தொழில்நுட்பம்
போலி செய்திகளை முடக்க வாட்ஸ்அப் அதிரடி நடவடிக்கை
வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் நடவடிக்கையாக வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் உலகம் முழுக்க 20 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. #WhatsApp
ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் நிறுவனம் போலி செய்திகளை முடக்கும் பணிகளை மேற்கொள்ள உலகம் முழுக்க 20 ஆய்வு குழுக்களை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த குழுவில் இந்தியாவை சேர்ந்தவர் ஆராய்ச்சியாளர்களும் அடங்கியுள்ளனர்.
வாட்ஸ்அப் நியமித்திருக்கும் புதிய ஆய்வு குழு செயலியில் போலி செய்திகள், தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கும் பணிகளில் ஈடுபடுவர் என்றும், இந்த நடவடிக்கை மூலம் போலி செய்திகளை முடக்க முயற்சிப்பதாக வாட்ஸ்அப் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து "வாட்ஸ்அப் விஜிலன்ட்ஸ்? வாட்ஸ்அப் மெசேஜ்கள் மற்றும் மொபைல் வன்முறை" என்ற தலைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்குழுவில் சகுந்தலா பனாஜி, அனுஷி அகர்வால் மற்றும் நிஷா பசன்ஹா உள்ளிட்டோர் இடம்பெற்று இருக்கின்றனர்.
இந்த ஆய்வு மூலம் வாட்ஸ்அப் பயனர்கள் வாட்ஸ்அப் சார்ந்த கொலை சம்பவங்களை எவ்வாறு புரிந்து கொண்டு அதற்கான தீர்வுகளை கண்டறிந்து கொள்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் தளத்தில் போலி தகவல்கள், சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரப்பப்படுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு அந்நிறுவனத்திற்கு உத்தரவிட்டு இருக்கிறது.
போலி செய்திகளை முடக்கும் பணிகளை ஈடுபட முன்னர் குறிப்பிடப்பட்டு இருப்பவர்களை தவிர வினீத் குமார், அம்ரிதா சவுத்ரி மற்றும் ஆனந்த் ராஜே உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரே குழுவாக இணைந்து டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் டிஜிட்டல் சமூகங்களிடையே தவறான தகவல் பரப்பப்படுவதால் ஏற்படும் தாக்கம் பற்றி ஆய்வு செய்கின்றனர்.
இவ்வாறு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க 20 ஆய்வு குழுவினர் போலி செய்திகளை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர். இதற்கென வாட்ஸ்அப் நிறுவனம் ஒவ்வொரு ஆய்வு குழுவினருக்கும் அதிகபட்சம் 50,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ,36,30,300) வரை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.