என் மலர்
இந்தியா

கைது சட்ட விரோதம் என அறிவிக்கக் கோரிய கெஜ்ரிவால் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
- கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் கடந்த 10-ந்தேதி இடைக்கால ஜாமின் வழங்கியது.
- ஜூன் 2-ந்தேதி சரணடைந்து ஜெயிலுக்கு போக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது நீண்ட நாட்களாக விசாரணை நடைபெற்று வந்தது. அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசு வழக்கறிஞரும், அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியும் ஆஜராகி தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சஞ்ஜீவ் கண்ணா, திபன்கர் தத்தா அடங்கிய பெஞ்ச் "விவாதங்கள் கேட்கப்பட்டது. தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது. சட்டத்தின்படி விசாரணை நடைபெறும் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் (அரவிந்த் கெஜ்ரிவால்) ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யலாம்" எனத் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்தபோது தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்கான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் கடந்த 10-ந்தேதி இடைக்கால ஜாமின் வழங்கியது. ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், ஜூன் 2-ந்தேதி கெஜ்ரிவால் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.






