search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வடமதுரையில் சவுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, தாயாருடன் எழுந்தருளிய போது எடுத்த படம்.
    X
    வடமதுரையில் சவுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, தாயாருடன் எழுந்தருளிய போது எடுத்த படம்.

    சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

    ஆடித்திருவிழாவையொட்டி தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சாமி எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் நேற்று மாலை நடந்தது. இதையொட்டி மாப்பிள்ளை அழைப்பு, காசியாத்திரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    தொடர்ந்து திருக்கல்யாணம் நடந்தது. பின்பு சவுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தம்பதியர் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதன் பின்னர் பூப்பல்லக்கில் சாமி எழுந்தருளி வீதி உலா வந்தனர். திருக்கல்யாண வைபவத்தில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ஆடித்திருவிழாவையொட்டி நாளை (வியாழக்கிழமை) மாலை 4 மணி அளவில் தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைக்கின்றனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அனிதா, கோவில் செயல் அலுவலர் நாராயணி மற்றும் பட்டாச்சாரியார்கள் செய்து வருகின்றனர். விழாவில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை தாடிக்கொம்பு பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சன் தலைமையில் தாடிக்கொம்பு பேரூராட்சி பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் தம்பதியர் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    வடமதுரையில் உள்ள சவுந்தரராஜபெருமாள் திருக்கோவிலில் ஆடித் திருவிழா நடைபெற்று வருகிறது. 7-ம் நாளான நேற்று மாலை 8 மணியளவில் பெருமாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மூலஸ்தானத்தில் இருந்து உற்சவர் தாயார் சன்னதிக்கு அழைத்து வரப்பட்டார். அதன்பின் விஷ்வக்சேனர் ஆராதனை, வாசுதேவ புண்யாவஜனம், ஹோமம், சவனத் திருமஞ்சனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து பெருமாளுக்கு சீர் அழைத்து வரப்பட்டு பட்டு வஸ்திரம், திருமாங்கல்யம், பூமாலை சாற்றப்பட்டது. பின்னர் பெருமாளுக்கு தாயார் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவியருடன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. சவுந்தரராஜபெருமாள் தாயார், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி என 3 தேவியருடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    அதன்பின் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அதன்பின்னர் இரவு 9 மணியளவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் பெருமாள் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×