செய்திகள்
அமீரகத்தில் 18 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர்
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகளில் 1,724 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அபுதாபி:
அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 777 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 1,724 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 944 ஆக உயர்ந்தது. தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது தொடர்ந்து ஒரு வாரமாக 2 ஆயிரத்துக்கு கீழ் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,682 பேர் நேற்று ஒரே நாளில் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக தற்போது அமீரகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 11 ஆயிரத்து 340 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 3 பேர் பலியானார்கள். இதனால் ஓமனில் தற்போது கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,604 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 18 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொதுமக்கள் தொடர்ந்து முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.