search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆழத்து விநாயகர் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    ஆழத்து விநாயகர் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    ஆழத்து விநாயகர் கோவில் திருவிழா

    விருத்தாசலம் ஆழத்து விநாயகர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி மக பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். முன்னதாக கோவில் அருகே மணிமுக்தாற்றங்கரையில் உள்ள செல்லியம்மனுக்கு திருவிழா நடைபெறும். இந்த திருவிழா முடிவடைந்ததும் விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஆழத்து விநாயகர் கோவிலில் திருவிழா நடைபெறும்.

    அதன்படி செல்லியம்மன் கோவில் திருவிழா முடிவடைந்தது. இதையடுத்து ஆழத்து விநாயகர் கோவில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் காலை 9.30 மணிக்கு மேள, தாளங்கள் முழங்க கோவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கி வைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. மேலும் விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 25-ந்தேதி தேர்த்திருவிழாவும், 26-ந்தேதி தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.

    ஆழத்து விநாயகர் கோவிலில் திருவிழா முடிந்ததும் வருகிற 28-ந்தேதி விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அடுத்த மாதம் (மார்ச்) 4-ந்தேதி விருத்தகிரீஸ்வரர் விபசித்து முனிவருக்கு காட்சியளித்தல் என்ற ஐதீக திருவிழாவும், 7-ந்தேதி தேரோட்டமும், 8-ந்தேதி மாசி மக தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் முத்துராஜா, ஆய்வாளர் லட்சுமி நாராயணன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×