search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம் முடிந்தவுடன் சிறப்பு தீபாராதனை நடந்ததை படத்தில் காணலாம்.
    X
    நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம் முடிந்தவுடன் சிறப்பு தீபாராதனை நடந்ததை படத்தில் காணலாம்.

    நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.
    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 5-30 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 6 மணிக்கு காந்திமதி அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா சுற்றி வந்தார்.

    இதைத்தொடர்ந்து அம்பாள் சன்னதியில் உள்ள கொடி மரத்தில் காலை 7-30 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் குலவையிட்டனர். இதைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை வழிபட்டனர். இரவு 8 மணிக்கு காந்திமதி அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் வீதி உலா நடந்தது.

    விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜை, வீதி உலா நடக்கிறது. 4-ம் திருவிழாவான வருகிற 18-ந்தேதி காலை 8 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், காலை 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட காமதேனு வாகனத்தில் காந்திமதி அம்பாள் வீதி உலாவும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு வெள்ளி ரி‌‌ஷப வாகனத்தில் வீதிஉலாவும் நடக்கிறது.

    7-ம் திருவிழாவான 21-ந்தேதி காலை 8 மணிக்கு அம்பாள் தந்த பல்லக்கு வாகனத்தில் தவழ்ந்த திருக்கோலத்திலும், இரவு 8 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. 22-ந்தேதி காலை 8 மணிக்கு அம்பாள் வெள்ளி சப்பரத்தில் பச்சை சாத்திவீதி உலாவும், இரவு 8 மணிக்கு கிளி வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. 23-ந்தேதி காலை 8 மணிக்கு அம்பாள், செப்பு தேரில் பவனியும், இரவு 8 மணிக்கு தந்தப்பல்லக்கில் வீதி உலா நடக்கிறது. 24-ந்தேதி காலை 8 மணிக்கு அம்பாளுக்கு தங்க பல்லக்கில் தீர்த்தவாரியும், இரவு 9 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. நள்ளிரவு 1 மணிக்கு அம்மாள் தவக்கோலத்துடன் தங்கசப்பரத்தில் கம்பை நதிக்கு எழுந்தருளுகிறார்.

    25-ந்தேதி(வெள்ளிக்கிழமை) காலை 8-30 மணிக்கு சுவாமி ரி‌‌ஷப வாகனத்தில் அம்பாளுக்கு காட்சி கொடுக்க கோவிலில் இருந்து எழுந்தருளலும், 12 மணிக்கு காந்திமதி அம்பாளுக்கு காட்சி மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர் ரி‌‌ஷப வாகனத்தில் காட்சி கொடுக்கும் வைபவமும், மாலை மாற்றும் வைபவமும் நடக்கிறது.

    26-ந்தேதி அதிகாலை 4-30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. காலை 9.30 மணிக்கு சுவாமி-அம்பாள் பூம்பல்லக்கில் பட்டணப்பிரவேசம் வீதிஉலா நடக்கிறது. 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஊஞ்சல் திருவிழா நடக்கிறது. 29-ந்தேதி இரவு சுவாமி, அம்பாள் ரி‌‌ஷப வாகனத்தில் மனுவீடு பட்டணப்பிரவேசம் வீதிஉலா நடக்கிறது.
    Next Story
    ×