search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிறப்பு அலங்காரத்தில் தண்டுமாரியம்மனையும், குண்டம் இறங்கும் பக்தர்களையும், படத்தில் காணலாம்.
    X
    சிறப்பு அலங்காரத்தில் தண்டுமாரியம்மனையும், குண்டம் இறங்கும் பக்தர்களையும், படத்தில் காணலாம்.

    தண்டு மாரியம்மன் கோவில் குண்டம் விழா

    சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் குண்டம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்.
    சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் பழமைவாய்ந்த தண்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் விழா சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் விழா கடந்த 26-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கோவிலில் கம்பம் நடப்பட்டது. கம்பத்துக்கு அப்பகுதியை சேர்ந்த பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டு வந்தனர். மேலும், இளைஞர்கள் கம்பத்தை சுற்றி ஆடிவந்தனர்.

    நேற்று முன்தினம் அம்மன் அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் உற்சவ அம்மனை அலங்கரித்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

    இந்த ஊர்வலத்தில் ஏராளமான ஆண்கள், பெண்கள் கலந்துகொண்டனர். நேற்று காலை 6 மணி அளவில் பவானி ஆற்றுக்கு உற்சவ அம்மனை பக்தர்கள் கொண்டு சென்றனர். பின்னர் அங்கு பக்தர்கள் புனித நீராடிவிட்டு, உற்சவ அம்மனை கோவிலுக்கு கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து கோவிலில் காலை 7 மணி அளவில் 9 அடி நீளம், 3 அடி அகலத்தில் குண்டம் தயார் செய்யப்பட்டது. பின்னர் குண்டத்துக்கு கோவில் பூசாரி சிறப்பு பூஜை செய்தார். தொடர்ந்து பூசாரி முதலில் குண்டம் இறங்கினார்.

    அதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அம்மா தாயே தண்டு மாரியம்மா’ என்று பக்தி கோஷம் முழங்க தீ மிதித்தனர். மேலும், சிறுவர்-சிறுமிகள் குண்டம் இறங்கினார்கள். அதேபோல் ஒருசில பக்தர்கள் தங்களது கைக்குழந்தைகளுடனும், புனிதநீர் குடங்களை தலையில் வைத்துக்கொண்டு குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். மேலும் கால்நடைகளும் குண்டத்தில் இறக்கப்பட்டன.

    இன்று (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு கம்பம் பிடுங்கும் விழா நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. 13-ந்தேதி (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும், உற்சவ அம்மன் சப்பரத்தில் வைக்கப்பட்டு வீதிஉலாவும் நடக்கிறது.

    வருகிற 18-ந்தேதி (வியாழக்கிழமை) மறுபூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது.
    Next Story
    ×