search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி கோவில் திருமஞ்சன ஊழியர்கள் வெள்ளிக்குடங்களில் புனித நீர் எடுத்து வந்த காட்சி.
    X
    ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி கோவில் திருமஞ்சன ஊழியர்கள் வெள்ளிக்குடங்களில் புனித நீர் எடுத்து வந்த காட்சி.

    ஸ்ரீரங்கம்ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் மிகக்குறைந்த எண்ணிக்கையில் கைங்கர்யபரார்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் விழாக்களுள் ஜேஷ்டாபிஷேகம் முக்கியமான ஒன்றாகும். ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் நம்பெருமாளுக்கு ஆண்டுதோறும் நடத்தப்படும். இந்த ஆண்டு நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

    வழக்கமாக காவிரி அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து தங்க மற்றும் வெள்ளிக்குடங்களில் புனிதநீர் சேகரித்து கோவில் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு உற்சவர் நம்பெருமாள் மற்றும் உப நாச்சியாருக்கு திருமஞ்சனம் நடைபெறும். ஆனால், தற்போது ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால், வழக்கமாக வீதியில் நடைபெறும் தங்கக்குடம் ஊர்வலம் நடைபெறவில்லை.

    விழாவையொட்டி நேற்று காலை காவிரி அம்மா மண்டபம் படித்துறையிலிருந்து வெள்ளிக்குடங்களில் புனிதநீர் சேகரித்து அதனை திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் சமூக இடைவெளி விட்டு தோளில் சுமந்து கோவிலை வந்தடைந்தனர். பின்னர் புனிதநீர் தங்கக்குடத்திற்கு மாற்றப்பட்டு யானை மீது வைத்து மேளதாளத்துடன் ரெங்கநாதர் சன்னதிக்கு எடுத்து வரப்பட்டது.

    அதைத்தொடர்ந்து மூலவர் ரெங்கநாதர், உற்சவர் நம்பெருமாள், உபநாச்சியார் திருமேனிகளில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு, எடை சரிபார்க்கப்பட்டது. சிறு பழுதுகள் செப்பனிட்டு தூய்மை செய்து மெருகூட்டப்பட்டன.

    ஸ்ரீரங்கம் கோவிலில் மூலவர் ரெங்கநாதருக்கு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் எதுவும் செய்யப்படுவதில்லை. அவரது திருமேனி சுதையினால் செய்யப்பட்டதாகும். இந்த சுதை திருமேனியை ஆண்டுக்கு இருமுறை பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் தனித்தைலத்தை பூசி பாதுகாத்து வருகின்றனர். இந்த தைலம் சந்தனம், சாம்பிராணி, அகில், வெட்டிவேர் உள்பட வாசனை திரவியங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

    தைலக்காப்பு நாட்களை தவிர மற்ற நாட்களில் இந்த திருமேனி மீது வஸ்திரங்கள், திருவாபரணங்கள் மட்டுமே இருக்கும். பூமாலை போன்றவை இவருக்கு அணிவிக்கப்படுவதில்லை. இவருக்கு பதிலாக திருமஞ்சனம், மாலை, மலர் அலங்காரம் போன்றவை உற்சவர் நம்பெருமாளுக்கே செய்யப்படுகின்றன. அந்தவகையில் இந்த ஆண்டிற்கான முதல் தைலக்காப்பு மூலவர் பெரிய பெருமாள் மீது பூசப்பட்டது. இதையடுத்து பெருமாளின் திருமுகம் தவிர்த்து திருமேனியின் இதர பகுதிகள் மெல்லிய துணிகளால் தற்காலிகமாக திரையிட்டு மறைக்கப்பட்டது. 48 நாட்களுக்கு பிறகு இந்த தைலம் உலர்ந்த பின் தான் பெரிய பெருமாளின் திருமேனியை முழுமையாக தரிசிக்க முடியும். அதுவரை பெரிய பெருமாளின் திருமேனியில் முகத்தை மட்டும் தரிசிக்க இயலும்.

    மூலவர் பெரிய பெருமாளுக்கு பதிலாக உற்சவர் நம்பெருமாள் மற்றும் உப நாச்சியார்களுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

    ஜேஷ்டாபிஷேகத்தின் ஒரு பகுதியாக கருவறை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் வருடாந்திர பராமரிப்பு மற்றும் சிறப்பு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஜேஷ்டாபிஷேகத்தில் அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்கும் வகையில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் இணைஆணையர், அறங்காவலர்கள் மற்றும் மிகக்குறைந்த எண்ணிக்கையில் கைங்கர்யபரார்கள் மட்டும் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.

    இன்று (சனிக்கிழமை) காலை திருப்பாவாடை எனப்படும் தளிகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது மூலஸ்தானத்துக்கு எதிரே உள்ள மண்டபத்தில் தரையில் விரிக்கப்பட்ட துணியில் பெருமளவில் குவிக்கப்படும் அன்ன பிரசாதத்தில் பலாச்சுளை, தேங்காய், மாங்காய், வாழைப்பழம், நெய் உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்ட சாதம் பெரிய பெருமாளுக்கு படைக்கப்படுகிறது. வருகிற 10 மற்றும் 11-ந் தேதிகளில் ரெங்கநாயகி தாயார் சன்னதியில், தாயார் ஜேஷ்டாபிஷேகம் மற்றும் திருப்பாவாடை ஆகியவை நடைபெறுகின்றன.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணு சீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் ஆகியோர் தலைமையில் ஸ்ரீரங்கம் கோவில் அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
    Next Story
    ×