search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்செந்தூர் கோவில் ஆவணித் திருவிழா: சுவாமி வெள்ளி யானை வாகனத்தில் வீதிஉலா
    X

    திருச்செந்தூர் கோவில் ஆவணித் திருவிழா: சுவாமி வெள்ளி யானை வாகனத்தில் வீதிஉலா

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவில் சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா வந்தனர்.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 30-ந் தேதி ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமியும், அம்பாளும் தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் ஒவ்வொரு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றனர். 4-ம் திருநாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமுத்து கிடா வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். மாலை 4 மணிக்கு சுவாமிக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது. பின்னர் மாலை 6.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளினர். தொடர்ந்து உள்மாட வீதி நான்கிலும், ரதவீதி நான்கிலும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    ஆவணித் திருவிழாவின் 5-ம் திருநாளான இன்று (திங்கட்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவிலில் சுவாமி குமரவிடங்க பெருமானும், வள்ளி அம்பாளும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி குடவருவாயில் தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் வீதிஉலா நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    Next Story
    ×