உலகம்
அகதிகள் முகாமில் பயங்கரவாத தாக்குதல்: 60 பேர் பலி
கிழக்கு காங்கோவில் தீவிரமாக செயல்பட்டு வரும் கோட்கோ போராளிகள், இடூரியில் நூற்றுக்கணக்கான பொதுமக்களைக் கொன்றுள்ளனர்.
டிஆர் காங்கோ நாட்டின் இடூரி மாகாணத்தில், அகதிகள் தங்கியிருந்த முகாமை குறிவைத்து இன்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சவோ முகாமில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 60 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும், உள்ளூரை சேர்ந்த மனிதநேய குழுவினர் தெரிவித்துள்ளனர். கோட்கோ என்ற பயங்கரவாத அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிழக்கு காங்கோவில் நிலம் மற்றும் வளங்கள் தொடர்பாக நீண்டகாலமாக பதற்றம் நிலவி வரும் நிலையில், அங்கு தீவிரமாக செயல்படும் போராளி அமைப்புகளில் கோட்கோவும் ஒன்றாகும். இந்த போராளிகள், இடூரியில் நூற்றுக்கணக்கான பொதுமக்களைக் கொன்றுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.