செய்திகள்
டிரம்ப் - பைடனின் முதல் நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சி

டிரம்பிற்கு கொரோனா - காணொலி காட்சி மூலம் அதிபர் வேட்பாளர்களின் 2-வது நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சி

Published On 2020-10-08 22:01 GMT   |   Update On 2020-10-08 22:01 GMT
டிரம்பிற்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் அதிபர் வேட்பாளர்களின் 2-வது நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் நடைபெறும் என அதிபர் தேர்தலுக்கான விவாத ஒருங்கிணைப்பு கமிஷன் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டெனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர். 

அதேபோல் துணை அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான மைக் பென்சை எதிர்து ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

அமெரிக்க தேர்தலை பொறுத்தவரை அதிபர், துணை அதிபர் வேட்பாளர்கள் நேருக்கு நேர் சந்தித்து நேரடி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்பது மிகவும் பிரபலமான தேர்தல் பிரசார நடைமுறை ஆகும்.

அந்த வகையில் அதிபர் வேட்பாளர்களான டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பைடனுக்கு இடையே கடந்த மாதம் 29-ந்தேதி ஓஹியோ மாகாணத்தில் முதல் நேரடி விவாதம் நடந்தது.

இந்த விவாத நிகழ்ச்சிக்கு பின் அதிபர் டொனால்டு டிரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

இதனால், கடந்த 2-ம் தேதி டொனால்டு டிரம்பும் அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் கொரோனா பரிசோதனை செய்தனர். அதில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினியா ஆகிய இருவருக்கும் கொரோனா 
தொற்று பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, இருவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் கொரோனாவில் இருந்து குணமடையாத போதும் தொடர்ந்து வெள்ளைமாளிகையில் தனது அலுவலக பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதற்கிடையில், அதிபர் வேட்பாளர்களின் 2-வது நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சி வரும் 15-ம் தேதி புளோரிடா மாகாணத்தில் நடைபெறுவதாக இருந்தது. 

ஆனால், டொனால்டு டிரம்ப் கொரோனா பாதிப்பில் இருந்து 
குணமடையவிலை என்றால் அவருடன் நேரடி விவாத்தில் ஈடுபடமாட்டேன் என இன்னும் ஜனநாயக கட்சியில் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார். இதனால், வரும் 15-ம் தேதி நடைபெறவிருந்த நேரடி விவாத நிகழ்ச்சியில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், புளோரிடா மாகாணத்தில் வரும் 15-ம் தேதி நடைபெறவிருந்த அதிபர் வேட்பாளர்களின் நேரடி விவாத நிகழ்ச்சி காணொளி காட்சி மூலம் நடைபெறும் என அதிபர் தேர்தலுக்கான விவாத ஒருங்கிணைப்பு கமிஷன் தெரிவித்துள்ளது. 

கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு அனைவரின் நலனை காக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 2-வது விவாத நிகழ்ச்சியில் வேட்பாளர்களிடம் காணொளி காட்சி மூலம் பார்வையாளர்கள் கேள்விகளை கேட்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கொரோனா வைரஸ் இந்த தேர்தலில் முக்கிய பிரச்சனையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Tags:    

Similar News