரை எழுதி உள்ளனர்.
கவிஞர் வைரமுத்து கடந்த பல மாதங்களாகத் திருக்குறளுக்கு உரை எழுதிக்கொண்டிருந்தார். தற்போது அவர், தனக்கே உரித்தான கவித்துவ நடையில் விளக்க உரை எழுதி இருக்கிறார். முப்பாலுக்கும் உரை எழுதி முடித்துவிட்டார். அந்த நூலுக்கான தலைப்பை இன்று கவிஞர் வைரமுத்து அறிவித்து உள்ளார்.
'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்று அந்த நூலுக்குப் பெயர் சூட்டி உள்ள கவிஞர் வைரமுத்து, வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
- பள்ளி, கல்லூரி மாணவர்கள் திருக்குறள் முற்றோதலில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்,
- இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களை மாணவ- மாணவிகள் அறிந்து கொண்டு கல்வி அறிவுடன் நல்ல ஒழுக்கம் மிக்கவர்களாக விளங்கச் செய்யும் வகையில் 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன்பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின்கீழ் 2022-23-ம் ஆண்டிற்கு மாணவ மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திருக்குறம் முற்றோதலில் பங்கேற்கும் மாணவ மாணவிகள் 1,330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன்பெற்றவர்களாக இருக்க வேண்டும். திருக்குறளில் உள்ள இயல் எண், அதிகாரம், குறள் எண், குறளின் பொருள், திருக்குறளின் அடைமொழி, சிறப்புகள், சிறப்புப் பெயர்கள், உரை எழுதியோர் போன்றவற்றை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கொள்ளப்பெறும்.
திருக்குறள் முற்றோதலில் பங்கேற்கும் மாணவ- மாணவிகள் சிவகங்கை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனறிகுழுவின் முன்னி லையில் நேராய்வுக்கு உட்படுத்தப்பட்டு குறள் பரிசுக்குரியோர் பட்டியல் சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்குநருக்கு சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநரால் பரிந்துரைக்கப்படும்.
ஏற்கனவே முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டு்ம் கலந்து கொள்ள இயலாது. திருக்குறள் முற்றோ தலுக்கான விண்ணப்பங்களை சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalar chithurai.com என்ற இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு 04575-241487 (99522 80798) என்ற தொலைபேசி எண்ணி்ல் தொடர்பு கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பெற்ற விண்ணப்பங்களை மாணவ மாணவியர் வருகிற 25-ந் தேதிக்குள் கீழ்க்காணும் முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், 2-ம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சிவகங்கை 630 561.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாணவர் 1,330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
- தேர்வு செய்யப்படுவோர் பட்டியல் சென்னை தமிழ் வளர்ச்சி இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும்.
திருப்பூர் :
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறனுள்ள பள்ளி,கல்லூரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.10ஆயிரம் பரிசு தொகை மற்றும்பாராட்டுச்சான்று வழங்கப்படுகிறது.
நடப்பாண்டுக்கு (2022 - 23) திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகத்தில் நேரடியாகவோ, https://tamilvalarchithurai.tn.gov.in என்கிற இணையதளத்தில் விண்ணப்பத்தைபதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 31ந்தேதிக்குள் தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர், தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் அலுவலகம், அறை எண் 608, 6வது தளம், கலெக்டர் அலுவலகம் திருப்பூர் என்கிற முகவரிக்கு தபால் மூலமாகவோ, நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும். ddtamil.607@gmail.com என்கிற முகவரிக்கு இ-மெயிலிலும் அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு 0421 2971183 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
மாணவர் 1,330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். திருக்குறளில் உள்ள இயல் எண், அதிகாரம், குறள் எண், குறளின் பொருள், உரை ஆசிரியர் விவரங்கள் தெரிந்திருப்பது கூடுதல் தகுதியாக கருதப்படும்.மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள திறனாய்வுக்குழு முன்னிலையில் மாணவர்கள் திருக்குறள் ஒப்புவிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படுவோர் பட்டியல் சென்னை தமிழ் வளர்ச்சி இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும். ஏற்கனவே பங்கேற்று பரிசு பெற்றோர் மீண்டும் பங்கேற்க முடியாது.






