என் மலர்
திருநெல்வேலி
- தொடர்ந்து சிறிது நாட்களிலேயே மற்ற அனைவரும் கல்லை வெளியே எடுத்து விட்டனர்.
- அனைத்து நேரங்களிலும் வாயில் கல்லை போட்டு சுற்றித்திரிந்தேன்.
முக்கூடல்:
நெல்லை மாவட்டம் முக்கூடல் பாலகன் தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி. 80 வயதான முதியவர் ஆரம்ப காலங்களில் எலக்ட்ரீசியன், சைக்கிள் கடை என பல்வேறு தொழில்கள் செய்து வந்த நிலையில் தற்போது வயது முதிர்வு காரணமாக வீட்டிற்கு தேவையான சிறுசிறு வேலைகளை செய்து வருகிறார்.
அது மட்டுமின்றி அவரது பள்ளி பருவத்தில் இருந்து சுமார் 69 ஆண்டுகளாக வாயில் கல்லை வைத்து கொண்டே இருந்து வருகிறார்.
இதுகுறித்து கோவிந்தசாமி கூறுகையில், நான் 1956-ம் ஆண்டு முக்கூடல் சொக்கலால் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் போது, எனது வகுப்பில் மாணவர் ஒருவர் சரியாக பேச முடியாமல் தவித்ததால் பள்ளி ஆசிரியர் அந்த மாணவன் வாயில் சிறிய கல்லை போட்டு பேசுமாறு தெரிவித்தார். இதே போல் நாமும் செய்தால் என்ன என்று எண்ணி, நான் உட்பட எனது நண்பர்கள் 10 பேர் வாயில் கல்லை போட்டு சுற்றி திரிந்தோம். அதில் ஒரு நண்பன் விளையாடும் போது பல் உடைந்து கல்லை வெளியேற்றிவிட்டான். தொடர்ந்து சிறிது நாட்களிலேயே மற்ற அனைவரும் கல்லை வெளியே எடுத்து விட்டனர்.
ஆனால் எனக்கு வெளியே எடுக்க விருப்பமில்லை. சாப்பிடும் போது, குளிக்கும் போது, வேலை பார்க்கும் போது, தூங்கும் போது என அனைத்து நேரங்களிலும் வாயில் கல்லை போட்டு சுற்றித்திரிந்தேன். இவ்வாறு சுமார் 69 ஆண்டுகளாக இதை போல் வாயில் கல்லை போட்டுள்ளேன்.
ஒருமுறை நான் தூங்கி கொண்டிருக்கும் போது வாயில் இருந்த கல்லை எனது மனைவி எடுத்து நெல் மூட்டையில் போட்டு விட்டார். அதனை தேடி எடுத்து மீண்டும் போட்டுக் கொண்டேன் என தெரிவித்தார்.
இது குறித்து அவரது அண்ணன் மகன் பிரசாத் கூறுகையில், எனது சித்தப்பா சிறுவயதில் இருந்தே வாயில் கல்லை போட்டுள்ளார். இதனை நாங்கள் ஒரு சாதனையாகவே பார்க்கிறோம் என்றார்.
- தமிழக அரசு வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்தி இருந்தால் சட்டம் தன் கடமையை செய்திருக்கும்.
- மத்திய அரசு தான் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குகிறது.
நெல்லை:
நெல்லையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கரூரில் 41 பேர் இறந்த சம்பவத்திற்கு தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்த நிலையில், விசாரணைக்கு முன்பே நடிகர் விஜய் "நான் சென்னையில் தான் இருக்கிறேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்" என வீரவசனம் பேசினார்.
தற்போது சி.பி.ஐ. 12-ந்தேதி ஆஜராக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வசனத்தை இப்போது பயன்படுத்துவாரா? அல்லது பா.ஜ.க.வுடன் இணைந்து நாடகம் ஆடுகிறாரா? என்று தெரியவில்லை. உச்சநீதிமன்றம் வரை சென்று சி.பி.ஐ. விசாரணையை கேட்டாலே நியாயம் கிடைத்துவிடும் என்று நினைப்பது தவறு. ஆந்திராவில் ஒரு ரசிகர் இறந்ததற்கு ஒரு நடிகரே கைது செய்யப்பட்டார். தமிழக அரசு இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்தி இருந்தால் சட்டம் தன் கடமையை செய்திருக்கும்.
மத்திய அரசு தான் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குகிறது. அப்படியிருக்க, படம் வெளியாவதில் சிக்கல் இருப்பது போலவும், அதை தொண்டர்கள் மத்தியில் ஒரு கொதிநிலையை உருவாக்குவதற்காகவும் பா.ஜ.க.வும் விஜய்யும் இணைந்து செயல்படுவதாக தெரிகிறது.
நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கும், பிரதமருக்கும் பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது என பா.ஜ.க.வை சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி பலமுறை கூறியும் அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அதுபோன்று காங்கிரஸ் கட்சியில் பலர் கூட்டணி குறித்து பேசினாலும் தலைமை நல்ல முடிவு எடுப்பார்கள் என்றார்.
- இருவரும் வீட்டின் வரவேற்பு அறையில் அமர்ந்து பேசிக்கொண்டே டி.வி. பார்த்துள்ளனர்.
- மதுபோதையில் இருந்த சபரிராஜன் ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாணவனை சரமாரியாக வெட்டினார்.
பணகுடி:
நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் லெட்சுமணன்(வயது 15). இவன் அங்குள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இவனது வீட்டின் எதிர் வீட்டில் வசிப்பவர் ரத்தின வடிவேல். இவரது மகன் சபரி ராஜன்(23).
இவர்கள் 2 பேரின் குடும்பத்தினரும் உறவினர்கள் போலவே எப்போதும் சகஜமாக பழகி வந்துள்ளனர்.
இதனால் லெட்சுமணன் அடிக்கடி சபரிராஜன் வீட்டுக்கு சென்று விளையாடுவது உண்டு. கடந்த 5-ந்தேதி லெட்சுமணன் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நிலையில், சபரிராஜன் அழைத்ததன் பேரில் அவரது வீட்டுக்கு லெட்சுமணன் சென்றுள்ளார்.
இருவரும் வீட்டின் வரவேற்பு அறையில் அமர்ந்து பேசிக்கொண்டே டி.வி. பார்த்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில், மதுபோதையில் இருந்த சபரிராஜன் திடீரென ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாணவனை சரமாரியாக வெட்டினார்.
இதில் படுகாயம் அடைந்த மாணவன் லெட்சுமணன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினான். உடனே சபரிராஜன் அதிர்ச்சி அடைந்து தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று பணகுடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
அங்கு மாணவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு அவன் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை லெட்சுமணன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தான்.
ஏற்கனவே அரிவாள் வெட்டு குறித்த புகாரின் பேரில் பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரிராஜனை அதிரடியாக கைது செய்திருந்தனர.
இந்நிலையில், மாணவன் இறந்து விட்டதால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தி.மு.க. அரசு எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்கிறது.
- 100 நாள் வேலைத்திட்டத்தை தி.மு.க. தவறாக பயன்படுத்தி வருகிறது.
நெல்லை:
நெல்லையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பை வரவேற்கிறேன்.
* தீபத்தூண் வழக்கில் அன்றே உத்தரவை நடைமுறைப்படுத்தி இருந்தால் பிரச்சனை இருந்திருக்காது.
* தி.மு.க. அரசு எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்கிறது. பின்னர் நீதிபதிக்கு எதிராகவே தீர்மானம் நிறைவேற்றுகிறது.
* 100 நாள் வேலைத்திட்டத்தை தி.மு.க. தவறாக பயன்படுத்தி வருகிறது.
* வேலைக்குச் செல்லாமலேயே தவறான நபர்களுக்கு 100 நாள் வேலையில் ஊதியம் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.
- பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை.
- 2-வதாக ஆற்றில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்ற வேண்டும்.
நெல்லை:
தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தக்கோரி தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராஜ், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் தாமிரபரணி ஆற்றின் நிலையை விரிவாக ஆய்வு செய்து பொருத்தமான சீரமைப்பு நடவடிக்கைகளை பரிந்துரை செய்வதற்காக ராஜஸ்தானை சேர்ந்த நீர் பாதுகாப்பு நிபுணர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜேந்திர சிங்கை ஆணையராக நியமித்தனர்.
இந்த நிலையில் அவர் வழக்கு தொடுத்த முத்தாலங்குறிச்சி காமராசுடன் நெல்லைக்கு வந்து தாமிரபரணி ஆற்றில் பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை ஆற்று நீர் மாசுபடும் இடங்கள், அதனை சரி செய்ய மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் எடுத்த நடவடிக்கைகள், பாதாள சாக்கடைகள் கழிவு நீர் சென்று சேரும் ராமையன்பட்டி பகுதி உள்ளிட்ட இடங்களை ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர் நகர் பகுதிக்குள் தாமிரபரணி பாய்ந்தோடும் சிந்துபூந்துறை பகுதியில் கழிவுநீர் நேரடியாக தாமிரபரணி ஆற்றில் கலக்கும் இடங்களை ஆய்வு செய்தார். அங்கிருந்த பொதுமக்களிடம் பாதிப்புகள் குறித்து விளக்கம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நதியை தூய்மைப்படுத்த வழிமுறைகளை ஆராய ஐகோர்ட்டு எனக்கு பொறுப்பு வழங்கியுள்ளது. நதி மிகுந்த மாசடைந்து இருப்பதை கண்டேன். உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் நடைபெற்றுள்ள சுத்தப்படுத்தும் பணிகளில் ஊழல் ஏற்பட்டு விட்டது. பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை.
மேலும் நீதிமன்றத்திற்கு 3 பரிந்துரைகளை செய்ய இருக்கிறேன். முதலாவதாக ஆறு எங்கு உற்பத்தியாகி எந்தெந்த பகுதிகள் வழியாக எங்கு வரை செல்கிறது, அதில் எந்தெந்த இடங்களில் கழிவுநீர் கலக்கிறது, ஆற்றின் திசைகள் மாறுபாடு ஏற்பட்டுள்ளதா? என்பதை டிஜிட்டல் மேப்பிங் செய்ய வேண்டும்.
2-வதாக ஆற்றில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்ற வேண்டும். பாகுபாடு இன்றி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் தாமிரபரணி ஆறு பாதுகாப்பு திட்டத்திற்கு உடனடியாக ஒரு சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட வேண்டும். அவரது கட்டுப்பாட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மக்கள்தொகை மற்றும் தொழிற்சாலைகளின் பெருக்கத்தால் மாசு அதிகரிக்கிறது. சுத்தமான நதி நீரில் கழிவுநீரை கலப்பது மிகப்பெரிய தவறு. பாபநாசம் முதல் கடல் வரை வாழும் மக்களிடம் 'நதி அறிவு' குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்கள் நதியை தங்கள் ஆரோக்கியத்தின் ஒரு பகுதியாக கருதினால் மட்டுமே தூய்மைப்பணிகள் முழுமை பெறும்.
மிகக்குறைந்த மழையுள்ள ராஜஸ்தானில் என்னால் 23 நதிகளை மீட்க முடிந்திருக்கும் போது, நல்ல மழையுள்ள இந்த பகுதியில் தாமிரபரணியை மீட்பது மிகவும் எளிதான காரியம். இதற்கு நீதித்துறை, சட்டமன்றம் மற்றும் நிர்வாகம் என அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
தாமிரபரணி நதி குறித்த எனது முழுமையான ஆய்வறிக்கையை இன்னும் 20 முதல் 30 நாட்களுக்குள் ஐகோர்ட்டில் சமர்ப்பிக்க உள்ளேன். அதன் மூலம் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றார்.
அவருடன் உதவியாளர் பாலாஜி, மொழிபெயர்ப்பாளர்கள் வினோத், இளங்கோ, சமூக ஆர்வலர் கிருஷ்ண குமார், நம் தாமிரபரணி நல்லபெருமாள், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு தாமிரபரணி பாதுகாப்பு குறித்து ஆலோசனை செய்தனர்.
- காயிதே மில்லத் பெயரில் நூலக பணிகளை விரைந்து நடத்தி அதனை திறக்க வேண்டும்.
- எங்களுடைய கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்போம்.
நெல்லை வண்ணார்பேட்டை கொக்கிரகுளத்தில் உள்ள தனியார் மஹாலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பூத் கமிட்டி மாநாடு இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் பூத் கமிட்டி கட்டமைப்பை வலுப்படுத்த முயற்சி செய்து வருகிறோம். 2026 சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கணக்கை தொடங்குகிற விதத்தில் எங்கள் பணிகள் தொடங்கி இருக்கிறது. வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் சட்டசபையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள் குரல் எழுப்புவார்கள்.
தாமிரபரணியை காக்க அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். ஆணயத்தை அமைக்க வேண்டும். பொருநை அருங்காட்சியகம் நெல்லைக்கு பெருமை. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திறந்து வைத்தார். அவருக்கு நன்றி, பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல காயிதே மில்லத் பெயரில் நூலக பணிகளை விரைந்து நடத்தி அதனை திறக்க வேண்டும்.
எங்களுடைய கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்போம். தமிழகத்தில் முழுவதுமாக மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். நடிகர் விஜய்யின் தாக்கம் தேர்தல் முடிந்த பிறகு தான் தெரியும். அரசியல் பொதுவெளியில் செய்யக்கூடிய விஷயம். அதை வீட்டுக்குள் இருந்து கொண்டு செய்ய முடியாது. நடிகர் விஜய்க்கு கட்டுப்பாடுகள் விதிப்பது சரிதான்.
பா.ஜ.கவால் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழகத்தில் வர முடியவில்லை என்ற காரணம் என்னவென்றால் மக்கள் அனைத்தும் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். மாநில பொதுக்குழுவைக் கூட்டி தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வண்ணார்பேட்டையில் 2 ஓட்டல்கள், சந்திப்பு பகுதியில் 2 ஓட்டல்களில் புத்தாண்டையொட்டி நள்ளிரவு கொண்டாட்டங்கள் நடக்கும்.
- அதிக வழக்குகளில் கைதாகி தற்போது வெளியில் சுற்றித் திரியும் நபர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
நெல்லை:
ஆங்கில புத்தாண்டு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாதவாறு தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நெல்லை மாநகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் இன்று இரவில் இருந்து நாளை மறுநாள் அதிகாலை வரையிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, வாகன சோதனை நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நெல்லை மாநகர பகுதியில் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட உள்ளனர். நாளை காலை முதல் 1-ந்தேதி இரவு வரையிலும் போலீஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும். விடிய விடிய வாகன சோதனை நடத்தப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம், கே.டி.சி.நகர் மேம்பாலம், சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் உள்ளிட்ட இடங்களிலும் இளைஞர்கள் ரேஸ் செல்வதை தடுக்க ரோந்து நடத்தப்பட உள்ளது.
நெல்லை மாநகரில் வண்ணார்பேட்டையில் 2 ஓட்டல்கள், சந்திப்பு பகுதியில் 2 ஓட்டல்களில் புத்தாண்டையொட்டி நள்ளிரவு கொண்டாட்டங்கள் நடக்கும். இதனால் அங்கும் சோதனை நடத்தப்பட உள்ளது.
இதேபோல் மாவட்ட எல்லைகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உத்தரவிட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் தீவிரமாக பரிசோதனை செய்து அனுப்பிட வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார். புறநகர் பகுதிகளில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கூடங்குளம் அணுமின் நிலையம், காவல்கிணறு இஸ்ரோ ஆராய்ச்சி மையம் மற்றும் முக்கிய வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநகரில் புத்தாண்டையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்கள், அதிக வழக்குகளில் கைதாகி தற்போது வெளியில் சுற்றித் திரியும் நபர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதில் பாளையங்கோட்டை போலீஸ் நிலையம் உள்பட சில போலீஸ் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலில் உள்ள ரவுடிகள் 10 பேர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரம் மாவட்டத்தில் இதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். சுமார் 1,345 பேர் ரவுடிகள் பட்டியலில் உள்ள நிலையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவின்பேரில், அவர்களை அந்தந்த உட்கோட்டத்தில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டுகளின் மேற்பார்வையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் எனவும், அந்த ரவுடிகளால் அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கும் என புகார்கள் வந்தால் உடனடியாக அவர்களை கைது செய்திடவும் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.
- இன்று முதல் சுற்றுலா பயணிகள் அங்கு குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
- சுமார் 37 நாட்கள் தடைக்கு பின்னர் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இங்கு ஆண்டின் அனைத்து மாதத்திலும் தண்ணீர் விழும். இந்த அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்வது வழக்கம்.
இதனிடையே வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, ஊத்து எஸ்டேட் பகுதிகளில் மழை பெய்து வந்ததன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடந்த நவம்பர் மாதம் 18-ந்தேதி சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை சார்பில் அங்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் புறநகர் பகுதிகளில் மலை ஓய்ந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அவ்வப்போது லேசான மழை பெய்து வந்ததால் மணிமுத்தாறு அருவியில் தொடர்ந்து நீர்வரத்து குறையாமல் இருந்து வந்தது.
இதன் காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மலைப்பகுதியிலும் மழை குறைந்து விட்டதன் காரணமாக இன்று அருவியில் நீர்வரத்து குறைந்து குளிப்பதற்கு ஏற்ற சூழல் உருவானது.
இதனால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் அங்கு குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. சுமார் 37 நாட்கள் தடைக்கு பின்னர் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதே நேரம் கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்கி இருப்பதால் சுற்றுலா பயணிகள் அருவியை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளனர்.
- இந்த கட்டிடத்தின் முகப்புகளிலும், உட்பகுதிகளிலும் உள்ளூர் கவின்கலைகள் மிளிர்கின்றன.
- தமிழ்நாட்டின் தொன்மையை அறிய அறிவியலோடும், இயற்கையோடும் இணைந்து அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நெல்லை:
நெல்லையில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை இன்று முதல் பொதுமக்கள் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
தமிழகத்தின் தொன்மையான வரலாற்றினை உலகறியசெய்யும் பொருட்டு கொற்கை, ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் துலுக்கர்பட்டி ஆகிய இடங்களில் கிடைத்த தொல்பொருட்களை காட்சிப்படுத்த பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 20-ந்தேதி திறந்து வைத்தார்.
இந்த அருங்காட்சியக வளாகத்தில் அறிமுகக்கூடம், சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை ஆகிய கட்டிடத்தொகுப்புகள் 54,296 சதுரஅடிப் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டிடத்தொகுப்பும் முற்றம், தாழ்வாரம் போன்றவற்றுடன் தரைத்தளம் மற்றும் முதல் தளம் என்ற வகையில் இப்பகுதியின் கட்டிடக்கலையைப் பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன.
இந்த கட்டிடத்தின் முகப்புகளிலும், உட்பகுதிகளிலும் உள்ளூர் கவின்கலைகள் மிளிர்கின்றன. இவற்றுடன் நிகழ்த்து கலைகளைக் காணும் திறந்த வெளி அரங்கம், தொல்லியல் மாதிரிகள் மற்றும் உள்ளூர் கைவினைப்பொருட்களின் விற்பனையகம், மின்கலத்தால் இயங்கும் வாகனம், பொதுமக்கள் செல்ல எளிதான நடைபாதை, இயற்கையை ரசிக்க ஆங்காங்கே மரங்கள், குறுஞ்செடிகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், இளைப்பாற ஆங்காங்கே இருக்கைளும் அமைக்கப்பட்டு தமிழ்நாட்டின் தொன்மையை அறிய அறிவியலோடும், இயற்கையோடும் இணைந்து அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொருநை அருங்காட்சிகத்தினை இன்று முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது.
மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் பொருநை அருங்காட்சியகத்தினை பார்வையிடுவதற்கு பொதுமக்கள் சென்று பார்வையிட வசதியாக பஸ்கள் இயக்கப்படவுள்ளது.
இன்று நெல்லை சந்திப்பில் இருந்து பஸ் இயக்கப்படுகிறது. பொருநை அருங்காட்சியம் செல்வதற்கு திங்கள் முதல் சனி வரை தினசரி நெல்லை சந்திப்பில் இருந்து 11 நகர பஸ்களும், விடுமுறை நாட்களில் கூடுதலாக 7 நகர பஸ்களும், நெல்லை சந்திப்பிலிருந்து வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், சாராள் தக்கர் கல்லூரி, விலக்கு வழியாக பொருநை அருங்காட்சியகத்திற்கு இயக்கப்படுகிறது. அருங்காட்சியகத்தில் அதே வழியில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்திற்கும் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கீழடி அகழாய்வு அறிக்கையை இன்று வரை வெளியிடாமல் மத்திய அரசு தடுத்து வைத்திருக்கிறது.
- 40% நிதியை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என நிதிச்சுமையை அதிகரித்துள்ளனர்.
நெல்லையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பொருநை, தமிழரின் பெருமை; இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு. தெற்கில் இருந்துதான் வரலாற்றை எழுத வேண்டும்
என்ற நமது கூற்றுக்கு சான்றாக உள்ளது.
கீழடி அகழாய்வு அறிக்கையை இன்று வரை வெளியிடாமல் மத்திய அரசு தடுத்து வைத்திருக்கிறது.
கீழடி, பொருநை அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட வேண்டும்.
தனித்துவமான தமிழர்களின் வரலாற்று பெருமையை வெளிக்கொணரும் எந்த ஆய்வும் நடைபெறக்கூடாது என மத்திய அரசு தடுக்கிறது.
இல்லாத சரஸ்வதி நதி நாகரீகத்தைத் தேடி அலைவோருக்கு, கண் முன்னே நாம் வெளியிடும் ஆய்வுகள் தெரியவில்லை. அதற்காக நாம் விட்டுக் கொடுக்க முடியுமா? 2000 ஆண்டுகால சண்டை இது, தோற்றுப் போக மாட்டோம்.
100 நாள் வேலைத் திட்டத்தை மத்திய அரசு முடக்கியது குறித்து, போலி விவசாயி எடப்பாடி பழனிசாமி மூச்சு கூட விடவில்லை.
காந்தியின் பெயரை நீக்கியதுடன், 40% நிதியை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என நிதிச்சுமையை அதிகரித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு அந்த நூலகத்திற்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.
- நூலகம் அமைப்பது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு நடத்தினார்.
தென்னிந்தியாவின் ஆகஸ்போர்டு என அழைக்கப்படும் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவ னங்கள் அதிகம் உள்ளன.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் தேசிய, மாநில அளவில் நெல்லை மாவட்டம் கல்வியில் சாதனை படைத்து வருகிறது. உயர் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளும் நெல்லையில் அதிகமாக உள்ளனர்.
நெல்லை, தூத்துக்குடி தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள், விஞ்ஞானிகள் என பலர் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உயர் அறிவியல் நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.
இத்தகைய சிறப்புமிக்க பாளையங்கோட்டையில் அண்ணா, கலைஞர் நூற்றாண்டு நூலகம் போன்று அனைத்து வசதிகளுடன் கூடிய நூலகம் மாணவ-மாணவிகள், போட்டி தேர்வாளர்கள், உயர் கல்வி கற்பவர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் அமைக்க வேண்டுமென்று பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்து பேசினார். மேலும் முதலமைச்சரிடமும் இது தொடர்பாக கோரிக்கை மனு அளித்தார்.
இதையடுத்து பாளையங்கோட்டையில் ரூ.98 கோடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய நூலகம் அமைக்கப்படும் என கடந்த மார்ச் மாதம் 14-ந்தேதி சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு அந்த நூலகத்திற்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து நூலகம் அமைப்பதற்காக பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்திற்கு கீழ் பகுதியில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான இடத்தை நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என். நேரு பார்வையிட்டு தேர்வு செய்தார். அந்த இடத்தில் நூலகம் அமைப்பது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு நடத்தினார்.
இதைத்தொடர்ந்து அங்கு 3 ஏக்கர் நிலத்தில் 69 ஆயிரத்து 414 சதுர அடி பரப்பளவில் நூலகம் அமைப்பதற்கு இடம் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று பாளையங்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்த நூலகம் தரை தளம் மற்றும் 4 தளங்களுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்படுகிறது. இதில் உயர் கல்வி கற்பதற்கான புத்தகங்கள், போட்டித் தேர்வுக்குரிய புத்தகங்கள், போட்டி தேர்வாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் அரங்கம், மாநாட்டு கூடம் வசதி, குழந்தைகள், மாணவர்கள், முதியவர்கள் படிப்பதற்கு தனி வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இடம் பெறுகிறது.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் போன்றே அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படு கிறது. இங்கு போட்டித் தேர்விற்கு மாணவர்கள் தயாராகும் வகையில் 1 லட்சம் புத்தகங்கள் இடம் பெறுகிறது. இந்த நூலகம் தென்னகத்தின் ஆக்ஸ்போர்டுக்கு மேலும் ஒரு பெருமையை சேர்க்கும் என கல்வியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- பொருநை அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை என 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளது.
- ஐந்திணை நிலங்களின் வாழ்வியலை 5டி திரையரங்கில் காணலாம்.
நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள பொருநை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய பொருநை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள பொருநை அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை என 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. பொருநை அருங்காட்சியகத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் கட்டிடத்தில் 1,585 பழங்கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கொற்கை கட்டிடத்தில் பாண்டியர்களின் கடல் வணிகம், முத்துக்குளித்தல் தொடர்பாக பழங்கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சிவகளை கட்டிடத்தில் 5,300 ஆண்டுக்கு முந்தைய இரும்பு உருக்கும் தொழில்நுட்பம், நெல் மணிகள், பழங்கால பொருட்களை காணலாம்.
தமிழர்களின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணை நிலங்களின் வாழ்வியலை 5டி திரையரங்கில் காணலாம். பொருநை அருங்காட்சியகத்தில் கடல் வழி வணிகம், முத்துக்குளித்தல் போன்றவற்றை திரைப்பட பாணியில் 3டி தொழில்நுட்பத்தில் காணலாம்.
பண்டைய தமிழர்களின் பாரம்பரிய முறையில் முற்றம், தாழ்வாரம் அமைத்து பொருநை அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. பொருநை அருங்காட்சியகத்தில் திறந்தவெளி திரையரங்கு, மூலிகை தோட்டம், கைவினைப்பொருட்கள் விற்பனையகம் உள்ளது.
மலையடிவாரத்தில் அருங்காட்சியகம் அமைந்துள்ளதால் அங்கிருந்து நெல்லை மாநகர் அழகை பார்க்கும் வசதியும் உள்ளது.






