search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தேர் அலங்காரம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதை படத்தில் காணலாம்.
    X
    தேர் அலங்காரம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதை படத்தில் காணலாம்.

    தஞ்சை பெரிய கோவிலில் நாளை சித்திரை தேரோட்டம்

    உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
    மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றது. உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. மேலும் பரதநாட்டியமும், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.

    முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி தஞ்சை மேலவீதியில் உள்ள தேர்நிலையில் தேர் அலங்கரிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. தஞ்சை மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி வழியாக தேர் வலம் வரும். இதனால் அந்த சாலைகளில் குண்டும், குழியுமாக காணப்படும் பகுதிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் சாலையோரம் காணப்படும் மண் திட்டுகளும் பொக்லின் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. தேரோட்டத்திற்கு கூட்டம் அதிகமாக வரும். அப்படி வருபவர்கள் நெரிசலில் சிக்கி சாலையோரம் இருக்கும் சாக்கடைக்குள் விழுந்துவிடாமல் இருக்க கம்புகளால் ஆன தடுப்புகள் மேலவீதி மற்றும் வடக்குவீதியில் உள்ள சாக்கடை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.

    மின்கம்பங்களில் உள்ள மின்விளக்குகள் தேர் செல்லும்போது தட்டும் என்பதால் அந்த மின்விளக்குகளை எல்லாம் மாநகராட்சி பணியாளர்கள் திருப்பி வைத்துள்ளனர். மேலும் சாலையோரத்தில் வெள்ளை நிற வர்ணம் அடிப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேரோட்டத்தை பார்க்க வரும் மக்களின் தாகத்தை போக்க மேலவீதியில் ஆங்காங்கே மாநகராட்சி சார்பில் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×