search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் ரத்னாங்கி சேவை
    X
    திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் ரத்னாங்கி சேவை

    திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் ரத்னாங்கி சேவை

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் உள்ளே எளிமையான முறையில் ரத்னாங்கி சேவை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் தேசிகர் பிரம்ம உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று பிரம்ம உற்சவத்தின் 10-வது நாள் திருவிழா நடந்தது. இவ்விழாவையொட்டி கோவிலுக்கு எதிரே உள்ள மலையில் ரத்னாங்கி சேவை வெகு விமரிசையாக நடைபெறும். ஆனால் நேற்று மலையில் ரத்னாங்கி சேவை நடைபெறவில்லை.

    மாறாக கோவில் உள்ளே எளிமையான முறையில் ரத்னாங்கி சேவை நடந்தது. இதையொட்டி யோக நரசிம்மர் அங்குள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் அவருக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து தேசிகருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் செய்யப்பட்டு மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அதன்பிறகு யோக நரசிம்மரை தேசிகர் சேவித்து வழிபடும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது.

    அதையடுத்து பெருமாள், தாயார், ராமர், ராஜகோபால் உள்ளிட்ட சாமிகளை வழிபடும் நிகழ்ச்சி நடந்தது. 2-வது சனிக்கிழமை பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதாலும், நேற்று புரட்டாசி மாதம் ஏகாதசி, திருவோணம் நட்சத்திரம் மற்றும் ரத்னாங்கி சேவை என்பதால் ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    Next Story
    ×