search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அழகிய கூத்தர்
    X
    அழகிய கூத்தர்

    செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் திருவாதிரை திருவிழா 1-ந்தேதி தொடங்குகிறது

    நெல்லை செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் திருவாதிரை திருவிழா வருகிற 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில் தாமிரபரணி நதிக்கரையில் இயற்கை சூழல் நிறைந்த இடத்தில் வயல்வெளிகளுக்கு இடையே செப்பறைக்கோவில் என்று அழைக்கப்படும் அழகிய கூத்தர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிரசபையாக விளங்குகிறது.

    இந்த கோவிலில் சிவபெருமான், தன்னுடைய நடன காட்சியை மகாவி‌‌ஷ்ணு, அக்கினிபகவான், அகஸ்தியர், வாமதேவ ரி‌ஷி, மணப்படை மன்னன் ஆகியோருக்கு அளித்தார். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி திருவாதிரை பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவாதிரை திருவிழா வருகிற 1-ந்தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    7-ந்தேதி காலை 10 மணிக்கு அழகிய கூத்தர் விழா மண்டபத்திற்கு எழுந்தருளலும், சிறப்பு பூஜையும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு சிவப்பு சாத்தியும், சிறப்பு பூஜையும் நடக்கிறது. 8-ந்தேதி காலை 10 மணிக்கு வெள்ளைசாத்தியும், மாலை 5 மணிக்கு பச்சை சாத்தியும், இரவு 7 மணிக்கு அழகிய கூத்தர் சிறப்பு வழிபாடும் நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 9-ந்தேதி (வியாழக்கிழமை) மதியம் 12 மணிக்கு நடக்கிறது.

    10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2 மணிக்கு மகாஅபிஷேகமும், 5.30 மணிக்கு கோ பூஜையும், தொடர்ந்து ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியும் நடக்கின்றன. மதியம் 2 மணிக்கு நடன தீபாராதனையும், 3 மணிக்கு அழகிய கூத்தர் திருவீதி உலாவும், மாலை 5 மணிக்கு பஞ்சமுக அர்ச்சனையும், இரவு 7.30 மணிக்கு அபிஷேகமும் நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு அழகியகூத்தர் தாமிர சபைக்கு எழுந்தருளுகிறார்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராம்குமார், தக்கார் முருகானந்தம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×