என் மலர்tooltip icon

    டெல்லி

    • உங்கள் அரசு எந்த அவசரமும் கட்டமால், எந்த திட்டமும் இல்லாமல், எந்த பொறுப்பும் இல்லாமல் எப்படி இருக்க முடிகிறது
    • நமது குழந்தைகளுக்கு தூய்மையான காற்றை சுவாசிக்க உரிமை இருக்கிறது.

    டெல்லியின் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசடைந்து வருகிறது. காற்று மாசு குறித்து டெல்லி அரசின் பாரா முகம் குறித்து ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே தீபாவளி அன்று பசுமை பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்குமாறு டெல்லி பாஜக அரசு வழக்கு தொடர்ந்து சாதகமாக தீர்ப்பு பெற்றது. எனவே பல வருடம் கழித்து இந்த ஆண்டு தீபாவளிக்கு டெல்லியில் பசுமை பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

    இந்த நடவடிக்கையை ஆர்வலர்கள் விமர்சித்தனர். தீபாவளிக்கு பின் டெல்லியின் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இதற்கிடையே டெல்லியில் செயற்கை மழை பெய்ய செய்ய ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் டெல்லி ஐஐடி மேற்கொண்ட சோதனை தோல்வி அடைந்தது.

    கடந்த சில வாரங்களாகவும், இன்றும் டெல்லி காற்றின் தரம் AQI 400 ஐ தாண்டி 'மிகவும் மோசம்' என்ற வகையை அடைந்துள்ளது.

    இந்நிலையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லி காற்று மாசினால் ஏற்பட்டுள்ள சுகாதார அவசரநிலை குறித்து மத்திய அரசின் குறிப்பாக பிரதமர் மோடியின் பாராமுகம் குறித்து விமர்சித்துள்ளார்.

    டெல்லியில், தாய்மார்கள் சிலருடன் தனது வீட்டில் ராகுல் காந்தி காற்று மாசு குறித்து கலந்துரையாடி அதன் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், நான் சந்திக்கும் ஒவ்வொரு தாய்மாரும் என்னிடம் ஒரு விஷயத்தை தான் கூறுகிறார்கள். அவர்களின் குழந்தை மாசுபட்ட காற்றை சுவாசித்து வளர்வது குறித்து அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் அவர்கள் பயத்துடனும், கோபத்துடன், ஏதும் செய்ய முடியாத நிலையிலும் இருக்கிறார்கள்.

    மோடி அவர்களே,"இந்தியாவின் குழந்தைகள் நமது கண் முன்னே மூச்சுத்திணறி கொண்டுள்ளனர். நீங்கள் எப்படி அமைதியாக இருக்கிறீர்கள். இந்த பிரச்சனையில் உங்கள் அரசு எந்த அவசரமும் கட்டமால், எந்த திட்டமும் இல்லாமல், எந்த பொறுப்பும் இல்லாமல் எப்படி இருக்க முடிகிறது" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    மேலும், காற்று மாசு விவகாரம் குறித்த பாராளுமன்றத்தில் உடனடியாக விவாதம் செய்யப்பட வேண்டும். இதை சுகாதார அவசரநிலையை கருதி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    நமது குழந்தைகளுக்கு தூய்மையான காற்றை சுவாசிக்க உரிமை இருக்கிறது, எனவே இந்த விஷயத்தில் இனியும் எந்த சாக்கு போக்குகளும், திசை திருப்புதலும் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளார்.

    வரும் வாரத்திலும் டெல்லியின் காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற நிலையிலேயே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நடப்பு ஆண்டுக்கான பட்டியலில் முதல் இடத்தில் லண்டன் இடம்பிடித்துள்ளது.
    • கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இந்தப் பட்டியல் வெளியாகி வருகிறது.

    புதுடெல்லி:

    கனடாவை தலைமையிடமாக கொண்ட ரெசோனன்ஸ் கன்சல்டன்சி என்னும் தரவு பகுப்பாய்வு நிறுவனம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு உலகின் சிறந்த 100 நகரங்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

    பொருளாதாரம், தொழில்துறை மற்றும் சுற்றுலாவின் செயல்பாடுகள், சுற்றுலா உள்கட்டமைப்பு, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.

    சுமார் 10 லட்சம் அல்லது அதற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட பெரு நகரங்களை மதிப்பீடு செய்து இந்தப் பட்டியலை வெளியிடுகிறது. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இந்தப் பட்டியல் வெளியாகி வருகிறது.

    இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான பட்டியலில் முதல் 100 இடங்களில் முதல் இடத்தில் லண்டன், 2-வது இடத்தில் நியூயார்க், 3-வது இடத்தில் பாரிஸ் நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

    இந்தியாவில் இருந்து பெங்களூரு 29-வது இடத்திலும், மும்பை 40-வது இடத்திலும், டெல்லி 54-வது இடத்திலும், ஐதராபாத் 82-வது இடத்திலும் உள்ளது.

    தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பு, பெரு நிறுவன தளங்கள் விரிவுபடுத்தப்படுவது போன்றவற்றுக்காக பெங்களூரு நகரத்துக்கு இந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

    • இந்தத் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்றன.
    • இறுதிப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி நேபாளத்தை வீழ்த்தியது.

    புதுடெல்லி:

    இந்தியா, இலங்கையில், பார்வையற்றோர் பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை முதல் சீசன் நடைபெற்றது.

    இந்தத் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்றன. இத்தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி நேபாளத்தை வீழ்த்தியது.

    இந்நிலையில், பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்துப் பாராட்டினார். அவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துத் தெரிவித்த அவர், கிரிக்கெட் பேட் பரிசாக வழங்கினார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், பார்வையற்ற பெண்களுக்கான முதல் டி20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள். இது உண்மையிலேயே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க விளையாட்டு சாதனை, கடின உழைப்பிற்கு ஓர் எடுத்துக்காட்டு. அணியின் எதிர்கால முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். இந்த சாதனை வருங்கால சந்ததியினருக்கு ஊக்கம் அளிக்கும் என தெரிவித்துள்ளார்.

    • இந்தியாவின் தீப்தி சர்மாவை ரூ.3.20 கோடிக்கு உபி வாரியர்ஸ் எடுத்துள்ளது.
    • நியூசிலாந்தின் அமெலியா கெரை ரூ.3 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் எடுத்தது.

    புதுடெல்லி:

    4-வது மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி வீராங்கனைகள் ஏலம் இன்று டெல்லியில் நடைபெற்றது.

    ஏலத்தில் சமீபத்தில் உலகக் கோப்பை போட்டியில் தொடர் நாயகியாக ஜொலித்த இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, வேகப்பந்து வீச்சாளர்கள் கிரந்தி கவுட், ரேணுகா சிங், சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரீசரனி, சினே ராணா ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மெக் லானிங், அலிசா ஹீலி, போபி லிட்ச்பீல்டு, நியூசிலாந்தின் அமெலியா கெர், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட், நடினே டி கிளெர்க், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் உள்ளிட்டோர் அதிக விலை போவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த ஏலத்தில் அதிகபட்சமாக விலை போன டாப் 5 வீராங்கனைகள் விவரம் வருமாறு:

    தீப்தி சர்மா: ரூ.3.20 கோடி- உபி வாரியர்ஸ்

    அமெலியா கெர்: ரூ.3 கோடி-மும்பை இந்தியன்ஸ்

    ஷிகா பாண்டே: ரூ.2.40 கோடி-உபி வாரியர்ஸ்

    சோபி டிவைன்: ரூ.2 கோடி- குஜராத் ஜெயண்ட்ஸ்

    மெக் லானிங்: ரூ.1.9 கோடி - உபி வாரியர்ஸ்

    • தானே முழு ஆட்சிக் காலத்துக்கும் முதல்வர் என சித்தராமையா அண்மையில் உறுதிப்படுத்தினார்.
    • விவாதிக்காமல் ஒருதலைப்பட்சமாக எந்த முடிவும் எடுக்கப்படாது

    கர்நாடக காங்கிரசில் நடந்து வரும் அதிகாரப் போராட்டம் குறித்து கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மௌனம் கலைத்துள்ளார்.

    கடந்த 2023 இல் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அம்மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவி ஏற்றனர்.

    தேர்தல் வெற்றியில் டி.கே. சிவகுமாருக்கு அதிக பங்கு இருப்பதால் 5 ஆண்டுகால ஆட்சியில் முதல் இரண்டை ஆண்டு காலம் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டு காலம் சிவகுமாரும் முதல்வராக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    இருப்பினும் தானே முழு ஆட்சிக் காலத்துக்கும் முதல்வர் என சித்தராமையா அண்மையில் உறுதிப்படுத்தினார். இதை டி.கே. சிவகுமார் பொதுவெளியில் ஆமோதித்தபோதும் டிகே சிவகுமார் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். அண்மையில் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாமிட்டனர்.

    இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, இந்த விவகாரம் தொடர்பாக மூத்த தலைவர்களுடன் விரைவில் ஒரு கூட்டம் நடத்தப்படும். அனைவருடனும் விவாதிக்காமல் ஒருதலைப்பட்சமாக எந்த முடிவும் எடுக்கப்படாது என்று தெரிவித்தார்.

    ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். அனைவரையும் கலந்துரையாடலுக்கு அழைக்கிறேன். அனைவரிடமும் பேசிய பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    மேலும் கட்சியில் உயர்மட்டக் குழுவின் பங்கு குறித்துப் பேசிய கார்கே, உயர்மட்டக் குழு என்பது ஒரு தனிநபர் அல்ல, அது ஒரு குழு. உயர்மட்டக் குழு ஒன்றாக அமர்ந்து இறுதி முடிவை எடுக்கும் என்று கூறினார்.  முன்னதாக ராகுல் காந்தி, சோனியா காந்தியிடம் விவாதித்து இந்த விவாகரத்துக்கு தீர்வு காணப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.  

    • உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்தும் தஷ்வந்த்தை விடுவித்தும் உத்தரவிட்டது.
    • உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது.

    போரூர் அருகே கடந்த 2017-ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தததுடன் உடலை எரித்த வழக்கில் தஷ்வந்தை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

    இதனை தொடர்ந்து ஜாமினில் வெளியே வந்த தஷ்வந்த் தன் தாயை அதே ஆண்டு கொலை செய்து தப்பித்ததாக குற்றம்சாட்டிய போலீசார் மும்பையில் வைத்து தஷ்வந்த்தை கைது செய்தனர்.

    இதையடுத்து சிறுமி கொலை வழக்கை விசாரித்து வந்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், 2018-ம் ஆண்டு தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த்தின் தந்தை பிறழ்சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இவ்வழக்கில் இருந்து தஷ்வந்த்தை விடுதலை செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனிடையே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

    தொடர்ந்து கடந்த மாதம், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தஷ்வந்த் குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லையென கூறிய உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்தும் தஷ்வந்த்தை விடுவித்தும் உத்தரவிட்டது.

    வீடியோ, சிசிடிவி காட்சிகள் போதுமானதல்ல, டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில் சிறுமி வன்கொடுமை வழக்கில் இருந்து தஷ்வந்த் விடுதலை செய்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது.

    நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ரத்து செய்து, விடுவித்த தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரிய மனுவை, தீர்ப்பு வழங்கிய நீதிபதி விக்ரம்நாத் இன்று விசாரித்தார்.

    அப்போது, தஷ்வந்த் விடுதலைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • ஜனநாயகத்தை வலுப்படுத்த 1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது IIDEA
    • இது இந்தியா உட்பட 35 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஒரு மன்றமாகும்.

    இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவி நிறுவனம் (IIDEA) 2026 இன் தலைவராக பொறுப்பேற்க உள்ளார் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    ஜனநாயகத்தை வலுப்படுத்த 1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட IIDEA, இந்தியா உட்பட 35 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஒரு மன்றமாகும்.

    அமெரிக்காவும் ஜப்பானும் பார்வையாளர் நாடுகளாக இந்த அமைப்பில் பங்கேற்கின்றன. தற்போது தலைமைப் பொறுப்பை வகிக்கும் சுவிட்சர்லாந்து, 2026க்கான பொறுப்பை இந்தியாவிடம் ஒப்படைக்க உள்ளது.

    டிசம்பர் 3 ஆம் தேதி அமெரிக்காவின் ஸ்டாக்ஹோமில் நடைபெறும் உறுப்பு நாடுகளின் கூட்டத்தில் ஞானேஷ் குமார் இந்த பொறுப்பை ஏற்கிறார்.

    இதன் தலைவராக, ஞானேஷ் குமார் 2026 வரை அனைத்து கவுன்சில் கூட்டங்களுக்கும் தலைமை தாங்குவார். 

    • இறந்துபோன 2 கோடிக்கும் அதிகமானோரின் ஆதார் எண்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் செயலிழக்கச் செய்துள்ளது.
    • செயலிழந்த எந்தவொரு ஆதார் எண்ணும் மற்றொரு நபருக்கு மீண்டும் ஒதுக்கப்பட மாட்டாது.

    புதுடெல்லி:

    ஆதார் தரவுத்தளத்தின் தொடர்ச்சியான துல்லியத்தன்மையைப் பராமரிக்க நாடு தழுவிய தூய்மைப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இறந்துபோன 2 கோடிக்கும் அதிகமானோரின் ஆதார் எண்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் செயலிழக்கச் செய்துள்ளது.

    செயலிழந்த எந்தவொரு ஆதார் எண்ணும் மற்றொரு நபருக்கு மீண்டும் ஒதுக்கப்பட மாட்டாது. இருப்பினும், ஒரு நபர் இறந்தால், அடையாள மோசடி செய்ய அல்லது நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்காக இத்தகைய ஆதார் எண்ணை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துவதைத் தடுக்க ஆதார் எண் செயலிழக்கச் செய்யப்படுவது அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    • டெல்லியில் இன்று பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நடந்தது.
    • 9 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டார்.

    75-வது அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு இன்று பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நடந்தது.

    இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

    இதில் மலையாளம், மராத்தி, நேபாளி, பஞ்சாபி, போடோ, காஷ்மீரி, தெலுங்கு, ஒடியா, அசாமி ஆகிய 9 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டார்.

    பின்னர் நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது:-

    1949-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி அன்று, அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணியை முடித்தனர். அதே நாளில், இந்திய மக்களாகிய நாம் நமது அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டோம். வரைவுக் குழுவின் தலைவரான அம்பேத்கர் நமதுஅரசியலமைப்பின் முக்கிய சிற்பிகளில் ஒருவர் ஆவார்.

    நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் நமது தனிப்பட்ட, ஜனநாயக உரிமைகள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று விரும்பினர்.

    காலனித்துவ மனநிலையை விலக்கி தேசிய வாத சிந்தனையை ஏற்றுக் கொள்ள அரசியலமைப்பு வழிகாட்டும் ஆவணம் ஆகும்.

    முத்தலாக் தொடர்பான சட்டம் மூலம், நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் அதிகாரமளித்தல் மற்றும் சமூக நீதியை நோக்கி பாராளுமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளை எடுத்தது. சுதந்திரத்திற்குப் பிறகு மிகப்பெரிய வரி சீர்திருத்தமான ஜி.எஸ்.டி. வரி, நாட்டின் பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்பட்டது.

    370-வது பிரிவை ரத்து செய்ததன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் ஒருங்கிணைப்புக்குத் தடையாக இருந்த ஒரு தடை நீக்கப்பட்டது.

    அரசியலமைப்பில் சமூக நீதிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சமூக நீதியை அடைய இந்தியா பாடுபடுகிறது.

    பெண்கள், இளைஞர்கள், எஸ்.சி, எஸ்.டி, விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர், புதிய நடுத்தர வர்க்கத்தினர் நமது ஜனநாயக அமைப்பை வலுப்படுத்தி வருகின்றனர்.

    25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டெ டுத்தது நாட்டின் மிகப்பெ ரிய சாதனைகளில் ஒன்றா கும். இந்தியா உலகிற்கு ஒரு புதிய வளர்ச்சி மாதிரியை வழங்கி வருகிறது. இந்திய பாராளுமன்றம் உலகுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.

    இவ்வாறு திரவுபதி முர்மு பேசினார்.

    • தாய், தந்தை, குரு, தெய்வமாக அரசியலமைப்பு உள்ளது.
    • ஜனநாயகத்தின் மீதான நமது நம்பிக்கையை உலகிற்கு மீண்டும் புரிய வைத்தது.

    அரசியலமைப்பு சட்ட தினம் பழைய பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

    இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் முதல் முதலாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய நிலையில் தனது உரையை தமிழ் மொழியில் தொடங்கினார். அவர் பேசியதாவது:-

    தாய், தந்தை, குரு, தெய்வமாக அரசியலமைப்பு உள்ளது. நமது அரசியலமைப்பு அரசியலமைப்பு சபையில் நமது அன்னை பாரதத்தின் சிறந்த தலைவர்களால் வரைவு செய்யப்பட்டு, விவாதிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது சுதந்திரத்திற்காகப் போராடிய மில்லியன் கணக்கான நமது நாட்டு மக்களின் கூட்டு ஞானம், தியாகம் மற்றும் கனவுகளை உள்ளடக்கியது.

    சிறந்த அறிஞர்கள், வரைவுக் குழு மற்றும் அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் கோடிக்கணக்கான இந்தியர்களின் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்ற நுண்ணறிவு மிக்க சிந்தனைகளை வழங்கினர். அவர்களின் தன்னலமற்ற பங்களிப்பு பாரதத்தை இன்று உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக மாற்றியது. நமது அரசியலமைப்பு அறிவு மற்றும் வாழ்ந்த அனுபவம், தியாகங்கள், நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளிலிருந்து பிறந்தது. நமது அரசியலமைப்பின் ஆன்மா பாரதம் ஒன்று, அது என்றென்றும் ஒன்றாக இருக்கும் என்பதை நிரூபித்துள்ளது.

    370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, 2024 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தல்களின் போது, அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் வாக்களித்தது ஜனநாயகத்தின் மீதான நமது நம்பிக்கையை உலகிற்கு மீண்டும் புரிய வைத்தது.

    சமீபத்தில் நடைபெற்ற பீகார் தேர்தல்களில், குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான பெண்களின் வாக்களிப்பு, நமது தாய் பாரத ஜனநாயகத்தின் கிரீடத்தில் மற்றொரு விலைமதிப்பற்ற வைரத்தைச் சேர்த்துள்ளது. அரசியலமைப்பு சபையின் பெண் உறுப்பினர்களின் பங்களிப்புகள் ஒப்பிடமுடியாதவை என்றார். 




    • பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசியலமைப்பு தினத்தை கொண்டாட வேண்டும்.
    • நமது அரசியலமைப்பு மனித கண்ணியம், சமத்துவம் மற்றும் சுதந்திரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.

    ஆங்கிலேயர்களிடம் இருந்து 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி நாடு விடுதலை பெற்ற பிறகு இந்தியாவுக்கு என தனி அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. இதனை டாக்டர் அம்பேத்கர் உருவாக்கினார்.

    அவர் வரைந்த அரசியலமைப்பு சட்டங்கள், பாபு ராஜேந்திர பிரசாத் தலைமையிலான அரசியலமைப்பு நிர்ணய சபையால் 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    இந்த தினத்தை அரசியலமைப்பு தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். கடந்த 2015-ம் ஆண்டு இதுகுறித்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். 

    இந்நிலையில் இந்திய அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தை ஒட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில்,

    நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களும் அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்ற வேண்டும். அரசியலமைப்பு கடமைகள் வலுவான ஜனநாயகத்திற்கான அடித்தளங்கள்.

    வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டியதன் பொறுப்பை பிரதமர் வலியுறுத்தினார்.

    பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசியலமைப்பு தினத்தை கொண்டாட வேண்டும்.

    கடமைகளை நிறைவேற்றுவதிலிருந்தே உரிமைகள் பிறக்கின்றன என்ற மகாத்மா காந்தியின் நம்பிக்கையை நினைவு கூர்ந்த அவர், கடமைகளை நிறைவேற்றுவது சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான அடித்தளம் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

    மேலும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    அரசியலமைப்பு தினத்தன்று, நமது அரசியலமைப்பை வடிவமைத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் தொலைநோக்குப் பார்வை ஒரு வளர்ந்த பாரதத்தை கட்டியெழுப்புவதில் நம்மைத் தொடர்ந்து ஊக்குவிக்கின்றன.

    நமது அரசியலமைப்பு மனித கண்ணியம், சமத்துவம் மற்றும் சுதந்திரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. இது நமக்கு உரிமைகளை வழங்கும் அதே வேளையில், குடிமக்களாகிய நமது கடமைகளையும் நினைவூட்டுகிறது. அவற்றை நாம் எப்போதும் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். இந்தக் கடமைகள் ஒரு வலுவான ஜனநாயகத்தின் அடித்தளமாகும்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

     

    • டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு அபாய வரம்பை தொட்டுள்ளது.
    • மருத்துவமனைகள், தீயணைப்பு சேவைகள் உள்ளிட்டவற்றிற்கு இந்த 50 சதவீத வரம்பு கிடையாது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு கடந்த சில நாட்களாக ஆபத்தான அளவிற்கு உயர்ந்து வருகிறது.

    காற்று மாசுபாடு அபாய வரம்பை தொட்டுள்ளதால் பொது சுகாதாரத்தை பாதுகாக்க அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள டெல்லி அரசு கட்டாயப்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் தங்களின் மொத்த பணியாளர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே நேரடியாக அலுவலகத்திற்கு வரவேண்டும். மீதமுள்ள ஊழியர்கள் கட்டாயம் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் என டெல்லி அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.

    அவசர பணிகள் அல்லது பொது பயன்பாடு சேவைகள் மேற்கொள்ள வேண்டிய சூழலில் மட்டுமே கூடுதல் பணியாளர்களை நேரடியாக அழைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த தனியார் நிறுவனங்கள் தங்கள் பணிநேரங்களை கட்டம் கட்டமாக மாற்றி அமைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மருத்துவமனைகள், சுகாதார நிறுவனங்கள், தீயணைப்பு சேவைகள், மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் பொது போக்குவரத்து , தூய்மை பணிகள், பேரிடர் மேலாண்மை பிரிவு மற்றும் மாசு கட்டுப்பாடு தொடர்பான அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு இந்த 50 சதவீத வரம்பு அமலுக்கு வராது.

    டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசை கருத்தில் கொண்டு மக்கள் அத்தியாவசிய பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும், முக கவசம் பயன்படுத்தவும், வீட்டுக்குள் காற்று சுத்திகரிப்பு சாதனங்களைப் பயன்படுத்தவும் என அரசு வலியுறுத்தியுள்ளது.

    ×