search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கண்தானமும், ரத்ததானமும்
    X
    கண்தானமும், ரத்ததானமும்

    கண்தானமும், ரத்ததானமும்

    பிறருக்கு உதவுவதை போன்று சிறந்த செயல் வேறு இல்லை என்ற கூற்றிற்கு இணங்க ஒவ்வொருவரும் கண்தானமும், ரத்த தானமும் செய்து பிற உயிர்களை காப்பாற்ற முன்வர வேண்டும்.
    மனிதரின் உடலில் சிறந்த உறுப்பு “கண்கள்”என்பது எல்லோரும் அறிந்ததே. கண்ணுடையோர் ஒளி உடையோர் என்பர் சான்றோர். அதுபோல் நம்முடைய உடல் நலமாகவும் சிறப்பாகவும் அமைய ரத்தம் மிக இன்றியமையாதது. மருத்துவ துறையில் பல புரட்சிகள் ஏற்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று மனித உறுப்புகள் ஆகும். இம்மருத்துவ முறைப்படி விபத்துகளில் ஒருவர் கை, கால்களை இழந்துவிட்டால் அவருக்கு செயற்கை கை, கால்களை பொருத்தி அவருக்கு மறுவாழ்வு அளிக்க இயலும்.

    கண்களோ, சிறுநீரகமோ, செயலிழந்தால் பிற மனிதருடைய சிறுநீரகத்தையும், கண்களையும் பொருத்த முடியும். இதனையே கண்தானம், சிறுநீரக தானம் என்று அழைக்கிறோம்

    கண்தானம்

    “கண்ணுடையார் என்பவர் கற்றோர்” என்கிறது வான்புகழ் வள்ளுவம். கண்ணில்லாதவர்கள் இந்த உலகில் வாழ எத்தனை துன்பப்படுகிறார்கள் என்பது நாம் அறிந்ததே. பிறப்பு முதல் கண்ணில் பார்வை இல்லாதவருக்கும், நோயினால் கண்பார்வை போனவருக்கும் விபத்துகளில் கண்களை இழந்தவருக்கும் கண்ணொளி தந்து வாழ்வளிக்கும் திட்டமே கண்தானம் ஆகும்.

    ஒரு மனிதன் இறந்த சில நிமிடங்களில் அவரது கண்களை எடுத்து பார்வையற்றோருக்கு பொருத்தி அவருக்கு பார்வை தர முடியும். அதனால் ஒவ்வொருவரும் தான் இறந்த பின்னர் கண்களை தானம் செய்ய முன்வர வேண்டும். இதற்கு கண்வங்கிகள் செயல்படுகின்றன.

    ஒருவர் இறந்த பின்னும் பிறருக்கு கண்ணொளி வழங்குவதன் மூலம் இறவாமல் வாழ்கிறார் என்பது பெருமைக்கும், புகழுக்கும் உரியதல்லவா? அதனால் யாவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும்.

    ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 25 முதல் செப்டம்பர் 8 வரை தேசிய கண் தான இரு வார விழாவாக அறிவித்துள்ளார்கள். செப்டம்பர் 8 தேசிய கண் தான நாளாக கொண்டாடப்படுகிறது.

    ரத்த தானம்

    விபத்துகளில் காயமடைந்தவருக்கும் அறுவை சிகிச்சையின் போது பாதிக்கப்பட்டவர்க்கும் அதிக ரத்தம் தேவைப்படலாம். அப்போது அவருக்கு தேவையான ரத்தத்தை அளிப்பதே ரத்த தானம் ஆகும். ஒரு குறிப்பிட்ட நபருக்கு குறிப்பிட்ட வகை ரத்தமே பொருந்தும். அதனால் ரத்த பரிசோதனை செய்த பிறகே ஒருவரது ரத்தம் நோயாளியின் உடலில் செலுத்தப்படுகிறது.

    மருத்துவத்துறையில் பெருமளவில் ரத்தம் தேவைப்படும். இன்றைய நாளில் ஒவ்வொரு வரும் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும்.

    ஒரு மனிதன் உடலில் ரத்தம் தொடர்ந்து ஊறிய வண்ணமே இருக்கின்றது. அதனால் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அல்லது மாதம் ஒரு முறையேனும் ரத்த தானம் செய்வதால் அவரது ஆரோக்கியத்திற்கு எந்த குறையும் வராது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    ரத்த வங்கியில் ரத்தமானது சேமிக்கப்பட்டு வருகின்றது. அது பல வகையில் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. பல உயிரிகள் காப்பாற்றப்படுகின்றது.

    நமக்கு ஆபத்து இல்லாமல் பிறருக்கு உதவி செய்யும் வாய்ப்பு ரத்த தானமே ஆகும். அதனால் ஒவ்வொருவரும் தங்கள் உடல் ஆரோக்கியத்தை பொறுத்து ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும்.

    உலக ரத்த தான தினம் ஆண்டுதோறும் ஜூன் 14-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது. ரத்த பிரிவுகான ஏ, ஓ, பி ஆகிய பிரிவுகளை கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் பிறந்த தினத்திலேயே இந்த ரத்த தான தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

    எவ்வுயிரும் தம்முயிர்தான் என்பதை மனிதர்கள் உணர்ந்து கொண்டால் கண்தானமும், ரத்த தானமும் பெருகும். பிறருக்கு உதவுவதை போன்று சிறந்த செயல் வேறு இல்லை என்ற கூற்றிற்கு இணங்க ஒவ்வொருவரும் கண்தானமும், ரத்த தானமும் செய்து பிற உயிர்களை காப்பாற்ற முன்வர வேண்டும். பிறருக்கு உதவி செய்ய இயற்கை தந்த வாய்ப்பு இது என்று மனமுவந்து செய்தல் வேண்டும்.

    ரா.அட்ஷயா, கணிதத்துறை

    முதலாமாண்டு,சன் கல்வியியல் கல்லூரி,

    இறச்சக்குளம்.
    Next Story
    ×