செய்திகள்
கோவேக்சின் தடுப்பூசி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசிக்கு பிரேசில் ‘திடீர்’ தடை

Published On 2021-04-01 06:56 GMT   |   Update On 2021-04-01 06:56 GMT
கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பூசி மருந்தை உருவாக்கியது.
ரியோடி ஜெனிரோ:

கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பூசி மருந்தை உருவாக்கியது.

கோவேக்சினுக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பு மருந்துக்கும் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பு மருந்துகளை இந்தியா மனிதாபிமான அடிப்படையில் தனது அண்டை நாடுகளுக்கு வழங்கியுள்ளது.

இதற்கிடையே 2 கோடி கோவேக்சின் தடுப்பு மருந்தை பிரேசில் நாடு ஆர்டர் கொடுத்து இருந்தது. ஆனால் திடீரென்று கோவேக்சின் தடுப்பூசியை இறக்குமதி செய்ய பிரேசில் சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.

இந்த தடுப்பூசிகள் பாதுகாப்பான முறையில் உற்பத்தி செய்யப்படுகிறதா என்பதை நிரூபிக்க உரிய ஆவணம் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி தடை விதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருந்தது.

இது குறித்து பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்தது. பிரேசில் சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டிய தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்வோம். இதற்கான காலக்கெடு குறித்து பிரேசிலுடன் ஆலோசித்து வருகிறோம்.

இந்த விவகாரம் விரைவில் சுமூகமாக தீர்க்கப்படும் என்று அறிவித்துள்ளது. கோவேக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தடுப்பு மருந்து 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனையில் 81 சதவீதம் பலன் அளிப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News