

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனி கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில், உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் சில படங்களின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே இவர் இயக்குனர் சி.எஸ்.அமுதன் சி.எஸ். இயக்கத்தில் 'ரத்தம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ரத்தம்
இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிக்கிறார்கள். இன்பினிடி பிலிம் வென்டர்ஸ் சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், பி.பிரதீப், பங்கஜ் போரா & எஸ்.விக்ரம் குமார் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
'ரத்தம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றுவந்ததையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள இயக்குனர் சி.எஸ்.அமுதன் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
விஜய் ஆண்டனி - சி.எஸ்.அமுதன்
அதில், "நாங்கள் படப்பிடிப்பை முடித்து விட்டு இந்தியா திரும்பிவிட்டோம். போஸ்ட் புரொடக்ஷனின் பெரும்பகுதி முடிவடைந்த நிலையில், உங்களை திரையரங்குகளில் பார்க்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. தயக்கமின்றி ஆபத்தான ஸ்டண்டுகளை செய்த படக்குழுவினருக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.