வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்த சிரஞ்சீவி

வருண் தேஜ்- லாவண்யா திரிபாதி ஜோடிக்கு நேற்று ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.இவர்களுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சிரஞ்சீவி
சிரஞ்சீவி
Published on

தமிழில் சசிகுமாருடன் 'பிரம்மன்', சந்தீப் கிஷனுடன் 'மாயவன்' படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் லாவண்யா திரிபாதி. தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜும் லாவண்யா திரிபாதியும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

வருண் தேஜ் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சகோதரரும் நடிகருமான நாகபாபுவின் மகன். வருணும் லாவண்யாவும் மிஸ்டர், அந்தரிஷம் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக பேசப்பட்டது. ஆனால் இதை லாவண்யா திரிபாதி மறுத்திருந்தார்.

இதையடுத்து, இவர்களது நிச்சயதார்த்தம் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இரு வீட்டாரும் நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றனர். நிச்சயதார்த்தம் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே இத்தகவல் வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வருண் தேஜ்- லாவண்யா திரிபாதி ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சிரஞ்சீவி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "வருண் தேஜ்- லாவண்யா திரிபாதி உங்கள் நிச்சயதார்த்தத்திற்கு வாழ்த்துகள். நீங்கள் சிறந்த ஜோடியாக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் அன்பும் மகிழ்ச்சியும் பொழியும்" என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com