செய்திகள்
லண்டன் விமான நிலையம்

இந்திய விமானங்கள் தரை இறங்க லண்டன் விமான நிலையம் அனுமதி மறுப்பு

Published On 2021-04-23 00:29 GMT   |   Update On 2021-04-23 00:29 GMT
அதிகரித்து வரும் கொரோனா தொற்று எதிரொலியாக, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவை சிவப்பு பட்டியலில் சேர்த்து விமானப் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளன.
லண்டன்:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு வருகிறது. இதன் தாக்கம், பிற நாடுகளிலும் எதிரொலித்து வருகிறது. கடந்த மார்ச் 25-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 7-ம் தேதிவரை இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு 3 ஆயிரத்து 345 பேர் சென்றனர். அவர்களில் 161 பேருக்கு கொரோனா தொற்று பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் 101 பேர், இந்தியாவில் உருவான உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இதைத்தொடர்ந்து, இந்தியாவை சிவப்பு பட்டியலில் இங்கிலாந்து சேர்த்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் இருந்து வருவதற்கு ஏப்ரல் 23-ம் தேதி (இன்று) உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணியில் இருந்து தடை அமலுக்கு வருகிறது.

இங்கிலாந்து குடிமக்களாகவோ அல்லது அயர்லாந்து குடிமக்களாகவோ இருந்தால், முந்தைய 10 நாட்கள் இந்தியாவில் தங்கி இருந்துவிட்டு வந்தால், அவர்கள் 10 நாட்கள் ஓட்டலில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்தக் கெடுபிடியால், இங்கிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவுக்கு வந்த இங்கிலாந்து மக்களும் தடை காலம் தொடங்குவதற்கு முன்பே இங்கிலாந்துக்கு திரும்ப ஆவலாக உள்ளனர். இதற்காக அவர்கள் இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்களை அணுகி உள்ளனர்.

அவர்களுக்காக நேற்று கூடுதலாக 8 விமானங்களை இயக்க இந்திய விமான நிறுவனங்கள் முன்வந்தன. ஆனால், அந்த கூடுதல் விமானங்களை தரை இறக்க லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையம் அனுமதி மறுத்துள்ளது.
தடை காலம் தொடங்குவதற்கு முன்பே அனுமதி மறுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடைசி நேர கூடுதல் அழுத்தத்தை தவிர்க்கவே இந்திய விமானங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக லண்டன் விமான நிலையம் விளக்கம் அளித்துள்ளது.
Tags:    

Similar News