என் மலர்
டெல்லி
- இந்தியா, ரஷியா இடையே விசா இன்றி பயணம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
- இதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையே சுற்றுலா உறவுகள் வலுப்படும் என்றார்.
புதுடெல்லி:
இந்தியா, ரஷியா இடையே விசா இல்லாமல் பயணம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் இந்தாண்டு இறுதியில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதுதொடர்பாக, ரஷிய மந்திரி நிகிதா கொன்ராட்யேவ் கூறுகையில், இந்தியா-ரஷியா இடையிலான பயணத்தை எளிதாக்க இரு நாடுகளிடையே விசா இல்லாமல் பயணம் மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் அடுத்த மாதம் நடக்கிறது. இதற்கான ஒப்பந்தம் இந்தாண்டுக்குள் இறுதி செய்யப்படும். இதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையே சுற்றுலா உறவுகள் வலுப்படும் என தெரிவித்தார்.
- டெல்லியில் மே 25-ம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான 6-வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
- வடகிழக்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கன்னையா குமார் களமிறங்குகிறார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் மே 25-ம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான 6-வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
வடகிழக்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கன்னையா குமார் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இதில் பா.ஜ.க. சார்பில் இரு முறை எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட மனோஜ் திவாரி போட்டியிடுகிறார்.
இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கன்னையா குமார் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பான
வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
டெல்லி நியூ உஸ்மான்பூர் பகுதியில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகம் அருகே பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் கன்னையா குமார் தாக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கவுன்சிலர் புகார் தெரிவித்தார்.
அதில், சில நபர்கள் கன்னையா குமாருக்கு மாலை அணிவித்ததாகவும், அதன்பின் அவர்கள் கன்னையா மீது மையை பூசி அவரை தாக்க முயன்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கன்னையா குமார் கூறுகையில், தாக்குதலின் பின்னணியில் பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் திவாரி இருக்கிறார். தனது புகழ் அதிகரித்து வருவதால் விரக்தியில் இருக்கும் மனோஜ் திவாரி ரவுடிகளை அனுப்பி இதனை செய்துள்ளார் என தெரிவித்தார்.
- தீ விபத்து ஏற்பட்டதால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
- விமானத்தில் 175 பேர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
பெங்களூரில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து டெல்லி விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது.
விமானத்தில் ஏர் கண்டிஷனிங் யூனிட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு, இன்று மாலை 6.40 மணியளவில் விமானம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக தரையிறக்கப்பட்டது.
ஏஐ 807 என்ற விமானம் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானத்தில் 175 பேர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
இதைதொடர்ந்து, பயணிகளை பெங்களூரு செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக விமான நிறுவன அதிகாரி தெரிவித்தார்.
- அரவிந்த் கெஜ்ரிவால் தனிச் செயலாளர் தாக்கியதாக மாநிலங்களவை பெண் எம்.பி. குற்றச்சாட்டு.
- ஆம் ஆத்மி கட்சி வீடியோ பதிவை வெளியிட்டு சதி என பா.ஜனதாவை குற்றம்சாட்டியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை பெண் எம்.பி.யான ஸ்வாதி மாலிவால், தான் கெஜ்ரிவால் வீட்டில் அவரது தனிச் செயலாளரால் தாக்கப்பட்டேன் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லி மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து ஸ்வாமி மாலிவால் தாக்கப்படவில்லை. இது பா.ஜனதாவின் சதி என 52 வினாடி வீடியோவை சுட்டிக்காட்டி ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி என குற்றம்சாட்டியுள்ளார்.
அந்த வீடியோவில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வீட்டிற்கு வந்திருந்த ஸ்வாதி மாலிவாலை, வெளியேறும்படி பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். இதனைக் கேட்டு ஸ்வாமி மாலிவால் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பாதுகாப்பு அதிகாரிகளை மிரட்டுகிறார். அவர்களை வெளியேற்ற முற்படுகிறார் என்பதுபோல் உள்ளது.
இந்த வீடியோவை பார்க்கும்போது, டெல்லி மாநிலத்தில் நடைபெற இருக்கும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னதாக கெஜ்ரிவாலை குறிவைத்து பா.ஜனதாவல் நடத்தப்பட்ட திட்டம் தற்போது வெளியாகியுள்ளது என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்ததில் இருந்து பா.ஜனதா கலக்கம் அடைந்துள்ளது. இதனால் ஸ்வாதி மாலிவாலை கெஜ்ரிவால் வீட்டிற்கு கடந்த 13-ந்தேதி அனுப்பி பா.ஜனதா சதித்திட்டம் வகுத்துள்ளது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றம்சாட்ட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். ஆனால், அவர் அங்கே இல்லை என்பதால், அவர் பாதுகாக்கப்பட்டார். பா.ஜனதாவின் இந்த சதியில் ஸ்வாதி மாலிவால் பயன்படுத்தப்பட்டுள்ளார் என அதிஷி தெரிவித்துள்ளார்.
மேலும், போலீஸ் புகாரில் அவர் தாக்கப்பட்டதாக கூறியுள்ளார். ஆனால், வீடியோ காட்சியில் அவர் வசதியாக உட்கார்ந்து கொண்டு அதிகாரிகளை மிரட்டுகிறார். மேலும், பிபவ் குமாரை மிரட்டுவதையும் பார்க்க முடிகிறது என அதிஷி தெரிவித்துள்ளார்.
- அமலாக்கத்துறை இதுவரை எட்டு முறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
- முதன்முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது.
டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் இடைக்கால ஜாமின் பெற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் இன்று ரோஸ் அவென்யூவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதில் தேசிய அரசியல் கட்சியான ஆம் ஆத்மி கட்சியை குற்றம்சாட்டப்பட்டவராக அமலாக்கத்துறை இணைத்துள்ளது. அதேபோல் குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால் பெயரையும் இணைத்துள்ளது.
டெல்லி மாநில மதுபானக் கொள்கை வழக்கில் பணமோசடி என்ற கோணத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை அமலாக்கத்துறை எட்டு முறை இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ஆனால் தற்போது முதன்முறையாக அரவிந்த கெஜ்ரிவால் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவராக ஆம் ஆத்மி கட்சியை பெயரை இணைத்துள்ளதால் அந்த கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் என தகவல் தெரிவிக்கின்றன.
ஆம் ஆத்மி கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுத முடியும். கட்சியின் சொத்துகளை முடக்க முடியும். டெல்லியில் உள்ள தலைமைக் கழகம் உள்ளிட்ட சொத்துகளை முடக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
- கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் கடந்த 10-ந்தேதி இடைக்கால ஜாமின் வழங்கியது.
- ஜூன் 2-ந்தேதி சரணடைந்து ஜெயிலுக்கு போக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது நீண்ட நாட்களாக விசாரணை நடைபெற்று வந்தது. அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசு வழக்கறிஞரும், அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியும் ஆஜராகி தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சஞ்ஜீவ் கண்ணா, திபன்கர் தத்தா அடங்கிய பெஞ்ச் "விவாதங்கள் கேட்கப்பட்டது. தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது. சட்டத்தின்படி விசாரணை நடைபெறும் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் (அரவிந்த் கெஜ்ரிவால்) ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யலாம்" எனத் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்தபோது தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்கான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் கடந்த 10-ந்தேதி இடைக்கால ஜாமின் வழங்கியது. ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், ஜூன் 2-ந்தேதி கெஜ்ரிவால் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
- இந்தியா 3- வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும்.
- பாகிஸ்தான் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.
புதுடெல்லி:
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பா.ஜ.க. வேட்பாளரும், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியுமான ராஜ்நாத் சிங் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
2027-ம் ஆண்டுக்குள் உலக அளவில் இந்தியா 3- வது மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும். அண்டை நாட்டை பற்றி ஒரு போதும் சாதகமாக பேசாத பாகிஸ்தான் தற்போது இந்தியா சக்தி வாய்ந்த நாடாக வளர்ந்து வருவதாக அந்நாட்டின் தலைவர்கள் ஒப்புக் கொள்கின்றனர். பாகிஸ்தான் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.
உலக அளவில் இந்தியா குறித்த கருத்து மாறி விட்டதாகவும், அனைத்து நாடுகளின் தலைவர்களும் 21-ம் நூற்றாண்டு இந்தியாவுக்கு சொந்தமானது என்றும் கூறி வருகின்றனர்.
பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்போது மட்டுமல்ல. 2029-ம் ஆண்டிலும் நரேந்திர மோடியே பிரதமராக இருப்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- இந்திய பகுதிகளை சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து வருகிறது.
- சீன ஆக்கிரமிப்பை பிரதமர் மோடி தடுக்கவில்லை.
புதுடெல்லி:
பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சுப்ரமணிய சாமி தனியார் நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
இந்திய பகுதிகளைத் தொடர்ந்து சீனா ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. சீன ஆக்கிரமிப்பை பிரதமர் மோடி தடுக்கவில்லை.
இந்திய பகுதிகளை ஆக்கிரமித்த சீனப்படைகளை ஏற்கனவே நாம் இரு முறை விரட்டியுள்ளோம்.
நம்மிடம் உள்ள ராணுவ வலிமையால் சீனா ஆக்கிரமித்த பகுதிகளை எளிதில் கைப்பற்றிவிடலாம். ஆனால் பிரதமர் மோடி அதை செய்வதில்லை. காரணம் என்னவென்றால் பிரதமர் மோடியை சீனா பிளாக்மெயில் செய்து வருகிறது.
சீனா பிரதமர் மோடியை பிளாக்மெயில் செய்வதற்கான காரணத்தை தேர்தலுக்குப் பிறகு வெளிப்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்.
மோடி மீண்டும் பிரதமர் பதவிக்கு வரக்கூடாது என கடந்த மாதம் கருத்து தெரிவித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஊழியர்கள் அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டும் என காக்னிசன்ட் தெரிவித்தது.
- காக்னிசன்ட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
புதுடெல்லி:
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல்வேறு நாடுகளில் உள்ள ஐ.டி. நிறுவனங்கள் அனைத்து ஊழியர்களும் வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி வலியுறுத்தின. அதன்பின், படிப்படியாக சில நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகம் வந்து வேலை செய்யுமாறு கூறின.
இந்தியாவிலும் அனைத்து முன்னணி ஐடி நிறுவனங்களும் அதன் ஊழியர்களை வாரத்தில் சில நாட்கள் வந்து வேலை செய்யும்படியும், மீதி நாட்கள் வீட்டில் இருந்து வேலைசெய்யும்படியும் அறிவுறுத்தி வருகின்றன. ஆனால் சில ஐடி நிறுவனங்கள் தன் ஊழியர்களை வாரம் முழுவதும் அலுவலகம் வந்து வேலைசெய்யுமாறு கூறி வருகின்றன.
இதற்கிடையே, காக்னிசன்ட் நிறுவனம் தனது ஊழியர்களை அலுவலகம் வந்து வேலை செய்ய தேவையில்லை. அனைவரும் வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி கடந்த ஆண்டு தெரிவித்தது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.
இந்நிலையில், காக்னிசன்ட் நிறுவனம் ஊழியர்கள் அனைவரும் அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டும் எனவும், அப்படி வேலை செய்யவில்லை என்றால் வேலையை விட்டு சென்று விடுங்கள் எனவும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
காக்னிசன்ட் நிறுவனத்தின் இந்த திடீர் அறிவிப்பு ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- திங்கட்கிழமை ஓட்டுப்பதிவு நடைபெறும்.
- ஓட்டுச்சாவடிகளில் 3 அடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடத்தப் பட்டு வரும் தேர்தலில் இதுவரை 4 கட்ட தேர்தல் நிறைவு பெற்றுள்ளது.
கடந்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 66.14 சதவீத வாக்குகள் பதிவானது. 26-ந்தேதி நடந்த 2-வது கட்ட தேர்தலில் 88 தொகுதிகளில் 66.71 சதவீத வாக்குகள் பதிவானது.
கடந்த 7-ந்தேதி 3-வது கட்டமாக தேர்தல் நடந்த 94 தொகுதிகளில் 65.68 சதவீத வாக்குகள் பதிவானது. கடந்த 13-ந்தேதி 4-வது கட்டமாக 96 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 69.16 சதவீத வாக்குகள் பதிவானது.
மொத்தத்தில் இதுவரை நடந்து முடிந்துள்ள 4 கட்ட தேர்தல்களில் 67 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது. இதுவரை மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 379 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இந்தியாவில் மொத்தம் 97 கோடி வாக்காளர்கள் உள்ளனர். முதல் 4 கட்ட தேர்தலில் சுமார் 45 கோடி பேர் வாக்களித்து இருக்கிறார்கள்.
அடுத்து வருகிற திங்கட் கிழமை 5-வது கட்ட தேர்த லும், 25-ந்தேதி 6-வது கட்ட தேர்தலும் ஜூன் 1-ந்தேதி 7-வது கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது. தற்போது 5-வது கட்ட தேர்தல் பிரசாரம் 49 தொகுதிகளில் மும்முரமாக நடந்து வருகிறது.
பீகார், ஜார்க்கண்ட், மராட்டியம், ஒடிசா, உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், காஷ்மீர், லடாக் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் உச்சக்கட்டமாக உள்ளது.
5-வது கட்ட தேர்தலில்தான் ராகுல் போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த 49 தொகுதிகளிலும் நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு பிரசாரம் ஓய உள்ளது. அதற்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் நடத்தப்படும். திங்கட்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும்.
இதையொட்டி 49 தொகுதிகளிலும் ஓட்டுச் சாவடிகளில் 3 அடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவாலிடம் போலீசார் நேற்று வாக்குமூலம் வாங்கினர்.
- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஸ்வாதி மாலிவாலுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.
புதுடெல்லி:
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து அவரது தனிச்செயலாளர் பிபவ் குமார் தாக்கியதாக ஆம் ஆத்மியின் மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மாலிவால் கடந்த 13-ம் தேதி டெல்லி போலீசில் முறையிட்டார். இதுகுறித்து டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குற்றம் சாட்டப்பட்ட பிபவ் குமார் மே 17-ம் தேதி தேசிய மகளிர் ஆணையத்தின் முன் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கெஜ்ரிவால் அரசுமீது எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனம் செய்து வருகின்றன.
இதற்கிடையே, ஸ்வாதி மாலிவால் வீட்டுக்குச் சென்ற போலீசார் அவரிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் பெற்றனர்.
இந்நிலையில், ஸ்வாதி மாலிவாலிடம் வாக்குமூலம் வாங்கிய போலீசார் கூறியதாவது:
முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்திக்க காத்திருந்தபோது பிபவ் குமார் அறைக்குள் வந்து ஸ்வாதி மாலிவாலை திட்டினார். மேலும், பலமுறை அறைந்துள்ளார். அவரது முகம், மார்பு, வயிறு மற்றும் உடலின் கீழ் பகுதியில் தாக்கியுள்ளார். மாலிவால் தன்னை விடும்படி கெஞ்சியுள்ளார். பிறகு அங்கிருந்து வெளியே ஓடி வந்துள்ளார் என தெரிவித்தனர்.
இதையடுத்து, டெல்லி போலீசார் ஸ்வாதி மாலிவாலை மருத்துவ பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்தபின் ஸ்வாதி மாலிவால் நேற்று இரவு வீடு திரும்பினார் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பிபவ் குமார் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- 411 வேட்பாளர்கள் தங்களுக்கு கடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
- ரோந்தக் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மாஸ்டர் ரன்தீர்சிங் தன்னுடைய சொத்து மதிப்பு ரூ.2 என குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 19-ந்தேதி தொடங்கிய நிலையில் தற்போது வரை 4 கட்டங்கள் நிறைவடைந்துள்ளன. 5-ம் கட்ட தேர்தல் வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது.
இதையடுத்து பாராளுமன்ற தேர்தலின் 6-ம் கட்ட வாக்குப்பதிவு வருகிற 25-ந்தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் குருஷேத்திரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நவீன் ஜிண்டால் ரூ.1,241 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த படியாக பிஜூ ஜனதா தளத்தின் சந்துருப்த் மிஸ்ரா ரூ.482 கோடி சொத்துடன் இரண்டாம் இடத்திலும், ஆம்ஆத்மி கட்சியின் சுஷில் குப்தா ரூ.169 கோடி சொத்துடன் 3-ம் இடத்திலும் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் தெரிவித்தது.
வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தின் ஜனநாயக சீர்திருத்த சங்கம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:-
பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்டத் தேர்தலில் மொத்தம் 866 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் 338 பேர் (39 சதவீதம்) கோடீஸ்வரர்களாவர். அவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.6.21 கோடியாக உள்ளது.
இத்தேர்தலில் 6 பிரதான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அந்த வகையில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் 51 வேட்பாளர்களில் 48 பேரும் காங்கிரசை சேர்ந்த 25 வேட்பாளர்களில் 20 பேரும், சமாஜ்வாடியைச் சேர்ந்த 12 வேட்பாளர்களில் 11 பேரும், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 9 வேட்பாளர்களில் 7 பேரும், பிஜூ ஜனதா தளத்தைச் சேர்ந்த 6 பேரும், ஆம்ஆத்மியைச் சேர்ந்த 5 பேரில் 4 பேரும் ரூ.1 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர்.
411 வேட்பாளர்கள் தங்களுக்கு கடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகளும், 141 பேர் மீது அதி தீவிர குற்ற வழக்குகளும் உள்ளன. இத்தேர்தலில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் மீது கொலை வழக்குகளும் உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த தேர்தலில் ரோந்தக் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மாஸ்டர் ரன்தீர்சிங் தன்னுடைய சொத்து மதிப்பு ரூ.2 என குறிப்பிட்டுள்ளார்.
இதுவே இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் குறைந்தபட்ச சொத்து மதிப்பாகும். பணமாக 1 ரூபாயும் வங்கியில் சேமிப்பாக 1 ரூபாயும் வைத்துள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.






