செய்திகள்
டொனால்டு டிரம்ப்

அதிபர் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம் - டுவிட்டர் அறிவிப்பு

Published On 2021-01-09 00:15 GMT   |   Update On 2021-01-09 00:15 GMT
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படுகிறது என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஜோ பைடன் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. காங்கிரஸ் உறுப்பினர்கள் முன்னிலையில் பைடனை வெற்றியாளராக அங்கீகரிக்கும் நடைமுறைகளை மேற்கொண்டனர்.
 
அப்போது, திடீரென பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். 

இது ஒரு புறமிருக்க வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், முடிவுகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் பேசினார்.

டிரம்பின் பேச்சால் உணர்ச்சிவசப்பட்ட அவரது ஆதரவாளர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய முற்பட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது. இச்சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசிய டிரம்ப் தான் பேசிய வீடியோக்களை டுவிட்டரில் பதிவேற்றம் செய்தார். அதேபோல், டிரம்பின் பேச்சு பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது.

இதனால் வன்முறையை தூண்டும் வகையில் இருந்த அந்த வீடியோக்களை டுவிட்டர், பேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பக்கங்களில் இருந்து உடனடியாக நீக்கினர்.

இந்நிலையில், அதிபர் டிரம்பின் டுவிட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்படும். மேற்கொண்டு வன்முறை பரவாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது  என டுவிட்டர் தெரிவித்துள்ளது.

டிரம்பின் @realDonaldTrump டுவிட்டர் பக்கத்தை 88 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News