search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    உறையூரில் நம்பெருமாள்-கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
    X

    உறையூரில் நம்பெருமாள்-கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    • 6-ந்தேதி பங்குனித் தேர் திருவிழா நடக்கிறது.
    • 7-ந்தேதி ஆளும்பல்லக்கும் நடைபெற்று, விழா நிறைவடைகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். உறையூர் நாச்சியார் கோவில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் சார்பு கோவில் ஆகும்.

    இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை நாச்சியாரின் ஜென்ம நட்சத்திரமான பங்குனி ஆயில்யம் நட்சத்திரத்தன்று ஸ்ரீரங்கம் நம்பெருமாள் உறையூர் நாச்சியாருடன் மணக்கோலத்தில் பக்தர்களுக்கு சேர்த்தி சேவையில் காட்சியளிப்பார்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான நம்பெருமாள் கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதற்காக நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு தங்க பல்லக்கில் புறப்பட்டு காவிரி ஆற்றை கடந்து வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 11 மணிக்கு உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் மகாஜன உபய மண்டபத்தை சென்றடைந்தார்.

    அங்கிருந்து புறப்பட்டு நாச்சியார் கோவில் முன்மண்டபத்தை பகல் 12 மணிக்கு சென்றடைந்தார். பின்னர் முன் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சேர்த்தி மண்டபத்திற்கு 1.15 மணிக்கு சென்றடைந்தார். நம்பெருமாள் கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை பகல் 2 மணி முதல் இரவு 12 மணி வரை நடைபெற்றது.

    இந்த சேர்த்தி சேவையை காண வந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சேர்த்தி மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 1.30 மணிக்கு புறப்பட்டு ஸ்ரீரங்கம் வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு, அதிகாலை 4.30 மணிக்கு கண்ணாடி அறையை வந்தடைகிறார். வருகிற 5-ந்தேதி ஆண்டுக்கு ஒருமுறையே நடைபெறும் நம்பெருமாள்-ரெங்கநாச்சியார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது.

    6-ந்தேதி பங்குனித் தேர் திருவிழாவும், 7-ந்தேதி ஆளும்பல்லக்கும் நடைபெற்று, விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×