தொழில்நுட்பம்
பிரத்யேக கேமரா ஷட்டர் கொண்டிருக்கும் கேலக்ஸி நோட் 9
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் பிரத்யேக கேமரா ஷட்டர் பட்டன் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 9-ம் தேதி அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் குறித்து ஏற்கனவே வெளியான தகவல்களில் கேலக்ஸி நோட் 8 போன்ற வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட கேமரா மாட்யூல், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 512 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என கூறப்பட்டது.
சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க பிரத்யேக பட்டன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தற்சமயம் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் டிஜிட்டல் அசிஸ்டன்ட் சேவையான பிக்ஸ்பியை இயக்க பிரத்யேக பட்டன் வழங்கப்பட்டிருக்கிறது.
தென் கொரியாவில் இருந்து வரும் தகவல்களின் படி சாம்சங் நிறுவனம் பெர்ஃப்க்ட் கேப்ச்சர் டெக்னாலஜி (Perfect Capture Technology) பெயரில் காப்புரிமை பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதே தகவல்களில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் பிரத்யேக கேமரா அல்லது ஸ்கிரீன் கேப்பச்சர் கன்ட்ரோல்களை வழங்கும் பட்டன் கொண்டிருக்கும் என்றும் இந்த பட்டன் ஸ்மார்ட்போனின் இடதுபுறத்தில் பொருத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
கோப்பு படம்
மேலும் இந்த பட்டன் கொண்டு பிரைமரி கேமரா அல்லது திரையின் மூலம் வீடியோக்களை பதிவு செய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது. சமீப காலங்களில் ஸ்மார்ட்போன்களில் வழக்கமாக காணப்படும் பட்டன்கள் மற்றும் அவசிய போர்ட்களும் நீக்கப்படும் நிலையில், சாம்சங் வித்தியாச முயற்சியாக இருக்கும் வகையில் புதிய பட்டனை சேர்க்க இருக்கிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, 18:5:9 ரக ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 அல்லது சாம்சங் எக்சைனோஸ் 9810 சிப்செட், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது.