செய்திகள்
அமெரிக்க அதிபர் தேர்தல் - டிரம்ப் மனைவி மெலனியா புளோரிடாவில் வாக்களித்தார்
அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா புளோரிடாவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். அதேபோல் துணை அதிபர் வேட்பாளர்களாக குடியரசு கட்சியின் மைக் பென்ஸ் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் களமிறங்கியுள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 3) தொடங்கியுள்ளது. 3-ம் தேதி தொடங்கிய உடனேயே வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அந்நாட்டின் நியூ ஹான்ஸ்ரின் மாகாணம் டிஸ்க்விலி நாட்ச் பகுதியினர் அதிபர் தேர்தலின் முதல் வாக்குகளை பதிவு செய்தனர். அங்கு பதிவான 5 வாக்குகளும் உடனடியாக எண்ணப்பட்டது. அதில் 5 வாக்குகளையும் பெற்று ஜோ பிடன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில் தேர்தல் தேதிக்கு முன் வாக்களிப்பதற்கு வசதி உள்ளது. அந்த வகையில், 9 கோடியே 50 லட்சத்து 27 ஆயிரத்து 832 அமெரிக்கர்கள் தேர்தலுக்கு முன்பே வாக்களித்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா புளோரிடாவில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கைப் பதிவு செய்தார்.