செய்திகள்
தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித்

ஆப்கானிஸ்தான் அரசை அங்கீகரிக்க தவறினால் உலகுக்கே பிரச்சினை ஏற்படும்: தலிபான்கள் எச்சரிக்கை

Published On 2021-11-01 02:02 GMT   |   Update On 2021-11-01 02:02 GMT
போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு நிதியளிப்பதாக தெரிவித்துள்ள சீனா, அண்டை நாடான பாகிஸ்தான் வழியாக சீன சந்தைகளுக்கு ஆப்கானிஸ்தானின் ஏற்றுமதிகளை எடுத்து செல்லவும் உறுதியளித்துள்ளது.
காபூல் :

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையில் அமைந்துள்ள இடைக்கால அரசை உலக நாடுகள் எதுவும் முறைப்படி அங்கீகரிக்கவில்லை. சீனாவும் பாகிஸ்தானும் மட்டுமே தலிபான்களுடன் நல்லுறவை பேணி வருகின்றன. மேலும் தலிபான்களுடன் முறையான உறவை ஏற்படுத்துமாறு உலக நாடுகளுக்கு இந்த 2 நாடுகளும் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றன.

இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அரசை அங்கீகரிக்க தவறுவது பிராந்தியத்தில் அமைதியற்ற நிலையை ஏற்படுத்துவதுடன் உலகுக்கும் பிரச்சினைகளை உருவாக்கி விடும் என்று தலிபான்கள் அமெரிக்காவை எச்சரித்துள்ளனர். இதுகுறித்து தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறியதாவது:-

அமெரிக்காவுக்கு நாங்கள் சொல்லவரும் செய்தி என்னவென்றால், எங்கள் அரசை அங்கீகரிக்காமல் இருப்பது தொடர்ந்தால், ஆப்கானிஸ்தான் பிரச்சினை தொடரும். அது பிராந்தியத்தின் பிரச்சினை. பின்னர், உலக பிரச்சினையாக கூட மாறும்.

தலிபான்களும் அமெரிக்காவும் கடந்த முறை போருக்குச் சென்றதற்குக் காரணம் இருவருக்கும் முறையான தூதரக உறவுகள் இல்லாததே. போருக்கு காரணமான பிரச்சினைகளை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்திருக்கலாம், அரசியல் சமரசத்தின் மூலமும் தீர்த்திருக்கலாம். எங்கள் அரசுக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்பது ஆப்கன் மக்களின் உரிமையாகும். போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு நிதியளிப்பதாக தெரிவித்துள்ள சீனா, அண்டை நாடான பாகிஸ்தான் வழியாக சீன சந்தைகளுக்கு ஆப்கானிஸ்தானின் ஏற்றுமதிகளை எடுத்து செல்லவும் உறுதியளித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News